மரத்தடி
கடலைக் காண செல்லும் போதெல்லாம் நான் எனக்குள் ஏதேனும் ரகசியம் இருக்கிறதாவென பார்ப்பேன். ஏதேனும் ஒரு ரகசியத்தை எழுதி ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்து கடலுக்குள் வீசுவது என் நினைவிற்கு வரும். அப்படி ஒரு எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை. எங்கேனும் படித்தேனா, யாராவது கதையின் தொடக்கமாக சொன்னார்களா என தெரியவில்லை. ரொம்ப காலமாக அந்த எண்ணம் என்னுடன் இருக்கிறது. முடிவில் அப்படி ஒரு ரகசியம் இல்லை என்று உணர்வேன். அதன் பின்னரும் தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருப்பேன். ஒரு வேளை இருந்திருந்தால், ஒரு வேளை அதை கடலில் வீசினால், ஒரு வேளை யாரேனும் படித்தால்.. என்று நூல் பிடித்து சென்று கொண்டேயிருப்பேன். உண்மையில் எனக்கு ரகசியம் இருப்பதும் இல்லாததும் ஒரு பிரச்சினை இல்லை. எனக்கு அந்த எண்ணம் பிடித்திருக்கிறது. அவ்வளவே. ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போது அதை எடுத்து பார்த்துக்கொள்கிறேன், மிகவும் பிடித்த பழைய புகைப்படத்தை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது போல.
******************
கல்லூரியில் விடுதியில் இருந்த ஒரு இரவு தூக்கம் வராமல் நானும் நண்பணும் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி அமர்ந்து கதை பேச துவங்கினோம். நிலா வானத்தின் ஒரு ஓரமாக இருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தது. பேச்சு சுவாரசியத்தில் நிலாவை நாங்கள் பொருட்படுத்தவில்லை. முழு நிலாவாக இருந்தும் கூட அது எங்களை சுவாரசியப்படுத்தவில்லை. பொறுத்து பொறுத்து பொங்கி எழுந்த நிலா முழுதும் சிவப்பாக மாறிவிட்டது. கருப்பு வானத்தில் அபத்திரமாக செக்கச்செவேலென முறைத்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பேச்சு மெதுமெதுவாக சுவாரசியம் குறைய குறைய நிலாவும் தேய்ந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் முழுதாக நாங்கள் மௌனமடைந்து விட்ட போது நிலாவைக் காணவில்லை. அடுத்த நாள் நாளிதழில் பார்த்து தெரிந்து கொண்டோம் முந்தைய நாள் சந்திர கிரகணம் என்று.
எதிர்பாராமல் சந்திர கிரகணம் பார்த்த காலமெல்லாம் போய் நிலாவையே நான் தற்செயலாக தான் இப்போதெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் எதிர்பாராத நாட்களில் பவுர்ணமி நிலவைக் காண்பதை நான் மிகவும் விரும்புகிறேன். போன வாரம் மாடி ரயிலில் பறந்து கொண்டிருந்தபோது சென்னை நகர அடுக்குமாடி குடியிருப்புகளிடையே ஒளிந்து ஒளிந்து கூடவே வந்தது பவுர்ணமி நிலா. ஒரு கட்டத்தில் ரயில் பாலம் திடுமென, நிலா என்னை பார்த்துக்கொண்டிருந்த திசையிலேயே திரும்ப, ரயில் கூவென அலறி ஓடியது, நிலாவை இடித்து முன்னேறியபடி.
******************
உவமைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. எழுதும் போது உவமைகள் நிறைத்து எழுதினால் சொல்ல வந்த வாக்கியங்கள் ஒவ்வொன்றும் காட்சியாக மாறிவிடுகிறது. புக்கர் பரிசு பெற்ற புத்தகங்களைப் படிக்கையில், பல விதமான உவமைகள் கிடைக்கின்றன. ஒருவரின் முகத்தை வர்ணிப்பதில் இருந்து, ஒரு நாற்காலி எப்படி சாய்வாக இருக்கின்றது என்பது வரை எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார்கள். “தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்” புத்தகத்தில் இருந்த விளக்கங்களை படிக்க பொறுமையில்லாமல் தெறித்து ஓடிய நண்பர்கள் ஏராளம். “மெமாயர்ஸ் ஆஃப் கீய்ஷா”வில் வருகிற சின்னப் பெண் சயூரிக்கு மலை மேல் மெதுவாக ஏறுகிற ரயில், புகையை வெளியேற்றுவது, ஒரு பாம்பு தன் சட்டையை உரிப்பது போல இருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ஒன்றில் ஆங்கிலம் சரளமாக பேசக் கூடிய பெண்ணும், சரளமாக பேச முடியாத ஆணும் உரையாடுகிறார்கள். அதை அவர், “அவளின் ஆங்கிலம் ஆறு போல ஓடியது. அவனோ இருட்டில் தட்டு தடுமாறி நடப்பவன் போல ஆங்கிலம் பேசினான்” என்று எழுதுகிறார். செய்வதற்கு ஒன்றுமில்லாமல் முழிக்கிற சமயங்களில் இது போன்று பல எழுதி வைக்கப் போகிறேன். புக்கர் பரிசு வாங்க உதவும்.