சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for அக்டோபர் 2009

பயாஸ்கோப் #1

18 மறுமொழிகளுடன்

இது ஒரு தமிழ் சினிமா ஆராய்ச்சி தொடர். நாட்டுக்கு ரொம்ப தேவை என்பதால் ரூம் போட்டு யோசித்து எழுதத் தொடங்குகிறேன் .

இந்த முறை தமிழ் சினிமாவில் வந்த தற்கொலை காட்சிகள். இது வரை வந்திருக்கும் பற்பல காட்சிகளில் இருந்து, உங்களுக்காக ‘அழகான’, ‘திறமையாக செதுக்கபட்ட’ தற்கொலை காட்சிகளை ஆராய்ந்து வழங்குவது சேடிஸ்ட் அரவிந்தன்! டிஸ்க்ளெய்மர் #1 – கணமான விஷயத்தை பற்றி பேசுவதால், கலாய்த்தல் தொனியில் எழுதியிருக்கிறேன். டிஸ்க்ளெய்மர் #2 – தற்கொலை செய்துகொள்வது உங்கள் உயிருக்கு கேடு! இனி, எனக்குப் பிடித்த ஐந்து காட்சிகள்.

245dddf0e8தற்கொலை காட்சிகளின் மன்னன், ‘புன்னகை மன்னன்’  திரைப்படத்தில் வருகிறது. அந்தஸ்த்து பிரச்சினையால் சேர முடியாத காதலர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து, லோக்கல் கடவுளின் முன்னால் பூமாலை மாற்றிக்கொண்டு, பின்னர் சில பல காரியங்கள் செய்து முடித்து விட்டு, அருவிக்கு முன்னால் வந்து நிற்கும் போது, நமக்கு பி.பி ஏறுகிறது. கமல் ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கி, பின்னர் ‘கிளிகள் முத்தம் தருதா, அதனால் சத்தம் வருதா’ எல்லாம் முடிந்து, ஒரே ஜம்ப்பு ஜம்ப்ப, ரேகா மாத்திரம் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பரலோகம் போய்விடுகிறார். மரத்தில் மாட்டிக்கொண்ட கமல், கொஞ்ச நேரம் ‘அ, ஆ, இ, ஈ’ சொல்லி விட்டு,  உயிர் தேறிவிடுகிறார். இது தான் தமிழ் சினிமாவின் அதி முக்கிய காதல் தற்கொலை காட்சி. அதற்கும் பின்னர் சித்தப்பா கமல் அட்வைஸ் செய்வது, அத்தனை அதி முக்கிய காட்சியாக எடுத்துக்கொள்ளப் படாமல் போய் விட்டது. காதலில் தோல்வியற்ற தமிழக காதல் ஜோடிகள், இதே போல் ஸ்டெப் பை ஸ்டெப் ஃபால்லோ செய்து விட்டு, கடைசி நேரத்தில் புத்திசாலித்தனமாக ஓடி விடுவார்கள் என நம்புவோம். வாலி, எஸ்.பி.பி, ராஜா, கே.பி, கமல், ரேகா என எல்லோரும் எழுதிய ஒரு அழகான சிறுகதை.

அடுத்தது, தமிழ் சினிமாவின் மிக டிரமாடிக்கான தற்கொலை. 329142_f260கே.பி.யின் இடது கை வண்ணம். (மேலே படித்தது வலது). காதல் மன்னன் ஜெமினி கணேசனை தோழிமார்கள் சrougeஆ தேவியும், வாணிஸ்ரீயும் காதலிக்க, நட்பும் காதலும் நாற்பத்தைந்து டிகிரியில் ஒன்றை ஒன்றை வெட்டிக்கொள்ளும் முக்கோணக் காதல் கதை. Film-in-film என்பது மிகப் பாப்புலரான திரைக்கதை உத்தி, அதைப் போல, இந்தப் படத்தில், novel-in-film என்ற அழகான உத்தியில் முக்கோண கதையையே தொடர்கதையாக எழுதுகிறார் சrougeஆ தேவி. தன் கடைசி அத்தியாயத்தை தூக்கமாத்திரைகளை எண்ணி எண்ணி, தன் சொந்தக் கதை சோகக் கதையை எண்ணி எண்ணி, ஆம்புலன்ஸ் எண் தெரியாத நாகேஷஇ தொலைபேசியில் பதறி சிதற வைத்தபடி எழுதும் கண்ணீர்க் காட்சி. கன்னடத்துப் பைங்கிளி உயிரைக் கொடுத்து நடித்திருந்தார். படம், தாமரை நெஞ்சம்.

ஊரையே உயிர் கொல்லி நோய் ஆட்டிபடைக்க, ஊரை மிகவும் நேசிக்கும் குடிவானவி ஒருத்தியின் வீட்டுக்கு இரவொன்றில் ஒரு கிழவி வருகிறாள். பச்சிலை கலந்த நீரை ஊர் முழுக்க தெளித்தால் உயிர்கொல்லி நோய் ஓடி விடும் என்று சொல்லி, திரும்பி வரும் வரை இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன் என்று காட் பிராமிஸ் செய்கிறாள். வீட்டை விட்டு வெளியே வந்து குடியானவி உயிர்கொல்லி நோயை விரட்டத் துவங்க, ‘அந்தம்மா சாப்டுச்சோ இல்லியோ’ என்று விருந்தோம்ப விரைய, கொடுத்த வாக்கை மீறி வீடு திரும்ப, ரம்யா கிருஷ்ணன் உக்கிரமாக அமர்ந்திருக்க, ஊருக்காக உயிர்த்தியாகம் செய்ய முடிவெடுத்து, அப்படியே ஓடிப்போய் கிணற்றில் விழுந்து பக்தி மார்கத்தை அடைகிறார். கச்சிதமாக எடிட்டிங் செய்யப்பட்ட அடுத்த காட்சியில் அம்மன் அறுபது டிகிரியில் நிமிர்ந்து காமிராவை பார்க்க, புல்லரிக்க வைக்கும் தற்கொலை காட்சி. ‘அம்மன்’ படத்திற்கு எளிமையான ஸ்தல புராணத்தையும் விளக்கி வைத்து, படத்தை துவக்கியது இந்தக் காட்சி.

‘ஏன் தற்கொலை? எதுக்கு? என்ன காரணம்’ என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் எழ வைப்பது திரைக்கதை வண்டிக்கு நல்ல மைலேஜ் தரும் டீசல். அதையும் மீறி ‘இதுக்காகவா?’ என்று ஆச்சரியப்படுத்தியது ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் பாவனாவின் அப்பா தற்கொலை செய்துகொள்வார். பின்னர் உண்மையான காரணம் திகில் டிவிஸ்ட். ஒரு தற்கொலை கணத்தின் பதற்றைத்தை குழப்பத்தை மிக அருமையாக படம் பிடித்திருந்தார்கள். ‘என்ன ஏன் இப்படி வளத்தேபா? உன்னால தான் எல்லாம். நீ தான் எல்லாத்துக்கு காரணம்’ என்று பாவனா புலம்பிக்கொண்டிருக்க, மேஜையை துடைத்துக்கொண்டிருக்கும் அப்பா (அவர் வரும் பெரும்பாலான காட்சிகளில் ‘அழுக்கை’ துடைத்துக் கொண்டேயிருப்பார்!), அபப்டியே தளர்ந்து நடந்து சென்று தூக்கி தொங்கி விடும் காட்சி சிறப்பாக வந்திருந்தது.

‘ஜாதி என்னம்மா?’ என்ற கேள்வி ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் மீனாவையும் பார்த்திபனையும் பிரிக்க,  பார்த்திபனை மடக்க எல்லா முயற்சிகளுக்குப் பின்னர், ‘வெச்ச மருதாணி காயறதுகுள்ள போயிட்டியே’ என்று ஒப்பாரி வைக்க ஏதுவாய், பார்த்திபனின் தங்கையிடம் மனதார பேசி விட்டு, கால் கைகளை கட்டிக்கொண்டு விட்டு, கிணற்றுக்குள் மீனா தொபுக்கடீர். அதை கொஞ்சம் செண்டிமெண்டல் வால்யூம் குறைவாக காட்டியவர்கள், பின் தொடரும் பார்த்திபனின் தற்கொலையை நம் மூஞ்சில் கை வைப்பது போல (on-the-face) ஆக காட்டிருப்பார்கள். தற்கொலை காட்சியோடு முடியும் மற்றொரு படம்.

நாமினேட் செய்யப்பட்ட மற்ற சில காட்சிகள் -  கொலைகார காமுக மருமகனை கொல்வதற்காக, ஜன்னல் கதவு எல்லாம் சாத்தி விட்டு, காஸ் சிலிண்டரை திறந்து வைத்து விட்டு, கொஞ்ச நேரம் பிரகாஷ்ராஜை டார்ச்சர் செய்து விட்டு, அருமையான அண்டர்ப்ளே செய்துவிட்டு செத்துப் போகும் பூர்ணம் விஸ்வநாதன் (ஆசை).  ‘உங்க புக், உங்க புக்க விட்டுட்டீங்க’ என்று கீர்த்தனா ஓடிவர, அந்த தாடிக்கார சக்கர வண்டி இளைஞன் (தற்)கொலைத் தாக்குதல் நடத்துவது (கன்னத்தில் முத்தமிட்டால்). கீர்த்தனாவின் இலங்கையைப் பற்றிய collective memoryக்கு அந்த காட்சி நிறையவே அர்த்தம் தந்தது. சமையல் வேலை செய்கையில் செத்துப்போனால் பணம் கொடுப்பார்கள் என்பதால் தீக்குளித்து செத்துப் போகும் ‘ஜென்டில்மேன்’ மனோரமா, ‘அல்லி அர்ஜுனாவில்’ ஈவ் டீஸிங்கால் தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் விஜயகுமாரின் மகளொருத்தி (நேற்று காலை கே.டி.வி.யில் போட்டார்கள்).  ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் வந்து காப்பாற்றிவிட்டதால், ஜோதிகா ரிஜக்டெட்.

இதையும் தாண்டி, வறுமை, காதல், கண்றாவி போன்ற பல காரணங்களுக்காக சினிமாவில் செத்துப்போன பலர் உண்டு. ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் ஒரு அழுமூஞ்சி நாயகி எதற்கோ செத்துப்போனதாக நினைவு. ஆங், அப்புறம் வேலுநாயக்கரை காப்பாற்ற தீக்குளித்து செத்துப்போகுமே அந்தப் பாட்டி, எல்லாருக்கும் நமது கண்ணீர் அஞ்சலிகள்.

ரைட்டு, கடைசியாக, தமிழ் சினிமாவின் தற்கொலைகளை ஆராய்ந்த சைக்கியார்ட்டிஸ்ட் அரவிந்தன் வழங்கும் ‘A detailed study of the various reasons that made the Tamizh cinema characters suicidal’.

suicidal

Written by aravind

அக்டோபர் 25, 2009 இல் 1:19 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with

இரண்டு கவிதைகள்

ஒரு மறுமொழியுடன்

பகல் கனவு

நேற்றைப் பற்றிய
தெளிவில்லாத
தவறான குறிப்புகளை
தினமும் அதிகாலையில்
எழுதுகிறது
கனவு

எல்லாம் தவறாக நடைபெற்ற
நாளொன்றின் குறிப்புகளை
அது
திருத்தி சரியாக எழுதும்
தினத்தை
நான் வாழ்ந்திருந்தேன்
தலைகீழாக

——————————-

தனிமையுடன் தனித்திருத்தல்

வழியெங்கும் இரு புறமும்
தலையெடுத்து நிற்கும் விளக்குகள்
ஜன்னல்கள் வழியே
வெட்டிக் கொள்ள,
விழுந்து நகரும்
ஒளி-நிழல்
செவ்வகங்களும்

நினைவலைகளின் மேலே
இலக்கின்றி மிதக்கும்
வெறித்த கண்களும்

இணையும் புள்ளியில்
சீராக
விரைகிறது
இந்த இரவுப் பேருந்து

Written by aravind

அக்டோபர் 13, 2009 இல் 3:06 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

இசையலைகள் (கவிதைகள்)

without comments

untitled

ஒலிச்சித்திரம்

பழகிச் சலித்த
கறுப்பு வெள்ளை
சித்திரமென
கிடக்கிற
நகரத்தின் ஊடே
பல வண்ணப்
பரவசக் தீற்றலென
பறக்கிறேன்
பண்பலை பரப்பும்
புத்தம் புதுப்
பாடலொன்றைக் கேட்டபடி

—————————–
ஒரு கிளைப் பூக்கள்

காதுகள் வழியே
இதமான இசைகள் வழிய
கைப்பிடி கம்பியின் மேல்
நானும்
ஜன்னல் மேல்
பக்கத்து இருக்கைக்காரரும்
தலைகள் சாய்த்திருக்கிறோம்.

இரவுக்காற்றின்
கிளையில்
பூத்திருக்கின்றன
இரு பூக்கள்

—————————-

ரகசியப்பாடல்

எந்தப் பாடலையும்
முழுதாக கேட்க
மனமில்லாமல்
கிசுகிசுத்துக்கொண்டிருக்கும்
இரவு நகரத்தின்
எட்டு பண்பலை நிலையங்களை
தாண்டியபடி
ஏதோ யோசனையுடன்
விரல்
நடக்கிறது
முன்னும் பின்னுமாக

ஏதேதோ பாடல்களின்
ஏதேதோ வரிகள் கலந்த
விசித்திரப் பாடல்
இது

திடீரென்று
ஒலிபரப்பை நிறுத்திவிட்டது
மூன்றாவது நிலையம்

விரல்கள்
அழுத்தி அழுத்தி
காதுகளை அடைக்கிற
நிசப்தத்தை
எதிர்பார்த்தே
கிடக்கிறேன்

பின்
மெதுவாக
கேட்கத் துவங்கினேன்
மூன்றாவது நிலையம்
ஒலிபரப்பிக்கொண்டிருந்த
ரகசியப் பாடலொன்றை

—————————-

இசைக்கோலம்

மெதுவாக
மேலெழும்பியபடி
முழு வட்டமிடும்
மேம்பாலத்தில்
விரைந்தபடி
நான்
இணைத்துக் கொண்டிருக்கிறேன்
காற்றடுக்கின்
எல்லா தளங்களிலும்
இப்போது நிரம்பியிருக்கும்
இந்தப் பாடலின்
இசைப்புள்ளிகளை.

————————-

Written by aravind

அக்டோபர் 5, 2009 இல் 5:02 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது