சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

தீதும் நன்றும் – இரண்டாம் பாகம்

leave a comment »

முதல் பாகம்

குப்பையா தாத்தா கோவிலை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தார். “புனர் தரிசன ப்ராப்பிரஸ்த்து” என்று சொல்லிக்கொண்டார். போன வருடம் இறந்து போன சாரதி பூஜாரி தான் இதை ரொம்ப வருடங்களுக்கு முன் சொல்லிக் கொடுத்தார். இதன் அர்த்தம் “மீண்டும் இந்தக் கோயிலை காணும் வரத்தை கொடு” என்பதாம்.

குப்பையாவிற்கு அதை விட பெரிய வரம் தேவையில்லை.

அவரின் அம்மா பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த போது மழைக்கு இந்தக் கோயிலில் ஒதுங்கிவிட்டு மருத்துவச்சிக்கு சொல்லியனுப்பினார்களாம். அவள் வருவதற்குள் கோயில் மண்டபத்திலேயே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிறந்தார் குப்பையா. அவரின் பாட்டி கடவுளே பிரசவம் பார்த்ததாக சொல்லுவாள்.

சிறு வயது முழுக்க கோவிலில் விளையாடுவதிலேயே கழிந்தது. முதன் முதலில் தேங்காய் கடை வைத்தது கோயில் வாசலில் தான். அவருக்கு வாழ்க்கையை சம்பாதித்து கொடுத்தது அக்கோயில். திருமணம், பையனின் காதுகுத்து துவங்கி திருமணம் வரை எல்லாம் அங்கேயே தான்.

இப்போது யாருமில்லை அவருடன். கோயிலைத் தவிர.

கோயிலைப் பற்றி பல செய்திகள் சேகரித்து வைத்திருந்தார். அதை வைத்து அவர் சொல்லும் கதைகள் ஊரில் பிரபலம். நானூறு வருடப் பழமையான கோயில். இன்று பராமரிப்பின்றி கிடக்கிறது.

எதிர்க்கட்சி தலைவரின் சொந்த ஊர் இது. அவர் முதலமைச்சராக இருந்த பொழுது கூட குப்பையா நேரில் சென்று கோயிலைப் புதுப்பிக்க மனு கொடுத்தார். பிரயோஜனமில்லை.

மீண்டும் கோயிலைத் திரும்பி பார்த்தார். சில சமயங்களில் கோயிலும் தானும் ஒன்று தான் என்று தோன்றும் அவருக்கு. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டு, இப்போது யாரும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது, இரண்டும்.

உயிர் போவதற்குள் இதை யாராவது புதுப்பித்தால் அவருக்கு ஆனந்தமாயிருக்கும். அது வரை அவர் உயிர் போகவும் போகாது.

அடுத்த தெரு தாண்டியவுடன் இடி விழுந்தது போல ஓசை கேட்டது. குப்பையா சற்று நிலைகுலைந்து விட்டார். கோயில் தெருவிலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான். சட்டையெங்கும் ரத்தக்கறை. அவனை நிறுத்தினார். கோயிலில் குண்டுவெடித்ததாக பெரும் முயற்சிக்குப்பிறகு சொன்னான். உறைந்து போனார் குப்பையா.

 

“எதிர்கட்சி தலைவர் கோபால பாண்டியனின் சொந்த ஊரான குளித்தலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குண்டுவெடிப்பில் பலியான வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. விளம்பரத்துக்குப்பின் மீண்டும் இணைவோம்..”

மாலினி வேகமாக குறிப்பெடுத்தாள். சில வருடங்களுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்கு அவள் சென்றிருந்தாள். இதழியல் படித்துக்கொண்டிருந்த போது பழமைவாய்ந்த கோயில்களைப் பற்றி அவள் குறும்படம் எடுத்த போது அந்தக் கோயிலுக்கு போனாள். அப்போதிலிருந்து வருடம் தோறும் செல்கிறாள்.

“மாத்யூ! அந்த ஊருல குப்பையானு ஒரு தாத்தா இருக்காரு. அவரக் கேட்டா இன்னும் நிறைய விஷயம் கிடைக்கும். எனக்கு தெரிஞ்சத டேட்டா செண்டருக்கு அனுப்பிட்டேன். நம்ம டீம உடனே அங்க போக சொல்லுங்க. க்விக்.” மாலினி முழு நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.

“ஓ குட் மாலினி! கண்டிப்பா” பரப்பரப்பாக நகர்ந்தான்.

சற்று நடந்த பின் திரும்பி அவளைப் பார்த்து “வெரி ஸ்மார்ட் ஐடியா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

“டீ.வியைத் தொடர்ந்து பார்க்கவும்.” ப்ரவீணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு செய்தி வாசிக்க தயாரானாள் மாலினி.

 

“குப்பையா நிறைய விஷயங்கள் சொன்னீங்க. ரொம்ப நன்றி. அரசு உடனே கோயில புதுப்பிக்க உத்தரவு போட்டிருக்காங்க. நீங்க அதுக்காக எவ்வளவு போராடியிருக்கீங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்” தேர்ந்த வாசிப்பாளினி போல ஒருத்தி பேசிக்கொண்டிருந்தாள்.

அம்மா அழுகையை இன்னும் நிறுத்தவில்லை. “பாவிங்க! உருப்படுவானுங்களா கோயில கூட விட மாட்டேங்கிறானுங்க…யாரு அந்தப் பையனோ கோயிலுக்கு வந்து உயிர் போயிடுச்சே…” இதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.

“உன்ன கோயிலுக்கு போ போன்னு விரடிட்டே இருந்தேனே” மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி தேம்பினாள்

தேவியை திரும்பிப் பார்த்து சொன்னாள் “அழாத தேவி, கடவுள் எப்பவும் நம்ம கூடவே இருப்பார். நல்லதே நடக்கும்”

தேவி தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கண்களில் கண்ணீர் தேங்கியிருந்ததால் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை தேவிக்கு.

முற்றும்

Written by aravind

நவம்பர் 27, 2007 இல் 2:51 பிற்பகல்

கதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

மறுமொழி இடுக