சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

மரத்தடி

2 மறுமொழிகளுடன்

முதற்கனவு வெறும் இருளாக இருந்திருக்கலாம். முற்றிலும் புதியதொரு குரலாகவோ வண்ணக்குழப்பமாகவோ சலனமில்லாத மௌனமாகவோ அம்மாவின் வாசமாகவோ இருந்திருக்கலாம். சீக்கிரம் உறங்கிப் போகிற பிள்ளை வயதில் கனவின் குரலுக்கு ஒரு பொழுதும் விழித்ததில்லை. பல வருடங்களுக்கு கனவுகளின் இருப்பைப் பற்றிய ஊர்ஜிதமோ ஊர்ஜிதப்படுத்த வேண்டிய அவசியமோ தேவையின்றி இருந்தது. இதுவரை கடந்து முடிந்த ஆண்டுகளிலேயே கல்லூரி இரண்டாம் வருட ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. துக்கங்கள் ஐயங்கள் மகிழ்ச்சிகள் குழப்பங்கள் அத்தனையும் துறந்த ஆண்டாதலால், மனம் பளிங்கைப் போல துல்லியமாக இருந்தது. அந்த ஆண்டில் தூங்கும் நேரமும் பழக்கமும் பெருமளவில் மாறியிருந்தது. பூமித்தகடுகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறுவது போல தூங்கும் நேரமும் விழித்திருக்கும் நேரமும் ஏறிக்கொண்டது. மனம் கனவில் விழித்திருக்கத் துவங்க, ஒரு நாள் விழிக்கையில் முதன் முறையாக இரவு கண்ட கனவு முழுதாக நினைவிற்கு வந்தது. விசித்திரமானதொரு கனவு. வேறுக்கிரகவாசிகள் இல்லை. மிருகங்கள் இல்லை. மாயாஜாலங்கள் இல்லை. அசரீரிகள் இல்லை. முந்தைய தினம் நான் கேட்ட வார்தைகள், பார்த்த காட்சிகள், போய் வந்த இடங்கள் அத்தனையும் அப்படியே மீண்டும் தோன்றியிருக்கும், ஆனால் – அருகே இருக்கிறதென பார்த்துக்கொண்டே இருந்த மேஜையை மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் இருளில் தேட முயன்று சுவற்றைப் பிடிப்பது போல – கனவில் அத்தனையும் இடம் மாறியிருக்கும். சொற்கள் இருந்த இடத்தில் பாடலும், பாடல் இருந்த இடத்தில் குழந்தையின் ஒரு மொழியும். வானிலையும் வண்ணங்களும் வாசல்களும் மாறிப் போயிருக்கும். விண்வெளியில் மனிதர்கள் மெல்ல மிதந்து மிதந்து இடம் மாறுவது போல கனவுவெளியில் பொருட்கள் மிதந்து இடம் மாறிக்கொண்டேயிருக்கும். விழித்தெழுகிற ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நாளும் – ஒரு கனவுடன் விழித்தெழுவது வழக்கமானது. கண் திறந்து மூளை இயங்கத்துவங்கும் முதல் நொடியிலிருந்து துகள் துகளாக தூசி படிவது போல கனவு மெல்ல மெல்ல விழுந்து உருப்பெறும். தினமும் காலையில் உதிரும் பூவானது கனவு. பெரும்பாலும் அபத்தமாக எஞ்சிப்போகும் என்றாலும், தினமும் தோன்றும் கனவுகள் அவசியமாக இருந்தது, மனம் நிகழும் எதையும் கேட்கும் எதையும் பார்க்கும் எதையும் அழத்தந்திருந்தமாக உள்வாங்குகிறது என்ற சான்று அவசியமாக இருந்தது. அப்படி உள்வாங்கிக்கொண்ட ஆயிரயமாயிரம் விஷயங்களிலிருந்து ஒரு கதையோ ஒரு கவிதையோ ஒரு எண்ணமோ உதித்துக்கொண்டே இருந்தது. கனவுகளுக்கும் மற்ற அனைத்திற்குமான தொடர்பு விழித்தெழும் நொடியில் அறுந்தாலும் நாள் முழுக்க கண்ணுக்குத் தெரியாமல் உயிர்ப்புடனே இருந்தது. தூங்கிக்கொண்டிருக்கையில் என் நாடி பிடித்து உயிர் அறிவதம் விழித்தெழும் எனக்கு கனவு தோன்றியதா என்று அறிவதும் ஒன்று போலானது.

கவனம் எனும் தும்பி பின் கைகளுக்கு அடங்காமல் பறக்கத் துவங்கியது. ஒரு அடர்ந்த புள்ளியென இருக்கும் கவனம் – வெள்ளைத் தாளில் சொட்டினால் பெரும் வட்டமாக தீவிரமாக பரவும் கவனம் – கணினியின் சுட்டியால் தொட்டுத் திறக்கும் எண்ணற்ற பக்கங்களுக்கிடையே பிரிந்து தேய்ந்து மறையத் துவங்கியது. இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்த திரைப்படம் இரண்டரை நொடியில் மறந்திருக்கும். ஒரு வலை பக்கத்தை முழுதாக படிக்க பொறுமையின்றி போயிருக்கும். பிடித்திணைத்து இழுக்கும் வலுவின்றி மேலே மேலே பறந்துகொண்டேயிருக்கிற ஊதுபை மட்டுமே மனநிலையை வர்ணிக்க பயன்பட்டிருக்கும். இசை மட்டும் எப்போதும் போல ஈர்த்துக்கொண்டிருந்தது, தொலைதூரத்தில் ஒலிக்கும் இசையை நோக்கி நீர்மட்டத்தில் வேரின்றி மிதக்கும் தாவரம் ஆனது மனம். எதைப்பற்றியும் கவலையின்றி நகர்ந்து கொண்டே இருக்கிற நாட்களை பிடித்து நிறுத்திப் பார்த்தபோது, எதிர்பார்த்தபடி கனவுகளும் அறவே நின்று போயிருந்தன. இந்த நாட்டிற்கு வந்த பிறகு இரவு தூக்கங்களிருந்து சத்தமின்றி காணாமல் போன மின்விசிறியின் ஓசை போல, கனவுகளும் காணாமல் போயிருந்தன. கூடவே கதைகளும், கவிதைகளும். கனவுகளுக்குள் இடம் மாறியிருந்த பொருட்களைப் போல, நானும் எங்கோ இடம் மாறி இருந்தேன்.

இதை எழுதிமுடித்து உறங்கத் துவங்கும் பொழுது ஒரு கனவு வரக்கூடும்.

*****

சென்னை இரைச்சல் மிக விசித்திரமானது. உருத்தெரியாத பூதம் போல இருந்தாலும் மனதை எப்படியோ அது பழக்கி வைத்திருந்தது. முழு நிசப்தத்தின் மேலே நிகழும் மனதின் எண்ணங்களை அப்படியே தலைகீழாக இரைச்சலின் மேலும் தடையின்றி நிகழும் கயிற்று வித்தையை அது கற்று தந்திருந்தாலும், அபூர்வமாக கிடைக்கிற நிசப்தங்களும் நிசப்ந்தமான இடங்களும் அழகானவை. அடிக்கடி செல்லும் ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதி தான் அது. வானம் மிக அழகாக இருண்டிருந்தது. விளக்குகள் பிரகாசமாக எரிந்து படிப்படியாக தேயும் ஒளிவட்டங்களாக இல்லாமல் தெளிவாக தங்கள் வெளிச்சக்கோட்டை வரைந்து வைத்திருந்தன. இரைச்சல் ஓடை போல எங்கோ கீழே சன்னமாக ஒலித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. சத்தங்கள் நிரம்பிய நீர்த்தொட்டியில் மேலெழும்பி மிதக்கும் குமிழி போல உயரத்தில் அமைதியாக இருந்தது மாடி. இருளில் நானும் அவரும் நின்றிருந்தபடி எதையோ பேசிக்கொண்டிருக்கையில் அவர் முன்னறிவிப்பின்றி தன் காதல் கதையை எனக்கு சொல்லத்துவங்குகிறார். மனதிற்கு மிக நெருக்கமான காதலாக இருந்திருக்க வேண்டுமென்பது அவரின் குரலிலேயே தொனிக்கிறது. என்னை விட மூத்தவர் என்றாலும் என்னை அவருடன் சமமாக வைத்து மரியாதை தருபவர். எனக்கும் அவருக்குமான தொடர்பு பெரும்பாலும் கதைத் தொடர்பே. எப்பொழுதும் ஒரு கதை புனைபவனாகவே என்னை பாவிப்பவர். எங்கள் பேச்சின் வாக்கியங்கள் சிறுகதை பற்றி துவங்கி சிறுகதையிலேயே முடிந்துவிடக்கூடியவை. என்னிடம் தன் கதையை சொல்வதென்ற அவரின் முடிவு என்னை ஒரு நொடிப்பொழுது குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்த உரையாடல் சிறுகதைவெளிக்கு உள்ளே நிகழ்கிறதா வெளியா நிகழ்கிறதா என்பதை பாவனைகள் முழுதும் மறைந்த இருளில் கணிக்க முடியவில்லை. இருந்தும் அவர் சொல்லத்துவங்கிய கதை என்னை ஆட்கொள்கிறது. யாரும் யாரிடமும் பகிரக் கூடிய கதை நிச்சயமல்ல. கதையாக எழுத முற்பட்டால் அந்தரங்கத்தின் குரலில் மட்டுமே சொல்ல முடிகிற கதை. இடையிடையே அவர் கொண்ட எண்ணற்ற மௌனங்களில் ஒன்றின் பொழுது தொலைவில் அவர் நின்றுகொண்டிருந்த திசையில் வானவேடிக்கை துவங்குகிறது. ஒலியும் ஒளியும் இணைந்த வேடிக்கையில் ஒலி தூரத்திலியே விடைபெற்றிருக்க ஒளி மட்டும் சிதறலாய் வானில் தெரிகிறது. நிழலுருவமாய் அவரும் அவரின் கதைக் குரலும் பிண்ணனியில் தூரத்தில் ஒளிச்சிதறலுமாய் அழகான காட்சியாகிறது. கவனமாக கேட்டுக்கொண்டிருப்பினும் அந்த உரையாடலில் எந்த விதத்திலும் பங்குகொள்ளாமல் தவிர்க்கிறேன். நான் கேட்பதை அவருக்கு ஊர்ஜிதப்படுத்த வேண்டிய அவசியம் என்னை விட அவருக்கு நிச்சயம் தேவையில்லை என்று எனக்கு தெரிந்திருந்தது. அக்காட்சியை ஒரு தனி நபரின் கதையாகவே விட்டுவைக்கிறேன். நீண்ட வலியாக கதை தொடரத் தொடர, அவர் நான் கேட்டுக்கொண்டிருப்பதையே மறந்து சொல்லிக் கொண்டே போவது போலிருக்கிறது. அவர் பார்த்துக் கொண்டிருந்த திசையில் துவக்கத்தில் இருந்த ஒரே ஒரு ஒளிச்சிதறலும் மெல்ல மங்கி மறைந்தது போல இருட்டைப் பார்த்து அவர் பேசிக்கொண்டிருக்கிறார். கதை முடிவு பெறுவதற்கு முன்னரே மாடிப்படிகளின் விளக்கை யாரோ உயிர்ப்பிக்கிறார்கள். அவரின் அலைபேசி பேரொளியாக கண் விழிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒளி எங்கெங்கிருந்தோ நிரம்பிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் மேலே வருகிறார்கள். உரையாடல் திசை மாறுகிறது. அதற்கு பின் அன்று பேசிய அத்தனையும் பொய்யைப் போலிருந்தது. இன்னும் சிறுகதையை விட்டு வெளியே வராதவர்கள் போலவோ, ஒரு சிறுகதை பாதி நிகழ்ந்துகொண்டிருக்கையிலே வெளிஉலகிற்கு தள்ளப்பட்டு விட்ட கதை மாந்தர்கள் போலவோ குழம்பியிருந்தோம். இல்லை அச்சிறுகதையின் போக்கே அப்படியோ என்றும் குழப்பம். சிறுகதை முடிவை தேடித் தேடி அலுத்து உரையாடல் நீர்த்துப் போனபின் எல்லோருடனும் வீடு திரும்பினோம். பின் பல நாட்கள் நானும் அவரும் பல சிறுகதைகளைப் பேசி தொடர்ந்து விவாதிக்கிறோம். இனி எப்பொழுதும் மீண்டும் விவாதிக்கக் கூடாத ஒன்றாக அக்கதை மட்டும் எஞ்சிப் போகிறது.

*****

கையடக்க பாடல் கருவிகள் வருவதற்கு முன்னர் இரண்டு பாடல்களுக்கிடையேயான இடைவெளி இத்தனை குழப்பமாக இருந்ததில்லை. ஒலிநாடாக்கள் பெரும்பாலும் தொடர்புடைய பாடல்களை வரிசையாக நிரப்பி வைத்திருக்கும். அல்லது ஒரே படத்தின் பாடல்களை வரிசை கட்டி வைத்திருக்கும். வரிசை பல முறை கேட்டதால் மனப்பாடமாகியிருக்கும். ஒரே கதைவெளியில் ஒலிப்பதாலோ என்னவோ ஒரே படத்தின் பாடல்களுக்கிடையே மனம் எப்படியோ ஒரு தொடர்பை ஏற்படுத்தி விடுகிறது. வெவ்வேறு பாவங்களை கொண்ட பாடல்கள் ஆனாலும் அடுத்த பாடலுக்கான மனநிலை பாடல்களுக்கிடையேயான இடைவெளியில் கச்சிதமாக தேங்கி நிற்கிறது. அடுத்த அறையின் பேச்சு இங்கே கசிவது போல அடுத்த பாடலின் துவக்கம் இடைவெளியில் கசியத் துவங்கினாலும் துவங்கிவிடக்கூடும். ஒலிநாடாவில் தொடுத்த பாடல்களுக்கிடையே நார் போல அங்கங்கே தெரியும் இடைவெளியில் இசை இன்னும் அடர்த்தியாக இருக்கிறது, உரையாடலில் மௌனத்தை போல. ஆயிரமாயிரம் பாடல்களை உள்ளடக்கிய கையடக்க கருவிகளுக்கு எந்தவித பாடல் எல்லைகளும் இல்லை. அதனால் பாதியில் முடியும் பாலங்கள் போல இடைவெளிகள் இலக்கின்றி குழம்பி நிற்கின்றன. இசை அதீத உற்சாகத்திலிருந்து ஆழ்ந்த சோகத்திற்கு தாவுவதற்கான ஏதுவான இடைவெளி இருப்பதில்லை. அவசரமாக அடுத்தடுத்த பாடல்களுக்கு தாவித் தாவி தோதான பாடலுக்கு வரும் வரை இடைவெளி நீட்டிக்கப்பட்டு விடுகிறது. பாடல்களை வகைப்படுத்தி வைப்பது பிடிக்காது என்பதால், மறைமுகமாக இந்த இடைவெளிக் குழப்பத்தை ரசிக்கிறேன் என்று ஒரு சந்தேகம். தினமும் பேருந்து பயணத்தை அடுத்த என்ன பாடல் என்று கணிக்கவே முடியாத இடைவெளிகள் மட்டுமே சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கின்றன. பாடலில் ஆழ்ந்து மனதுக்குள் பாடிக் கொண்டு பாடலை தொடர்ந்து வந்து அது முடிந்ததும் மொத்த சிந்தனையும் ஒரு நொடி அந்தரத்தில் பறப்பதை நிறுத்தும் பறவைச் சிறகுகள் போல நின்றுவிடுகிறது. அடுத்து சிறகுகளின் இயக்கம் எப்படியிருக்கும் என்ற கணிக்கும் இடைவெளி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சுவாரசியமான விளையாட்டை எப்போதும் போல ரசித்துக்கொண்டிருந்த பொழுது மிகப் பழக்கமானதும் மிகப்பிடித்தமானதுமான ஒரு பாடலை கருவி எடுத்துத் தருகிறது. பதினைந்து வயதிருக்கையில் கேட்டு கேட்டு முடிவில்லாமல் தொடர்ந்த விரட்டிய பரவசமூட்டும் தூரத்து இசைப் பறவை அப்பாடல். சிந்தனை முழுக்க அந்தப் பாட்டில் கரைகிறது. அடுத்த பாடலோ அதற்கு முன் வரும் இடைவெளியோ எதுவுமே கவனத்தில் இல்லை. பாடலை மட்டுமே மனம் ஒற்றையடிப் பாதை போல தொடர்ந்து செல்கிறது. பாடல் முடிகிற தருணம் சிந்தனை இன்னும் மீளவில்லை. இடைவெளி விழுகிறது. அடுத்த பாடலுக்கான இசை துவங்கும் கணத்தில் மனம் வேறொரு பாடலை இசையுடன் துவக்குகிறது. காதில் கேட்கும் இசையும் மனதில் கேட்கும் இசையும் கொஞ்சமும் ஒத்திசைக்கவில்லை. கவனம் மொத்தமும் அலுவகலப்பணியில் இருந்து மீள்கிறது. என்ன நிகழ்ந்ததென்று புரியவில்லை. பாடலை அனிச்சையாக விரல் நிறுத்திய பின், மனம் பாடும் பாடல் மட்டும் கேட்கிறது. பதினைந்து வயதில் கேட்டு கேட்டுத் தீர்த்த பொழுது இடைவெளிக்கு பின் ஒலிநாடாவில் வரிசையில் அடுத்த வந்த பாடலை மனம் தானாக பாடிக்கொண்டிருக்கிறது. அடுக்கு அடுக்காக ஏற்றி வைத்துக்கொண்டேயிருக்கிற நினைவுகளின் அடியில் இது மட்டும் எப்படியோ சிக்கித் தவித்து பிழைத்து அன்று ஊர்ந்து மேலெழும்பி வந்து விட்டது, சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு. நினைவுகளின் ஆழம் ஏனோ அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் எளிமையாக மறக்கக் கூடிய நினைவும் மனமும் வேண்டும் போல் இருந்தது. ஒரு வேளை நினைவுகளை எல்லாம் மறக்க வேண்டியே பாடலைகளை எப்போதும் கலைத்தே வைக்கிறேன் என்று தோன்றியது. எதுவாயினும், என் நினைவுகளின் தாய்மொழி இசை மட்டுமே என்று புரிந்தது.

Written by aravind

அக்டோபர் 24, 2011 இல் 5:09 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Welcome back! வழக்கம் போல் அருமை!

    இரைச்சல் ஓடை போல எங்கோ கீழே சன்னமாக ஒலித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. – Superb :-)

    எனக்கும் சில பாடல்களை iPod-ல் கேட்கும்போது சிறுவயதில் ஒலிநாடாவில் வரிசையில் கேட்ட அதன் அடுத்த பாடலை ஆழ்மனம் முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். கேசட்டில் மட்டுமல்லாது மனதிலும் பதிந்துபோயுள்ள பாடல்கள்.

    முத்தாய்ப்பாக “நினைவுகளின் தாய்மொழி இசை மட்டுமே” என்ற வரியுடன் முழுவதும் உடன்படுகிறேன்!

    Kaarthik Arul

    அக்டோபர் 24, 2011 இல் 5:57 மு.பகல்

  2. கனவுகளை பற்றிய குறிப்புகள் மிக அழகு அரவிந்தன்.. :)

    விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.. காத்திருக்கிறோம்!!

    Karthi

    அக்டோபர் 30, 2011 இல் 4:26 மு.பகல்


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.