சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

மரத்தடி

with 2 comments

நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அலுவலகத்திலிருந்து கிளம்புகிற நாட்களில் அது நாள் வரை இருந்த போக்குவரத்து நெரிசலை பழிவாங்குவது போல கார்கள் பறக்கின்றன. கட்டுப்பாடென்பதில்லாமல் சீறிப் பாய்கின்றன. தடுப்பதற்கு எதுவுமில்லை என்பது போல தார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்கிறோம். “உச்சிப் பொட்டு தெறிக்கிற” இசையுடன் ஒரு இரவு அப்படி சென்றுக் கொண்டிருக்கையில் கார் அழகான வளைவுகளில் அபாயகரமான திருப்பங்களையும் அபாயகரமான வளைவுகளில் அழகான திருப்பங்களையும் மேற்கொண்டபடி சென்றுகொண்டிருந்தது. அமைதியான சென்னை சந்துகளில் உறங்க ஆயத்தமான நாய்கள் பதறி சிதறி ஓடின. எதற்கும் நிற்பதாயில்லை என்ற வைராக்கியத்துடன் மிக வேகமாக திரும்புகையில் அதிர்ச்சியுற்று காரை கிரீச்சிடவைத்து அதிர வைத்தாள் ஒரு பெண். பித்து பிடித்தவள். நடு ரோட்டில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். “சாவி எங்கே? சாவி எங்கே?” என்று எங்களைப் பார்த்து கத்துகிறாள்.  தொலைவில் சில ஆண்கள் கவனித்தபடி நின்றுக்கொண்டிருந்தனர். யார் அவள், எந்த சாவியை வெகு காலமாக தேடுகிறாள், நாங்கள் கடந்த பின் அவள் நிலை என்ன?

இது போன்ற ஊர் உறங்குகிற வேளையில் ஊர்தியில் வெறி கொண்டு பறக்கிற நேரங்களில் நான் பார்த்த மேலும் இரண்டு வித்தியாசமான காட்சிகள் – கோட்டூர்புர குறுக்கு சந்தில் நாங்கள் திரும்ப எத்தனித்த போது ஒரு புதரில் இருந்து மான் ஒன்று எட்டிப் பார்த்தது; நீல் மெட்டாலிக்கா ஒவ்வொரு தெரு முக்கிலும் வைத்திருக்கும் சக்கரம் பொருந்திய குப்பைத்தொட்டியில் சிறுவன் ஒருவனை ஏற்றி நான்கு சிறுவர்கள் ஊர்வலமாக தள்ளிக்கொண்டு சென்றது.

******************
70களில் அரசாங்க வேலைக்கு சென்ற பெண்கள் அனைவரடிமும் ஒரு சாகசக் கதையிருப்பதை கவனிக்கிறேன். ஒன்று வீட்டில் இருப்பவர்கள், அண்டையில் இருப்பவர் எதிர்ப்பை மீறுகிற சாகசம் அல்லது பயணம் என்றொரு சாகசம். எங்கோ ஊர் பேர் தெரியாத இடத்திற்கு தினமும் சென்று வந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டதில் இருக்கிறது நிர்வாகத் தன்மையின் ரகசியம். என் அம்மாவுடன் பணிபுரிந்த அவரின் தோழி நான் எப்போது ஊருக்கு சென்றாலும் என்னை வந்து பார்த்துவிட்டு போவார். அவர் வேலைக்கு சேர்ந்த 70களில் அவரின் பள்ளிக்கு பேருந்து வசதி குறைவு. காலையில் ஒன்று, மாலையில் ஒன்று. நேரத்தோடு வருமென்று சொல்ல முடியாது. அதுவும் பேருந்திலிருந்து இறங்கி நீண்ட செம்மன் சாலையில் பதினைந்து நிமிடம் நடந்து செல்லவேண்டும். மாலையில் பெரும்பாலும் அவர் நடந்து சென்று ரோட்டை அடைவதற்குள் பேருந்து சென்று விடுமென்பதால் அவர் ஒரு விசில் வாங்கி வைத்துக்கொண்டாராம். தூரத்தில் பேருந்தைக் கண்டால் உடனே விசிலை ஊதுவாராம். நடத்துனருக்கு அது தான் உடனடி தந்தி. பேருந்து சில நிமிடம் நின்று அவரை ஏற்றிச் செல்லுமாம். காலையில் தினம் பேருந்தை தவற விடுபவர்கள் இதை பத்து முறை திரும்பத் திரும்பப் படிக்கவும்.

******************

மஞ்சள் பூக்களின் மேல் எனக்கு என்ன ஈர்ப்பு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சிறுமழையில் எழுதிய ஒரு கவிதையில் அவை பூத்திருந்தன. அதை படித்து விட்டு தோழி ஒருவர் கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய ஒரு கவிதையிலும் அவை வந்திருந்ததை நினைவு படுத்தினார். போன வாரம் எழுதிக்கொண்டிருந்த ஒரு கவிதையிலும் அவை நான் சொல்வதை மதிக்காமல் மறுபடி பூத்தன. யோசித்து பார்த்தால் கவிதை யோசிக்கிற பொழுதெல்லாம் சில காட்சிகள் தவறாமல் என் மனது காட்சிப்படுத்திக்கொள்கிறது. அதிலே மஞ்சள் பூக்களும் உண்டு. ஆனால் அவை மரத்தில் இருப்பதேயில்லை. எப்போதும் எங்கேயாவது சிதறி விழுந்தோ, விழுந்துக்கொண்டோ இருக்கின்றன. ரயில் நிலையம் பற்றி எழுதத் தொடங்கினால் ப்ளாட்ஃபார பெஞ்சில் சிதறிக் கிடக்கினறன. உளவியல் காரணங்கள் ஏதேனும் இருக்குமா என்று யோசிக்க சுவாரசியமாக தான் இருக்கின்றது. ஆனால் யோசித்து முடித்த பின் அப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை பூர்வ ஜென்மம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதேனும் இருக்கலாம். மஞ்சள் பூக்களை அலட்சியப்படுத்தியதால் அடுத்த ஜென்மத்தில் அதைப் பற்றி கவிதை எழுதிக் குவிப்பதாக ஒரு சாபம் இருக்கலாமோ என்னவோ.

******************

Written by aravind

பெப்ரவரி 21, 2008 இல் 7:04 மு.பகல்

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. அழகான மஞ்சள் பூக்கள் பதிவு

    MSK

    ஏப்ரல் 30, 2008 இல் 7:26 பிற்பகல்

  2. சரவணகுமார்,

    நன்றி நண்பரே :)

    aravind

    மே 1, 2008 இல் 11:42 மு.பகல்


மறுமொழி இடுக