சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

தேநீரில் சினேகிதம் – 2

3 மறுமொழிகளுடன்

Sip #1 – நமது நாட்டின் ஒரே பிரச்சினை அரசியல்வாதிகள் என்பது மீண்டும் நன்றாக புரிகிறது. பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரப் போகிறார்களாம். அது தான் தீவிரவாதத்தை தடுக்கிற ஒரே வழி என்று அவர்கள் நம்புவதே விசித்திரமாக இருக்கிறது. அப்படி நம்புகிறவர்கள் என்ன எழவிற்கு அதை வாபஸ் பெற்றார்கள்? இப்போது எதற்கு அதை வேறு வடிவில் கொண்டு வருவானேன்? எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து அதைப்பற்றி விவாதிக்கவாவது முடியுமா? ஜெயலலிதாவும் வைகோவும் கை கோர்த்து ‘பொடா சட்டத்தை கொண்டு வாருங்கள்’ என்று சொன்னால் எத்தனை வேடிக்கையாக இருக்கும்! எல்லாம் நம் தலையெழுத்து.

#2 – அலுவலக நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு போய்விட்டு திரும்புகையில் தாம்பரத்தில் ரயிலேறி இருந்தோம். என்னுடன் வந்தவர் வங்காளி. எனக்கு தெரிந்த வங்காளப் படங்கள்/நாவல்கள் குறித்து அவரிடம் பேச ஆவலாக இருந்தேன். உங்களிடன் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று பீடிகை போட்டு விட்டு, பேச ஆரம்பித்தேன். கிண்டி வந்திருந்தோம். ஒரு மாதிரியான குழப்பமான முகத்துடன் என்னை பார்த்து ‘நிறுத்து’ என்றார். என்னவென்று கேட்டேன். ‘நீ நிறைய கேள்விகள் கேட்பதை என்னால் உணரமுடிகிறது. ஆனால் எனக்கு பதில் சொல்கிற உணர்வே இல்லையே’ என்று சொன்னார். நான் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என்னைப் பார்த்து ‘நீ என்னை பதில் சொல்லவே விடவில்லை. ஒரு வார்த்தை சொன்னதும் அதை பிடுங்கி ஒரு கேள்வியாக திரும்ப எறிகிறாய்’ என்றாய். மறுபடி நான் ஒன்றும் சொல்லவில்லை. ரொம்ப அவருக்கு ஒரு விதமான வியப்பு முகத்தில் தேங்கி இருந்தது. பாவம். மீண்டும் அது போன்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்த போது, ரயில் பெட்டி காலியாக இருந்த போதிலும், ரொம்ப தூரமாக போய் உட்கார்ந்து கொண்டார். விதமாக விதமாக படமெல்லாம் எடுத்தார். என் பக்கம் திரும்பவே காணோம். மனிதர்கள் ஆனாலும் ரொம்ப மோசம்.

#3 – தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் யாருக்கும் அறிவில்லை என்பதும் என்னுடைய உயரிய எண்ணம். (என் எண்ணங்களை நானே தாழ்மையானவை என்று எதற்காக சொல்லிக் கொள்ள வேண்டும்?) எதற்காக இந்த மதுஸ்ரீயை பாட வைக்கிறார்கள் என்று புரியவில்லை. அவருக்கு கமகம், கரகரப்பிரியா, கரகரப்பில்லாத பிரியா எல்லாம் நன்றாக வந்தால் என்ன? தமிழ் வரவில்லையே! வித்யாசாகருக்கே இப்போதெல்லாம் மெலடி ஒழுங்காக வருவதில்லை. அதையும் தாண்டி ஒரு மெட்டு சுமாராக வந்திருக்கிறதே, (ஜெயம்கொண்டான் – நான் வரைந்த வைத்த சூரியன்), அதை ஏன் மதுஸ்ரீ வாயில் கொடுத்து கெடுப்பானேன்? (சாம்பிள் – ******** உண்தன் கன்கல் தொட்டு தொட்டு தங்கசிருப்பம் எண்ட்ரு மாரியதே… முதல் வார்த்தை என்னவென்று தெரியவில்லை) ரஹ்மானை உதைக்க வேண்டும். சாதனா சர்கமும் இப்படித் தான் இருந்தார். இப்போது நன்றாக உச்சரிக்க ஆரம்பித்ததும் பாட்டே தருவதில்லை. யாரோ ஒருவர் ஒரு பேட்டியில் அவர்களுடையது மழலைத் தமிழ் என்று சிலாகித்து இருந்தார். அப்படி என்றால் உதித் நாராயணன், மதுஸ்ரீயை வைத்து ‘கன்மனிப் பூங்கா’ நடத்தித் தொலையுங்கள்.

#4 – தப தப என்று ஆயிரம் கைதிகளை அண்ணா பிறந்த நாள் அன்று விடுதலை செய்து கைதிகளையும் நம்மையும் திக்குமுக்காட செய்திருக்கிறது அரசு. தன்னிலை மறந்து ஒரு முறை தவறு செய்தவர்கள், நன்னிலை மறந்து பல முறை தவறு செய்தவர்கள், ஆண்கள், பெண்கள், வயசாளிகள் என சகலரும் சிறகடித்தனர். ஒரு தொண்ணூறு வயது தாத்தாவிற்கு போகவே இடமில்லையாம். நிறைய பேரை அவர்கள் குடும்பத்தினர் திரும்ப சேர்த்துக்கொள்ளவில்லை. நிறைய பேர் பாராட்டுகிறார்கள். நிறைய பேர் திட்டியிருக்கிறார்கள். சிலர் குற்றம் சொல்கிறார்கள். அண்ணாவை யாரும் திட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.

#5 – என் பெயர் எனக்கு பிடிக்கவில்லை என்று யாராவது புலம்பும் போதெல்லாம், என் அம்மாவின் பள்ளியில் இருந்த இரு பெண்கள் நினைவிற்கு வருவார்கள். அக்கா தங்கைகள். அவர்களின் அப்பா கம்யூனிசமோ ஷோஷலிசமோ, எதுவோ ஒன்று தலைக்கேறி பெண்களுக்கு முறையே ‘ சமுதாயம்’ , ‘பகுத்தறிவு’ எனப் பெயர் சூட்டிவிட்டார். பகுத்தறிவுற்கு அடிப்படை அறிவே இல்லையென்பது அவளின் விடைத்தாளை திருத்துகையில் எனக்கு புரியும். அவர்களின் வீட்டில் இரண்டு சமுதாயங்களையும் எண்ணி அடிக்கடி கவலையுற வேண்டியிருந்தது. தெருவில் போகிற போது எத்தனை பையன்கள் கிண்டல் செய்தார்களோ. முன்னவள் கை கொட்டி சிரித்தால், ‘சமுதாயம் கை கொட்டி சிரித்தது’ என்று தோன்றுமோ என்னவோ?

#6 – 1995ம் வருஷம் உலகம் அழியப் போவதாக யாரோ கிளப்பி விட, பள்ளியிலிருந்து கும்பலாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில் எங்களில் மிகவும் தைரியமான பையன் அவனுடைய அத்தனை புத்தகங்களையும் நோட்டுகளையும் கிழி கிழியெனக் கிழித்து காற்றில் பறக்க விட்டான் (ஒலகம் அழியப் போகுது டோய்!!). போன வாரம் அவனை நினைத்துக் கொண்டேன். Big Bang theoryஐ நோண்டிப் பார்க்க விரும்பிய சில விஞ்ஞானிகள் என்னவோ செய்தார்களாம் (எனக்கு கணிதம், புவியியல், அறிவியல், சரித்திரம் மட்டும் ஆகாது). அதனால் உலகம் அழியப் போகிறது என்று கிளப்பி விட்டார்கள். யோசித்து பார்த்தால் நாமெல்லாரும் அதற்காக ரகசியமான ஒரு பரபரப்புடன் குறுகுறுப்புடன் காத்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது. எனக்கு ஜாவாவிலிருந்தும், மெகா சீரியலிலிருந்தும் உடனடி விடுதலை.

#7 – இந்த வார லிம்கா ரெகார்ட் – திருவாளர் அரவிந்தன். சாதனை? ஒரே வாரத்தில் ‘வாரணம் ஆயிரம்’ ட்ரெயிலர் பாடலை சில நூறு முறை போட்டு பார்த்துக் கேட்டது. (பெயர்கள் மாற்றப்படவில்லை. படிப்பவர்களின் நலனுக்காக உண்மையான ‘எத்தனை முறை’ என்பது மாற்றப்பட்டிருக்கிறது) (ஒரே காட்சியில் வந்தாலும் சிம்ரனின் கண்ணில் அத்தனை காதல், அத்தனை பரிவு!)

#8 – நான் கவனித்த இரண்டு போஸ்டர்கள் – RJ தீனா நூறுக்கும் மேற்பட்ட மணி நேரம் ரேடியோவில் தொடர்ச்சியாக ‘ஒளி’பரப்பியதாக பீத்திக்கொண்ட பிக் வானொலி போஸ்டர். (பிக் – தமிழனின் பெருமை (!!!)) ; சுஜாதா பெயர் போட்ட ரோபோ பட போஸ்டர்.

#9 – இந்த வார கேலிச் சித்திரக் காட்சி/ஆள் மாற்றம் – தமிழக மின்சாரத்துறை அமைச்சகம் டூ இந்திய உள்துறை அமைச்சகம். ஆற்காடு வீராசாமி டூ ஷிவ்ராஜ் பாட்டில்.

கடைசி சிப் – எங்கள் பேருந்தின் காதல் இளவரசியை நினைவிருக்கிறதா? அடுத்த கட்ட அதிரடியாக மாலைகளில் அவளுடைய ஆளும் எங்கள் பேருந்தில் வரத்தொடங்கியிருக்கிறார். சீ சீ. உங்களுக்காக தான் அவர்களை கவனிக்கிறேன்.

Written by aravind

செப்டம்பர் 18, 2008 இல் 4:26 பிற்பகல்

எண்ணங்கள், தொடர், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Yeah! loved it aravind! happy that u have such interesting titbits in life n happening! am kind of stuck here! its like am getting first hand info abt whats happening back home!!! I take it that you’re a avid people watcher like me!!! and
    மனிதர்கள் ஆனாலும் ரொம்ப மோசம்.

    Unmai, romba unmai.. !!! sila sammayum onnum puriyaradhu illa!

    barath

    செப்டம்பர் 19, 2008 இல் 9:49 மு.பகல்

  2. @Barath,

    Thanks Buddy! I am trying my best to make my life ‘happening’ ;) Yeah am a avid people watcher ;)

    Cheer up doode, we have to make things interesting :D

    >>sila sammayum onnum puriyaradhu illa!

    enakku pala samayam :D

    aravind

    செப்டம்பர் 21, 2008 இல் 7:47 மு.பகல்

  3. :) )

    Saravana Kumar MSK

    செப்டம்பர் 27, 2008 இல் 3:29 பிற்பகல்


மறுமொழி இடுக