சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

தேநீரில் ஸ்நேகிதம்

2 மறுமொழிகளுடன்

Sip #1 – பொதுவாக இப்போதெல்லாம் அலுவலகத்தில்/வீட்டில்/இணையத்தில் நான் சொல்கிற ஜோக்குகளுக்கு யாரும் சிரிப்பதில்லை. வெட்ட வெயிலில் நிற்பது போன்ற பாவனையுடன் பார்க்கிறார்கள். எல்லோருக்கும் ஏதோ பொதுவான பிரச்சினை என்று மட்டும் புரிகிறது. ஆனால், அக்காவின் மகள் நான் சொல்கிற எல்லா ஜோக்குகளுக்கும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள். (வயது நான்கு மாதங்கள்). வீட்டிற்கு போனதும் பையையும் ஷூவையும் தூர எறிந்து விட்டு அவளிடம் சென்று ஜோக் சொல்லத் தொடங்குகிறேன். அரை மணி நேரம். ஒரே சிரிப்பு. அவளளவுக்கு யாரும் என்னுடைய ஜோக்குகளை ரசிப்பதில்லை. நான் வருவதற்கும் முன்னரும் சென்ற பின்னரும் அவள் அப்படித்தான் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என அக்கா சொல்கிறாள். அதைப் பற்றி நமக்கென்ன கவலை?

#2 – எனக்கு நடக்காததை நடக்க வைக்கிற சக்தி இல்லை. USP, ASP தெரியாது. ஏதோ விளையாட்டாக நடிகை மீனாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக எழுதி வைக்க, அது அப்படியே நடந்துவிட்டது. மற்றபடி அதற்கும் அடியேனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் பற்றிய கேள்விகளை/மெயில்களை தவிர்க்கவும். அப்படி செய்தவர்களுக்கும், இதற்கு முன்னர் ‘நான் நானில்லை, என் வேறு நான், என்னை நானே கண்டேன்’ என்று எழுதிய போது, ‘உங்களுக்கு மல்டிபிள் பெர்ஸனால்ட்டில் டிஸார்டரா’ என்று கேட்டு மெயில் அனுப்பியவர்களுக்கும் சேர்த்து, அன்பு எச்சரிக்கை #1.

#3 – எங்கள் ஊரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் எப்போதாவது நடக்கும். (பெரும்பாலும் இடதுசாரிகள்). சாவடிக்கு எதிரே தெருவை அடைத்துக்கொண்டு மேடை போட்டுவிடுவார்கள். போக வர, இரண்டு பக்கமும் கொஞ்சமாக இடம் – அதில் பாதி இடத்துக்கு ஒரு பெரிய ஸ்பீக்கர் நின்று அலறிக்கொண்டு இருக்கும். (அதை கடந்து செல்பவர்கள், அம்மனுக்கு தீ மிதித்து ஓடுபவர்கள் போல அவசரமாக செல்வார்கள்). பக்கத்தில் பட்டாணிக் கடை வைத்திருப்பவர் வாயெல்லாம் பல்லாக இருப்பார். நேற்று வரை தெருவோரம் நின்று சத்தம் போட்டு அரசியல் பேசிக்கொண்டு இருந்தவர்கள், மேடையில் ஏறிப் பேசிக்கொண்டிருப்பார்கள். கூட்டம் என்றால் இருபது பேர். (மேடையில் இருக்கும் பத்து பேரையும் சேர்த்து). ஒரு சமயம் என்ன தான் பேசுகிறார்கள் என்ற ஆவலில், ‘குடிமகன்கள்’களுக்கு மத்தியில் அமர, மேடையில் இருந்தவர் உற்சாகமாக என்னைப் பார்த்து ‘நீ என்ன செய்தாய்?’ , ‘மக்களாகிய நீங்கள்’, ‘சமுதாயத்தின் பார்வையில்’ என்றெல்லாம் கர்ஜிக்க, அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து விட்டேன். பின்னொரு சமயம், ஹிந்தி ‘பிரச்சார’ சபா நடத்தும் தேர்வுகளுக்காக படிக்க, ஒரு டீச்சரிடம் ட்யூஷன் சேரப் போக, அவர் உள்ளாட்சி தேர்தலில் நிற்கப் போக, நோட் புக்கை கிழித்து மோதிர சின்னம் வரைந்து காற்றில் பறக்க விட்டு இரண்டு மாதம் பிரச்சாரம் செய்தோம். டீச்சர் டெபாஸிட் இழந்தார். நாங்கள் ஃபெயிலானோம்.

#4 -இளையராஜா பித்து ஒரு அளவில்லாமல் பயங்கரமாக ஏறுகிறது. நேற்று காலை வந்தவுடன், தன் முதல் பதிவில் ராஜா பற்றியே எழுதுவேன் என்று ஒரு புதிய பதிவர் வைராக்கியமாக எழுதியதைப் பார்த்து புல்லரித்து பொங்கி வழிந்தேன். இரண்டு நிமிடங்களில், ‘Happy Birthday So and So’ என்று வந்த அக்கவுண்ட் மெயிலில் ‘What do you miss in life?’ என்று கேள்விக்கு, பிறந்த நாள் கொண்டாடுபவர் ‘Ilaiyaraja’s blessings’ என்று சொல்லியிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல், யாய், ஊய், டூய் என்று அவருக்கு மெயில் அனுப்பிவிட்டேன். (பாராட்டி தான்). சாயங்காலம் 4.34க்கு சிக்கனமாக நன்றி சொன்னார்.

#5 – இரண்டு நிமிடங்களுக்கு மேல் படிக்க முடியாமல் கவனம் கலைகிற என்னை நடு ரோட்டில்,பேருந்தில்,நெரிசலில் அமர்ந்திருக்கையில் முற்றிலுமாக கட்டிப் போட்டு விட்டது அசோகமித்ரனின் ‘பிரயாணம்’ சிறுகதை. இதுவரை நான் தமிழில் படித்த சிறந்த சிறுகதைகளை ஒன்று என்று சொல்வேன். இன்னும் சில நல்ல சிறுகதைகள் அந்தப் புத்தகத்தில் கிடைத்தன. (‘ஐநூறு கோப்பை தட்டுகள்’ ‘உயிர்மை’ – 200 ரூபாய்)

#6 – குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட, என்னை எரிச்சலைடையச் செய்கிற விஷயங்கள் – மெகா சீரியல் பிண்ணனி இசை, உன்னிமேனன், 80/90களில் நாயகிகளுக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல், அலுவலகப் பேருந்தில் சீட் பிடித்து வைப்பது, ராத்திரி பத்து மணிக்கு மேல் சில சமயம் ஒரு மெஸேஜை நான்கு முறை டெலிவர் செய்யும் ஆர்வக்கோளாறு ஏர்டெல், நடிகை சிநேகா, காதல் தோல்வி எஸ்.எம்.எஸ் கவிதைகள் (முள், கல்லறை,கண்ணீர் இத்யாதி), பில் கொடுக்காமல் / சில்லறை கொடுக்காமல் மேலே பதுக்கியிருக்கும் குட்டி டீ.வியில் IPLஐ வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும் கடை பையன்கள்.

#7 – கவனம் ஈர்த்தவை – தலைப்புச் செய்தி: ப்ளஸ்டூ தேர்வுகள் முடிந்தது – 200 மாணவர்கள் பிடிபட்டார்கள். (தினமலர்). (நான் தேர்வு நடத்துவது வேறெதற்கோ என்று நினைத்து விட்டேன்) போஸ்டர்: பார்த்திபன், சேரன் வரிசையில், இயக்குனர் நடிகராக மாறும் எதோ-ஒரு-உப்புமா-கம்பெனியின் ‘மாக்கான்’ அறிமுகம் எதோ-ஒரு-கிச்சடி-டைரக்டர். கீழே tag – ‘ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் வரிசையில்’!! தொலைக்காட்சி: சூப்பர் சிங்கரில் பிரசன்னாவை பார்க்க வந்த சிலோன் தம்பதியினர், ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில்’ வந்த இலங்கை தமிழர்கள்.

Written by aravind

மே 17, 2009 இல் 4:49 பிற்பகல்

தொடர், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Dude!!!
    You tell ur lil niece jokes!!! 8-O
    Paavam Aravind ava, avala vittudu!!! Nee ava kitta enna venaa pesu…no jokes!! Avalaavadhu that jokes kekkaama konja naal urchaagama irukkattum!! :-P :-P

    And about arasiyal kootam……..I tell you….it is one of the most hilarious things buddy!! :-D

    goofy

    மே 17, 2009 இல் 6:50 பிற்பகல்

  2. Goofyyyyyyyyyyyyyyyyyyyy – avaLa naan vida maatten! ha ha ha ha ha ha ha ha!! :lol:

    aravind

    மே 26, 2009 இல் 4:12 பிற்பகல்


மறுமொழி இடுக