சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

நடையெழுத்து

with 2 comments

வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது மூக்கின் நுனியில் துளி நீலம் ஒட்டிக்கொண்டதாக ஒரு கவிதையில் எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென அது எத்தனை பொய் என்று தோன்றியது. நான் வானத்தை அண்ணாந்து பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டது. நிச்சயம் என் தவறு தான். பார்க்க எனக்கு நேரமில்லை என்று நான் புரிந்துகொண்டதை போல அச்சமூட்டும் மற்றொரு புரிதல் என் சமீப கால நினைவுகளில் இல்லை. கவிதையின் அடுத்த வரி வரவில்லை. எழுதிய அத்தனை வரிகளும் போலி என்று தோன்றியது. வானம் யாரும் யாரிடமிருந்து மறைத்து விட முடியாத ஒரு ரகசியம். அதையே என்னால் பார்த்து உணர்ந்து எழுத முடியவில்லை எனில், எங்கோ மலையடிவாரத்தில் பூக்களையும் இலைகளையும் இழுத்துச் செல்லும் நதியைப் பற்றி நான் எப்படி எழுதுவது?

நினைத்த மாத்திரத்தில் ஒரு நடை சென்று வர இயல்வது எத்தனை சுகமானது. விடுதியில் இருந்த போது, காலாற நடந்து செல்வது தினசரி பழக்கமாக இருந்தது. காலாற என்று ஏன் சொல்லுகிறார்களோ? மனதாற என்று தான் சொல்லவேண்டும். துவங்கும் போது நம் மனது இருக்கும் நிலையில் நிச்சயம் நடந்து முடிக்கையில் இருப்பதிலை. லேசாவதோ, கனமாவதோ – அது அதன் விருப்பம். அப்படி நடந்து செல்கிற போது நான் அதிகமாக அநிச்சையாக வானத்தை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். கடற்கரைக்கு அருகே அமந்திருந்த இடமாதலால், காற்றுக்கு பஞ்சமில்லை. தனியே நடந்து செல்லுதல் சாத்தியமே இல்லை. காற்றும் ஆகாயமமும் தொடர்ந்து வரும்.

தூக்கம் பிடிக்காத இரவுகளில், வலுக்கட்டாயமாக தூக்கத்தை வரவழைத்து தோற்று கொண்டிருக்கும் பொழுதுகளில் திடீரென தோன்றும் – வெளியில் இத்தனை பிரமாதமான சூழல் இருக்க ஏன் இத்தனை முட்டாள்தனம்? நிம்மதியாக எழுந்து நடக்கத் தொடங்குவேன். பிரமாதமான தார்ச் சாலை. எவ்வளவு தூரம் என்ற கணக்கு தெரியவில்லை. நடந்துகொண்டே இருக்கிறோம் என்ற அலுப்பு தட்டாத அளவுக்கு சின்ன தூரமே. இரு புறமெங்கிலும் அளவான புல்வெளி, அதன் பின்னர் சிற்சில மரங்களுடன் திறந்த வெட்டவெளி. நேராக நடக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. வானத்தை பார்த்தபடி நடக்கும் போது எத்தனை நேராக நடக்க முடியுமோ அத்தனை போதுமானது. சில நாட்கள் மனதில் ஏகபட்ட எண்ணங்கள் சிதறிக்கிடப்பது போல வானத்தில் நட்சத்திரங்கள் கிடக்கும். சில சமயங்களில் இரவு அடுக்களையின் வெறுமை. அம்மா சுத்தமாக துடைத்து வைத்தது போல.

காற்று பேச என்றுமே அலுத்துக்கொண்டதேயில்லை. மெதுவாக பேசிக்கொண்டேயிருக்கும். சில சமயங்களில் பாடக் கூடச் செய்யும். ஆகாயமும் காற்றும் ஒருவாக்கியிருந்த அந்த உலகத்தில் தாளம் தப்பி நான் அடி வைத்துக்கொண்டே நடக்கையில், நானும் அதிலொரு அங்கமாக விடுவேன். அந்த உலகிலிருந்து என்னை விலக்கிப் பார்த்துக்கொள்ள முடியாதபடி ஒரு மந்திரத்தை காற்றும் ஆகாயமும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தன. யார் யாரை வழிநடத்தி செல்கிறோம் என்ற கவலைகள் இன்றி நடக்கலாம்.

இரண்டு மூன்று மணியளவில் இப்படி ஒருவன் நடந்து வந்துகொண்டிருப்பது துவக்கத்தில் அங்கிருந்த இரவு காவலாளிகளுக்கு மிகுந்த அமைதியின்மையைத் தந்தது. தூரத்தில் என்னைப் பார்த்தவுடன் விசிலை ஊதியபடி யாரேனும் ஓடிவரத் துவங்குவர். அந்த சத்தம் கேட்டு மற்றொரு திசையிலிருந்து இன்னொருவரும் வருவார். அருகில் வந்ததும் யார் என்ன என்று கேட்டுவிட்டு முகத்தில் டார்ச் அடித்து பார்ப்பர். அந்த இரண்டு நொடிகளில் என் முகத்தை அவர்கள் எவ்வளவு நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. அடுத்த நாள் என் மூக்கு மட்டுமே நினைவிருந்தால், அதை வைத்து அவர் யாரிடமாவது ஒரு பேச்சைத் தொடங்கலாம். இன்ன மூக்குடன் ஒருவன் நேற்று பித்து பிடித்தது போல நள்ளிரவில் சுற்றிக்கொண்டிருந்தான் என்று சொல்லலாம். ஆனால் நாள் போகப் போக, அவர்களுக்கு நான் பழகிவிட்டேன். அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் எண்ணற்ற நாய்களைப் போல நானும் எந்தப் பிரச்சினையும் தர மாட்டாத பிராணி என்று நம்பினர். அவர்களுடைய உரையாடல்களில் மிகச் சிறிய காலமே நான் இருந்தேன்.

பின்னர் அவர்கள் என்னுடன் பேசத் தொடங்கி விட்டனர். அதிலும் ஒரு அன்பர், அவர் பணிக்கு வருகிற நாட்களில் என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கவே தொடங்கிவிட்டார். இத்தனைக்கும் நான் அந்த கணங்களில் பேசவே விரும்பாமல் இருப்பேன். மிக அளவான சொற்களையே பேசுவேன். அது அவருக்கு பேச்சை எளிதாக விட்டது என நினைக்கிறேன். அவர் விடாமல் பேசிக்கொண்டே இருப்பார். நாளாக நாளாக நான் வெறும் கண்ணாடி போல அவர் முன்னே நிற்கத் தொடங்கியிருந்தேன். அவருடைய பேச்சும் என்னுடைய அமைதியும் அவருக்கு பிடித்த உரையாடலாக மாறிக் கொண்டிருந்தது. எந்தக் கணத்தில் அந்த உரையாடலிருந்து விலகி நடப்பது என்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டியிருந்தது. இருவருக்கும் நிறைவாக உரையாடினோம் என்ற உணர்வு தோன்றுகிற சமயத்தில் தான் விலக வேண்டும்.

அந்த சின்னப் பிள்ளையார் கோயில் வந்ததும் திரும்ப வேண்டுமென்று அர்த்தம். நடை முடிந்ததாக அர்த்தமில்லை. திரும்பி நடக்க வேண்டும், அவ்வளவே. மனதார நடந்து செல்கிற போது திசையெல்லாம் தேவையில்லை. மீண்டும் அந்த அன்பரை கடந்து செல்லும் போது ஒரு புன்சிரிப்பை பகிர்ந்து கொள்கிற கட்டாயம் ஏதுமிருந்ததில்லை. அவர் என்னை அறியாதவர் போல அமர்ந்திருப்பார். திரும்பி வருகிறவன் வேறு யாரோ என்பது போல. நானும் அப்படியே கடந்து வந்துவிடுவேன்.

போகும் போது அண்ணாந்து பார்த்த வானம் திரும்பி வருகிற போது அதே போன்றே இருக்கும். எந்த வித்தியாசங்களும் இன்றி. முடிவற்ற ஒரு வீதியென இருந்த அதில் என் வாழ்நாளுக்கான இதமான நடையை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நான் நடந்துகொண்டிருந்தேன். அந்த சாலை தினமும் இரவில் நடத்திக் கொண்டிருந்த ஒரு நாடகத்தில் நானும் பங்குபெற்றுக்கொண்டிருந்தேன். காற்றின் இசைக்கு தலையாட்டுகிற ஒரு செடியைப் போலவே என்னை அந்த சாலை பாவித்துக்கொண்டிருந்தது. இப்போதைய இரவுகளிலும் நான் மேற்கொண்ட அதே நடையை யாரோ மேற்கொண்டபடியிருக்கிறார்கள், தப்பான தாளத்தில் காலடிகள் வைத்த படி.

Written by aravind

ஏப்ரல் 22, 2008 இல் 4:28 மு.பகல்

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. // காலாற என்று ஏன் சொல்லுகிறார்களோ? மனதாற என்று தான் சொல்லவேண்டும். //

    No words to describe how i felt on reading this post… Was just transported to a time in the past ( which now seems so distant), when such “”Manadhaara-Uyiraara” walks were an integral part of my life too. The same tar road, same sky wearing different shades each day… The sky used to look like it was in a different mood each day… fiery red, sunny blue, lashing grey, warm yellow… the same pillaiyar kovil but different prayers… i had never realised the poetry in tose moments when it happened everyday… Andha ganangaloda arumai appo theriyala… Sitting in a concrete cave now, i realised and relived the beauty of those moments in ur words… absolutely marvellous writing man! Niraya Yezhudhavum!

    Milinta

    மே 2, 2008 இல் 5:15 மு.பகல்

  2. >>Uyiraara

    Nicely coined! :) Thanks Milinta. I am quite scared that we wont get the opportunity to “uyiraara” walk again!

    aravind

    மே 5, 2008 இல் 12:54 பிற்பகல்


மறுமொழி இடுக