சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

குட்டிக்கவிதைகள்

மறுமொழி இடுக »

pogodrop.jpg

மௌனத்தை
கிழிக்கிற
சத்தம்
அடங்கியபின்
அதை விட சத்தமாய்
மீண்டும்
அறையும்
மௌனம்.

———-

குழந்தைகள்
போட்டிக்கு இல்லாத
இரவில்
பூங்கா ஊஞ்சலில்
ஆடுகிறது
காற்று.
———-

இலை சிந்தும்
மரமொன்றை
படமாக
வரைந்து வைத்தேன்
அதை யார் யாரோ
எடுத்துப் பார்க்கையிலெல்லாம்
விழுந்தது
இன்னுமொரு இலை.

——–

ஆற்றைத்
தொட்டும் தொடாமலும்
பறக்கிற
பறவையுடன்
போட்டியிட்டு
நீந்துகிறது
அதன் நிழல் மீன்.

Written by aravind

December 16, 2007 இல் 7:16 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

மறுமொழி இடுக