ஹி ஹி – 2
பக்கம் பக்கமா வசனம் பேச பிடிக்காத தமிழ் சினிமா காரெக்டரே இல்ல. இருந்தாலும், நடுவுல கொஞ்சம் வசனத்த குறச்சுட்டு, விஷுவலா சில விஷயங்கள சொல்ல ஆரம்பிச்சாங்க. சில பேர் சிம்பாலிசம் யூஸ் பண்ணாங்க. எல்லா நல்லா தான் இருக்கும். ஆனா, அதுக்காக எல்லா சினிமாலயும் ஒரு காலத்துல இதே சிம்பாலிஸம்ஸ் யூஸ் பண்ணி கழுத்தறுத்தாங்க! துணிய ஒரு லிமிட்டுக்கு மேல அடிச்சு தோச்சா கிழிஞ்சிரும்!! சரி, அப்படி சில சிம்பாலிஸம்ஸ் என்னன்னு பாப்போமா……
ரெயில்வே ட்ராக் சேர்றது / பிரியறது :
ஏதோ மனஸ்தாபம் ரெண்டு பேர் பிரியறாங்க. விட்டுத் தொலைய வேண்டியது தானே. இதுக்காக எக்மோர் போய், பெர்மிஷன்லாம் வாங்கி, ஒரு நாள் முழுக்க ட்ராக்க சேத்து பிரிச்சு ஷாட் ஷாட்டா எடுத்து… ஏன் சார் ஏன்?? க்ளைமாக்ஸ்ல வேற வழி இல்லாம அதே ஜோடி சேரும் போது அதே ட்ராக் அப்படியே சேரும். இப்படி காமிச்சா நிஜமாவே அவங்க சேந்தா என்ன எஃபெக்ட் கிடைக்குமோ அது கிடைக்கும் அப்படிங்கிறது கோடம்பாக்க ஐதீகம்.
கை கழுவறது :
குடும்ப தலைவர் சாப்டுட்டு இருப்பார். தலைவி பறிமாறுவாங்க. குழம்பு ஊத்தும்போது ஒண்ணும் கேட்க மாட்டாங்க. ரசம் ஊத்தும்போது கூட ஒண்ணும் பேச மாட்டாங்க. அவர சாப்பிட்டு முடிச்சதும் அவர்ட “அப்போ, அந்த கல்யாணம்?” அப்படினு சீரியஸா எதாவது கேப்பாங்க. உடனே அவர் அந்த அம்மாவ ஒரு லுக் விட்டுட்டு, தட்டுலயே கை கழுவிடுவாரு. க்ளோசப்ல கை நல்லா கழுவுறாரான்னு நம்மளுக்கு வேற காட்டுவாங்க. கை கழுவலனா நாறிடுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல அவர் கை கழுவினா கூட, அந்த அம்மா, “அவ்ளோ தான்! இந்தக் கல்யாணம் நடக்காது” அப்படினு நினைச்சிப்பாங்க!
கடல் சீறும் / காத்து வீசும் / பறவையெல்லாம் ஃப்ரீஸ் ஆய்டும்! :
இது எல்லா படத்துலயும் வரும். அதிர்ச்சிய காட்டணும்கிறது தான் அப்ஜெக்டிவ். கடல் கொந்தளிக்கும். மரமெல்லாம் பேய் மாதிரி ஆடும். தேமேனு பறந்திட்டிருக்க பறவையெல்லாம் அப்படியே நின்னுடும். அப்படியே பாக்கிறவங்களும் உறைஞ்சு போய்டுவாங்களாம்!! சில சோம்பேறி டைரக்டர்ஸ், வேற கடல், வேற காத்து, வேற பறவை கூட்டம்னு கூட ட்ரை பண்ணாம, பழைய படத்துலேர்ந்து அந்த ஸீன அப்படியே சுட்டு போட்டிருவாங்க. “கலைஞரின் கண்ணம்மா” படத்துல இதோட உச்சகட்ட கிரியேட்டிவிட்டி நடந்துது. மீனாவுக்கு நினைவு திரும்ப போது சுனாமியே வந்துடுச்சு!! இன்னாது? மீனா யார்னே ஞாபகம் இல்லையா?? ஃப்ரீஸ் பண்ணுங்கடா எல்லாத்தையும்!!
பூவும் பூவும் கிஸ் பண்ணிக்கறது:
பாவப்பட்ட ரெண்டு அஸ்ஸோஷியேட் டைரக்டர்ஸ் ரெண்டு பூவ புடிச்சிகிட்டு, காமிரால தலை காட்டாம குனிஞ்சு ஒளிஞ்சு நின்னு, டைரக்டர் டேக் சொன்னதும், அந்த ரெண்டு பூவயும் அப்படியே அலேக்கா திருப்பி கிஸ் பண்ணவெப்பாங்க. சூர்யகாந்தி பூவா இருந்தா நல்லது. அட அட! என்ன ஒரு கிரியேட்டிவிட்டி(பாரதிராஜா?????). ஹீரோ ஹீரோயின் கிஸ் பண்ணி தொலச்சாக் கூட வெட்டித் தொலையலாம், இந்தக் கொடுமைய என்ன பண்றதுனு சென்ஸார்ல ரொம்ப நாள் யோசிச்சிருப்பாங்கனு நினைக்க்கிறேன். எத்தனை குழந்தைங்க “ஏம்மா பூவும் பூவும் முட்டிகிது“னு கேட்டுச்சுங்களோ! இதுல அடுத்த ஸ்டெப் வேற ஒண்ணு கண்டுபிடிச்சாங்க. ஹீரோவும் ஹீரோயினும் பாட்டு பாடிகிட்டே ஒரு புதருக்குள்ள போய்டுவாங்க. அப்படியே கையால ரெண்டு பேரும் அந்த புதர உலுக்கு உலுக்குன்னு உலுக்குவாங்க!! ச்சீ ச்சீ!!
சக்கரம் சுழல்றது:
“கால சக்கரம் சுழன்றது” அப்படினு யாரோ ரூம் போட்டு யோசிச்சு எழுதிட்டாங்க. அத காட்றோம்னு ஒவ்வொருத்தரும் நம்மள எப்படியெல்லாம் கொடும படுத்தினாங்க. சைக்கிள் சக்கரத்துல ஆரம்பிச்சு டெய்லரிங் மிஷின் சக்கரம் வரைக்கும் ஒண்ண விடாம சும்மா சுத்து சுத்துனு சுத்த விட்டாங்க. சில டைரக்டர்ஸ் இத விட்டுட்டு, ஒரு செடிய நட்டு ஒரு சின்ன பையன தண்ணி விடச் சொல்லி எடுத்துட்டு, கட் பண்ணி, மன சாட்சியே இல்லாம அந்த செடிய புடிங்கிட்டு, அதே இடத்துல ஒரு பெரிய செடி வெச்சு, பெரிய ஆளா ஒருத்தர தண்ணி ஊத்த வெச்சு (அப்பா, மூச்சு முட்டுதே), அதன் மூலமா சிம்பாலிக்கா சில பல வருஷம் ஆய்டுச்சுன்னு காட்டி புரட்சி பண்ணாங்க!
புருஷன் செத்து போறது: தாலி, பூ, குங்குமம். இது மூணும் தான் டார்கெட். புகுந்து விளயாடினாங்க எல்லாரும். அதுவும் குங்குமத்த எப்படியெல்லாம் தற்செயலா அழிக்கலாம்னு ஒரு பெரிய ரிசர்ச்சே பண்ணாங்க. ஒழுங்கா மாட்டி வைக்காத கல்யாண ஃபோட்டோ விழுந்ததன் காரணமா அப்பாவி புருஷன்கள் நிறைய பேரு செத்திருக்காங்க. இந்த சிம்பாலிஸத்தின் விளைவு? கணவன் இறந்ததும் மனைவிக்கு ஃபிரீயா டெலிபதி தந்தி வந்துடும். அப்ப கூட, அடுத்த ஸீன்ல யாராச்சும் அழுதுகிட்டே “உங்க புருஷன் செத்திட்டாருமா” அப்படினு ஓவர் ஆக்ட் பண்ணி சொல்லும் போது, “எனக்கு ஏற்கனவே தெரியுமே” அப்படினு அதிகப்பிரசங்கித்தனமா சொல்ல மாட்டாங்க. எதிர்பாராம இப்படி நடந்துடுச்சேனு “ஓ“னு அழுவாங்க.“சரி போதும்“னு நீங்க சாதரணமா சொன்னாலே எனக்குப் புரியும். சிம்பாலிஸம்லாம் வேணாம்
சொசுறு : முந்தைய ஹி ஹி : 1