சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

வாரணம் ஆயிரம் (இசை)

with 15 comments

அப்டேட் – ஏத்தி ஏத்தி பாடலை எழுதியவர் நா.முத்துகுமார். தாமரை அல்ல!
———————————————————————————————–

ஹாரிஸ் ரொம்ப காபி அடிக்கிறார் என்று பரவலான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நான் அதைப் பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. கௌதம் – ஹாரிஸ் – தாமரை கூட்டணியின் ரசிகன் நான். ஏழு பாட்டு என்பது சர்ப்ரைஸ். இசை விமர்சனம் செய்ய உன்னிடம் என்ன இருக்கு என்று கேட்டால், ரெண்டு காதுகளை தவிர வேறொன்றும் இல்லை! ;)

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை (ஹரிஹரன்/ தேவன்/பிரசன்னா. )

கிட்டார் வாசிக்கும் நாயகன், முதல் முறை நாயகியைப் பார்த்ததும் வாசிக்கிற சொந்த காதல் ட்யூன்! சூர்யாவுக்கு இன்னொரு ந்யுயார்க் நகரம்! சலனம் அதிகமில்லாத சின்ன நீரோடைப் போல போகிறது பாட்டு. மென்மையான மெட்டில் சின்ன சின்ன வாத்தியங்கள என கலப்படமில்லாத மெலடி. பல்லவியில் திடீரென நமக்கு ‘சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ’ என்ற பாடத் தோன்றுகிறது. தாமரையின் வரிகள் ரொம்ப சுகம். (என்னோடு வா வீடு வரைக்கும் / என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்!) ‘காஞ்சனை’ போன்ற வார்த்தைப் பிரயோகம் எல்லாம் அவரால் தான் முடியும். இருந்தாலும் மயக்குவது ஹரிஹரன் தான். கொலுவில் எத்தனை பொம்மைகள் இருந்தாலும், நடு நாயகமாக கம்பீரமாக பெரிய பொம்மை வீற்றிருப்பது போல குரலில் அத்தனை கம்பீரம், குழைவு. அவருக்காகவே பாட்டு ஹிட்டு! தேவன் அங்கங்கே ஆ ஊ என்கிறார். Pick of the album!

முன்தினம் பார்த்தேனே: (நரேஷ் ஐயர் / ப்ரஷாந்தினி)

சூர்யா தலைவி சிம்ரனிடம் ப்ரபோஸ் செய்து பாட்டை துவக்கி வைக்கிறார். காதல் பாட்டு. ஏற்கனவே நமக்கு பழகிய ஆனால் சிக்கென்ற மெட்டு. ‘தோ தில் மில் ரஹேன் ஹை’ டைப்பில் கிறங்குகிறது மெட்டு. முதல் பி.ஜி.எம்மில் இந்த காதிலிருந்து அந்தக் காதுக்கும், அந்த காதிலிருந்து இந்தக் காதுக்கும் ஓடும் அந்த ஜல் ஜல் சுவாரஸ்யம். நரேஷ் ஐயர் கொஞ்சுகிறார். ப்ரஷாந்தினியின் குரல் புதுசாக இருக்கிறது. இரண்டாவது பி.ஜி.எம்.மிலும் சாக்ஸஃபோன் தான் உபயோகப்படுத்த வேண்டுமா? தாமரை மீண்டும் இதம் தருகிறார். (”சல்லடை கண்ணாக / நெஞ்சமும் புண்ணானதே” , “உயிர் ரெண்டும் உராயக் கண்டேன் நெருங்காமலே”) . காதல் என்றாலே ரகசியம் என்று இருக்கிற பரவலான கருத்தை மீறி, காதலன் காதலியைப் பார்த்து ‘இப்போது என்னோடு வந்தால் என்ன / ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன?’ என்று கேட்பது புதுசு. மூணு மாசம் தாரளமாக முணுமுணுக்கலாம்.

அடியே கொல்லுதே : (கிருஷ்/ஸ்ருதி கமல்ஹாசன்/பென்னி தயாள். )

ஆறேழு மாசத்துக்கு முன்னாலே லீக் ஆன பாட்டு. செமத்தியான கிட்டாரோடு செமையான பாட்டு. உற்சாகமான நடை போல பாடல் துள்ளுகிறது. அந்த கிட்டார் கொஞ்சம் இரைச்சலோ என்று அடிக்கடி சந்தேகம் வருகிறது. ஸ்ருதி கமல்ஹாசன் குரல் எல்லாப் பாடல்களுக்கும் பொருந்துமா என்று சந்தேகம். ஆனால் இந்த பாட்டுக்கு நன்றாகவே பொருந்துகிறது. பாடலை முடித்து வைக்கிற ஹம்மிங் செம ஜாலி. மீண்டும் தாமரை மெனக்கெட்டிருக்கிறார். பாட்டின் முதல் அடியே கொல்லுதே. (மழைக் காலத்தில் சரியும் / மண் தரைப் போலவே மனமும் / உனைக் கண்டதும் சரியக் கண்டேனே). பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட்.

அனல் மீது பனித்துளி: (சுதா ரகுநாதன்)

இந்த பாட்டு இந்த படத்தில் தானா என்று சி.டியை திருப்பி திருப்பி பார்க்க வைக்கிறது. கௌதம் எப்படி இந்த ட்யுனை எல்லாம் ஓகே செய்தார்? சோக பாட்டு என்று ரொம்ப சோர்வாக போட்டிருக்கிறார்கள். சோகத்தை மென்சுகமாக சொல்வது தானே ட்ரெண்ட்? என்னவோ போங்கள். தாமரை என்ன எழுதினாலும், எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். சுதா ரகுநாதனுக்கு ராசி இல்லை போலும். அவரின் (ஜனரஞ்சக) முதல் பாட்டும் காலி. அடுத்து இந்த பாட்டும் காலி. அம்மா சிம்ரன் கஷ்டப்பட்டு சூர்யாவை வளர்க்கும் போது போட்டுத் தொலைவார்கள் போல.

ஏத்தி ஏத்தி ஏத்தி : (பென்னி தயாள்/ நரேஷ் ஐயர்/ சோலார் சாய் )

ஆரம்ப விசிலே ‘மின்னலே’வை நினைவுபடுத்தி உற்சாகத்தை குறைக்கிறது. சூர்யாவிற்கு 17-18 வயசு இருக்கும் போது வர வேண்டிய பாட்டு. நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்ற துவங்குவது, முதல் தப்புகள் செய்வது போன்ற காட்சிகளுக்கு பின்னால் ஓடப் போகிற பாட்டு போல. மெட்டு ஒகே. ‘ராஜா நான் ராஜா/ இந்த பேட்டைக்கு நான் ராஜா’ என்று வரும் போது நல்ல துள்ளல். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை தாமரை வேறு வழியில்லாமல் தளர்த்தியிருக்கிறார். வரிகளை கவனித்தால் எல்லோரும் சொல்வது போல ‘Forrest Gump’ ரீமேக் தானோ என்று தோன்றுகிறது.

ஓம் ஷாந்தி ஓம்: (எஸ்.பி.சரண்/க்ளிண்டன்)

முதல் பாட்டின் ரீமிக்ஸ் என்றாலும், சில வரிகளை மட்டும் தான் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். சரண் அங்கங்கே அப்படியே அப்பா. சூர்யா இந்த பாட்டில் எந்த ஹீரோயினை தேடி விரைகிறார் என்று தெரியவில்லை. வரிகளில் ஒன்றும் புதுமையில்லை. ஓம் ஷாந்தி ஷாந்தி என்று எகிறும் போது மட்டும் ரசனை. மற்றபடி மெட்டு ஸோ ஸோ. மின்னல் போல பாட்டு முடிந்து போகிறது.

அவ என்ன என்ன: (கார்த்திக்/பிரசன்னா)

கௌதம் படத்தில் குத்துப் பாட்டா?? காதல் தோல்வி கானா! ஆனாலும் இரைச்சலில்லாமல் முடிந்தவரை மெலடியாகவே ஆக்கியிருக்கிறார்கள். சில தாளங்களில் ஹாரிஸ் தெரிகிறார். ‘அஞ்சல / வெத்தல / நெஞ்சுல’ என்ற மீட்டரில் தாமரை வரிகளை எழுதியிருக்கிறார். இரண்டாவது ஒபரா ஸ்டைல் பி.ஜி.எம் அவ்வளவாக பொருந்தவில்லை. பாட்டின் பெரும் பலம் கார்த்திக்! இந்தத் தலைமுறை பாடகர்களில் சிறந்தவர். கரெக்டான ஃபீல், உச்சரிப்பு என அனாயசமாக பாடியிருக்கிறார். அனுபல்லவியின் முதல் முடிந்ததும் ஒரு ஏக்க பெருமூச்சு விடுகிறாரே, செம ஜோர்!

‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ மட்டுமே ரொம்ப நாளைக்கு மனதில் பெய்யும். கூட்டணி பெரிதாக ஏமாற்றவில்லை தான்.

Written by aravind

செப்டம்பர் 28, 2008 இல் 4:49 மு.பகல்

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

15 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. சுதா ரகுநாதன் ஏற்கனவே காதல் கிறுக்கன் படத்தில் ‘அப்படி பார்க்கிறதுனா வேணாம்’ என்ற ஜனரஞ்சக பாடலைப் பாடியுள்ளார். ஹெரிஸின் அசாத்தியத் திறமையே நல்ல கலைஞர்களை அழைத்து “இவ்வளவு தானா” என்று கேட்க வைப்பது!

    bmurali80

    செப்டம்பர் 28, 2008 இல் 6:21 பிற்பகல்

  2. முரளி!
    பாட்டும் தப்பு! படமும் தப்பு!
    பாட்டு: என்னை என்ன செய்தாய் வேங்குழலே!
    படம்: “இவன்” (நீங்க சொன்ன, ‘அப்படிப் பார்க்கறதுன்னா வேணாம்’ (மாதங்கி) பாடின பாட்டும், இவன் படத்தில்தான்!)
    மற்றபடி அரவிந்த்! உங்க பதிவுகள் ரொம்ப நல்லாயிருக்கு. எங்க அலுவலக புத்தக குழுமத்திற்கு கிளப்புக்கு பரிந்துரைத்திருக்கிறேன்(An ordinary IT guy who has some extraordinary perspectives என்கிற முன்மொழியோடு!!)

    venkatramanan

    செப்டம்பர் 29, 2008 இல் 1:20 பிற்பகல்

  3. & அரவிந்த் (வேங்குழலே கர்நாடிக்காக இருப்பதால்தான்) “(ஜனரஞ்சக) முதல் பாடல்”னு சொல்லியிருக்கிறார்னு நினைக்கிறேன்! What say Aravind?!

    venkatramanan

    செப்டம்பர் 29, 2008 இல் 2:00 பிற்பகல்

  4. வெங்கட் -

    நீங்க சொல்லுறது சரியே. கம்யூட்டரில் சுதா என்று சேமித்தத் தகவல் கொண்டு எழுதிவிட்டேன்.

    bmurali80

    செப்டம்பர் 29, 2008 இல் 2:39 பிற்பகல்

  5. முரளி,

    நானும் வெகு நாட்கள் ‘அப்படி பாக்குறதுன்னா’ பாட்டை சுதா தான் பாடினார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ;) வருகைக்கு நன்றி!

    வெங்கட்,

    என் கருத்துப்படி, இது அவரது ஜனரஞ்சக இரண்டாவது பாடல். அவர் ‘சத்தம் போடாதே’ படத்தில் ‘காதல் பெரியதா’ என்ற பாட்டை பாடி இருந்தார்.

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி வெங்கட்.

    >>உங்க பதிவுகள் ரொம்ப நல்லாயிருக்கு. எங்க அலுவலக புத்தக குழுமத்திற்கு கிளப்புக்கு பரிந்துரைத்திருக்கிறேன்

    இத படிச்சதும் ரொம்ப பெருமையும் சந்தோஷமும் பட்டேன். ஆனா,

    >>An ordinary IT guy who has some extraordinary perspectives

    இத படிச்சதும் என்ன தான் சொல்றீங்களான்னு ஒரு டவுட் வந்துடுச்சு! :lol:

    சும்மா சும்மா! ரொம்ப நன்றி தலைவா! :D

    aravind

    செப்டம்பர் 29, 2008 இல் 3:29 பிற்பகல்

  6. Hi Aravind,
    Firstly, my regrets for not able to comment in tamil cos I am not too good at expressing thoughts in the language.Thoroughly enjoyed reading your review.You were bang on with your views.
    Though the “gaana” song in a gautham movie is a novelty,the lyrics were actually pretty light and hilarious.
    Hats off to the lyricist for not using vulgar double entendres and coming up with clean romantic lyrics

    sanjeevhariharan

    அக்டோபர் 8, 2008 இல் 9:56 மு.பகல்

  7. அனல் மீது பனித்துளி பாடினது பாம்பே ஜெய்ஸ்ரீ இல்லிங்களா?

    கதிர்

    அக்டோபர் 11, 2008 இல் 11:11 மு.பகல்

  8. Sanjeev,

    That was a surprise! Thank you so much! As you said, lyrics is one of the higlights of the album, Thamarai rocks big time.

    aravind

    அக்டோபர் 13, 2008 இல் 4:21 மு.பகல்

  9. கதிர், இல்லை அது சுதா ரகுநாதன் தான். பாம்பே ஜெயஸ்ரீ பாடாத முதல் ஹாரிஸ்-கௌதம் ஆல்பம் இது தான்!

    aravind

    அக்டோபர் 13, 2008 இல் 4:25 மு.பகல்

  10. தாமரை ஆங்கில வார்த்தைகள் எழுதுவதில்லை என்ற கொள்கையில் என்றூமே விலகியதில்லை….. ஏத்தி ஏத்தி பாடலுக்கன வரிகள் நா. முத்துகுமாருக்கு சொந்தமானவை கவனிக்க…….

    prashanthan

    நவம்பர் 28, 2008 இல் 8:35 பிற்பகல்

  11. தாமரை ஆங்கில வார்த்தைகள் எழுதுவதில்லை என்ற கொள்கையில் என்றூமே விலகியதில்லை….. ஏத்தி ஏத்தி பாடலுக்கன வரிகள் நா. முத்துகுமாருக்கு சொந்தமானவை கவனிக்க…

    prashanthan

    நவம்பர் 28, 2008 இல் 8:37 பிற்பகல்

  12. பிரஷாந்தன் – மிக்க நன்றி தவறை சுட்டிக்காட்டியமைக்கு. அதை திருத்திவிட்டேன். :)

    aravind

    நவம்பர் 30, 2008 இல் 3:57 பிற்பகல்

  13. அனல்மேலே பனித்துளி நன்றாகத்தானே இருக்கிறது? உங்களுக்கு மெச்சவில்லையா? இல்லை slow pickup-ஆக பிடித்துவிட்டதா? படம் பார்த்தபின் பிடிக்க ஆரம்பித்திருக்கும் என நினைக்கிறேன். அதன் situation-ஐ நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவில்லை!

    • சாணக்கியன்,   >>இல்லை slow pickup-ஆக பிடித்துவிட்டதா? >>   மிகவும் சரி! :) இதற்குதான் அவசரக்குடுக்கை போல பதிவெழுதக் கூடாது!!  :P

      aravind

      ஜூன் 18, 2009 இல் 3:54 மு.பகல்

  14. /* இதற்குதான் அவசரக்குடுக்கை போல பதிவெழுதக் கூடாது!! */

    பிடிச்சிருச்சுள்ள… நல்லது. விஜய் அவார்ட்ஸ்ல சிறந்த பிண்ணணிப்பாடகிக்கான விருதுல கடைசி போட்டில இருந்த 4 பேத்துல சுதாவும் இருந்தார்…இந்தப் பாட்டுக்காக…

    சாணக்கியன்

    ஜூன் 18, 2009 இல் 4:41 பிற்பகல்


மறுமொழி இடுக