குட்டிக்கவிதைகள்

மௌனத்தை
கிழிக்கிற
சத்தம்
அடங்கியபின்
அதை விட சத்தமாய்
மீண்டும்
அறையும்
மௌனம்.
———-
குழந்தைகள்
போட்டிக்கு இல்லாத
இரவில்
பூங்கா ஊஞ்சலில்
ஆடுகிறது
காற்று.
———-
இலை சிந்தும்
மரமொன்றை
படமாக
வரைந்து வைத்தேன்
அதை யார் யாரோ
எடுத்துப் பார்க்கையிலெல்லாம்
விழுந்தது
இன்னுமொரு இலை.
——–
ஆற்றைத்
தொட்டும் தொடாமலும்
பறக்கிற
பறவையுடன்
போட்டியிட்டு
நீந்துகிறது
அதன் நிழல் மீன்.