சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

தீதும் நன்றும்

with 3 comments

3.

 

2.

 

1.

 

0.

 

“On air” என்று விக்ரம் சைகையில் சொன்னான்.

 

குரல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள் மாலினி. மாலினி ஐயர்.  

 

விக்ரம் உற்சாகமில்லாமல் இருப்பது போல் தோன்றியது. அவளும் அப்படி தானே இருக்கிறாள். உற்சாகம் தொலைந்து பல நாட்களாகி விட்டது. இது இன்னுமொரு நாள். அவ்வளவே.

 

“வணக்கம். இது மாலினி ஐயர். தற்போதைய முக்கிய செய்திகள்..”

 

இன்னும் எத்தனை நாள் இந்த தொலைக்காட்சியில் இருக்கப்போகிறோமென நினைத்துக்கொண்டாள். வேலைக்கு வர வெறுப்பாய் இருந்தது.

 

“தமிழக அமைச்சரவை பரப்பரப்பான சூழ்நிலையில் இன்று.”

 

இன்று காலை கூட ப்ரவீண் ஆறுதல் சொன்னான். இதில் என் தவறு எதுவும் இல்லை என்பது அவனது வாதம். நல்ல குரல் வளம், நாட்டு நடப்பில் ஆர்வம், பொது அறிவு, அரசியல் ஆட்டத்தின் நுணுக்கங்கள் எல்லாம் அவளிடம் இருக்கிறது. பார்ப்பவர்கள் கவனம் சிதறாமல் செய்திகளை கேட்கும் அளவுக்கு அவள் அமைதியான அழகு தான். இருந்தும்

 

“தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில் தலை தூக்கியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்.”

 

இருந்தும் அவள் இங்கு வெற்றிப்பெறவில்லை. ஏன் இப்படி

 

மாத்யூ அறைக்குள் வருவது தெரிந்தது. செய்தி வாசிப்பில் கவனம் செலுத்தினாள் மாலினி. மாத்யூ ஏற்கனவே அவள் மேல் குறை சொல்லிக்கொண்டிருந்தான். இவள் செய்தி வாசிக்கும் அன்று அமைச்சரவை கூடி ஒழுங்காக நடக்கிறது. இந்தியா போட்டியில் தோற்றுப்போகிறது. உலகம் எப்போதும் போலிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் கூட ஏதும் அறிக்கைவிடுவதுவில்லை. அது இவளின் தவறா? பரப்பரப்பான செய்திகளை இவளே உருவாக்க முடியுமா என்ன??

 

“கோலிவுட்டின் முக்கிய நிகழ்வுகளுடன் அஞ்சனா தயாராக இருக்கிறார் ஓவர் டூ

 

ச்சே! மாலினி வெறுப்புடன் வெளியே வந்தாள். அஞ்சனாவிற்கு கூட சிவாஜி படம் வெளிவந்த போது ஒரு வாய்ப்பு கிடைத்தது. சரியாக பயன்படுத்திக்கொண்டாள்.

 

“மைல்ட் காஃபி ஒண்ணு” யாரும் இல்லை கேஃபிடேரியாவில்.

 

பிரவீணுடன் திருமணமாகி ஓராண்டு கழிந்துவிட்டது. இந்த வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. ஏதாவது சவாலாக செய்ய வேண்டும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பிரவீண் கூட அடிக்கடி

 

என்ன அது???

 

சில ஆங்கிலப்படங்களின் துவக்க காட்சிகளில் அவள் குழம்பிவிடுவாள். காட்சிகள் விரைந்து கண்முன் ஓடுமே தவிர ஒன்றும் புரியாது. அது போல இருந்தது கண்ணாடி வழியே நியூஸ் எடிட்டிங் அறையைப் பார்க்க.

 

கண்டபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். விக்ரம் வேறு தொலைபேசியில் பேசியபடி எதையோ எழுதிக்கொண்டிருந்தான்.

 

காஃபி கோப்பையை வைக்க திரும்பிய போது, மாத்யூ அவசரமாக வந்தான்.

 

“மாலினி. அர்ஜ்ண்ட். கோ ஆன் ஏர். சீக்கிரம். சீக்கிரம் ஐ சே”

 

        ********************************

 

“மேடம்.. எனக்கு பகல் நிலவு படத்துலேர்ந்து ‘பூமாலையே தோள் சேரவா’ பாட்டு போடுங்களேன்

 

கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்த தேவி தொலைக்காட்சியை திரும்பிப் பார்த்தாள்.

 

“இன்னும் கிளம்பலையா நீ அம்மா.

 

அந்தப் பாடலை கேட்க கேட்க எரிச்சலாக வந்தது. இந்தப் பாடலை ரிகார்ட் செய்ய கடைக்குச் சென்ற போது தான் ரவியைப் பார்த்தாள்.

 

“இந்தப் பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா?” இது தான் அவன் அவளிடம் பேசிய முதல் வார்த்தை.

 

“தேவீ. கோவிலுக்குப் போறியா இல்லையா?” அம்மா அடுத்த அறையிலிருந்து கத்தினாள்.

 

இப்போது அவனை தான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாள் என்ன செய்வாளோ.

 

“போறேம்மா

 

ஒரேடியாக போய்விடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே இரண்டு பெண்களை ஏமாற்றியிருக்கிறான். இவள் தன்னை இழப்பதற்கு முன் சுதாரித்துக்கொண்டாள். அவன் எண்ணம் நிறைவேறாது என்று தெரிந்ததும் விலகிடுவான் என்று நினைத்தாள். ஆனால்.

 

அவன் சொன்னது எல்லாம் பொய். செய்துகொண்டிருப்பதாய் சொன்ன வேலை பொய். காதலிப்பதாய் சொன்னது பொய். இப்படியே போனால் திருமணம் அவனுக்கு நடக்காது என்பதால்  எப்படியாவது அவளை மணக்க முயல்கிறான். அதற்கு அவன் கிளப்பப் போகும் புரளி, அவன் குழந்தையை அவள் சுமக்கிறாள் என்பது தான்.

 

ஏற்கனவே அவன் ஒரு பெண்ணை அவன் ஏமாற்றியது ஊருக்கே அரசல் புரசலாக தெரிந்தபோது தான் இவளுக்கும் தெரிந்தது. அப்போது தான் அவனிடமிருந்து விலகினாள். இப்போது இவளையும் ஏமாற்றினான் என்று அவன் பொய் சொன்னால் கூட ஊரார் நம்பக்கூடும்.

 

கோவிலில் காத்துக்கொண்டிருப்பான்.

 

போன வாரமே ஊருக்கு வெளியே வரவழைத்தான். போகவில்லை. இன்றும் அவனைப் பார்க்கவில்லை என்றால், அவன் பிரச்சினை செய்யத் தொடங்குவான்.

 

இரவெல்லம் யோசித்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவனிடம் தன்னை இழக்கவில்லை என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்?

 

கடிகாரம் கவலையேதுமின்றி ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கான கெடுவை குறைத்துகொண்டேயிருந்தது.

 

 

யாருடைய உதவியைக் கேட்பது. அப்பாவுக்கு ஏற்கனவே அவள் மேல் நம்பிக்கை கிடையாது. அம்மாவுக்கு பயப்படுவதை தவிர எதுவும் தெரியாது.

 

சொல்லிப்பார்க்கலாம் என்று தோன்றியது. அம்மாவையும் அழைத்துச் சென்று அவனை கண்டிக்கலாமா. எதுவும் பிடிபடவில்லை.

 

“அம்மா..”

 

“இன்னும் போகலயா நீ நேரம் ஆகுதுடி.”

 

“உன்கிட்டே

 

அதற்குள் பக்கத்து வீட்டு சிறுவன் ராமுவின் அழுகை சத்தம் கேட்டது. சாதாரண அழுகை இல்லை. மிதமான அலறல்.

 

தேவி அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தாள். ராமுவின் சட்டையெங்கும் ரத்தக்கறை. தேம்புவதும் உளறுவதும் மூச்சு வாங்குவதுமாய் இருந்தான்.

 

“அங்க அங்க” அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

தொடரும்…. 

Written by aravind

நவம்பர் 20, 2007 இல் 4:54 பிற்பகல்

கதை, சிறுகதை, தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. hey where’s the continuation of this?? very interesting :)

    Milinta

    நவம்பர் 26, 2007 இல் 11:24 மு.பகல்

  2. Thanks :)

    Will put soon :)

    Aravindan

    நவம்பர் 26, 2007 இல் 12:04 பிற்பகல்

  3. [...] November 27, 2007 by aravind முதல் பாகம் [...]


மறுமொழி இடுக