Archive for ஜூலை 2007
பூமரம் பற்றிய கானல் நினைவுகள்
கவித்தூரிகை 9
மௌனங்கள் பிடிக்கிற இரவில்
என் கனவுச்சாலையின்
கள்ளச்சாவியை
நினைவுகளே எடுத்து திறக்கும்.
வர மறுக்கிற என்னை
உந்தி தள்ளுகிற
நினைவுகளுக்குத் தெரியும்
கனவுச்சாலையில்
மஞ்சள் பூக்கள் சொரிகிற
அந்த பூமரமும்
பனி மலை நதியும்
என்னை பலவீனப்படுத்தும் என்று.
மீண்டும் என்னை
பலமிழக்கச் செய்து
காதலோடு தனியே
விட்டுச் செல்லும்.
ஒரு இனிமையான இசையில்
மென்கவிதைகள் சொல்லியபடி
என் கனவின் எல்லையை
காதல் உறுத்தாமல்
விஸ்தரிக்கும்.
அமைதியாக நானும்
தொடர்வேன்.
என் கனவுச்சாலை
எங்கே தொடங்கியது
இப்போது எது வரை வந்துள்ளது
எதுவும் தெரியாது.
இரவு மெதுவாய்ச்
சாகும் போது மிச்சமாகும்
பூமரத்தின் கானல் நினைவுகளையும்
சில மெல்லிய காயங்களையும்
அர்த்தமில்லாமல் சேகரிப்பேன்
வெட்கமில்லாமல் மீண்டும்
நினைவுகள் வந்தால் காண்பிக்க.
