லட்சுமணின் கனவு

Indianostrum theatre குழுவினரைச் சேர்ந்த நடிகர்கள் சிலர், கூத்துப்பட்டறையின் உதவியுடன் காஞ்சிபுரம் அருகே இருக்கும் புரிசை தெருக்கூத்துப் பள்ளியில் சில நாட்கள் நடிப்பு பயில சென்ற போது, தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கூத்துக் கலையின் தற்போதைய நிலையையும் ஒரு சேர நாடகமாக சொல்கிற முயற்சி தான் தமிழ் நாடகம் – கம்- கூத்து ‘லட்சுமணின் கனவு’. (ஆங்கிலத்தில் ‘Lakshman’s dream, but tonight we are playing indrajit’) நுங்கம்பாக்கம் Alliance Frachaiseஇல் செப்டம்பர் 12, 13 தேதிகளிலும், கலாக்ஷேத்ராவில் செப்டம்பர் 27ஆம் தேதியும் நடைபெற்றது.
புரிசை நாடகப்பள்ளி என்ற பேனர் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மர பெஞ்சு. மொத்தம் ஐந்து மாணவர்கள். மூன்று ஆண்கள், இரு பெண்கள். ராவணனாக வேஷம் கட்டுகிற கோபாலை தவிர மற்ற அனைவரும் சுவாரஸ்யமாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது தான் வந்து அமர்ந்திருக்கும் நம்மை வரவேற்க அத்தனை இனிமையான பாடல்களை பாடுகிறார்கள். சின்ன சின்னதாக நடனம் வேறு. போட்டியும், கேலியுமாக ஒத்திகை நடந்துகொண்டிருக்கிறது. கோபால் மட்டும் இவர்களை பார்ப்பதாக காணோம். தரையையே கோபமாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒத்திகை செய்து ஓய்ந்து போகிறவர்கள் அவனைச் சீண்ட, ‘கூத்துக்கு முழுக்கு போடறேன்’ என்று குபுக்கென எழும்புகிற தீயென எழுந்து செல்கிறான்.
கூத்துக் கலைக்கு கிடைக்காத கவனமும் தெருக்கூத்து என்ற பெயரில் சினிமா கலப்பட கலை வடிவம் பெயர் பெற்றிருப்பதை அவன் கோபம் மூலம் நமக்கும் சொல்கிறார்கள். சண்டையும் சமாதானமுமாக நகர, ஆசான் வந்து விடுகிறார். அடங்கி ஒடுங்கி ஒத்திகை தொடர்கிறது. ஒத்திகை முடிந்த அன்று இரவு, ஆசான் இறப்பதாக விதி அமைய, அங்கு வருகிற எம தர்மனையும் லட்சுமனன் – இந்திரஜித் போரையும் சுவாரஸ்யமாக கலந்து சர்ரியல் முடிவுடன் நிறைவு பெறுகிறது நாடகம்.
இந்த மேடை நடிகர்கள் தான் எத்தனை திறமை வாய்ந்தவர்கள்! என்ன குரல்வளம்! எத்தனை பக்க வசனத்தை, எத்தனை பெரிய பெரிய பாடல்களை ஒரு இடம் கூட பிசகாமல் அத்தனை சுத்தமாக, தைரியமாக நடிக்கிறார்கள். அங்கங்கே சிலிர்க்க வைக்கிறார்கள். எந்த வித நடிப்பானாலும் அத்தனை ஆர்வத்துடன் நடிக்கிறார்கள். குரங்கென்றால் சொறிவதற்கும் குதிப்பதற்கும் கூச்சப்படுவதேயில்லை. அந்த ஐந்து பேருக்கும் தனித்தனியே கைகுலுக்கிவிட்டு வந்தேன்.
லட்சுமணனாக நடித்த Cordis Paldanu ஒரு குட்டி அதிசயம்! பையனுக்கு வயசு 20. இரண்டு மாதமாக தான் தமிழ் கற்கிறான். நடிப்பெனில் அத்தனை இஷ்டம். என்னமாய் நடிக்கிறான்! தமிழ் அத்தனை தெளிவு, அத்தனை சுத்தம். நாடகத்தின் ஹைலைட் அவன் என்றே சொல்லலாம். நாடகம் முடிந்ததும் ‘எங்கள் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் கூட இத்தனை சுத்தமாக ஆர்வமாக தமிழ் பேசுவதில்லை’ என்று சொல்லிவிட்டு சலாம் போட்டுவிட்டு வந்தேன்! எல்லோரும் பகல் இரவு பார்க்காமல் வேலை செய்கிற மென்பொருள் வல்லுனர்களாம். சனி ஞாயிறில் மட்டும் உழைத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள்!
ஆசானாக வருபவர், நிஜமாகவே கூத்துப் பள்ளியின் ஆசான் (புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான்!). அவரின் நடிப்பு கம்பீரமாக இருந்தாலும், கதையோடு ஒட்டாமல் அவரின் தனித்தன்மையை விளக்க எடுத்துக் கொண்ட நேரமும், அதை செய்த முறையும் சரியான கொட்டாவி!
ஐந்து மாணவர்களும் குரங்குகளாக நடிக்கிற கட்டமொன்றில், சஞ்சீவி இலையை உடனே எடுத்து வந்து அதன் சாறால் காயம் ஆற்ற வேண்டிய அவசியம். சஞ்சீவி மலை முழுக்க இலையைத் தேடியும் பயனில்லை. எது சஞ்சீவி இலையென்று தெரியவில்லை. நேரம் கடத்தாமல், சஞ்சீவி மலையை அப்படியே அடியோடு பெயர்த்துக்கொண்டு பாட்டு பாடிக் கொண்டே போகிற பிட், பரவசம்! நாடகத்துக்குள் நாடகமாக வருகிற ‘Kooththu in my blood’ ரசனை! ஒரு ஹோட்டல் செட்டப்பை தத்தகாரத்திலேயே நடத்திக் காட்டியது வெடிச்சிரிப்பு.
ஏகபட்ட விஷயங்களை ஒன்றரை மணி நேரத்தில் சொன்னது பிரச்சினையில்லை. ஆனால் கோர்வையாக சொல்லாதது சின்ன குறை. அதிகாயாவின் இறப்பிற்கு அவனின் அம்மா வைக்கிற சாவு ஓலத்தை திருத்தி திருத்தி அழுவது அலுப்பு!
சுமார் முப்பது பேர் இருந்தார்கள் அங்கே. நாடகம் முடிந்து இயக்குனர் குமார் பேச ஆரம்பித்த போது தான் தெரிந்தது, அதில் இருந்த 27 பேர் அவரின்/நடிகர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள். இரண்டு பேர் நிருபர்கள். மீதி ஒருவர் யார் – சாட்சாத் அடியேன் தான்! (இதுக்கெல்லாம் எனக்கு யாரும் விழா எடுக்க மாட்டீர்களா?)
இயக்குனர் பேசுகையில் ‘தியேட்டர் ஃபெஸ்டிவல்’ நடத்தும் அந்த முண்ணனி பத்திரிக்கை மீது தனக்கு இருக்கும் வருத்தத்தை வெளிப்படுத்தினார். இந்தக் கலையின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையும், அதன் அழிவில் அவருக்கு எற்பட்ட வருத்தமும் நன்றாகத் தெரிந்தது. அது நாடகத்தில் இன்னும் நன்றாகவே தெரிந்திருக்கலாம். இருந்தாலும், தரமான நாடகம். வித்தியாசமான அனுபவம்.
அடுத்து நடைபெறும் இடங்கள் நாட்கள் குறித்து விபரம் அறிய indianostrum.theatre@gmail.com – க்கு மின்னஞ்சல் தட்டுங்கள்.
படங்கள் – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.