சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

படகு இலைகள் நிலா பருவங்கள்

மறுமொழி இடுக »

மேகங்களைப் பார்க்கிற மற்றொரு கனவாகவே அது துவங்கியது. எழுதுவதற்காக யோசித்து யோசித்து சேர்க்கிற சொற்கள் சொற்றொடராகி கதையாகி கலைவதைப் போல சலிப்பில்லாத எண்ணங்களின் பெரும் விளையாட்டு அது. கடல் நீரைத் தொடர்ந்து செல்லும் பார்வை வண்ணக் குழப்பமின்றி நீல வானேறுவதைப் போல இக்கனவிலிருந்து நினைவிற்கு விழித்திருக்க வேண்டிய நான், கழுத்தில் மெல்லிய வலியின் கிளைகள் படரப் படர மேகங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். கழுத்தை கொஞ்சம் இறக்க முற்படத் துவங்கியதும் முதல் அதிர்ச்சி – நான் மேகங்களை மேல்நோக்கியல்லாமல் கீழ்நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேகங்கள் மெல்ல கலைந்து விலக அதன் கீழே கடற்கோளால் புதைந்ததைப் போல ஒரு பெருநகரம் பார்வைக்கு வர, அதிர்ச்சியில் விழித்துவிட்டேன். அக்கனவு பின் எப்போது நினைவிற்கு வந்தாலும் சொல்ல முடியாத ஒரு வார்த்தையின் படபடப்பும் பரவசமும் என்னைத் தொற்றிக்கொள்ளும். முதன் முறையாக விமானத்தில் ஏறிய இரவில் அக்கனவின் இருப்பிடம் சட்டென புரிந்தது.

விமானத்தின் சத்தம் கொஞ்சம் பயமாக இருந்தது. ஜன்னல் வழியே அதன் இறக்கைகளை எப்போதும் பார்த்தாலும் அவை வலுவில்லாதவை போன்றே இருந்தது. கண்டங்களையும் காலங்களையும் தாண்டிக்கொண்டிருந்ததால் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஜன்னல்கள் திறக்க அனுமதியில்லை. காணக் காட்சிகள் இல்லாததால் கற்பனையில் அதீத பயம். அமெரிக்காவில் பின் வரும் நாட்களில் நகரங்களுடையில் பறக்கிற பொழுது மேகங்களை உரசி கடந்து அவை அமிழ்ந்து அமிழ்ந்து அசையாத கடலலைகள் போல உறைவதைப் பார்க்கப் போகிறேன் என்றாலும், அன்று மேகங்களை விமானங்கள் உரசுகையிலெல்லாம் நடுக்கம். பத்திரிக்கைகளில் பார்வை பதியவில்லை. ஐபாட் ஏதோ ஒரு பையில் சிக்கிக்கொண்டு விட்டது. திரைப்படங்கள் எதுவும் ருசிக்கவில்லை. ஒவ்வொரு முறை விமானம் மெல்ல குலுங்குகிற பொழுதும் சுற்றி முற்றி பார்க்கிறேன். தூக்கம் பிடிக்கவில்லை. உணவு பெட்டியைத் திறக்கையிலெல்லாம் செயற்கையான ஒரு மணம். சில கணங்களில் விமானங்கள் கொஞ்சம் மேலும் கீழும் அசைகிற அளவிற்கு மேகங்கள் பாதையை தடுக்கின்றன. சில சமயங்களில் மேகங்களைப் பற்றி முன்னெச்சரிக்கை விடப்படுகிறது இருக்கையில் இருக்கும் இசைப்பேழையை உயிர்ப்பித்து காதுகளில் கருவியை பொருத்தி எச்சரிக்கைகளை கேட்க மறுக்கிறேன். இளையராஜா என்று தேடிப் பார்த்தால் அந்தப் பாடல்களில் எதுவுமில்லை. மொசார்ட், பீத்தோவன், அரபிய இசை என எது எதுவோ தேடித் திரிந்தும் சுகமில்லை. கடைசியில் ஜானகியின் பாடல்கள் என்று கண்ணில் பட்டதை உடனே இயக்க ’கடல் மீன்கள்’ படப்பாடல் துவங்குகிறது. கடலலையில் அசைகிற தோணியின் தாளத்தில் ஒலிக்கிற ‘தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்’. மீண்டும் மீண்டும் இதையே பாடுமாறு கட்டளையைப் பிறப்பித்து விட்டு கண்களை மூடிக்கொள்கிறேன். விமானம் மெல்ல மேகங்களின் குளிரில் நடுங்கிக்கொண்டே நகர்கிறது. இசை தூக்கத்தை முழுமையாக தந்த நொடியில், மேகம் கடலாகி விமானம் சின்னஞ்சிறு படகாகியது.

*****

இலையுதிர்காலம் உச்சத்தில் இருந்த பொழுது, காற்று பெரும் மரமாகியிருந்தது. விழுந்து கொண்டிருக்கிற வண்ண மிகுதியைப் பார்த்தால், பூமியின் மரங்களிலிருந்து விழுகிற இலைகளைப் போலில்லை. எப்போதும் அதிவேகமாக பல வண்ணங்களில் பிரண்டுகொண்டேயிருக்கிற இலைகள். இளஞ்சிவப்பு இலைகள் மெல்லிய காந்தம் போல பார்வையை உடன் இழுக்கின்றன. காற்றில் பரவசமான இரைச்சல். யாரும் ரகசியமாக நடந்து செல்ல முடிவதில்லை. அசைவில்லாத ஒரு நொடி நிகழ முடிவதில்லை. மழை அன்று தன் அழகை கொஞ்சம் இழந்தே விட்டது. அந்த வார இறுதியில் எங்கு சென்றால் மிக அழகான இயற்கை காட்சிகள் காணக் கிடைக்குமென விசாரித்து தேடிப் படித்துத் திட்டமிட்டு இறுதியில் எங்கும் போகாமல் ஒரு வாடகைக் கார் மற்றும் ஜிபிஎஸ்ஸுடன் தனித்து விடப்பட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லை. கார்களுடன் ஆறு வார பழக்கம் மட்டுமே. வீட்டில் இருக்க பிடிக்காமல் காரை கிளப்பிக்கொண்டு தங்கியிருந்த தூங்குமூஞ்சி டவுனை சுற்றி வரத் துவங்கினேன். காரின் வேகம் ஏறி இறங்கி ஏறி இறங்கி சமன்பட்டதும், சாலைகள் சிறப்பானதும் இலைகளுக்கு நடுவே மிதப்பது போன்றதொரு உணர்வு. சரசரவென்ற இலைகளின் இயக்கம் பிற அத்தனை அசைவுகளையும் வீழ்த்தி விடுகிறது. காவலர்களும் காதலர்களும் வராத சாலைகளாகத் தேர்வு செய்து கடக்கிறேன். டவுனை கடந்ததும் அமைதியான காட்டுச்சாலைகள் திறக்கின்றன. மிக உயரமான மரங்களும் அடர்த்தியான நிழல்களும். பல வண்ண இலைகளினால் சூரிய ஒளி உற்சாகமாக குழம்பிக் கசிகிறது. நேராகச் செல்லும் சாலைகளே எங்குமில்லை. சதா வளைந்துகொண்டிருக்கிற திருப்பங்களில் விரைகிற போது ஓவியத்தினுள்ளே இறங்கித் அடுத்து என்னவெனத் தேடிச் செல்வதைப் போலிருக்கிறது. ஐபாடை காருடன் இணைக்கிற விசித்திர கருவியில்லாததால் விசித்திரமான பண்பலை கிட்டார் இசை ஒலிக்கிறது. சூழ்நிலையை நன்று கிரகித்து உள்வாங்கிக்கொண்டதும் கவனம் வெறும் இலைகளை மட்டும், சாம்பல் சிகப்பு மஞ்சள் இளஞ்சிகப்பு இங்கு அங்கு எங்கென துரத்துகிறது. பிரமாதான ஒத்தியக்கத்துடன் உள்ளங்கையளவேயான சாம்பல் நிறப் பறவைகளின் சின்னஞ்சிறு கூட்டங்கள் அதிவேகமாக மரங்களிருந்து சட்டென கீழிறங்கி இலைக் கூட்டமென ஏமாற்றிப் பறந்த மின்னல் கணங்கள் தான் சென்ற வருடத்தின் மிகச் சிறப்பான ஹைக்கூ தருணங்கள்.

*****

ஹார்ட்ஃபர்ட் வந்து சேர்ந்து ஒரு வாரத்தில் வீடு தேடி அதில் ஒரு அறையின் பாதியை அடைத்துக்கொண்ட பிறகு எல்லோரும் ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் திரும்ப திரும்பச் சொல்லத் துவங்கினர். தங்கியிருந்த இடத்தைப் பற்றிய எச்சரிக்கை. உயிர்கள் அங்கே மலிவு, கையில் வைத்திருக்கும் பொருட்களின் மதிப்பு அதிகம். சென்ற ஆண்டு அங்கே நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு மிகப்பிரபலம். போதைப் பொருட்கள் நல்ல புழக்கம். வழிப்பறி எப்போது வேண்டுமானாலும் நிகழும். அங்கே இருந்த இந்தியர்கள் எப்போதும் கூட்டமாக வெளியே சென்று வந்துகொண்டிருந்தனர். பேருந்தை விட்டு இறங்கி வீடு வரும் வரை அனைவரும் சீனியைத் தூக்கிச் செல்லும் எறும்புக்கூட்டத்தைப் போல நெருக்கமாக நடப்போம். வெளியே சென்று வர அறை நண்பரின் கார் இருந்தது. இருந்தும் காலாற நடக்க முடியாதது மிகுந்த சங்கடமாக இருந்தது. காரணமில்லாமல் உடன் நடந்து வர யாரும் தயாரில்லை. குளிரினால் உடலில் நடுக்கம், குற்றங்களினால் மனதில் நடுக்கம்.

நடந்து செல்லுகிற தொலைவில் இந்திய பல்பொருள் அங்காடி இருந்தும் யாரும் நடந்து போவதில்லை. ஓரிரு முறை நான் தனியாக நடந்து செல்ல முயன்று எதிர் வரும் ஆசாமிகள் எல்லோரையும் குற்றவாளிகளைப் போல பார்க்கிற என் பார்வை எனக்கே பிடிக்காமல் அந்த எண்ணத்தை கைவிட்டேன். காலையில் பேருந்தை பிடிக்க நடப்பது, மாலையில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்கு நடப்பது தவிர வீட்டினுள்ளே மட்டுமே நடக்க முடியும். இரண்டு மாதங்கள் மடிக்கணினியுடனே கழிந்தது. வேறொரு நல்ல இடத்தில் வீடு பார்க்கத் துவங்கி இடம் கிடைத்து மாற நாள் குறித்து காத்திருந்த பொழுது மார்ச் 19 வந்தது. அன்றைய இரவு உதிக்கப் போகிற நிலா பூமிக்கு மிக நெருக்கமாக வலம் வரப்போகிறதென்பது தகவல். மற்ற சமயங்களில் இந்த செய்தி பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருக்காமல் போயிருக்கலாம். ஆனால் அன்று ஏனோ அப்படியில்லை.

பிறைகள் காண எப்போதும் பிடிக்கும். நான்காம் பிறையை பார்த்து நினைவுகளை அழித்துக்கொள்ளக் கூடாதென பார்க்காமல் தவிர்த்த சிறு வயதின் இரவுகள், மிகச்சரியாக திட்டமிட்டு எல்லரையும் அனுப்பிவிட்டு தனியாக வீடு திரும்பி வந்த தொலை தூர ரயில் பயணத்தில் அடுத்த தண்டவாளத்தில் சிறிய வெளிச்சப் பூச்சியாக விடாமல் உடன் ஊர்ந்த நேரங்கள், இலக்கின்றி நடந்தும் பேசியும் களைத்து இரண்டு நண்பர்களுடன் உயரமான தண்ணீர் டாங்க் மீது ஏறி அமர்ந்த நீண்ட இரவில் திடீரென சிகப்பாகி கிரகண நிழலில் மறைந்து மீண்டும் வளர்ந்த எதிர்பாராத நிமிடங்கள் தவிர, நிலவுக்கும் எனக்கும் பெரிதாக நெருக்கமில்லை. மார்ச் 19 இரவு குளிருக்குத் தோதான உடையுடன் காதுகளில் இசையுடன் ஏழு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி புல்வெளிகளில் மிச்சமிருந்த வெண்பனியினூடே நடந்து வீட்டைச் சுற்றி சின்னசிறு வட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த சில மணி நேரங்களில் பூமிக்கும் எனக்கும் மிக நெருக்கமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது குற்றமற்ற ஒரு நிலா.

*****

அஞ்சல் பெட்டியில் தேவையற்ற இன்னுமொரு கடிதம். மறுபடி கிட்டாரில் ஈ மைனர் முதற்கொண்டு ஆரம்பம். மீண்டும் எப்படியோ தனித்து விடபட்ட ஒற்றை காலுறை. முதல் மழையிலேயே உடைந்து விட்ட குடைக்கம்பி. துவக்கப் பாடலுக்கு மறுபடி வருகிற இசைத்தட்டு. பாதியில் செய்வதறியாத திகைத்து நின்றுவிட்ட கதை மாந்தர்கள் மீண்டும் முதல் காட்சிக்கு விரைதல். சிந்தனை தீர்ந்ததும் மீண்டும் அதே சிந்தனையுடன் மறுபடி ஒரு நடை. திரையரங்கில் சொற்ப மக்களுடன் இன்னுமொரு திரைப்படம். ஒரு புதிய நண்பர் மற்றும் வேண்டுமென்றே தவறவிட்ட ஒரு தொலைபேசி அழைப்பு. தூக்கத்தை தேடப்போகிற நாளைய அதிகாலை. அடுத்த முறை எந்திரத்தில் போட்டதும் இன்னமும் சுருங்கப் போகிற சட்டை. கொஞ்சம் சாயமிழக்கும் நினைவுகள். தெருவோர இசைக்கலைஞனுக்கு சில்லறை போடலாமா என்ற தினசரி யோசனையும் செலவழிக்காமல் சின்னப்பெட்டியில் தினசரி சேர்ந்து கொண்டிருக்கிற சில்லறைகளும். மறுபடியும் தீர்கிற அலைபேசி நிமிடங்கள். மீண்டும் தவறாகவே உச்சரிக்கிற ஆங்கிலச் சொல். மறுபடியும் நீளமான கால் நகங்கள். மீண்டும் கலைதல் கலைத்தல். மறுபடியும் திரைச்சீலை மாற்றம். மறுபடியும் உறுதி இழத்தல். மறுபடி முடிவுகளை மாற்றுதல். மறுபடியும் அதே உரையாடல்கள். மறுபடியும் மறுபடியும் நான்.

சென்ற ஜனவரி துவங்கி இந்த ஜனவரி வரை, சக்கரம் ஒரு முறை முழுக்க சுழன்றிருக்கிறது. சிறு சக்கரத்தில் சுழன்றபடி கடந்த கணமொன்றை குறிக்க வேண்டி எறிந்த சிற்றம்பு காலத்தை ஒரு சுற்று சுற்றி முடிந்து மீண்டும் விழிப்பார்வைக்கு நேரே வந்து நிற்கிறது. அதே காலம் வேறொரு காலமென ஏமாற்றியபடி உங்களுக்கும் எனக்கும் பொதுவானதாகச் மறுபடி சுழலப்போகிறது. முரகாமி சொன்னது போல, Time weighs down on you like an old ambiguous dream. எப்போதும் தொடர்கிற இதே வினோதத்தில் சென்ற வருடம் மட்டும் மிகச் சுவாரசியமான மாறுதல். அழுத்தந் திருத்தமாக  உச்சரிக்கப்பட்ட சொல்லைப் போல, நிதானமாக பெறப்பட்ட முதல் முத்தத்தைப் போல முதல் முறையாக கோடையும், உறைகாலமும், இலையுதிர்காலமும், வசந்தமும் என் முன்னே திருத்தமாக அரங்கேறி முடிந்திருக்கின்றன. பனியும், புற்களும், இலைகளும் கால்களை புதைக்க புதைக்க அதே சாலையில் அதே சிந்தனைகளுடன் மீண்டும் மீண்டும் நான் நடந்து கொண்டேயிருக்கின்றேன். ஐந்தாம் முறையாக அதே காட்சி ஜனவரியில் தொடங்கியிருக்கிறது.

நேற்று இரவு சட்டென Father And Daughter குறும்படம் நினைவிற்கு வந்தது. சதா சுருங்கிக்கொண்டேயிருக்கிற மேகங்கள், பின்னோக்கி பறக்கிற நினைவுப் பறவைகள், மாறிக்கொண்டேயிருக்கிற பருவங்கள், துல்லியம் மாறாமல் பதிகிற நிழல்கள் கடக்கிற பிம்பங்கள், பெருகியும் வற்றியும் போகிற நதிகள், எதிர் திசையில் கடக்கிற அதே யாரோ, காலமெனும் பல்லாயிரக்கணக்கான சக்கரங்கள் பலபலப்பரை பலப்பல நிலைகளில் வைத்து நேராகவும் தலைகீழாகவும் சுற்ற வைக்கிற அதே நாடகம், எத்தனை காலத்திற்குப் பிறகும் உள்ளே மாறாமல் இருக்கிற அதே உணர்வுகள் என ஒவ்வொரு கணமும் பிரமிப்பான உயிர்ப்பான குறும்படம். மிகச்சுலபமாக நெஞ்சை நிறைக்கிற இசை. இப்படத்தை நீங்கள் பார்த்தால், உங்களைச் சந்திக்கையில் தேநீருடன் உரையாட நமக்கொரு விஷயம் இருக்கிறது.

Written by aravind

ஜனவரி 27, 2012 இல் 3:27 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

என்னமோ ஏதோ

9 மறுமொழிகளுடன்

நூறு சதவீத பாலியஸ்டரால் ஆனது என்னுடைய சாக்லேட் நிற போர்வை. (ஓப்பனிங் வித்தியாசமா இருக்கா?). பார்த்தவுடனே எடுத்துக் கட்டிக்கொள்ள அழைக்கிற நாய்க்குட்டி போல ப்ளாஸ்டிக் கவரில் மெத்தென அமைதியாக அடைந்திருந்ததை பார்த்ததுமே, ‘அது தான் வேணும்’ என்று பக்கத்திலிருந்த டேபிளை பிடித்துக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று வாங்கினேன். இந்தியாவிலிருந்து அப்போதே புத்தம் புதிதாக இறங்கியிருந்ததாலும் ஜனவரி மாதம் ஆதலாலும் குளிரிலும் தூக்க கலக்கத்திலும் இரு வாரங்கள் போர்வையினுள் ஒளிந்திருந்தேன். மூன்றாம் வாரம் தூக்கம் தப்பி விழித்திருந்த ஒரு நள்ளிரவில் சட்டென தோன்றிய இத-வெச்சு-ஒரு-போஸ்ட்-எழுதலாமே ஐடியாவினால் கொஞ்சம் வேகமாக திரும்பிப் படுத்ததில் போர்வை தன்னோடு தானே உரசிக்கொண்டு ஒரு நெருப்புப்பொறி. அலறியடித்துக்கொண்டு எழுந்து மொபைல் வெளிச்சத்தில் போர்வையை ஆராய்ந்து பார்த்து மோப்பம் பிடித்துப் பார்த்தும் ஒன்றும் விளங்காததால், எப்போதும் வேண்டுமானாலும் தீப்பிடிக்கக் கூடிய பொருளாக போர்வை பகல் வரை ஓரமாக கிடந்தது. அடுத்த நாள் அறையிலிருந்த எல்லாரும் மாற்றி மாற்றி, static electricity என்றால் என்ன என்று எப்போதோ பள்ளியில் படித்த ரெண்டு மார்க் கேள்விக்கு பத்தி பத்தியாக விளக்கம் அளித்தார்கள். (நிச்சயமாக நான் விளக்கப் போவதில்லை). கடைசியில் தங்கிய கசடு இது தான் – என் போர்வையில் கரண்ட் இருக்கிறது. (இது ஒரு மொழிபெயர்ப்பு கவிதை தலைப்பாக இருக்க நேர்ந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்)

இரண்டு மாதங்கள் நானும் இந்த ஐடியாவுடன் ரொமான்டிஸைஸ் செய்து பார்த்தேன். நான் சிறிய குழந்தை போலவும் போர்வையை கசகசக்கி ‘சிக்கிமுக்கி நெருப்பு பாரு’ என்று விளையாடுவதாகவும்; சில சமயங்களில் அஞ்சலி பாப்பா போலவும் சிரித்தும் பார்த்தாயிற்று. வீட்டுக்கு வருபவர்களில் குழந்தை மனம் கொண்டவர்களையும் புத்தம் புது இந்திய ஏற்றுமதிகளையும் தேர்ந்தேடுத்து, ‘இங்க பாரேன்’ என்று காட்டி மகிழ்ந்தாயிற்று. ’இரவெல்லாம் / அசையாத மின்மினிப்பூச்சி / அணைக்கப்படாத லேப்டாப்’ என்று யோசித்திருந்த ஹைக்கூவை ரத்து செய்துவிட்டு அதை முழு நீள போர்வைக் கவிதையாக விரிக்கும் எண்ணம் உடனடியாக அமலுக்கு வந்தது. பலப்பல உணர்ச்சிகரமான கதைச் சந்தர்ப்பங்களில் கதை மாந்தர்கள் இதைப் பற்றி பேசினால் எப்படியிருக்கும் என்று பேச வைத்து பாதியில் வெடுக்கென டயலாக் பேப்பரை பிடுங்கியுமாயிற்று. சரியாக மூன்றாவது மாதம் போரடிக்க ஆரம்பித்து விட்டது. ரொமான்டிசிஸம் முடிந்தது ரியாலிசம் வந்தது.

இதனால் ஷாக் அடிக்குமோ? தீப்பிடிக்குமா? இதை தவிர்க்க வழியில்லையா? தோலில் ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படுமா என்பன போன்ற நிபுணருடன்-பேசுங்கள்-பொதிகை-தொலைகாட்சிக்-கேள்விகள் கூகிளில் ஆங்கிலத்தில் தேடப்பட்டன. (“polyster blanket static electricity”, “bizarre static electricity incidents”, “static electricity kills software engineer” ஆகிய தேடுபொறிகள் பயன்படுத்தப்பட்டன). கூகிள் பெரிதாக பயப்படத் தேவையில்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், இது க்யூட்டான விஷயம் என்று பந்தயம் கட்டியவர்களின் பாஸ்போர்ட் புகைபடங்களை காட்டியது. உயிருக்கு ஏதும் ஆபத்தில்லாத விஷயமில்லாததால், மிஸ்டர்.சோம்பேறித்தனம் விஷயத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார். [கவிதை மொழி அலர்ட்] கோடைக்காலம் வந்ததும் மினிமினிப்பூச்சிகளும் மெல்ல என் போர்வையிலிருந்து தொலைதூரம் பறந்து போயின. [அலர்ட் ஓவர்]. நவம்பர்  வந்ததிலிருந்து [அலர்ட்] பனிக்காலப் பூச்சிகள் போல மீண்டும் போர்வையெங்கும் பொறிகள் [/அலர்ட்]. தண்ணீர் குடிக்க எழுந்திருக்கையில், படுக்கையை சரிசெய்கையில், சாமி சத்தியமாக யாருமே எதுவுமே அசையாத சமயத்தில் என சும்மா சும்மா மின்மினிப்பூச்சிகள் வந்துகொண்டிருந்தால் எப்படி? என்பதே கடைசிக் கேள்வி. என் மனதையும் போர்வையையும் மாற்றக்கூடிய அனுபவங்கள் அதிர்ச்சி சம்பவங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லவும்.

[போர்வை / மின்மினிப்பூச்சிகள் கான்ஸெப்ட்டை புதுக்கவிதையில் உபயோகிக்க விரும்புபவர்கள் முறையாக இப்பதிவை லிங்க் செய்யவும்]

[..]

இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களில் மொத்தம் இரண்டே இரண்டு தமிழும் இரண்டு ஹிந்தியும் மட்டுமே பார்த்திருந்தாலும், தைரியமாக போர்வையிலிருந்து வெளியே வந்து ‘2011ன் சிறந்த காதல் ஜோடி’ ராமரும் சீதாவும் தான் என்று பந்தயமே கட்டுவேன். [ஸ்ரீராமராஜ்யம் – தெலுங்கு – பாலகிருஷ்ணா, நயன்தாரா]. சீதையும் ராமரும் வனவாசம் முடிந்து திரும்பி அயோத்திக்கு வருவதுடன் துவங்குகிற திரைப்படம் சீதையை மீண்டும் சந்தேகித்து காட்டுக்கு அனுப்புவது, லவ-குசா பிறப்பு, அப்பாவுடன் மகன்கள் போர் தொடுப்பு என்ற பாதையில் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுடனும் க்ராஃபிக்ஸ் மான்கள் மரங்களுடனும் பயணிக்கிறது. இன்னும் ‘ராவணன்’ தந்த பிரமிப்பே தீராத நிலையில், ராமரை என்னவென்று எதிர்பார்த்து சென்றிருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ராமர் மிகுந்த காதல் கொண்ட கணவனாக, சாதரணனாக வந்தது சுவாரசியமாக இருந்தது. துளியும் பக்தி இல்லாமல் வெறும் மனிதர்களின் கதையாக இருந்தது ஓரளவிற்கு படத்தை காப்பாற்றியது. எல்லாவற்றுக்கும் மேலாக, சீதையும் ராமரும் ஒன்றாக நான்கைந்து காட்சிகளில் தோற்றமளித்தாலும், இரண்டு காட்சிகளில் காதல் பொங்கி வழிந்தது.

ஊரார் சீதையின் கற்பை சந்தேகித்துப் பேசியதை அறிந்து அதிர்கிற ராமர், (பாலகிருஷ்ணாவின் ரியாக்‌ஷன் டாப் க்ளாஸ்!), ராஜ்ஜியத்தை துறந்து விட்டு சீதையுடன் காட்டுக்கே போவதாக கதறியும் தம்பிகள் கிரீடத்தை ஏற்க மறுக்க, தன்னுடைய கர்மா இதுதானென சமாதானமடைந்து சீதையை அடுத்த நாள் அதிகாலை ஏதும் சொல்லாமல் அழைத்துச் சென்று காட்டில் விட்டுவிட லட்சுமணனை பணிக்கிறார். கட்டளை பிறப்பித்துவிட்டு ஊஞ்சலில் பச்சைப் பட்டாடையில் சித்திரம் போல தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்     சீதையின் (நயன்தாரா கொள்ளை அழகு! யாய்!) காலருகே கன்னம் சாய்த்து கண்ணீர் விட்டு விடைகொடுக்கும் காட்சி ஏனோ பளிச்சென மனம் தொட்டது. ராமர் இத்தனை காதலுக்கு உருகுவாரா என்று சந்தேகம் இருந்தது எனக்குப் புரிந்தது, புரிந்தவுடன் ப்ருத்விராஜ் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை கழற்றி கிளம்ப சொல்லிவிட்டு அந்த இடத்தில் பாலகிருஷ்ணாவை கிரீடத்துடன் அமரச் செய்தேன். இரண்டாவது காட்சி – காட்டில் தனியே வாழ்ந்துகொண்டிருக்கும் சீதை ராமர் நடத்தவிருக்கும் அஸ்வமேத யாகம் குறித்து கேள்விப்பட்டு தம்பதி சமேதராக மட்டுமே யாகம் நடத்தவியலும் என்பதால் ராமர் மறுமணம் புரிந்திருக்கக்கூடும் என்று வருந்துகிறார். வருத்தத்தை நீக்க விசுவாமித்திரர் சீதையை மனதை அயோத்திக்கு அனுப்பி வைக்கிறார். ராமரின் அறைக்குள் செல்லும் சீதை அங்கே தன்னுடைய தங்க விக்கிரஹம் இருப்பதைக் கொண்டு கொள்ளை இன்பமும் துன்பமும் ஒரு சேர அடைந்து அதை வைத்தே யாகம் நடக்கவிருப்பதை அறிந்து நிம்மதி அடைவது காட்சி. அக்காட்சியில் ராமர் வந்து சிலையிடம் பேசுவதும் சீதையின் வாசம் அறிந்து துடிப்பதும் – அட, கண்களில் நீலு சார்!. நயன்தாராவின் கடைசி படம் என்று பரவலாக பேச்சு – வேறு எந்த ஸ்டார் நடிகை இப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது அவர்கள் அவர்களையே கேலி செய்துகொண்டது போலிருந்திருக்கும் என்பதையே நாம் இவருக்கு பாராட்டாக கொடுக்கலாம். ஒரு நந்தி அவார்டு ப்ராப்பிரஸ்த்து!

தியேட்டரை விட்டு வந்தபிறகும் இவ்விரண்டு காட்சிகளும் மனதில் வட்டமிட்டுக்கொண்டே இருக்க, இரண்டு விஷயங்கள் தெளிவாயின – ஒன்று இக்காட்சிகளில் பாலகிருஷ்ணா, நயனின் அழகான நடிப்பையும் மீறி ராஜாவின் பிண்ணனி இசை ஒரு சொட்டு தேன் போல இனிமை ஏற்றியிருக்கிறது. (இரண்டாவது காட்சியின் இசை இங்கே); இன்னொறு – ராஜாவை விட வேறு யாருக்கும் இப்படி #kolaveri விசிறியாக இருக்க என்னால் இயலாது.

மனைவியின் மரணத்திற்குப் பிறகு மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? எழுபதை தொடப் போகிறவரை யார் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்? சாப்பாடு, தூக்கம் என யார் உடனிருந்து கவனிக்கிறார்கள்? மனதுக்கு நெருக்கமான கலைஞர்களின் சொந்த வாழ்க்கை துயரங்கள் எப்படி நம்மை அலைகழிக்கக் கூடும் என்பது விசித்திரம். மனம் வருந்திக்கொண்டிருந்த சமயத்தில், பக்கத்து தியேட்டரில் ஸ்ரீராமராஜ்யம் படம் என்றதும் ராஜாவுக்காக டிக்கெட் வாங்கிச் சென்று அமர்ந்து விட்டேன். இந்த இரண்டு காட்சிகளும் மனிதருக்கு இன்னும் ஒரு யுகத்திற்கு காதல் காட்சிகளுக்கு இசையமைப்பதற்கான longing அவரது மனதிலும் இசையிலும் இருப்பதையே காட்டின. டிசம்பரில் நேரில் சந்திக்க வருவதாக அறிவிக்கவும் செய்திருக்கிறார். சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.

[..]

காக்கை எத்தனை முயன்றாலும் என்னவோ ஆக முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆனால் Crow-pheasant என்றொரு குயிலினமாக ஆக வாய்ப்பிருக்கிறது, சங்கக் காலப் போர்க்களப் பாடலை பொறுத்தவரையில்.

தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்

குருதி படிந்துண்ட காகம் – உருவிழந்து

குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்

தப்பியா ரட்ட களத்து

போர்களத்தில் கிடந்த பிணங்களில் அம்புகள் பட்டுத் திறந்த இடங்களிலெல்லாம் இருந்த இரத்தத்தை வாய் வைத்த குடித்த காகங்கள், தங்கள் அலகில் ரத்தமேறி மீன்கொத்திப் பறவைகள் போலவும், உடலில் ரத்தம் படிந்து குக்கு – crow pheasant – போல உருமாறியதாக களவழி நாற்பதில் சொல்லப்படுகிறது. போரைக் காட்டிலும் உக்கிரமாக இருக்கும் இந்த வர்ணனை உலக சினிமாக்களில் பார்த்த அப்பட்டமான வன்முறைக் காட்சிகளைக் கூட வீழ்த்திவிடும்.

பெரும்பாலும் யானைகள், அவற்றின் மீது ரத்தம், செம்மலை போன்ற யானைகளின் தோற்றம், ரத்த ஆறு என்பன போன்ற உவமைகள் நிரம்பியிருக்கிற நாற்பது பாடல்களில் ஈர்த்த இன்னொறு வர்ணனை – போரில் இறந்தவர்கள் குடல்களை தின்ற பருத்த நரி சண்டையில் சாய்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடையின் ஓரமாக தூங்கிற காட்சி, முழு நிலவில் ஓரமாகத் தோன்றும் முயல் களங்கம் போலிருந்ததாம்! Terrific!

[..]

ஒரு தமிழ் சினிமா க்விஸ். முதல் படங்கள், இயக்குனர்-நடிகர்கள், துணை நடிகர்கள் என்ற பொது அம்சத்தை வைத்து உருவாக்கியது.

நடிகை A இயக்குனர்-நடிகர் Bயின் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் Cயும் Dயும் துணை கதாபாத்திரங்களில் தோன்றினார்கள்.

B நடிகராக முதன்முதலில் ஒரு காட்சியில் தலைகாட்டியது நடிகர் E ஹீரோவாக நடித்த படத்தில். பின்னாளில், E நடித்த படமொன்றை B எழுதினார்.

Cயும் Eயும் ஜோடியாக ஒரே ஒரு படம் மட்டுமே நடித்தார்கள். A அப்படத்தில் தன்னுடைய முதல் படம் போன்றே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை Fயும் Eயும் இணைந்து நடித்த மிகப்பிரபலமான படத்தை இயக்கியவர் G. இதில் D தன் முதல் படம் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பலப்பல அருமையான படங்களை இயக்கிய G முதன் முதலில் Eயை நாயகனாக வைத்து எடுத்த படத்தில் ஒரு வேடத்தில் தோன்றினார்.

ஏராளாமான வருடங்களுக்குப் பிறகு, E எழுதி நடித்த படமொன்றில் Dயும் Fம் துணை கதாபாத்திரங்களில் தோன்றினார்கள்.

பின்னர், D இயக்கிய படத்தில் ஹீரோவாக நடித்து இந்த காம்ப்ளெக்ஸான நடிகர்-இயக்குனர் சைக்கிளை முடித்து வைக்கிறார் E.

Aயிலிருந்து F வரை அடையாளம் காண்க. ஒரு க்ளு – சம்பந்தப்பட்ட புள்ளி ஒருவர் தெலுங்கில் தான் பிரபலம். ஆனால் இங்கே குறிப்பிடப்பட்ட படங்கள் தமிழிலும் உண்டு.

[..]

நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற பதிவர் மாற்றத்தை விரும்புகிறார் என்று எது உங்களுக்கு சுட்டிக்காட்டிகிறது?

அ) இதுவரை ‘தேநீரில் சினேகிதம்’ என்ற தலைப்பில் அரைத்துக்கொண்டிருந்ததை ‘என்னமோ ஏதோ’வாக அரைக்கிறார்.

ஆ) ரொம்ப நாட்களாக பதிவெழுதாதவர் இப்போது திடீரென பதிவெழுத முயல்கிறார்

இ) பத்திகளை கொண்டு ***** பிரிப்பவர் விசித்திரமாக ‘[**]’ கொண்டு பிரித்திரிக்கிறார்.

சரியான விடை அடுத்த என்னமோ ஏதோவில்.

Written by aravind

December 5, 2011 இல் 4:11 மு.பகல்

தொடர் இல் பதிவிடப்பட்டது

நீட்சி

12 மறுமொழிகளுடன்

குகைக்குள் நுழைந்து திரும்பும் பறவை போல ஜிபிஎஸ் கார் திரும்பிய திசையில் தன் வான்பார்வையை திருப்பி இன்னும் இரண்டரை மைலில் என் பயணம் முடியப்போகிறது என்று சொல்கிறது. ரோஜாப்பூ நிறத்தில் நான் செல்கிற சாலையை சுட்டிக் காட்டியபடி அதன் இருபுறத்திலும் வெறும் பச்சைவெளிகளும் மலைகளும் இருப்பதை மலிவான க்ராஃபிக்ஸில் வரைந்து காட்டுகிறது. பதிவு செய்யப்பட்ட பெண் குரல் நிதானமாக அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி அதிகாரமில்லாமல் சொன்னது. கடந்த பத்து மைல்களாகவே இந்த சாலையில் யாரும் பயணிப்பதாக தெரியவில்லையாதலால் சுழல்தட்டு இசை அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தது. காற்றும் காரும் சுமார் மூன்று மைல்களை சல்லென விழுங்கி முடித்திருக்கக்கூடிய நேரத்தில் சந்தேகம் எழுந்து ஜிபிஎஸ்ஸை பார்க்க அது ஒளியிழந்திருந்தது. நம்ப முடியாதவனாக பார்வையை கூராக்கி பார்த்தும் அது அணைந்தே இருந்தது. ஒரு மைல் தாண்டி சாலையோரமாக வீக்கம் போல அகலமாக வளைந்து  இழுக்கப்பட்டிருந்த சிறிய கிளைச் சாலையில் ஒதுங்கி காரை நிறுத்தினேன். அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி ஜிபிஎஸ் சொன்னது வந்த வேகத்தில் எங்கோ நினைவிலிருந்து நழுவியிருந்தது.

 

ஜிபிஎஸ்ஸை எடுத்து மீண்டும் இயக்கிப் பார்த்தும் ஏதும் பலனில்லை. ஐஃபோன் கையில் இல்லை. சுமார் நூற்றியறுபது மைல்கள் வீட்டைத் தாண்டி முதன் முறையாக இந்த அமெரிக்க மாகாணத்திற்கும் இடத்திற்கும் வந்துகொண்டிருப்பதால் அடுத்த திசை என்னவென்று தெரியவில்லை. சென்றடைய வேண்டிய இடம் ஒரு இசைப்பள்ளி என்பதைத் தவிர மூளையில் எதையும் பதிக்கவில்லை. ஆளில்லாத சாலையில் தனியாக நின்றுகொண்டிருந்தேன். இந்தியாவில் இப்போது நேரம் மாலை ஆறரை இருக்கும். அப்பாவை அழைத்தேன்.

 

‘கண்ணா?’

 

‘அப்பா, வீட்லயா இருக்கே?’

 

‘இல்ல, சுகந்தி வீட்டுக்கு வந்திருக்கேன், ஏன் கண்ணா?’

 

‘ஓ. இல்ல அட்ரெஸ் மறந்திட்டேன்’

 

‘அடடா. ம்ம்ம்.. ஸ்லேட்டர் ஸ்ட்ரீட்னு நினைக்கிறேன் கண்ணா, சரியா நினவில்ல’

 

‘எப்போ மறுபடி வீட்டுக்குப் போகப் போறே?’

 

‘நைட் இங்க தான் தூங்கச் சொல்லியிருக்கா அவ. மாப்பிள்ளையும் சொல்றார்’

 

‘சரி சரி’

 

‘வீட்டுக்குப் போயி பாத்து சொல்லவா?’

 

’வேண்டாம் வேண்டாம், நான் பாத்துக்குறேன்’

 

‘சரி’.

 

அலைபேசியை அணைத்துவிட்டு காற்று கலைத்த தலைகேசத்தை சரிசெய்தேன். காற்று ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் பலத்துடன் வீச, நினைவுகளை எடுத்து புரட்டியது போல ‘0.6 மைலில் வலதில் திரும்பவும்’ என்று ஜிபிஎஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. வந்த வழியே மீண்டும் சென்று முதல் இடது திருப்பத்தில் திரும்பிக்கொண்டேன். மனதில் கணக்கிட்ட பொழுது சரியான இடத்தில் திரும்பியிருக்கிறேன் என்று பட்டது. இன்னும் ஒரே திருப்பம் மட்டுமே பாக்கி. காரை கிளப்பி நேரே சென்று கொண்டேயிருந்ததில், சாலை இறுதியில் இரண்டாக நேரெதிராக பிரிந்து சவால் விட்டது. மீண்டும் நல்ல இடம் பார்த்து காரை ஓரங்கட்டினேன். மலையை நெருங்கிக்கொண்டிருப்பதால் நிறைய மரங்களும் அடர்ந்த நிழலுமாய் சூழ்நிலை ரம்மியமாக மாறியிருந்தது. அப்பாவை அழைத்து அட்ரெஸை பார்க்கச் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஸ்டியரிங்கில் கைகளை அழுந்த வைத்து யோசித்துக்கொண்டிருக்கையில் வலது பக்கத்திலிருந்து மட்டும் நிறைய பறவைகளின் ஒலிகள் கேட்டபடி இருந்தது புலப்பட்டது. கூர்ந்து கவனித்து நிச்சயப்படுத்திக்கொண்டு, என்ன தோன்றியதோ காரை வலதில் திருப்பி மெதுவாக சென்றுகொண்டே இருந்தேன். ஒரு மிகச்சிறிய கிளைச்சாலையின் முடியில் நான் தேடிவந்த இசைப்பள்ளி பெரிய வாயிலுடன் நின்றுகொண்டிருந்தது.

 

****

 

கடந்த காலத்திலிருந்து மீண்டு வருவது போல தொலைதூரத்திலிருந்து ஒரு பெருமேகம் மெல்ல எங்களை உற்று பார்த்தபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மலையுச்சியிலிருந்த அந்த பள்ளியின் முன்னே விரிந்திருந்த வெளியில் ஒரு மர பெஞ்ச்சில் மரத்தின் கீழே நானும் ரம்யாவும் அமர்ந்திருந்தோம். ரிஷப்ஷனிஸ்ட், ‘ராம்யா?’ என்று நிச்சயப்படுத்திக்கொண்ட ரம்யா. ‘ஃப்ரெண்ட்ஸ் கால் மீ ரம்’ என்றுட் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட ரம்யா. அழுக்கேறிய ஜீன்ஸும் பச்சை நிற டிஷர்ட்டும் அச்சு அசல் தமிழ் முகமும் குரலும் கொண்டிருந்தாலும், ஓவியத்தின் நிறத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வண்ணத்தில் வரைந்த வெளிக்கோடு போல இருபது வருட அமெரிக்க வாழ்க்கை அவளை தன்னுள் முற்றிலுமாக வாங்கியிருந்தது. கையில் வைத்திருந்த பேப்பர் கட்டை எங்களிருவருக்கிடையில் வைத்தேன். அவள் மீண்டுமொரு முறை தன் வயலினை தூரமாக நகர்த்த முற்பட்டாள். ‘நோ, தட்ஸ் ஃபைன்’ என்று சொல்லிவிட்டு பேசுவதற்கு தயாரானேன்.

 

‘தமிழ் புரியுமா?’

 

‘நல்லா, பேச தான் கொஞ்சம் கஷ்டம்’

 

’யு ஆர் ஃபைன். அண்ட் திஸ் ஈஸ் வாட் ஐ ஹாவ் ப்ராட்’ என்று கடிதங்கள் நிரம்பிய கட்டினை எடுத்து நீட்டினேன்.

 

‘உங்க மெயில் படிச்சேன். ஃப்ராங்க்கா சொன்னா, என்னால நம்ப முடில’

 

‘எத?’

 

‘தி ஃஹோல் திங்’

 

‘ரியலி?’ சிரித்தேன்.

 

‘திடீர்னு எப்படினு சந்தேகமா இருந்தது. நீங்க ஒரு தடவ திரும்ப சொல்றீங்களா?’ புன்னகைத்தாள். ‘மெயில்ல படிக்கறத விட நேர்ல கேக்கறது பெட்டர்ல? ஐ வாண்ட் டு ஹியர் இட்’

 

‘ஷ்யூர் ஷ்யூர்’, எங்கே தொடங்குவது என்று யோசித்து, ‘உங்கப்பா ஒரு ரைட்டர்னு உங்களுக்கு.. ஐ மீன் யு நோ ரைட்?’

 

‘கேள்விபட்டிருக்கேன்’

 

‘ம்.. ஆக்சுவலி எனக்கு ரொம்ப தெரியாது.. உங்கப்பா பத்தியோ நீங்களும் உங்கம்மாவும் அவரோட ஏன் இருந்ததில்லங்கறதப் பத்தியோ.. சோ இதெல்லாம் நேர்ல பேசலாமான்னு எனக்குத் தெரியல’

 

‘நோ ப்ராப்ளம். எனக்கே தெரியாது. யு வில் நாட் ஹர்ட் மீ’ புன்னகைத்தாள்.

 

‘ரைட். திருச்சில எங்கப்பா போஸ்ட்மேனா இருந்தப்போ உங்கப்பா அங்க இருந்திருக்கார். நிறைய கதைகள், கவிதைகள் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்ப போஸ்ட் ஆஃபீஸுக்கு வரும் பொழுது அப்பாகிட்ட ஒண்ணு ரெண்டு வார்தை பேசுவாராம். அப்பாக்கு கொஞ்சம் படிக்கிறதில இண்டிரஸ்ட். உங்கப்பா பத்திரிக்கைக்கா அனுப்பறத பாத்துட்டு அப்பா ஒரு முற கேட்டு கதைய வாங்கி படிச்சிட்டு போஸ்ட் பண்ணாராம். அதுக்கு அப்புறம் எல்லா கதையையும் உங்கப்பா நேரா அப்பாகிட்ட குடுத்துட்டு போயிடுவாராம். அப்பா படிச்சிட்டு போஸ்ட் பண்றது வழக்கமாச்சாம். சுமார்..’ யோசித்து, ‘ஐ திங்க் ரெண்டு வருஷம் இப்படியே போச்சு’.

 

‘இண்டரஸ்டிங். அம்மா சொல்லிருக்காங்க கதையெல்லாம் பத்திரிக்கைல வந்ததே இல்லனு’

 

‘ஆமா. அந்த ரெண்டாவது வருஷத்துல உங்கம்மா இங்க அமெரிக்காவுக்கு வந்துட்டாங்கன்னும் நீங்க இங்க பொறந்தீங்கன்னும் அப்பா சொல்லியிருக்கார்’

 

‘யா’.

 

‘உங்கம்மா கெளம்பினதும் உங்கப்பா திருவனந்தபுரத்துக்கு இடம் மாறிட்டார். அங்கிருந்தும் அப்பாவுக்கு மொதல்ல கதைகள அனுப்பி வைப்பாராம். அப்பா படிச்சிட்டு போஸ்ட் பண்ணுவாராம். ஆனா படிச்சிட்டு பெருசா கருத்துன்னு எதுவும் சொல்லிகிட்டதில்ல. இன்ஃபாக்ட் ஜாஸ்தி எதும் பேசிகிட்டதில்லனு கூட நினைக்கிறேன். ஆனா அப்பாவுக்கு உங்கப்பா எழுதறது ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். இல்லனா இவ்வளவு மெனக்கெட மாட்டார்’

 

‘அப்பாவ பிடிக்கும்கிறதால கூட இருக்கலாம்’

 

‘யா. இருக்கலாம். ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் இனிமே பத்திரிக்கைக்கு எதும் அனுப்ப வேண்டாம்னு உங்கப்பா எழுதியிருந்தாராம். ஆனா அதுக்கு அப்புறமும் நிறைய கதைகள் அப்பாவுக்கு போஸ்ட்ல வந்துட்டே இருந்தது. அதுல நிறைய இன்கம்ப்ளீட்னு அப்பா சொல்லியிருக்கார். அப்பா எல்லாத்தையும் படிச்சு பத்திரமா வெச்சுகிட்டார். அடுத்த எட்டு மாசத்துல வந்த முப்பத்தி ஏழு லெட்டர்ஸ் தான் இது’ என்று பேப்பர் கட்டை நீட்டினேன்.

 

’க்ரேட், சீர்யஸ்லி’ என்று அதை வாங்கிக்கொண்டாள்.

 

‘ம்ம்.. உங்கப்பாவ நீங்க நேர்ல பாத்ததில்லல?’ கேட்கக்கூடாதென்று நினைத்த கேள்வி தொண்டையிலிருந்து முள்ளென நழுவி விழுந்தது.

 

‘யெஸ்’

 

‘ஐயாம் சாரி’

 

‘தட்ஸ் ஓகே. அம்மா அங்கிருந்து கெளம்பும் போது நான் பொறக்கவே இல்ல. சோ நான் பாத்ததில்ல. ஒண்ணு ரெண்டு ஃபோட்டோஸ்ல பாத்தது. அவ்வளவு தான்’

 

‘ம்’

 

‘இங்க வந்தப்புறம் திரும்ப இந்தியா போனதேயில்ல. அப்பா சைட் ரிலேடிவ்ஸ் கிட்டயும் டச் இல்ல. அம்மா எப்பவாச்சும் பேசுவாங்க அவரப் பத்தி. ஷீ ஸ்டில் லைக்ஸ் ஹிம்’

 

‘குட்’

 

‘நீங்க மீட் பண்ணியிருக்கீங்களா எங்கப்பாவ?

 

‘யா. ஆனா ரொம்ப ஞாபகமில்ல. எனக்கு அப்போ ஒரு ஏழு வயசிருக்கும். ஸ்பெக்ஸ் போட்டிருப்பார். நல்ல தடியா மீசையிருக்கும்’

 

’ரைட்’

 

‘இந்த லெட்டர்ஸெல்லாம் அப்பா ரொம்ப நாளா படிச்சுப் படிச்சு பத்திரமா வெச்சிருந்தார். என்ன தோணிச்சோ திடீர்னு உங்கள பத்தி எதாச்சும் தகவல் கிடைக்குதான்னு தேட ஆரம்பிச்சு எப்படியோ கண்டுபிடிச்சிட்டார். இத உங்ககிட்ட சேக்க சொல்லி போன முற வெக்கேஷன் போனப்ப கொடுத்தார். ஐ திங்க் ஹீ ஃபீல்ஸ் ஓல்ட். உங்ககிட்ட பத்திரமா இருக்கும்னு நினச்சிருப்பார்’

 

‘ஹவ் ஈஸ் யுவர் டாட்?’

 

‘ஹி ஈஸ் ஃபைன்’

 

‘அம்மா?’

 

‘ஷீ பாஸ்ட் அவே. நாலு வருஷம் முன்ன’

 

‘ஓ. கஷ்டமா இல்லியா? இங்க தூரமா இருக்கிறது?’

 

‘யா. இன்னும் ஒரு வருஷத்துல போயிடுவேன்’

 

‘அவர் இங்க வந்திருக்காரா?’

 

‘மாட்டார். பிடிக்காது’ சிரித்தேன்.

 

‘ஈஸ் ஹி ஹாப்பி அபௌட் யு?’ முன்பின் தெரியாதவர்களால் தான் சில சமயம் இப்படி சுவாரசியமான அந்தரங்கமான கேள்வியை கேட்டுவிட முடிகிறது.

 

‘ஆ.. ஐ திங்க் சோ’

 

’குட். மை மாம் ஈஸ் ஹாப்பி அபௌட் மீ. அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரா தெரியல. அவர் நான் என்ன பண்ணுனும்னு நினச்சார், விருப்பப்பட்டார், ஹூ நோஸ்?’. என்று இடைவெளி விட்டவள். ’அப்பாவ கொஞ்சம் பாத்தது வெச்சு சொல்லுங்க. நான் அவர் ஜாடைல இருக்கேனா கொஞ்சமாச்சும்?’

 

மீண்டும் அவள் முகத்தை கவனித்துப் பார்த்துவிட்டு, ‘தெரில. ஐ வுட் சே மே பி நாட்.’

 

‘அம்மாவும் அதத் தான் சொல்றாங்க. நீங்க யார் ஜாடை? உங்க அப்பா எப்படி இருப்பார்னு யோசிச்சு பாக்க கேக்கறேன்’

 

‘அம்மா. எல்லாமே அம்மா மாதிரி. பேச்சு, யோசிக்கிறது எல்லாம் அம்மா மாதிரியே’

 

‘குட்’

 

‘பட், யு நோ… ஸ்ட்ரேஞ்..’ என்ன சொல்ல முனைகிறேன் என்று எனக்கே புரியாதது போல நிறுத்தினேன்.

 

புருவங்களை உயர்த்தினாள்.

 

‘இன்னிக்கு மே பி கேட்டா அப்படியில்லனு சொல்லத்தோணுது’

 

‘ஏன்?’

 

‘டோன்னோ. ஜஸ்ட் லைக் தட். ஸ்ட்ரேஞ். வெரி’ தோள்களை குலுக்கினேன்.

 

‘ம்’

 

‘ரெண்டு கைலயும் ரெண்டு நூல் கட்டி தொங்கவிட்ட பொம்ம மாதிரி. என்னிக்கி எந்த நூல் இழுக்கும்னு எப்படி சொல்றது’

 

பெரிதாக சிரித்தாள், உவமையை முழுதும் ரசித்தது போல. ‘ரைட்’ என்றாள்.

பேப்பர் கட்டை எடுத்துப் பார்த்தவள், ‘எனக்கு தமிழ் படிக்கக் கூட தெரியாது’ என்றாள். என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தேன்.

’திருவனந்தபுரத்தில் இருந்து உங்கப்பா எழுதின மொதல் லெட்டர்லயே நீங்க பொறந்தத பத்தி எழுதியிருக்காராம்’

 

‘ரியலி?’ என்று கடிதங்களைப் பார்த்தவள், ‘எனக்கிதுல செலது படிச்சு காட்டுறீஙகளா? என்றாள் சட்டென. நான் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘ஆஹ்.. தமிழ் படிக்கிறது எனக்கு கொஞ்சம் கஷ்டம்’

 

‘ஓ ஓகே’ என்றாள். ஏமாற்றம் குரலில் தென்பட்டது போல இருந்தது.

 

‘சரி குடுங்க’

 

‘ஒண்ணே ஒண்ணு படிச்சாக் கூட போதும்’

 

‘சரி’ புன்னகைத்தேன். அப்பா எல்லாவற்றை தேதி வாரியாக அடுக்கி வைத்திருந்ததால், முதல் கடிதம் நிச்சயம் அவள் பிறந்ததைப் பற்றி எழுதியதாக இருக்கக்கூடும். அதை எடுத்துப் பிரித்தேன். உள்ளே ஒரு நீண்ட கதை இருந்தது. அதனுடன் ஒரு துண்டு பேப்பர்.

 

‘இதுல ஒரு கதை இருக்கு’

 

’எதுவேணா படிக்க. ஐ ஜஸ்ட் வாண்ட் டு ஹியர் சம்திங். எனக்கு சவுண்ட்டோட தான் ரிலேட் பண்ணிக்க முடியும். குறிப்பா தமிழ பொறுத்த வர’

 

கடிதத்தின் நீளத்தை இன்னுமொருமுறை பார்த்துவிட்டு படிக்கத் துவங்கினேன். ‘சாலை முழுக்க பள்ளிச் சீருடையில் மாணவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். வானத்தில் இரு நீல பலூன்கள் இலக்கின்றி மிதந்துகொண்டிருக்கின்றன. ஒரு சிறுமி தனியாக நின்று தலைநிமிர்ந்து பலூனை பார்த்துக்கொண்டிருக்கிறாள். பாக்கெட்டில் ஏதும் பணமில்லை. இருந்தும் அப்படியே விட்டுவிட மனமில்லை. தெரிந்த கடையென்பதால் சிகரெட் கடையில் நின்று ஒரு ரூபாய் கொடு என்றேன். என் வறுமை புரிந்தவன் என்பதால் அவன் மறுக்காமல் கொடுத்தான். பலூனை வாங்கிக்கொண்டு நடந்தேன். சிறுமி இன்னுமும் அங்கேயே நிற்கிறாள்..’ என்று கொஞ்சம் மூச்சை எடுத்தேன்.

 

’சவுண்ட்ஸ் குட்’

 

’யா’

 

‘மெஷர் பண்ணி எழுதுனா மாதிரி இருக்கு’

 

‘புரிஞ்சுதா?’

 

‘வெரி வெல்’

 

‘மேல படிக்கவா?’

 

‘இல்ல. ஆனா எதுல என்ன பத்தி எழுதிருக்கார் சொன்னீங்க? அத மட்டும் படிச்சு காட்டுறீங்களா?’

 

‘ஷூயர்’

 

‘உங்க வாய்ஸ் நல்லாருக்கு. தமிழ்ல அத கேக்க நல்லாருக்கு’

 

‘சீரியஸ்லி?’

 

அமைதியாக புன்னகைத்தபடி ஆமோதித்தாள். அந்த கடிதத்துடன் இருந்த துண்டு காகிதத்தை எடுத்துப் பார்த்தேன். ‘இதுல இருக்கு’ என்றதும் அவள் ஆர்வமானாள்.

 

’சேதி வந்திருக்கிறது. பெண் பிறந்திருக்கிறாள். எப்படி கற்பனை செய்தும் அந்த காட்சியை கைவசப்படுத்தமுடியவில்லை. என்னுடைய..’ நிறுத்தினேன். ‘இங்க அழிஞ்சு போயிருக்கு’. ‘என்னுடைய….. எனினும் இனி நானே அதில் இருக்கப்போவதில்லை. வேடிக்கையாக இருக்கிறது. கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது’ ’அவ்வளவு தான் இருக்கு’.

 

’தாங்க்ஸ்’

 

’வேற எதாச்சும் படிக்கவா? இல்ல இதயே திரும்பி படிக்கவா?’

 

‘நோ. போதும். நான் தமிழ் படிக்க நிச்சயம் கத்துக்கப்போறேன்’ என்று அழகாகச் சிரித்தாள். திடிரென அவள் மிக அழகு என்று தோன்றியது. கண்களில் எப்போதும் ஆர்வமும் இதழில் எப்போதும் புன்னகையும் தேங்கியிருந்தன.

 

கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். அவள் சிற்சில கடிதங்களை எடுத்துப் பார்த்துப் படித்துவிட்டு அங்கங்கே சில வார்த்தைகளை என்னவென கேட்டாள். பின்னர் பொதுவாக பேசிக்கொண்டிருந்து விட்டு நான் விடைபெற்றுகொண்டேன்.

 

கார் வரை உடன் நடந்து வந்தாள். மரங்களின் மேலே நிறைய பறவைகள் அமர்ந்து பள்ளியிலிருந்து கேட்டுகொண்டிருந்த இசைக்கு பதில் பாடிக்கொண்டிருந்தன. முற்றிலும் பேச ஏதுமற்றவர்கள் போல அமைதியானோம். அடிக்கடி அழைப்பதாகச் சொன்னாள். நானும் என்று உறுதியளித்து விட்டு காரை கிளப்பினேன். ஜிபிஎஸ் எதிர்பார்த்ததைப் போல தடையின்றி இயங்கியது.

 

*****

 

’ஷிவா?’

 

‘யெஸ்?’

 

‘ரம் பேசறேன்’

 

‘ஹாய்!’

 

‘அந்த வார்தையை கண்டுபிடிச்சிட்டேன்’

 

‘எந்த வார்த்தை?’

 

‘அந்த லெட்டர்ல அழிஞ்சிருந்ததே?’

 

‘யா?’

 

‘நீட்சி’

 

‘அப்படின்னா?’

 

‘கண்டினியுவேஷன். இன்னும் பெட்டரா ப்ரொட்ராக்‌ஷன். பட் தமிழ் வார்த்தை இன்னும் அதிக அர்த்தம் கொடுக்குது’

 

’நான் வார்த்தை கேள்விபட்டதேயில்ல. என்னவிட தமிழ் கம்மியா தெரிஞ்சும் ஒரே நாள்ல கண்டுபிடிச்சிட்டீங்க?’

 

‘அந்த இடத்துல இட் சவுண்டட் பெர்ஃபெக்ட். எனக்கும் தெரியல. அம்மாகிட்ட ரெண்டு மூணு வார்த்தை கேட்டுட்டே வந்தேன், அதுல நான் கெஸ் பண்ண மூணாவது வார்த்த இது. அம்மா அப்படி ஒரு வார்த்த இருக்குன்னு சொன்னாங்க. அர்த்தமும் சரியா இருக்கு. கண்டிப்பா அது தான்’

 

‘இம்ப்ரெசிவ்!’

 

‘ரைட். ஜஸ்ட் இத சொல்லணும்னு தோணுச்சு. திரும்ப கூப்பிடறேன். தாங்க்ஸ்’

 

’பை’

 

ஃபோனை வைத்துவிட்டு அப்பாவிடம் பேச்சை தொடர்ந்தேன். அப்பா குறுகுறுவென வெப் காமில் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

 

‘அவ தான்பா. சும்மா கூப்பிட்டிருந்தா’

 

‘தமிழ் பேசறாளா?’

 

‘நல்லா’

 

’இல்லனா வருத்தப்பட்டிருப்பார்’

 

‘ம்’

 

‘அவங்கம்மா அவங்கப்பா பத்தி பேசறாங்களாமா?

 

‘தெரியல. அதெல்லாம் கேக்கல. அம்மாவுக்கு அப்பாவ பிடிக்கும்னு சொன்னதா ஞாபகம்’

 

‘நல்லது. திரும்ப வரப்போ வழி எப்படி பாத்தே?’

 

‘ஜிபிஎஸ் இருந்ததே’

 

’சரி சரி. சரி கண்ணா, நான் வெக்கட்டா?’

 

‘சரிப்பா, நாளைக்கு கூப்பிடறேன்’

 

அப்பா மவுஸை மெல்ல அழுத்திப் பிடித்து நகர்த்துவது தெரிந்தது. எதையோ க்ளிக் செய்துவிட்டு கைகளை எடுக்கிறார். தூக்க கலக்கத்தில் மெல்ல என் வலது உள்ளங்கை வலது கண்ணோரமாக அழுந்த துடைத்து அப்படியே சோம்பல் முறிக்கிறது. அதே கணம் அப்பாவும் வெப் காமில் அதையே அச்சுஅசலாக செய்துகொண்டிருக்க, என்னுடைய வெப்காம் ஒளிபரப்பு எனக்கே சிறியதாக கீழே தென்பட்டுக்கொண்டிருப்பதிலும் நான் அதையே செய்துகொண்டிருக்கிறேன். ஒரு நொடி அசைவின்றி அதை பார்த்துக் கிரகிப்பதற்குள் இணைப்பு சட்டென துண்டாகிறது.

Written by aravind

அக்டோபர் 31, 2011 இல் 4:06 மு.பகல்

சிறுகதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

மரத்தடி

2 மறுமொழிகளுடன்

முதற்கனவு வெறும் இருளாக இருந்திருக்கலாம். முற்றிலும் புதியதொரு குரலாகவோ வண்ணக்குழப்பமாகவோ சலனமில்லாத மௌனமாகவோ அம்மாவின் வாசமாகவோ இருந்திருக்கலாம். சீக்கிரம் உறங்கிப் போகிற பிள்ளை வயதில் கனவின் குரலுக்கு ஒரு பொழுதும் விழித்ததில்லை. பல வருடங்களுக்கு கனவுகளின் இருப்பைப் பற்றிய ஊர்ஜிதமோ ஊர்ஜிதப்படுத்த வேண்டிய அவசியமோ தேவையின்றி இருந்தது. இதுவரை கடந்து முடிந்த ஆண்டுகளிலேயே கல்லூரி இரண்டாம் வருட ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. துக்கங்கள் ஐயங்கள் மகிழ்ச்சிகள் குழப்பங்கள் அத்தனையும் துறந்த ஆண்டாதலால், மனம் பளிங்கைப் போல துல்லியமாக இருந்தது. அந்த ஆண்டில் தூங்கும் நேரமும் பழக்கமும் பெருமளவில் மாறியிருந்தது. பூமித்தகடுகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறுவது போல தூங்கும் நேரமும் விழித்திருக்கும் நேரமும் ஏறிக்கொண்டது. மனம் கனவில் விழித்திருக்கத் துவங்க, ஒரு நாள் விழிக்கையில் முதன் முறையாக இரவு கண்ட கனவு முழுதாக நினைவிற்கு வந்தது. விசித்திரமானதொரு கனவு. வேறுக்கிரகவாசிகள் இல்லை. மிருகங்கள் இல்லை. மாயாஜாலங்கள் இல்லை. அசரீரிகள் இல்லை. முந்தைய தினம் நான் கேட்ட வார்தைகள், பார்த்த காட்சிகள், போய் வந்த இடங்கள் அத்தனையும் அப்படியே மீண்டும் தோன்றியிருக்கும், ஆனால் – அருகே இருக்கிறதென பார்த்துக்கொண்டே இருந்த மேஜையை மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் இருளில் தேட முயன்று சுவற்றைப் பிடிப்பது போல – கனவில் அத்தனையும் இடம் மாறியிருக்கும். சொற்கள் இருந்த இடத்தில் பாடலும், பாடல் இருந்த இடத்தில் குழந்தையின் ஒரு மொழியும். வானிலையும் வண்ணங்களும் வாசல்களும் மாறிப் போயிருக்கும். விண்வெளியில் மனிதர்கள் மெல்ல மிதந்து மிதந்து இடம் மாறுவது போல கனவுவெளியில் பொருட்கள் மிதந்து இடம் மாறிக்கொண்டேயிருக்கும். விழித்தெழுகிற ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நாளும் – ஒரு கனவுடன் விழித்தெழுவது வழக்கமானது. கண் திறந்து மூளை இயங்கத்துவங்கும் முதல் நொடியிலிருந்து துகள் துகளாக தூசி படிவது போல கனவு மெல்ல மெல்ல விழுந்து உருப்பெறும். தினமும் காலையில் உதிரும் பூவானது கனவு. பெரும்பாலும் அபத்தமாக எஞ்சிப்போகும் என்றாலும், தினமும் தோன்றும் கனவுகள் அவசியமாக இருந்தது, மனம் நிகழும் எதையும் கேட்கும் எதையும் பார்க்கும் எதையும் அழத்தந்திருந்தமாக உள்வாங்குகிறது என்ற சான்று அவசியமாக இருந்தது. அப்படி உள்வாங்கிக்கொண்ட ஆயிரயமாயிரம் விஷயங்களிலிருந்து ஒரு கதையோ ஒரு கவிதையோ ஒரு எண்ணமோ உதித்துக்கொண்டே இருந்தது. கனவுகளுக்கும் மற்ற அனைத்திற்குமான தொடர்பு விழித்தெழும் நொடியில் அறுந்தாலும் நாள் முழுக்க கண்ணுக்குத் தெரியாமல் உயிர்ப்புடனே இருந்தது. தூங்கிக்கொண்டிருக்கையில் என் நாடி பிடித்து உயிர் அறிவதம் விழித்தெழும் எனக்கு கனவு தோன்றியதா என்று அறிவதும் ஒன்று போலானது.

கவனம் எனும் தும்பி பின் கைகளுக்கு அடங்காமல் பறக்கத் துவங்கியது. ஒரு அடர்ந்த புள்ளியென இருக்கும் கவனம் – வெள்ளைத் தாளில் சொட்டினால் பெரும் வட்டமாக தீவிரமாக பரவும் கவனம் – கணினியின் சுட்டியால் தொட்டுத் திறக்கும் எண்ணற்ற பக்கங்களுக்கிடையே பிரிந்து தேய்ந்து மறையத் துவங்கியது. இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்த திரைப்படம் இரண்டரை நொடியில் மறந்திருக்கும். ஒரு வலை பக்கத்தை முழுதாக படிக்க பொறுமையின்றி போயிருக்கும். பிடித்திணைத்து இழுக்கும் வலுவின்றி மேலே மேலே பறந்துகொண்டேயிருக்கிற ஊதுபை மட்டுமே மனநிலையை வர்ணிக்க பயன்பட்டிருக்கும். இசை மட்டும் எப்போதும் போல ஈர்த்துக்கொண்டிருந்தது, தொலைதூரத்தில் ஒலிக்கும் இசையை நோக்கி நீர்மட்டத்தில் வேரின்றி மிதக்கும் தாவரம் ஆனது மனம். எதைப்பற்றியும் கவலையின்றி நகர்ந்து கொண்டே இருக்கிற நாட்களை பிடித்து நிறுத்திப் பார்த்தபோது, எதிர்பார்த்தபடி கனவுகளும் அறவே நின்று போயிருந்தன. இந்த நாட்டிற்கு வந்த பிறகு இரவு தூக்கங்களிருந்து சத்தமின்றி காணாமல் போன மின்விசிறியின் ஓசை போல, கனவுகளும் காணாமல் போயிருந்தன. கூடவே கதைகளும், கவிதைகளும். கனவுகளுக்குள் இடம் மாறியிருந்த பொருட்களைப் போல, நானும் எங்கோ இடம் மாறி இருந்தேன்.

இதை எழுதிமுடித்து உறங்கத் துவங்கும் பொழுது ஒரு கனவு வரக்கூடும்.

*****

சென்னை இரைச்சல் மிக விசித்திரமானது. உருத்தெரியாத பூதம் போல இருந்தாலும் மனதை எப்படியோ அது பழக்கி வைத்திருந்தது. முழு நிசப்தத்தின் மேலே நிகழும் மனதின் எண்ணங்களை அப்படியே தலைகீழாக இரைச்சலின் மேலும் தடையின்றி நிகழும் கயிற்று வித்தையை அது கற்று தந்திருந்தாலும், அபூர்வமாக கிடைக்கிற நிசப்தங்களும் நிசப்ந்தமான இடங்களும் அழகானவை. அடிக்கடி செல்லும் ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதி தான் அது. வானம் மிக அழகாக இருண்டிருந்தது. விளக்குகள் பிரகாசமாக எரிந்து படிப்படியாக தேயும் ஒளிவட்டங்களாக இல்லாமல் தெளிவாக தங்கள் வெளிச்சக்கோட்டை வரைந்து வைத்திருந்தன. இரைச்சல் ஓடை போல எங்கோ கீழே சன்னமாக ஒலித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. சத்தங்கள் நிரம்பிய நீர்த்தொட்டியில் மேலெழும்பி மிதக்கும் குமிழி போல உயரத்தில் அமைதியாக இருந்தது மாடி. இருளில் நானும் அவரும் நின்றிருந்தபடி எதையோ பேசிக்கொண்டிருக்கையில் அவர் முன்னறிவிப்பின்றி தன் காதல் கதையை எனக்கு சொல்லத்துவங்குகிறார். மனதிற்கு மிக நெருக்கமான காதலாக இருந்திருக்க வேண்டுமென்பது அவரின் குரலிலேயே தொனிக்கிறது. என்னை விட மூத்தவர் என்றாலும் என்னை அவருடன் சமமாக வைத்து மரியாதை தருபவர். எனக்கும் அவருக்குமான தொடர்பு பெரும்பாலும் கதைத் தொடர்பே. எப்பொழுதும் ஒரு கதை புனைபவனாகவே என்னை பாவிப்பவர். எங்கள் பேச்சின் வாக்கியங்கள் சிறுகதை பற்றி துவங்கி சிறுகதையிலேயே முடிந்துவிடக்கூடியவை. என்னிடம் தன் கதையை சொல்வதென்ற அவரின் முடிவு என்னை ஒரு நொடிப்பொழுது குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்த உரையாடல் சிறுகதைவெளிக்கு உள்ளே நிகழ்கிறதா வெளியா நிகழ்கிறதா என்பதை பாவனைகள் முழுதும் மறைந்த இருளில் கணிக்க முடியவில்லை. இருந்தும் அவர் சொல்லத்துவங்கிய கதை என்னை ஆட்கொள்கிறது. யாரும் யாரிடமும் பகிரக் கூடிய கதை நிச்சயமல்ல. கதையாக எழுத முற்பட்டால் அந்தரங்கத்தின் குரலில் மட்டுமே சொல்ல முடிகிற கதை. இடையிடையே அவர் கொண்ட எண்ணற்ற மௌனங்களில் ஒன்றின் பொழுது தொலைவில் அவர் நின்றுகொண்டிருந்த திசையில் வானவேடிக்கை துவங்குகிறது. ஒலியும் ஒளியும் இணைந்த வேடிக்கையில் ஒலி தூரத்திலியே விடைபெற்றிருக்க ஒளி மட்டும் சிதறலாய் வானில் தெரிகிறது. நிழலுருவமாய் அவரும் அவரின் கதைக் குரலும் பிண்ணனியில் தூரத்தில் ஒளிச்சிதறலுமாய் அழகான காட்சியாகிறது. கவனமாக கேட்டுக்கொண்டிருப்பினும் அந்த உரையாடலில் எந்த விதத்திலும் பங்குகொள்ளாமல் தவிர்க்கிறேன். நான் கேட்பதை அவருக்கு ஊர்ஜிதப்படுத்த வேண்டிய அவசியம் என்னை விட அவருக்கு நிச்சயம் தேவையில்லை என்று எனக்கு தெரிந்திருந்தது. அக்காட்சியை ஒரு தனி நபரின் கதையாகவே விட்டுவைக்கிறேன். நீண்ட வலியாக கதை தொடரத் தொடர, அவர் நான் கேட்டுக்கொண்டிருப்பதையே மறந்து சொல்லிக் கொண்டே போவது போலிருக்கிறது. அவர் பார்த்துக் கொண்டிருந்த திசையில் துவக்கத்தில் இருந்த ஒரே ஒரு ஒளிச்சிதறலும் மெல்ல மங்கி மறைந்தது போல இருட்டைப் பார்த்து அவர் பேசிக்கொண்டிருக்கிறார். கதை முடிவு பெறுவதற்கு முன்னரே மாடிப்படிகளின் விளக்கை யாரோ உயிர்ப்பிக்கிறார்கள். அவரின் அலைபேசி பேரொளியாக கண் விழிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒளி எங்கெங்கிருந்தோ நிரம்பிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் மேலே வருகிறார்கள். உரையாடல் திசை மாறுகிறது. அதற்கு பின் அன்று பேசிய அத்தனையும் பொய்யைப் போலிருந்தது. இன்னும் சிறுகதையை விட்டு வெளியே வராதவர்கள் போலவோ, ஒரு சிறுகதை பாதி நிகழ்ந்துகொண்டிருக்கையிலே வெளிஉலகிற்கு தள்ளப்பட்டு விட்ட கதை மாந்தர்கள் போலவோ குழம்பியிருந்தோம். இல்லை அச்சிறுகதையின் போக்கே அப்படியோ என்றும் குழப்பம். சிறுகதை முடிவை தேடித் தேடி அலுத்து உரையாடல் நீர்த்துப் போனபின் எல்லோருடனும் வீடு திரும்பினோம். பின் பல நாட்கள் நானும் அவரும் பல சிறுகதைகளைப் பேசி தொடர்ந்து விவாதிக்கிறோம். இனி எப்பொழுதும் மீண்டும் விவாதிக்கக் கூடாத ஒன்றாக அக்கதை மட்டும் எஞ்சிப் போகிறது.

*****

கையடக்க பாடல் கருவிகள் வருவதற்கு முன்னர் இரண்டு பாடல்களுக்கிடையேயான இடைவெளி இத்தனை குழப்பமாக இருந்ததில்லை. ஒலிநாடாக்கள் பெரும்பாலும் தொடர்புடைய பாடல்களை வரிசையாக நிரப்பி வைத்திருக்கும். அல்லது ஒரே படத்தின் பாடல்களை வரிசை கட்டி வைத்திருக்கும். வரிசை பல முறை கேட்டதால் மனப்பாடமாகியிருக்கும். ஒரே கதைவெளியில் ஒலிப்பதாலோ என்னவோ ஒரே படத்தின் பாடல்களுக்கிடையே மனம் எப்படியோ ஒரு தொடர்பை ஏற்படுத்தி விடுகிறது. வெவ்வேறு பாவங்களை கொண்ட பாடல்கள் ஆனாலும் அடுத்த பாடலுக்கான மனநிலை பாடல்களுக்கிடையேயான இடைவெளியில் கச்சிதமாக தேங்கி நிற்கிறது. அடுத்த அறையின் பேச்சு இங்கே கசிவது போல அடுத்த பாடலின் துவக்கம் இடைவெளியில் கசியத் துவங்கினாலும் துவங்கிவிடக்கூடும். ஒலிநாடாவில் தொடுத்த பாடல்களுக்கிடையே நார் போல அங்கங்கே தெரியும் இடைவெளியில் இசை இன்னும் அடர்த்தியாக இருக்கிறது, உரையாடலில் மௌனத்தை போல. ஆயிரமாயிரம் பாடல்களை உள்ளடக்கிய கையடக்க கருவிகளுக்கு எந்தவித பாடல் எல்லைகளும் இல்லை. அதனால் பாதியில் முடியும் பாலங்கள் போல இடைவெளிகள் இலக்கின்றி குழம்பி நிற்கின்றன. இசை அதீத உற்சாகத்திலிருந்து ஆழ்ந்த சோகத்திற்கு தாவுவதற்கான ஏதுவான இடைவெளி இருப்பதில்லை. அவசரமாக அடுத்தடுத்த பாடல்களுக்கு தாவித் தாவி தோதான பாடலுக்கு வரும் வரை இடைவெளி நீட்டிக்கப்பட்டு விடுகிறது. பாடல்களை வகைப்படுத்தி வைப்பது பிடிக்காது என்பதால், மறைமுகமாக இந்த இடைவெளிக் குழப்பத்தை ரசிக்கிறேன் என்று ஒரு சந்தேகம். தினமும் பேருந்து பயணத்தை அடுத்த என்ன பாடல் என்று கணிக்கவே முடியாத இடைவெளிகள் மட்டுமே சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கின்றன. பாடலில் ஆழ்ந்து மனதுக்குள் பாடிக் கொண்டு பாடலை தொடர்ந்து வந்து அது முடிந்ததும் மொத்த சிந்தனையும் ஒரு நொடி அந்தரத்தில் பறப்பதை நிறுத்தும் பறவைச் சிறகுகள் போல நின்றுவிடுகிறது. அடுத்து சிறகுகளின் இயக்கம் எப்படியிருக்கும் என்ற கணிக்கும் இடைவெளி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சுவாரசியமான விளையாட்டை எப்போதும் போல ரசித்துக்கொண்டிருந்த பொழுது மிகப் பழக்கமானதும் மிகப்பிடித்தமானதுமான ஒரு பாடலை கருவி எடுத்துத் தருகிறது. பதினைந்து வயதிருக்கையில் கேட்டு கேட்டு முடிவில்லாமல் தொடர்ந்த விரட்டிய பரவசமூட்டும் தூரத்து இசைப் பறவை அப்பாடல். சிந்தனை முழுக்க அந்தப் பாட்டில் கரைகிறது. அடுத்த பாடலோ அதற்கு முன் வரும் இடைவெளியோ எதுவுமே கவனத்தில் இல்லை. பாடலை மட்டுமே மனம் ஒற்றையடிப் பாதை போல தொடர்ந்து செல்கிறது. பாடல் முடிகிற தருணம் சிந்தனை இன்னும் மீளவில்லை. இடைவெளி விழுகிறது. அடுத்த பாடலுக்கான இசை துவங்கும் கணத்தில் மனம் வேறொரு பாடலை இசையுடன் துவக்குகிறது. காதில் கேட்கும் இசையும் மனதில் கேட்கும் இசையும் கொஞ்சமும் ஒத்திசைக்கவில்லை. கவனம் மொத்தமும் அலுவகலப்பணியில் இருந்து மீள்கிறது. என்ன நிகழ்ந்ததென்று புரியவில்லை. பாடலை அனிச்சையாக விரல் நிறுத்திய பின், மனம் பாடும் பாடல் மட்டும் கேட்கிறது. பதினைந்து வயதில் கேட்டு கேட்டுத் தீர்த்த பொழுது இடைவெளிக்கு பின் ஒலிநாடாவில் வரிசையில் அடுத்த வந்த பாடலை மனம் தானாக பாடிக்கொண்டிருக்கிறது. அடுக்கு அடுக்காக ஏற்றி வைத்துக்கொண்டேயிருக்கிற நினைவுகளின் அடியில் இது மட்டும் எப்படியோ சிக்கித் தவித்து பிழைத்து அன்று ஊர்ந்து மேலெழும்பி வந்து விட்டது, சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு. நினைவுகளின் ஆழம் ஏனோ அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் எளிமையாக மறக்கக் கூடிய நினைவும் மனமும் வேண்டும் போல் இருந்தது. ஒரு வேளை நினைவுகளை எல்லாம் மறக்க வேண்டியே பாடலைகளை எப்போதும் கலைத்தே வைக்கிறேன் என்று தோன்றியது. எதுவாயினும், என் நினைவுகளின் தாய்மொழி இசை மட்டுமே என்று புரிந்தது.

Written by aravind

அக்டோபர் 24, 2011 இல் 5:09 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

அருகில் வரு

3 மறுமொழிகளுடன்

‘ஹீரோவும் ஹீரோயினும்.. ரொம்ப சாஃப்ட் சாங் சார்.. தொட்டும் தொடாமலே அப்படிம்பாங்களே… அது தான் மொத்த பாட்டுமே சொல்லணும்.. ஒரு மழை பெய்யுற ஈவினிங்ல..’ என்று எந்த இயக்குனரும் என்னிடம் சொல்லவில்லை என்றாலும், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் நானே சொல்லி நானே எழுதியது.

விரல் நுனியில்
பூவானம்
தலை திரும்பி பூக்கும்

இருவிரல் மௌனங்கள் தீர
தீராததாய் மழையின் சொல்

துளியினையே
நீ தீண்ட
நமக்கிடையே மழை நீளும்

—–

இடைவெளிகள் கொண்டாலும்
அறிந்திடாமல் தாண்டும்

கனவினுள்ளே கண் தூங்கிப் போகும்
பிள்ளை முகம் போலவே
மனம் சரியுமே உன் தோளில்

—–

இதழ் பெருகும் இச்சொல்லில்
இருந்திடாதோ முத்தம்

ரகசியம் போல் நீ கண்டுணர்ந்து
புன்னகைத்தால் போதுமே
இதழ் ஸ்பரிசம் நிறைவாகும்

—–

கொசுறு – மளையாளத் திரைப்பாடலான ‘அருகில் வரு‘ மெட்டிற்கு எழுதியது. கொசுறுக்குள் கொசுறு – அதற்கு இசை ‘ஆரோமலே’ அல்ஃபோன்ஸ். கொசுறுக்குள் கொசுறுக்குள் கொசுறு – அதன் ஒரிஜினல் நோரா ஜோன்ஸினுடையது.

கொசுறு #2 – இதழ் பெருகும் ‘இச்‘சொல்லில் என்பதை கவனித்தீர்கள் தானே?

கொசுறு #3 – மளையாளத் திரைப்படமான ‘எலக்ட்ரா’வில் நடித்த நயன்தாராவிற்காக எழுதப்பட்டது. பாடல் அழகாக இருப்பதில் ஆச்சர்யமில்லை தானே? ;)

Written by aravind

மே 5, 2011 இல் 4:03 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

Follow

Get every new post delivered to your Inbox.