சிறுமழை

ராஜா – 2013

with 12 comments


ராஜாவிற்கு கீழே நின்று எப்போதும் அவரின் துதிபாடுவோர், ராஜாவின் தலைமேல் ஏறிக்கொண்டு அவரை குறை சொல்வோர், ராஜாவுக்கு இணையாக நின்று அவ்வப்போது தட்டி கொடுப்போர், ராஜாவை பிடிக்காதோர், அதற்கும் மேலே ராஜாவின் ரசிகர்களை பிடிக்காதோர், ராஜாவைப் விரும்பாத யாரையும் விரும்பாதோர் என ராஜா இணையத்தில் இருக்கும் எல்லோரையும் வெவ்வேறு விதமாக தினசரி அளந்துகொண்டிருக்கிறார். இவர்களுக்கு மத்தியிலான இரைச்சலில் பல்கலைக்கழக நூலகத்தில் தேடித்தேடி புத்தகங்களை எடுத்து வந்து அமர்ந்து படித்து அவ்வப்போது நிமிர்ந்து சுற்றிப் பார்த்து சக ராஜா ரசிகர்களிடம் ‘என்னம்மா பாட்டு போட்டுருக்கார்’ என்று புளங்காகிதம் அடைவது அடியேனுடைய தினசரி வழக்கம். அப்படி 2013ல் தேடிக் கண்டிபிடித்த, பிறர் சொல்லிக் கேட்ட, ஏற்கனவே கேட்டிருந்தும் புதிதாக காதல் கொண்ட பாடல்களில் மிகப்பிடித்த பத்து பாடல்களை பட்டியிலிடுகிறேன் என்ற சாக்கில் மறுபடி இங்கு வந்துவிட்டேன்.

இந்தப் பாடல்களை நீங்கள் பிறக்கும் போதே கேட்டுக்கொண்டு பிறந்திருக்கலாம். இந்தப் பதிவை படித்த பிறகும் கேட்காமல் போகலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்பதும் நான் இவைகளை சென்ற வருடம் கண்டறிந்தேன் என்பதுமே உண்மை.

எங்கெங்கோ செல்லும் எண்ணங்கள் (பட்டாக்கத்தி பைரவன்):

மொத்தம் நாற்பத்தி சொச்சம் வார்த்தைகளே – அதற்குள்ளே நீந்தியும் பறந்தும் மடங்கியும் விரிந்தும் விரைகிறது பாடல். பொதுவாக 80களுக்கு முன்னான ராஜாவின் பாடல்களை தூக்கிய ஒற்றைப் புருவத்துடனும் அதனுடனே ஒரு பக்கம் சாய்ந்த முகத்துடனும் அலட்சியப்படுத்திய எனக்கு இதுவே முதல் இன்ப அதிர்ச்சி. கேட்டவுடனே ஊரைக் கூட்டி ஒலிபெருக்கியில் ஒலிக்க விட்டு ஆடத் தோன்றும் என்று சொல்வார்களே, அது போல. (அப்படியெல்லாம் யாரும் சொன்னதேயில்லை). ராஜாவிற்கு முன்னான இசை அங்கங்கே அடையாளமாகத் தெறித்தாலும் கிட்டார், வயலின், ட்ரம்ஸ், புல்லாங்குழல் என அனைத்திலும் ராஜா வந்து ஏற்றிய புது மொழி. குறிப்பாக இரண்டாவது இசையில் வயலின்கள் ராஜாவின் காலம் தொடக்கமும் (ஜெயசுதா மூச்சிரைக்க மாடிப்படிகளில் ஓடி வந்து), அதை முடித்து வைக்கும் காற்புள்ளிகள் போன்ற ஓசைகள் அதற்கு முந்தைய காலம் (ஒரு அரைவட்டம் இடுகிறார்). சரணங்களில் ராஜா கையசத்ததும் ஒருவருக்குப் பின் ஒருவராக எஸ்.பி.பியும் ஜானகியும் தனித்தனி தனிநபர் விமானங்களில் ஜிவ்வென புறப்பட்டு வானில் பறந்தும் புரண்டும் சாகசம் காட்டுகிறார்கள். சிவாஜியும் ஜெயசுதாவும் பொம்மை விமானங்களை இடுப்பில் கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்து தத்தளிக்கிறார்கள்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே (அமைதிப்படை):

எங்கு எப்போது தனிப் புல்லாங்குழல் ஓசையை கேட்க நேர்ந்தாலும் மேகங்களுக்குப் பின் மறைந்தும் வெளிவந்தும் நினைவில் நகரும் நிலவினை பின் தொடரத் துவங்கிவிடுவது வழக்கம். அறுக்க முடியாத அரை நொடிச் சங்கிலி அது. முதல் முறை ஒரு இரவில் இந்தப் பாடலை கேட்ட பொழுது பாடலை துவக்கி வைக்கிற விநோத synth இசை திடுமென காட்டுப் பாதையை திறந்து விட்டது. கூழாங்கற்களை வழிக்கு அடையாளமாக விரல்களுக்கிடையே பாதையில் விட்டபடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எந்த உலகம் திறக்கும் என்ற வியப்பில் நடப்பதும் அங்கங்கே நிலவு தென்படுவதுமாக பல இரவுகள் கழிந்திருக்கின்றன. ராஜாவின் எண்ணம் தெள்ளத்தெளிவாகத் திருத்தங்களின்றி தாளில் எழுதப்பட்டிருக்க ஸ்வர்ணலதா தன் கூர்மையான குரலால் அதன் புள்ளிகளை இன்னமும் அழுத்தமாகக் குறிக்கிறார்.

வெற்றி வெற்றி (கட்டுமரக்காரன்):

ஒரே சொல்லின் வெவ்வேறு அர்த்தங்கள் போல மிக நெருக்கமாகவும் இறுக்கமாகவும் பின்னப்பட்டிருக்கும் சரணம் பல்லவி இசைத் துண்டுகள் என்றிருக்கும் பெரும்பாலான ராஜாவின் பாடல்களுக்கிடையே முற்றிலும் தொடர்பில்லாமல் துவங்குவதே முதலில் ஈர்த்தது. 90களில் ராஜா கண்ட தனி வகை அமைதி பாடலில் நிரம்பித் தளும்பும். சரணத்தின் கடைசி இரண்டு வரிகளில் பாடல் தனக்குள்ளாகவே சிலிர்த்தெழுந்து மயங்கிக் கலைவது மிகப் பிடிக்கும். கூடுதலாக – எஸ்.பி.பி துவக்கி முன்னெடுத்துச் செல்லும் பாடலின் பாதி வரை தென்படாமல் இருந்து விட்டு, கூட்டத்திலிருந்து யாரோ முன்னுக்கு லேசாகத் தள்ளியதைப் போல, ஒரு தபேலாவின் இடறலில் முன்னே வந்து தனக்கே உரிய கதாநாயகி-கொள்ளும்-நாணத்துடன் சித்ரா துவங்குவது இன்னமும் பிடிக்கும்.

சொல்லாயோ வாய் திறந்து (ஜானகி – மோகமுள்):

இது மாலைப் பொழுதில் அமைந்த பாடலாகவே இருக்க வேண்டும் – துவங்கும் புல்லாங்குழல் இசை முடிந்ததும் சில வினாடிகளில் சட்டென இருளத் துவங்குகிற வானத்தைப் போல வயலினில் பரவுகிற விரகத்திற்கு வேறெதுவும் காரணமிருக்க முடியாது. வானிலையை மிகச் சரியாகப் அமைத்த பின் துவங்கும் பாடலில் இருக்கிற இசைச் சங்கதிகளையும் மற்ற சங்கதிகளையும் வைத்துப் பார்த்தால் ஜானகியைத் தவிர வேறாரும் பாடியிருக்க முடியாது, பாடியிருக்கவும் கூடாது. மெட்டுக்குப் மேலே பாவங்களைத் தூவுவதை விட்டு விட்டு பாவங்களுக்கு உள்ளே மெட்டை சரியான அளவில் அனுமதிக்கிறார். மெட்டையே லேசாக உடைத்து வெளிவர முயல்கிற உணர்வுகள். ‘வெள்ளி நிற’ என்ற இடத்தில் வரி மெட்டை சடாரென மலையுச்சியில் முடிந்து விடுகிற சாலையைப் போல கைவிட்டாலும் ஜானகி ஒரு இடத்திலும் கைவிடார். ஒலிப்பதிவுக் கூடத்தில் எப்போதோ ஒரே ஒரு முறை ‘ஏழையை விடலாமோ இது போல வாட’ என்று கேட்டது கேட்கிற ஒவ்வொரு முறையும் தொண்டை முடிச்சில் கனக்கிறது.

சிட்டு சிட்டுக்கு (மௌனம் சம்மதம்):

புருவங்களை கொஞ்சம் கீழிறக்கவும். (ரொம்ப கீழிறக்கினால் மீசையாகி விடுமென பாடலாசிரியர் கபிலன் சொல்லியிருக்கிறார்). தமிழ் திரையிசைத் திருவிழாவிலேயே அரதப்பழசான கதாநாயகி அறிமுகச் சடங்கு என்றாலும் – ராஜாவின் assembly line பாடல்களில் ஒன்று தான் என்றாலும் – வெகு நாட்களுக்குப் பின் தற்செயலாக கேட்ட பொழுது இரு விழிகளை அகலத் திறந்து கவனிக்க வைத்த விஷயம் – சரணத்தின் முதலிரண்டு வரிகளில் அதன் வளைவுகளில் இருக்கிற ஏதோவொரு மர்மம் – மெட்டு, வயலின், bass guitar எல்லாம். திரைப்படத்தின் கதையைப் போல கொலையுதிரும் மர்மம் இல்லாமல் ‘மூக்கின் நுனி மர்மம் சேர்க்கும்’ வகை. அழகில் இருக்கிற கர்வம், அதன் மூலமாக எடுக்க முயல்கிற அதிகாரம் ஆகியவற்றை அடிக்கோடிடுவது போல. ஆனால் அமலாவிற்கோ நடன இயக்குனரோ இக்கருத்தில் ஒப்புதலில்லை. அமலா என்பதால் நான் கொஞ்சம் அதிகமாகவே யோசித்திருக்கலாம். (ராஜா என்பதால் இந்தப் பதிவையே அதிகம் யோசித்திருப்பதைப் போல). மேலும் – பல்லவியை லேசாகக் தலை கோதுவது போல அங்குமிங்கும் திருத்தி சரணத்தில் உபயோகித்தால் எனக்கு எப்போதுமே ’தோ இங்கயே தான் ஒளிஞ்சிருக்கேன்’ என்று கண்ணாமூச்சி விளையாட்டை முடிப்பதால் குழந்தைக்கு கிடைக்கிற அதீத ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியும் கிடைத்துவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக சிவகார்த்திகேயனுக்கு தியேட்டரில் விசில் பறக்கிற வினோதத் திரைத் திருவிழாவில் திருதிருவென விழித்தபடி இருட்டில் அமர்ந்திருந்த எனக்கு மான் கராத்தேவின் பிண்ணனி இசையில் இந்தப் பாடலின் மெட்டை கண்டுகொண்ட பொழுதுகளில் மட்டும் அடைந்த பெருமகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் ஈடு இணை இல்லவேயில்லை.

எண்ணத்தில் ஏதோ சில்லென்றது (கல்லுக்குள் ஈரம்):

அநேகமாக இந்தப் பட்டியலில் மிகப் பிடித்த பாடல். எழுதி மெட்டமைக்கப் பட்டதா மெட்டுக்குப் பின்னர் எழுதப்பட்டதா என்று முதல் வரியிலேயே ஒரு சவால் – மெட்டின் அர்த்தமும் வார்த்தைகளின் இசையும் ஒன்றுடன் ஒன்று சாலப் பொருத்தம். எண்ணத்தில் நண்டுகள் குறுகுறுவென ஊர்வதாக தொடங்கும் இசை; வயலின்கள் இட்டு நிரப்பிய அணை சட்டென உடைந்து தாரைத் தாரையாக இசை வெளியேறும் இரண்டாம் இடையிசை. (நண்டுகள் ஊர்ந்தால் சில்லென இருக்குமா என்று அனுபவமில்லை). தேங்கித் தேங்கி நகரும் மெட்டின் ஒவ்வொரு வார்த்தையிலும் கூச்சம் நாணம் காதல் நம்பிக்கை என ஒவ்வொன்றையும் அரை நிலவாக தேங்கவிடுகிறார் ஜானகி. பாரதிராஜா திரையில் வடிக்க முயன்ற கிராமத்து பெண்கள் எல்லாம் ஜானகி வந்து நின்ற ஒலிக்கூடங்களில் மட்டுமே நிஜத்தில் சிரித்தும் அழுதும் சூரியகாந்திப் பூக்களுக்கு நடுவே ஓடித் திரிந்திருக்கிறார்கள். வெட்கம் பயம் சிரிப்பு அழுகை இனமும் இடமும் புரியாத வலி எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் ஒன்றாகப் பொங்க வைத்தது போலிருக்கும் பாரதிராஜா-நாயகிகளின் முகங்களுக்கு மத்தியில் அருணா கொஞ்சம் ஆச்சரியமான மாறுதலாகவே இருக்கிறார்.

கானம் தென்காற்றோடு (கண்ணுக்கொரு வண்ணக்கிளி):

தேடிக் கண்டெடுக்கும் பாடல்களில் ராஜாவே பாடி ராஜாவே கண்மூடி ரசித்துக் கேட்கும் படத்துடன் ஒரு பாடலை இருக்கப் பெற்றால் இயற்பியல் கூடங்களில் கண்ணாடிச் சட்டத்தை உடைக்க துடிக்கும் வோல்ட்மீட்டரின் கைகாட்டிகள் போல மனம் படபடக்குமா படபடக்காதா? பெயரெல்லாம் சரி, இந்தப் படத்தை யாரும் கண்டு கொண்டாரில்லை. காதலை தொலைபேசியில் தூதுவிடுகிற பாடல் – நினைவில் மது, என் கனவில் மது, ஹலோ ஹலோ.. மது..எனக் குழையும் ராஜா – யார் அந்த மது? (கதாநாயகியின் பெயராக இருக்காது. எந்தப் பாடலாசிரியர் நாயகியை அவரின் சொந்தப் பெயர் சொல்லி அழைக்கிறார்?). தொலைபேசி இணைப்பு கிடைத்ததும் படபடவென காதலைச் சொல்லி விட்டு பின்னர் உணர்வின் ஆழம் கண்டது போல சரணங்களில் நடை தளர்ந்தும் நின்றும் அமர்ந்தும் வளரும் விதம் சுவாரசியம். சிறுவயதிலிருந்தே விளம்பரங்களின் கடைசியில் தொக்கி நிற்கும் கேள்வியை வெச்சவனே செய்து வரும் நீங்கள், ராஜாவைப் போல இந்தப் பாடலை கண் மூடி ரசித்துக் கேட்கலாமே?

அன்பே வா அருகிலே (ஜேசுதாஸ் – கிளி பேச்சு கேட்க வா):

கதைக்குப் பின்புலமான ஆவி, அதனுடன் காதல், ஆவிக்கும் நாயகிக்கும் அந்த எரிச்சலூட்டும் பிண்ணனி குரல் என்பதையெல்லாம் தாண்டி வெகு நாட்களுக்குப் பின்னர் கேட்ட பொழுது அவை எல்லாம் மறந்து வெறும் இந்தப் பாடலலிருந்தே அந்த அமானுஷ்யதையும் ஜேசுதாஸின் குரலில் அமிழும் துக்கத்தையும் கண்டெடுக்க முடிந்தது. bone-chillingly melancholic என்று Baradwaj Rangan ஒரு முறை சொன்னதைப் போல. (நான் பாடும் மௌன ராகம் பாடலை குறிப்பிடுகையில்). ஊஞ்சலெனக் காற்றில் கிழியும் வயலின்கள், அதிர அதிர அடிக்கும் பின்புல இசை என பாடலின் துல்லியமான உணர்வுகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி – வாய் வார்த்தையாகச் சொல்லிக் கேட்ட ஒரு கதைக்கு இந்தப் பாடலை வேகமாக இசையமைத்துவிட்டதையும் அதை ஒரு நாள் அவசரமாக வந்து பாடிக் கொடுத்துச் சென்று விட்டதையும் எண்ணி எண்ணி அடையும் வியப்பில் கரைந்தே விடுகிறது.

பூ பூ பூ (புது நெல்லு புது நாத்து):

இந்தப் பாடலை எப்படி இத்தனை நாள் அறியாமலிருந்தேன் என்ற அதிர்ச்சியில் மீண்டும் ஒரு முறை எழுந்து நின்று நாலாப்பக்கமும் திரும்பிப் பார்க்கிறேன். (சுற்றி யாருமேயில்லை). துவக்கம் முதல் இறுதி வரை பாடல் ஒரு நொடி கூட அயராமல் தனக்குள்ளே எடுக்கிற வேகமும் கொடுக்கிற பரவசமும் – சென்று வருடம் வேறெந்த கண்டுபிடிப்பும் நாலைந்து ஏணி வைத்து ஏறினாலும் எட்டித் தர இயலவில்லை என்பதை உயரத்தில் இருந்து சொல்லிக் கொள்கிறேன். பூ பூ பூ என ஒன்று போல் துவங்குகிற பல்லவின் ஒவ்வொரு வரியும் ஒரே இடத்தில் இருந்து விடப்பட்ட வாணங்கள் போல வெவ்வேறு உயரத்தையும் வெவ்வெறு தூரத்தையும் வெவ்வேறு வண்ணத்தையும் அடைந்து முடியும் விதம் – 80களின் திரைப்பாடல் வரிகளில் எழுதும் பாணியில் சொன்னால் – ராஜ வேடிக்கை! பூ பூ பூ புல்லாங்குழல் என்று பாடலிலேயே சொல்லிவிடுவது போல புல்லாங்குழலில் பாடல் பட்டாம்பூச்சியாக துவங்கி எழுந்துப் பறந்தும் நீரென ஓடியும் பட்டெமென பறக்கிறது. பல்லவிக்கே பத்தி முடிந்த விட்ட நிலையில் சரணங்களை ரயிலேற்றி தடதடவைக்கிறார். (கலகலத்து ஓடுது காதல் அலை). பொருத்தமாக வந்த அமர்கிற வார்த்தைகளுடன் மேலே மேலே நேர்க்கோட்டில் ஏறிக்கொண்டே செல்கிற பாடல் ’முழுவதும் கீதமென ’ என்கையில் மட்டும் லேசாகச் சரியும் பொழுது பெரும் மயக்கம். சுருக்கமாக @mayilSK சொல்வதைப் போலச் சொன்னால் – பட்டாசு.

வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு (புயல் பாடும் பாட்டு):

மிருதங்கமும் ஜதிகளுமாக வண்டியைக் கிளப்பும் பரதநாட்டிய பெண்ணை உள்ளே துரத்திவிட்டு bass guitarஐ முறுக்கிக்கொண்டே அடிக்கிற u-turn, இந்தப் பட்டியலில் இருக்கும் பாடல்களுக்கு மத்தியிலே சிறப்பான தொடக்கம். 90களில் ஏதோவொரு பட்ஜெட் தயாரிப்பாளரின் கல்லூரித் திருவிழா தான் என்றாலும் ராஜா அமர்க்களமாக மேடை போடுகிறார். மலேசியா வாசுதேவன் ஒவ்வொரு முறை ‘வேல்’ என்கிற தனி வார்த்தையை வீசுகையிலும் நீர்பரப்பை இரண்டு முறை தொட்டுப் பறக்கும் கல்லைப் போல அந்த வார்த்தைக்குள்ளேயே எதையோ styleஆகத் தாண்டுகிறார். என்னவெனப் புரியாவிட்டாலும் கூடவெ மனமும் தாண்டுகிறது. லண்டனில் இருந்தபடி தேடித் தேடி இசைத் தட்டு விற்கும் புண்ணியவான் மூலம் கண்டெறிந்ததால் அவனுக்குத் தான் மொட்டை அடிக்கணும். காரில் செல்கையில் எப்போது இந்தப் பாடல் தலைகாட்டினாலும் பாடலோடு சேர்ந்துகொண்டு வரிசையாக கார்களை முன்னேறிக் கொண்டு சென்று விட்டு பாடல் சடாரென சட்டையை முழங்கைக்கு மேலே மடக்கிக்கொண்டு ’மச்சி உன் தங்கச்சி’ என எகிறும் போது என்ன செய்வதென காருக்கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை.

கொசுறு – பட்டியலில் இடம்பெற முயன்ற மற்ற சில பாடல்கள் – சக ரசிகரான இசையமைப்பாளர் மரகதமணி ஆற்றைப் போல ஓடும் என்று அழகாகவும் மிகச் சரியாகவும் வர்ணித்த ‘பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்’ (நினைவே ஒரு சங்கீதம்); மகிழ்ச்சியை முழுக்க முழுக்க அறுவடை செய்கிற ‘காட்டுல தலையாட்டுற சிறு ஆவரம் பூவே (சொல்ல மறந்த கதை –  பாடல் அறிமுகம் – நன்றி @equanimus); நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு காதல் பாடலும் காதலர்களின் பாடலில் நகைச்சுவையும் ‘கடலோரக் கவிதையே’ (சின்னவர்); பிரிந்திருக்கும் அப்பா-மகள், காசைத் தேடி விரையும் கோமாளிகள், வில்லனிகளின் கூடாம் என பாடலில் நம்மை கடத்திச் செல்லும் தாயறியாத- அரங்கேற்ற வேளை), ஒரு சிறுகதையை எழுத வைத்த ‘என்ன மறந்தாலும்’ (காதல் சாதி), மற்றுமொரு கடிதம், மற்றுமொரு சோகம் (சின்னச் சின்ன – ராஜகுமாரன்).

Written by sirumazai

ஏப்ரல் 22, 2014 இல் 4:08 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

12 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Wonderful! I was introduced to vEl muruganukku, thAyaRiyAdha thAmaraiyE last year. Even gAnam thenkAtROdu was discovered a yr before (Courtesy: @kanapraba).

    Even though I’ve listen to the other songs, have to listen to them keenly. I like kathum kadal from kattumarakkAran more than vetRi vetRi esp the ludes.

    Special likes to the lines mentioning Janaki.

    About the post – சுருக்கமாக @mayilSK சொல்வதைப் போலச் சொன்னால் – பட்டாசு 🙂

    Kaarthik Arul

    ஏப்ரல் 22, 2014 at 1:09 பிப

  2. gaanam then kaatrodu…. man what a song.. i mean what a voice… happened to listen to this on a lonely trip from NJ to Niagara… instant love…one single song withstood 7hrs of drive… and love continues to grow everyday… not a single day past by without whistling “madhu madhu hello madhu”.. sorryyy.. as usual .. lovely write up… 🙂

    arun rajendran

    ஏப்ரல் 22, 2014 at 1:59 பிப

  3. I feel I’m going to take this one at a time. For now, in the first song, the stretch between 2:30 to 3:03 seers magic. What is the instrument (any idea?) that comes exactly after the violin @ umm 2:35-37 and back at 2:42-44? I have listened to it in Tom and Jerry episodes.

    Mojo

    ஏப்ரல் 23, 2014 at 5:52 முப

  4. Mojo alias blacklungi alias redlungi – I don’t know as well – I tried to find so that I can mention it clearly in the post, but couldn’t. Anyway Jayasudha expertly demarcated those instruments with her steps and helped me to write.

    Aravindan

    ஏப்ரல் 23, 2014 at 3:43 பிப

  5. and yes, Sollividu VeLLinilavE is totally a post-midnight song

    Mojo

    ஏப்ரல் 27, 2014 at 4:44 பிப

  6. Serendipity was the apt word when I heard the song “Gaanam ThenKaatrodu” in a blog, Radiospathy I think. It was like seeing my childhood Marappaachi after so many years. Ninaivil madhu, Kanavil madhu, Madhu, Madhu.. AArrgh!! Madhu’ngra perla enakoru kaadhali irukka koodaathaa nu urugi kaetta paatu..

    Engengo sellum en ennangal – Solrathukku vera ethuvume illa marubadiyum intha naangu variya solratha thavira, intha paatta ketkum bothu. 🙂

    Raja’voda Biography orukaalathula un kaippada nee ezhutha ennoda praartthanaigal, Aravindha.

    silentstreams

    ஏப்ரல் 30, 2014 at 9:53 முப

    • Gates – Biography பெரிய மேட்டராச்சே. அப்படியெல்லாம் சுளுவா சொல்லிர முடியுமா? 🙂

      நன்றி, நன்றி!

      Aravindan

      ஜூன் 29, 2014 at 4:33 முப

  7. Regards, Gates (Karthickeyan). 🙂

    silentstreams

    ஏப்ரல் 30, 2014 at 9:54 முப

  8. “சிவாஜியும் ஜெயசுதாவும் பொம்மை விமானங்களை இடுப்பில் கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்து தத்தளிக்கிறார்கள்” 🙂 Wow!! 🙂

    silentstreams

    ஏப்ரல் 30, 2014 at 9:57 முப

  9. Apart from Sollividu VeLLinilavE being able to take you strange to places, it becomes a favourite place somehow (female voice >> male voice), the stretch from 1:10 to 1:34 is a marvel.

    Mojo

    செப்ரெம்பர் 1, 2014 at 2:33 முப


Aravindan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி