சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஜூன் 2008

சொல்லியிருக்க வேண்டாம்

7 மறுமொழிகளுடன்

ஊரடங்கியபின்
அகன்ற வீதியை
பெருங்குரலெடுத்து குரைத்தபடி
ஒற்றை நாய்
கடந்து செல்கையில்
நினைத்துக் கொண்டிருந்தேன்
நீ சொல்லிவிட்ட
அந்த சுடுசொல்லை.

______________________________________________

கொசுறு: குறுந்தொகை எஃபெக்ட் ? (பாலைத் திணை – தலைவி கூற்று) ;)

______________________________________________

புகைப்படம்: http://www.lightalongthejourney.com

Written by aravind

ஜூன் 29, 2008 இல் 3:09 பிற்பகல்

ஜன்னல் – சில குறிப்புகள்

4 மறுமொழிகளுடன்

 
மழையில்
நனைய முடியாதவர்கள்
ஜன்னல் அருகே அமர்ந்தபடி
ஒட்டுக் கேட்கிறார்கள்
அதன் பாடலை.

——————————————

என் ஜன்னலில்
இந்த மேகம்
மீன்.
அடுத்த ஜன்னலில்
இதே மேகம்
முயல்?

——————————————

ஒரு அவசர சிறகசைப்பின்
படபடப்பை மட்டும்
பின்விட்டபடி
நொடியில் நிழலெனப் பறந்துவிடும்
ஜன்னல் மாறி வந்தமரும்
ஏதோ ஒரு பறவை.

——————————————

கொக்கிகள்
இடப்படாத ஜன்னல்கள்
படாரென
காற்றின் வழிக்கு
வீட்டை திறக்கும்!

——————————————

ஜன்னலை
திறக்கையிலெல்லாம்
கூடவே
திறந்து கொள்கிறது
மனதும்.

——————————————

புகைப்படம் – http://westfordcomp.com

Written by aravind

ஜூன் 19, 2008 இல் 3:33 பிற்பகல்

தசாவதாரம்

8 மறுமொழிகளுடன்

கதையா?? மூச்ச்!!

எதற்கு கமல் பத்து வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற கேள்வியில் அர்த்தம் இல்லை! தன் குரு செய்த சாதனையை இன்னும் நீட்டித்து வருங்கால சிஷ்யர்களின் சாதனை அளவுகோலை உயர்த்தும் ஆர்வம் படம் நெடுக பளிச்!!

தொடக்கமே தலை வாழை விருந்து! அதில் தமிழை வேறு பரிமாறி புல்லரிக்கவைக்கிறார்கள்! பத்து நிமிடமே என்றாலும் எல்லாரும் உயிரைக் கொடுத்து வேலை செய்திருக்கிறார்கள்!

அதன் பின்னர் தசாவதாரம் – சரேலென புறப்பட்டு நிற்காமல் ஓடும் ரோலர் கோஸ்டர்!

ஒரு பாத்திரமாக மாறி நடிப்பது எப்படி என்று இலவச வகுப்பு எடுத்திருக்கிறார் கமல். குறைந்த பட்சம் நான்கு கதாபாத்திர காட்சிகளையாவது நூலகத்தில் பாதுகாத்து வைத்து பாடம் எடுக்கலாம்! ஒவ்வொரு கதாபாத்திற்கும் உடை நடை குரல் என கமல் பிரமாதப்படுத்தி இருக்கிறார். கமலின் மூன்று பாத்திரங்கள் மூன்று வெவ்வேறு மரணங்களுக்கு எப்படியெல்லாம் ரியாக்ட் செய்கிறார்கள் என்பது ஒரு சோறு பதம்! தன் உயிரினும் மேலான கடவுளின் மேல் கடப்பாறை படும் போதும் கமலின் “ஆஆ” வாவ்! கோபம், குரூரம், ஹாஸ்யம் என நவரசங்களும் பத்து அவதாரங்களில் பிரசன்னம்.

சில இடங்களில் வாயடைக்க வைக்கிறார் கமல். இது நிஜமாகவே கமல் தானா என்று வியக்கிற அளவுக்கு உடல் மொழி மாறி, விழி மொழி மாறி, நிஜமாகவே பல அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு ராயல் சல்யூட்!

பத்து கதாபாத்திரங்களையும் கதைக்குள் புகுத்த படாத பாடு பட்டிருக்கிறார்கள். கதையெல்லாம் ரொம்ப யோசிக்காமல், திரைக்கதையின் வாலில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். கமலோடு பிசினென ஒட்டி திரியும் அசினுக்கு ஆயாசம் ஆகிறதோ இல்லையோ நமக்கு கொஞ்சம் ஆகிவிடுகிறது!

தசாவதாரத்தில் தலை காட்டினாலே போதுமென அணிவகுக்கின்றன நட்சத்திரங்கள். கமலெனும் நடிப்புச் சுனாமியில் எல்லாரும் அம்பேல்!

அசின் அவ்வபோது ரசிக்க வைத்தாலும் கீச் கீச் டப்பிங் காதில் பிளேடு போடுகிறது. அய்யர் பாஷைக்கு சபாஷ். மல்லிகா – செம காஸ்ட்லி ஊறுகாய்.

பாலிவுட்டை மனதில் வைத்து சேர்க்கப்பட்ட மற்றொரு “லக்கேஜ்” ஹிமேஷ் ரேஷ்மைய்யா, ஸோ ஸோ! பின்னணி இசையில் முன்னணியில் இருக்கிறார் தேவி பிரசாத்.

ரவி வர்மனின் காமிரா மிகப்பெரும் பலம். ஒரே காட்சியில் எத்தனை கமல் வந்தாலும், கொஞ்சம் கூட நெருடவில்லை. சுனாமி ஆகட்டும், சேஸ் ஆகட்டும், ரவி வர்மன் கடுமையாக உழைத்திருக்கிறார்.

கஷ்டப்பட்டு எடுத்தாச்சே என்று பல இடங்களில் எடிட்டர் தயங்கி இருக்கிறார். வெட்ட வேண்டிய இடத்தில் எல்லாம் ஒட்டி ஒட்டி, படம் பின் பகுதியில் இழு இழுவென இழுக்கிறது.

பிரம்மாண்ட பிராஜக்டை டெலிவரி செய்த ப்ராஜெக்ட் மானேஜர் கே. எஸ். ரவிக்குமாருக்கு ஒரு கை குலுக்கல்!

முகஸ்துதி பாடல் வைக்கிற நேற்று முளைத்த நண்டு சிண்டு எல்லாம், கடைசியில் வருகிற “உலக நாயகனே” பாடலை கொஞ்சம் கவனித்து, முடிந்தால் வெட்கப்படட்டும்!! கமல் காமிராவை பார்த்து பஞ்ச் பேசுவதும் எதற்கு என்று கவனிக்கவும்!

பெரிய பணம் போட்டு, அதை விட பெரிய பணத்தை திரும்ப எடுத்தால் மட்டும் தமிழ் சினிமாவை அடுத்த அடிக்கு எடுத்து செல்ல முடியாது. பெரிய உழைப்பும் வேண்டும் என நெத்தி அடியாக சொல்லியிருக்கிறார் கமல்.

உலக நாயகன் உறுமி சிலிர்த்திருக்கும் நரசிம்ம அவதாரம்!

Written by aravind

ஜூன் 15, 2008 இல் 1:46 பிற்பகல்