மற்றுமொரு வீடு
எப்போதும் போல ஒரு சனிக்கிழமை காலைப்பொழுதில் சலூனுக்கு செல்வதாக அம்மாவிற்கும் பொதுவாக வீட்டிற்கும் உரக்க அறிவித்துவிட்டு கிளம்பிய பதினான்கு வயதுச் சிறுவனான நான், முதல் முறை சவரம் செய்த பதினான்கு வயது இளைஞனாக வீட்டிற்கு திரும்பி வந்தேன். அப்பா இருந்த வரை களப்பணியாற்றிய அரசியல் கட்சியின் எதிரிக் கட்சியில் இருந்த சலூன்காரர் எனக்கு பத்து வயது இருக்கும் பொழுதிலிருந்தே நான் கடைக்கு வந்தால் சத்தமாக அரசியல் பேசுவார்; பின்னங்கழுத்தில் கத்தியை வைக்கிற சில சமயங்களில் நான் எந்த கட்சியில் சேரப்போகிறேன் என்று கேட்டு என்னையும் கத்தியையும் ஆழம் பார்ப்பார். அவருக்கு எந்தப் பதிலையும் தராமல் சங்கோஜமான புன்னகையையும் மட்டுமே தந்த என் தாடையில் இருந்து தாடிக்கு பதிலாக ஒரே ஒரு முடி விரலில் மூன்று பங்கு அளவிற்கு மாதா மாதம் வளர்வதும் அதை அவர் கத்திரித்து விடுவதும் அவருக்கு ஏனோ அதிருப்தியை தந்தது. அந்த சனிக்கிழமை சவரம் செய்துக்கொள்ளும்படி அவர் என்னைக் கேட்க, கடையில் திடீரென நிலவிய நிசப்தமும் என் மேல் குவிந்த அத்தனை பேரின் கவனமும் முடிவெடுக்க வேறாரும் துணைக்கு இல்லாததும் என்னை உந்த சரியென தலையசைத்து விட்டேன். வெந்நீர் தயாரா என்று கேட்டபடி வாசலில் நின்ற என்னைத் தேடி வந்த அம்மாவிடம் சவரம் செய்ததை சாதாரண தகவல் சொல்வதைப் போல கவனமாக சொல்லிவிட்டு உள்ளே நகர அதுவரை அம்மா வாசலுக்கு வெளியே நிற்க வைத்திருந்த பதின்ம வயதும் என்னுடன் உள்ளே வர, அம்மா அதிர்ச்சியும் கவலையும் கொண்டார். வீடு அதற்குப் பின் இரண்டானது. சலூன்காரர் அமர்க்களமாக எங்கள் வீட்டு அரசியலைத் துவக்கி வைக்கிறார்.
எனக்கென கிடைத்த திடீர் அடையாளத்தை பேரார்வத்துடன் அணிந்துகொண்டேன். வீட்டிலேயே சவரம் செய்ய பொருட்கள் வாங்குவது துவங்கி, தனி சோப்பு தனி பவுடர் வாங்கத் துவங்கியது மட்டுமல்லாது செயல்களுக்கும் பொருட்களுக்கும் முன்னே ‘பெண்கள்’ அல்லது ‘ஆண்கள்’ என்று அடைமொழியை சேர்த்து வீட்டில் அனைவரையும் சங்கடப்படுத்தினேன். சகோதரிகள் முதலில் வியப்பாகப் பார்த்தாலும் பின்னர் என்னை என் வழியில் விட்டு விட அம்மாவிற்கு மட்டும் சில வருடங்களுக்கு இந்த மாறுதல் பிடிக்கவில்லை. வாக்குவாதங்கள் சண்டைகள் கோபங்கள் என பிரச்சினை நீண்டு ஒரு நாள் ஒரு தீர்மானத்திற்கு வந்து சேர்ந்தோம். இனி எனக்கு என்ன வேண்டுமோ அதை நானே வாங்கிக்கொள்ளலாம். பணம் மட்டுமே தரப்படும். தேவையென்றால் சில சமயங்களில் ஆலோசனையும்.
முதலிரண்டு வருடங்கள் ஆலோசனைகள் தேவையில்லாத சமயங்களில் அவை வழங்கப்பட்டால் உடனடியாக அவற்றை நிராகரித்து மீண்டும் வாக்குவாதங்களை துவக்கினேன். கடைகளில் தனியே நான் பொருட்களை தேர்ந்தெடுப்பதும் அவை சரியில்லையென அம்மா எங்களுடன் வந்தவர்களுடனோ கடைக்கு வந்திருக்கும் மற்ற பதின்ம வயதினரின் தாய்மார்களிடமோ சொல்லிக்கொண்டிருப்பதும் வாடிக்கை ஆனது. மழையடித்து மழையடித்து ஒரு நாள் திடீரென வானம் வெளுப்பது போல ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமலேயே நானும் அம்மாவும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பிரமாதமான புரிதைலை அடைந்தோம். எனக்கான அடையாளம் பத்திரமாக இருப்பதாக எனக்கும் அவருக்கான இடம் பத்திரமாக இருப்பதாக அவரும் அறிந்துகொண்டதால் அது வரையிலான வாக்குவாதங்களை கேலியாகக் குறிப்பிட்டுச் சொல்வதும் நானே அவரை சில சமயங்களில் எனக்கான சட்டைகளை வாங்கச் சொல்வதும் அவர் என்னிடம் சில ஆலோசனைகள் கேட்பதாகவும் காட்சிகள் மாறியிருந்தன.
அமெரிக்காவிற்கு வந்த இரண்டாவது வருடம் தனியே ஒரு வீட்டை எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக பொருட்கள் வாங்கி நிரப்பத் துவங்கிய பொழுதில் ஒவ்வொரு பொருட்களுக்கும் எனக்கு ஆயிரம் கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. இந்தியாவில் விடிந்ததும் அம்மாவை அழைத்தும் அனைத்தையும் கேட்பதும் அவர் முடிவை என்னிடமே விட்டுவிடுவதாக இரண்டு வாரங்கள் கழிகின்றன. கடைசியில் அம்மாவிற்கான சோப்பு எண்ணை ஷாம்பூக்களை மட்டும் அவரை வாங்கி வரச் சொல்லிவிட்டு முழு வீட்டையும் உருவாக்கி வைத்து காத்திருந்தேன்.
அம்மா அமெரிக்கா வந்தடைந்ததும் அவருக்கு வீடும் வீட்டில் உள்ள பொருட்களும் அதன் அமைப்பும் ஊரும் வானிலையும் பிடிபடவில்லை. தூக்கமும் கேள்விகளும் ஏனோ கலக்கமுமாக வீட்டின் ஒரே அறைக்குள் முடங்கிவிடுகிறார். அலுவலகத்தில் இருந்தாலும் நாளெல்லாம் கவனம் வீட்டின் மீதே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பேருந்திலிருந்து இறங்கியதும் வீட்டின் ஜன்னலையும் அதில் தெரிகிற முகத்தையும் தாண்டி ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என பார்த்துக்கொண்டே நடக்கிறேன். எதையும் வற்புறுத்தாமல் வலியுறுத்தாமல் அம்மா தானாக வீட்டை பழக்கிக்கொள்வார் என மிகுந்த கவனத்துடன் நாட்களை கடத்துகிறேன். மெல்ல மெல்ல வீட்டில் அம்மா புழங்குகிற இடங்களும் வீட்டைச் சுற்றி நடந்து சென்று வருகிற பாதைகளும் விரிகின்றன. ஒவ்வொரு அறையும் வெள்ளையடித்தது போல கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. ஒவ்வொரு பொருளும் அவருக்கு கை வருகிறது. அதன் பயன்பாட்டை தனக்கேற்ற வகையில் மாற்றிக்கொண்டு அதில் தன்னுடைய ஏதோ ஒரு அடையாளத்தை விட்டு வைக்கிறார். ஒரு நாள் மாலை பேருந்திலிருந்து இறங்கும் பொழுது வீட்டிற்கு வெளியே இருக்கும் பெரிய நீரூற்றிற்கு அருகே நிறைய இந்தியப் பெற்றோர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபடி பேச்சு சுவாரசியத்திலும் அனிச்சையாக என்னைப் பார்த்து கையசைக்கிறார். பின்னர் ஒரு நாள் இந்தியா திரும்பிவிட்டார். வீட்டை யாருடனும் பகிர விருப்பமில்லாமல் இரண்டு மாதங்கள் நான் மட்டும் தனியே சுற்றித் திரிகிறேன். பின்னர் சில நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டனர். மூன்று மாதங்களில் நானும் ஊரையும் வீட்டையும் விட்டு வேறு ஊருக்குச் சென்று விட்டென்.
எதிர்பார்த்ததை விட அந்த வீடு மனதில் தங்கிவிட்டது. இந்தியாவில் இல்லாததும் இந்திய வீட்டில் இல்லாததுமே பெரிய குறையாக இருந்த பொழுது இது மற்றுமொரு வீடாகச் சேர்ந்துவிட்டது. அந்த வீடு வீட்டில் என்னுடைய அறை ஜன்னல் ஜன்னல் வழியே தெரியும் நண்பர்களின் வீடுகள் நண்பர்கள் என அத்தனையையும் விட்டு விலகி இரண்டு மாதங்கள் கழிந்த பின், ஒரு வார இறுதியில் மீண்டும் வீட்டைப் பார்க்க கிளம்பி விட்டேன். ஒரு மாத காலத்தில் வீடு நிச்சயம் மாறி இருக்கும். அதை ஒரு முறை பார்த்துவிட்டால் மிகச்சுலபமாக அதன் நினைவுகளிலிருந்து மீண்டு விடலாம் என்று எண்ணம்.
இடம் மாறிய பொருட்களும் புதிய பொருட்களுமாய் மறுபடி வீட்டில் என்னை பொருத்திக்கொள்ள முடியவே இல்லை. நண்பர்களுடனான அரட்டையில் அவ்வப்போது அமைதி ஏற்படுகிறது. என் அறை முற்றிலும் வேறாக மாறியிருந்தது. இன்னும் கடிதங்களுக்கு முகவரியாக இந்த வீட்டையே அடையாளமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தும் அது எந்த விதமான அடையாளமுமாக இல்லாமல் இருக்கிறது. இருந்தும் பெரிய அதிர்ச்சிகளோ வருத்தங்களோ இல்லை. வீட்டில் கழித்த மூன்று மாதங்களும் வெளியே கழித்த இரண்டு மாதங்களுமாக காலம் இரண்டிற்கும் என்னைப் பழக்கி வைத்து லேசான சஞ்சலத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. காலம் எப்போதுமே ஏற்படுத்தும் சஞ்சலம். ஒரு சோஃபாவில் இரவெல்லாம் பாதி உறக்கமும் பாதி விழிப்புமாக புரள்கிறேன். அவசரமாகச் சேர்த்த பயணப் பையில் தலைக்கும் சேர்த்து குளிக்கத் தேடித் தேடி ஒரே ஒரு சோப்புக்கட்டியை மட்டும் கண்டுபிடித்து குளியலறைக்குள் நுழைந்ததும் அம்மாவின் ஷாம்பூ பாக்கெட்டுகள், “பெண்கள்” என்று அடைமொழியை மனம் எப்போதோ உருவகித்த சேர்த்த ஷாம்பூ பாக்கெட்டுகள், இடம் மாறாமல் உபயோகப்படுத்தப்படாமல் அங்கேயே கிடந்து ஒரு நொடி என்னை நின்று கவனிக்க வைக்கின்றன. ஆறு மணி நேரப் பயணம் மேற்கொண்டது அதை இங்கே இப்படி கண்டெடுக்கவே என்று தோன்றுகிறது. அதையுடன் எடுத்துக்கொண்டு ஒரு நீண்ட குளியலுக்குள் நுழைகிறேன்.
[**]
நண்பர்கள் எல்லாருமாக யாரேனும் ஒருவரின் வீட்டில் சனிக்கிழமை மாலைகளில் ஒவ்வொரு முறை கூடும் போதும் யார் யார் கூடியிருக்கிறார்கள் – பிரம்மச்சாரிகள், அலுவலக நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் குழந்தைகள் – என்பதை கவனித்து அதற்கு ஏற்றது போல ஒரு மணல் கடிகாரத்தை மனதிற்குள் திருப்பி வைக்கிறேன். திரைப்படங்கள், அரசியல், விளையாட்டு எனத் துவங்கி பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குறைந்து மணல் முற்றிலும் தீர்ந்தபின் அனைவரும் அமைதியாகின்றனர். பின்னர் சிறு குழுக்களாக பிரிவது, பிரத்யேக ரசனைகளைப் பற்றி விவாதிப்பது என மற்றொரு சுற்று முடிந்து மறுபடி அமைதி. உணவை எடுத்து பத்திரிக்கைத் தாள்கள் விரித்து நடுக்கூடத்தில் வைக்க அது நல்ல சமயம். பின்னர் உணவைச் சுற்றி சில உரையாடல்கள், அதுவரை பேசியவை மீண்டும் ஒரு அவசரக் கொறிப்பு என இன்னொரு சுற்றும் முடிந்து விடும். உண்ட மயக்கத்துடன் அமர்ந்தபடி ஏதேதோ பேச முயன்று தோற்ற பின் தோன்றுகிற கடைசி அமைதியின் போது இந்தக் கூட்டத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற கேள்வி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு விகிதத்தில் தோன்றிவிடும். இருபத்தி ஏழு வயதில் புதிதாக ஒரு நண்பனை கண்டறிவது அத்தனை சுலபமில்லை. வேலை நேரங்களுக்குப் அப்பால் ஒரு நொடி கடந்தாலே சிலருடன் மணல் கடிகாரம் தீர்ந்துவிடுகிறது. ரசனைப் புள்ளிகளில் இணைபவர்களுடன் ரசனை வட்டத்திற்கு வெளியே பேசுவதில் தயக்கங்கள் உண்டு. சிலர் பேருந்திலிருந்து இறங்கிய பிறகு மாயமாகி விடுகிறார்கள். சிலர் மாலைத் தேநீர் சமயங்களுக்கு மட்டும். ஒருவரின் இருப்பு இன்னொருவருக்கு துருத்திக்கொண்டு தெரிகிற சமயஙகளில் சட்டென விடைபெற்றுக்கொள்வது நலம். அப்படியாக அன்று நள்ளிரவைத் தொடுகிற சமயத்தில் கூட்டம் அவசரமாக விடைபெறுகிறது. ஒவ்வொருவரும் ஒரு காரை கிளப்பிக்கொண்டு வந்திருக்கிறார்கள். யார் யார் யாருடன் செல்கிறார்கள் என்று விவாதிக்கப்படுகிறது. நான் தனியே ஒரு காரில் வந்திருக்கிறேன். வாசலை அடைந்து விடைபெறுகிற சமயத்தில் தூக்கத்தில் மிதக்கிற என் கண்களைக் கண்டு சிலர் ஆலோசனை சொல்கிறார்கள் – இங்கேயே படுத்து உறங்கி விட்டு காலையில் செல்லலாம். தம்பதியினர் இருக்கிற வீடென்று தயக்கமெனில் பக்கத்தில் இன்னொரு நண்பனின் வீடிருக்கிறது. இல்லையெனில் யாருடனாவது காரில் சென்று விட்டு காலை வந்து என்னுடைய காரை எடுத்துச் செல்லலாம். இனி ஒரு நொடி இருப்பதென்பது அதீதமாகி விடும் என்று தோன்றுகிறது. அதிலும் இன்னொருவரின் வீட்டில் இன்று இதற்கு மேல் வேண்டாம் என்று தோன்றுகிறது. அடுத்த நாள் அதிகாலை இருக்கும் பணியை, அதற்கு காரின் தேவையைச் சொல்லி விடைபெறுகிறேன். தூக்கத்தை ஒரு நொடியில் சோப்புக்குமிழியைத் தொட்டு உடைப்பது போல உடைக்கலாம் என்றாலும் ஏதோ அலட்சியம், ஏதோ சோம்பேறித்தனம். நண்பன் ஒருவன் காரில் ஏறிவிட்டு பின் தொடர்ந்து மெதுவாக வரச் சொல்கிறான், வீடு வரை கொண்டு விடுவதாக.
சுமார் அரை வருடமாக ஏதேதோ மனக்குழப்பங்களில் தனித்தனியே சிக்கிக்கொண்டிருக்கிற நானும் அவனும் கார்களை கிளப்பிக்கொண்டு சாலையை அடைகிறோம். என்ன பிரச்சினை என்று வாய் விட்டு கேட்டுக்கொள்ளாமல் சரியான சமயங்களில் கவனமாக துணை இருப்பதின் மூலமாக மட்டுமே வியப்பாக நெருங்கிக்கொண்டிருந்தோம். வேலை நேரங்களுக்குப் பிறகு சில மணி நேரங்கள் என்று துவங்கி, வார இறுதியில் ஒரு நாள், இரண்டு நாட்கள், பின்னர் வாரத்திலும் பல நாட்கள் அந்த எட்டு மாதங்களுக்குப் பிறகும் ஏதேனும் ஒரு நொடியில் யாரேனும் ஒருவரின் இருப்பு அதீதமாகி விடலாம் என்ற எச்சரிக்கையுடனே எட்டு மாதங்களாக திரிந்துக்கொண்டிருக்கிறோம். அந்தச் சாலைகளில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. போகிற வழியை நண்பனின் கவனித்திற்கு விட்டுவிட்டு நான் காரை செலுத்துவதில் மட்டுமே மிச்சமிருக்கும் கவனத்தை செலுத்துகிறேன். வலது பக்கம் திரும்ப அவனுடைய காரின் விளக்கு எரிந்தால் நானும் என்னுடைய காரின் விளக்கை எரியவிடுகிறேன். இரண்டு விளக்குகளும் அரை வினாடி இடைவெளியில் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்துக்கொண்டே இருக்க கார்கள் சாலை சந்திப்பில் பச்சை விளக்கிற்காக முழுதாக ஐந்து நிமிடங்கள் காத்திருக்கின்றன. தூக்கத்தில் எங்கேனும் வழி தவறி விடுவேன் என்கிற சந்தேகத்தில் நண்பனின் கண்கள் அவ்வப்போது ரியர் வியு கண்ணாடியில் அவ்வப்போது சரி பார்க்கின்றன. வீட்டிற்கு சரியாக சென்று சேர்ந்துவிட்டேனா என யாரோ குறுஞ்செய்தில் கேட்கிறார்கள். மிகுந்த எச்சிரிக்கையும் நிதானத்துடனும் இருவரும் காரில் ஏதோவொரு பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. கார்கள் மெல்ல ஊர்ந்தபடி என்னையறியாமல் என்னுடைய வீட்டைக் கடந்து போகின்றன. ஆறு மைல்களுக்குப் பிறகு, கடந்து எட்டு மாதங்களாக காரணங்கள் இருந்தும் இல்லாமலும் நினைத்தபொழுதில் புறப்பட்டு வந்து அடைந்த நண்பனின் வீட்டை கார்கள் அடைகின்றன. என் வீட்டிற்கு போகாமல் நேரே இங்கே வந்திருக்கிறோம் என்று உணர்ந்தும் தூக்கம் கலையவில்லை. வீட்டைத் திறந்து உள்ளே சென்று வழக்கமாக கைக்கடிகாரத்தை வைக்கிற இடத்தில் வைத்து மெத்தை மீது சிதறிக் கிடக்கிற என்னுடைய பொருட்களையெல்லாம் அவசரமாக தள்ளி வைத்து அடுத்த நாள் காலையின் பணிகளை அவசரங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று மறந்து இந்த மணல் கடிகாரம் நிற்க இன்னும் பல நாட்கள் ஆகும் என்று மட்டும் நினைத்துக்கொண்டு தூங்கிப் போகிறேன்.
[**]
ஜனவரியில் இடம் பெயர்ந்த ஊரில் தங்குவதற்கு வீடு தேட துவங்கிய போது ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்க அலுவலகத்திற்கு போய் வர ஏதுவாக இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணம் மட்டுமே இருந்தது. அதுவே பெரிய ஏமாற்றமாகவும் அலுப்பாகவும் இருந்தது. நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள் யாருமில்லை. பெரு நகரமோ அதிக இந்தியர்கள் இருக்கிற இடமோ கவன ஈர்ப்பு விஷயங்களோ எதுவுமில்லை. அலுவலகத்தில் இருந்தவர்கள் அதற்கு மிக அருகிலேயே ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தபடி ஜன்னல்கள் வழியே பகலில் வீட்டையும் இரவில் அலுவலகத்தையும் பார்த்தபடி இருந்தார்கள். நானோ அலுவலகத்திற்கு தினசரி வந்து செல்லும் ரயில் பாதை வழியே தேடிச் சென்று ஒரு வீட்டை கண்டறிந்தேன். பெரிய ஹாலும், பால்கனியும் இரண்டுக்கும் இடையே பிரெஞ்ச் கதவுகளுமாக இருந்தது எனக்கான அறை. ’பிரஞ்ச் கதவுகள்’ என்பதை முதன் முறை அறிகிறேன். மூன்று ஆளுயர கண்ணாடி சட்டங்களும் அதில் நடுவிலிருப்பது மட்டும் கதவாக வெளியே திறக்கிற அமைப்பு. ரயிலையும் ப்ரெஞ்ச் கதவுகளையும் பால்கனியையும் காரணங்களாக உருவகித்துக்கொண்டு வீட்டைத் தேர்ந்தெடுத்து விட்டேன்.
ஒரு மூலையில் யாரும் பார்க்காத தொலைகாட்சி. இன்னொரு மூலையில் என்னுடைய கட்டிலும் மெத்தையும். அறையின் நடுவே ப்ரெஞ்ச் கதவுகள் அதற்கு எதிரே நீண்ட சோஃபா. இவைகளுக்கிடையே என்னுடைய பொருட்களை இடம் மாற்றி மாற்றி வைத்தாயிற்று. சிறிய ஒலிபெருக்கிகளை மூன்று முறை இடம் மாற்றிப் பார்த்துவிட்டேன். அதனுடையே நகர்கிறது எழுத பயன்படுத்தும் மேஜை. பால்கனி தனியொரு குளிர் மண்டலத்தில் இருப்பதால் அங்கே போவதில்லை. காலை எழுகை, ரயில், அலுவலகம், ரயில், வீடு. இது வரை இருந்த வீடுகளை வைத்துப் பார்க்கையில் இது வீடாக மனதில் நிற்கப் போவதேயில்லை என்பது ஏனோ முன் தீர்மானமாக இருக்கிறது. அதிகபட்சம் இந்த வீட்டில் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கப் போவதால் எதையும் கவனித்தில் பதிக்கவோ எதற்காக கவனத்தைக் கலைக்கவோ விருப்பமில்லை. துளியும் கலையாமல் பிரமாதமாக உறக்கம் வருகிற அறையில் முதல் மாதம் கழிந்து ஒரு நாள் அதிகாலை மூன்று மணி அளவில் தண்ணீர் தாகமும் திடீரென விழிப்பும். மெத்தையிலிருந்து எழுந்து நின்று பார்த்ததும் அறை விசித்திரமாக இருக்கிறது. பகலின் வெளிச்சத்திலும் இரவின் ஒளியிலும் பார்த்தது போலல்லாமல் ஏதோ வெள்ளத்தில் மிதப்பது போல பிரகாசிக்கிறது. ஏதும் புரியாமல் நடந்து ப்ரெஞ்ச் கதவுகளைக் கடக்கையில் கண்ணாடி வழியே அசையாமல் முழு நிலவு. கனவாக இருக்கலாம் என்று எண்ணக்கூடிய அளவிற்கு துல்லியம். தாகம் தூக்கமெல்லாம் அபத்தமாகத் தோன்றி அப்படியே தரையில் அமர ஒரு நொடி யோசிக்கிறது மனம். அறையினில் இருக்கிற ஒவ்வொரு பொருளும் இந்த வெளிச்சத்தில் வித்தியாசமாக காட்சி தருகின்றன. என்னையும் மீறி வீடும் வீட்டைப் பற்றிய ஒரு நினைவும் காட்சியும் அழுத்தமாகப் பதிகிறது. இதே காட்சியை இந்த வீட்டிலோ வேறு வீட்டிலோ மறுபடி காணக் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் கவனத்தில் அதை பதித்துக்கொள்கிறேன். தண்ணீரை அவசரமாகக் குடித்துத் தீர்த்து நிலவுக்கு நேரெதிரே இருக்கிற சோஃபாவில் கிடந்ததும் உறக்கம் வர நெடு நேரம் பிடிக்கிறது.
என்னமோ ஏதோ
தலை குப்புற கவிழ்ந்து வெறும் தலையை மட்டும் மறைக்கிற தொப்பியல்ல அது. தலையை முழுதும் மறைத்த பின்னர் கூட முன் யோசனைகள் ஏதுமின்றி சரசரவென இரு மருங்கிலும் இறங்கியபடி காதுகளையும் குளிரிலிருந்து காத்தபடி இரண்டு கன்னங்களை தொட்டு உறவாடும் கம்பளிப் பாரம்பரிய தொப்பி அது. அதன் நிறமும் தோற்றமும் அதை அணிந்தவரின் முகத்தை செம்மறியாட்டின் முகத்தை போல ஆக்கி வைக்கக்கூடிய தன்மையை கொண்டது. அதை அணிந்து கொண்டும் வலது அல்லது இடது கக்கத்தில் ஒரு பையுடனும் ஒருவர் தினசரி என்னைக் கடந்து ஓடுவதை காண நேரிடுகிறது. யோசனைகளின்றி திறந்து வைக்கப்பட்டிருக்கும் கவனக்கலைப்பின் பலப்பல வாசல்கள் வழியே அவர் பல நாட்களாக நுழைந்து ஓடி மறைந்து கொண்டிருந்தாலும் பதிவெழுதி வெகு நாட்கள் ஆனது உறைத்த ஒரு நன்னாளில் அவரை கண்டு நான் அப்படியே வியந்து நின்றுவிட்டேன்.
தண்டவாளங்கள் ஒதுங்கும் ஊர்ப்பக்கங்களில் ‘எக்ஸ்ப்ரெஸ் வண்டி தெனம் காத்தால ஒம்பது லேர்ந்து ஒம்பது பத்துக்குள்ள இந்தப்பக்கமா போவும்’ என்று குத்துமதிப்பாக சொல்வதைப் போல திங்கள் முதல் வெள்ளி வரை அவரை 8:50 துவங்கி 9:10க்குள்ளாக காண நேரிடுகிறது. ‘ஓ! யாரவர்? எதற்காக இப்படி ஓடுகிறார்? யாருக்குத்தான் ரயிலை பிடிக்க அவசரம் இல்லை? ஒரு ரயிலை தவற விட்டால் இன்னொன்று வரத்தானே செய்யும்?’. அவர் என்னை அப்படி கடந்து ஓடுவது நான் ரயிலை விட்டு இறங்குகிற நிலையத்தில். (இந்தப் பக்கங்களுக்கு புதிதாக வரத் துவங்கியிருப்பவர்கள் முந்தைய விரைவு ரயில் உவமையை விளையாட்டாக கருதியிருக்கலாம். அடுத்த முறை இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவும்). அவரின் முகத்தில் நாடகத்தனமான பதற்றம். வாய் எப்பொழுதும் ஓசையில்லாத ‘ஓ’வை சொல்லிக்கொண்டிருக்கிறது. சிறப்பாக ஆட்களைக் கடந்து திறமையாக ஓடுகிறார். ஒரே சமயத்தில் சுமார் அறுபது பேர் கூடும் ரயில் நிலையம் என்றாலும் எந்த கூச்சமும் இல்லாமல் தெளிவாக ஓடுகிறார். தலையே லேசாக இப்படியும் அப்படியும் ஆட்டுவதால் அவரின் காதுகளை மறைத்த தொப்பியின் காது மடல்கள் இப்படி அப்படியும் அசைய அந்த ரிதத்தில் பிசகாமல் ஓடுகிறார். பதற்றமும் சூச்சமின்மையும் ஓ-என்கிற-வாயும் அவருக்கு ஓடுவதற்கான ப்ரத்யேக முகபாவத்தை தருகிறது. ”நான் ரயிலை விட்டு இறங்கி நடைமேடையில் நடந்து எஸ்கலேட்டரை அடைந்து அதில் நின்றபடி இறங்கி தானியங்கியின் வாயில் டிக்கெட்டை திணித்து தடுப்பைத் திறந்து வெளியேறுகிறேன்” என்பதான தினசரி நடவடிக்கைகளின் கால-இட வரைபடத்தில் தானியங்கி துவங்கி எஸ்கலேட்டர் வரையிலான பகுதியில் மினுக் மினுக்கென ஒரு சிறு புள்ளியென அவர் விரைந்து நகர்கிறார். எங்களுக்குள்ளான ஒரு-ரயில்-இடைவெளி ஒரு நாள் எங்கோ கொஞ்சம் குறைந்து விட ரயில் நிலையத்தின் வாசலில் நான் நிற்கையில் அவர் கார் பார்க்கிங்கை தாண்டி எங்கிருந்தோ ரயில் நிலையத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தபடி அதிர்ச்சியை அளித்தார். அதற்கு முன்னும் பின்னரும் அவர் எங்கிருந்து வருகிறார்/செல்கிறார்? (ராஜா ரசிகனின் இடைச்செருகல் – ‘பூந்தோட்டம்’ படத்திலிருந்து ‘வானத்தில் இருந்து குதிச்சு வந்தனா’ பாடல்). அவர் எங்களுக்கு சொல்ல முயல்கிற செய்தி என்ன? என்னைத் தவிர வேறு யாராவது அவரை கவனிக்கிறார்களா? மிகவும் சோம்பலான ரயில் நிலையத்தில் அவர் இல்லாத கணங்களில் மிகவும் சாதாரணமாக நடந்து வருகிற சிலர் திடீரென ஒரு உத்வேகத்துடன் ரயிலை நோக்கி ஓடத் துவங்குவதை அவர் கடும் உழைப்பினால் சமூகத்தில் கொண்டு வந்த மாற்றமாக கருதலாமா? இதையெல்லாம் உங்களைத் தவிர வேறு யாரிடம் நான் கேட்கமுடியும்?
பலப்பல இடங்களில் அவர் என்னைக் கடந்து ஓடுவதும் நான் வியந்து திரும்பிப் பார்ப்பதுமான காட்சித்துண்டுகளை திறமையான தொகுப்பாளர் வெட்டி ஒட்டி ஓடுவிடும் ஒரு காட்சியுடன் இப்போதைக்கு இதை விடுகிறேன். நிச்சயம் அந்த எஸ்கலேட்டருக்குப் பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதை விரைவில் கண்டறிந்து விடுவேன். அ) நல்ல உலக குறும்படம் அல்லது சிறுகதையைப் போல அவர் ரயிலுக்குள் நுழைந்து அந்தப்பக்கமாக வெளியேறி ஓடிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஆ) ரயிலை அடைந்ததும் ’I just finished 2.2 mi run with Nike+ Running #nikeplus” என்று டிவிட்டரில் எழுதுகிறார்.
[**]
கூட்டமான எலிவேட்டர் ஒரு தளத்தில் நின்று ஒருவர் வெளியேறி கதவுகள் மூடியவுடன் உள்ளிருக்கும் இந்தியர்களுக்கு தங்களின் இடத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏனோ ஏற்படுகிறது. இந்திய ஆணும் இந்திய பெண்ணும் மிக நெருக்கமாக நிற்க வேண்டிய அசந்தப்பர்ப்பமான (ஜொள்ளர்களின் sentimentகளை hurt செய்ய வி்ருப்பமில்லாததால் ‘அல்லது சந்தப்பர்ப்பமான’) தருணங்களில் கண்ணுக்குத் தெரியாத கலாச்சார கோட்டினை மிதிக்கால் அழிக்காமல் ஒன்று அல்லது ஒன்றரை கால்களில் நின்றுகொண்டிருப்பவர்கள் சட்டென இடம் மாறி ஆசுவாசப்படுவது அத்யாசமாகிறது. இந்திய ஆணும் இந்திய ஆணும் அப்படி அசந்தப்பர்ப்பமான (முன் சொல்லப்பட்ட அதே காரணத்திற்காக ‘அல்லது சந்தப்பர்ப்பமான’) தருணங்களில் சிக்கிக்கொண்டால் இந்த இடம் மாறுதல் இன்னும் அதிவேகமாக நிகழ்ந்து அடைந்து ஒரு சாதாரண சம்பாஷனையாக தொடர்கிறது. (பெரும்பாலும் ‘ஏண்ட்ட்றா மாமா?’). இப்படிப்பட்ட கலாச்சார கட்டாயங்கள் இல்லாத சமயங்களிலும் எலிவேட்டரில் ஒரு கை கு்றைந்தால் இந்தியர்கள் பின்னிருந்து நகர்ந்து நேரே கதவை நோக்கி நகர்ந்து நிற்பதோ பின்னால் யாருமில்லாததை அறிந்து திரும்பிப் பார்க்காமல் பின்னால் நகர்வதோ பக்கவாட்டாக எலிவேட்டர் சுவற்றை தேய்த்தபடி நகர்வதோ கு்றுக்காக நடந்து எலிவேட்டர் பட்டன்களை வெறித்து பார்ப்பதோ நிகழ்கிறது. சில குறிஞ்சிப்பூ பூக்கிற தருணங்களில் எலிவேட்டரில் இருக்கிற பலரும் ஜோடி நம்பர் ஒன் துணை நடனக் கலைஞர்கள் போல ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவரை இடித்துக்கொள்ளாமல் இடம் மாறி புது இடத்தை அடைந்து என்னை பேரதிசயத்தில் ஆழ்த்துகிறார்கள்.
எலிவேட்டரில் எனக்கு பெரும்பாலான அமெரிக்கர்களை மிகவும் பிடிக்கிறது. ’எலிவேட்டர் என்பது மேலும் கீழுமாய் இயங்குகிற ரயில்’ என்று எந்த அறிஞரும் சொல்லவில்லையென்றாலும் எலிவேட்டர் சினேகங்களும் ரயில் சினேகங்களைப் ஒன்று போல என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதன் குறுகிய கால ஆயுசை நன்கு உணர்ந்த அமெரிக்கர்கள் பல தளங்களில் சிறப்பாக இயங்குகிறார்கள். (தமிழில் ‘pun intended’ற்கு இணையான சொலவடை என்ன?). சுவையான நறுக்கென்ற கேள்விகள், பதில்கள், கேலிகள், பாவனைகள் எனப் பிரமாதப்படுத்துகிறார்கள். அத்தனை குறுகிய காலத்தில் இன்னொருவரை impress செய்கிற சவாலை அவர்கள் ரசிக்கிறார்கள், ரசித்து எதிர்கொள்கிறார்கள், நம்மையும் ரசிக்க வைக்கிறார்கள். உடன் யாருமில்லாத எலிவேட்டர் தருணமொன்றில் கதவு திறந்து எதிர்புறத்தில் அந்த மூலையில் இன்னொரு எலிவேட்டரில் இன்னொரு தனியனான முன் பின் தெரியாத அமெரிக்கர் ஒருவர் மூன்று நொடிக்களுக்காக யோசித்து அரசியல்வாதியைப் போல என்னை நோக்கி கை நீட்டி அசைக்க, நானும் அவருக்கான இந்திய பிரதிநிதியாக பதிலுக்கு கையசைக்க எலிவேட்டர்கள் மகிழ்ச்சியுடன் கதவுகளை அடைத்தன. சுமார் மூவாயிரம் பேரை தினசரி போரடிப்பதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக கட்டியிருக்கும் அலுவலகத்தில் இவர்களே என்னை காக்கிறார்கள். (அல்லது ‘A street car named desire’இல் சொல்வதைப் போல ‘I have always depended on the kindness of the (elevator) strangers’ என்பதாக இந்தப் பத்தி முடிகிறது).
[**]
இந்த இரண்டு மணிரத்ன ஷாட்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை நீங்கள் இப்போது ஆராயலாம். நான் அடுத்த பத்தியில் காத்திருக்கிறேன்.


[**]
கனுக்கால் வலிக்கு மாத்திரைகள் தைலங்கள் உபயோகித்த பிறகும் சிறந்த நிவாரணம் கிடைப்பதில்லை. (கிடைக்குமென்றாலும் இந்தப் பத்தியின் சுவாரசியத்திற்காக இல்லை என்று வைத்துக்கொள்ளவும்). அதற்கு செய்யக் கூடிய ஒரு வலி நிவாரண செய்முறையை இப்போது சொல்லப் போகிறேன். இதை செய்வதற்கு இன்னொருவரின் உதவியோ மற்ற வேலைகளை தள்ளிப்போடுவதோ தேவையேயில்லை.
இதை நீங்கள் தூங்கும் போதும் செய்தால் போதுமானது. இரவு படுக்கும் பொழுது பக்கவாட்டாக படுத்துக்கொள்ளவும். வலது கனுக்காலில் வலியென்றால் இடது புறமாக படுக்கவும். இடது கனுக்காலில் வலியென்றால் என்ன? என்பது எளிதாக ஊகிக்கக் கூடியதே. கால்களை நேராக நீட்டி படுக்கவும். (பார்க்க படம்)

இப்போது வலி இருக்கும் காலை முழுதாக நன்றாக மடக்கிக் கொள்ளவும். பின்னர் அதை வலி இல்லாத காலுக்கு அடியில் வைத்துக்கொண்டால் வலிக்கும் கனுக்கால் வலி இல்லாத முட்டியின் கீழ் வந்து விடும். (உங்கள் கால்களின் நீளத்திற்கு ஏற்ப இது மாறலாம். காலை சில டிகிரி மாற்றி மடக்கிப் பார்க்கவும்) (பார்க்க படம்).

வலிக்காத முட்டியினால் லேசாக அழுத்தம் தந்தாலே வலிக்கு நல்ல இதமும் நிவாரணமும் கிடைக்கும். தினமும் இரவில் செய்து வரவும். இப்போதைக்கு ஏதேனும் ஒரு கனுக்காலில் மட்டும் வலியை வரவழைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும்.
[**]
மொழி இன மத பேதம் கடந்த, தங்க வளையல்கள் மோதிரங்கள் கடிகாரங்கள் மற்றும் நிறைய நகங்கள் கொண்ட ஏராளமான இந்தியக் கைகளுடன் நான் வாரா வாரம் பெரும் சமூக சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் பேருந்துகளில் அடித்து பிடித்து இடம் பிடிக்கவோ நீண்ட நெடிய வரிசைகளில் இடத்தை தக்கவைத்துக்கொள்ளவோ செலவிடும் சக்தியை அமெரிக்காவில் வீணடிக்காமல் மரப்பெட்டிகளில் கொட்டிவைக்கப்பட்டிருக்கிற வெண்டைக்காய் குவியல் வாவாவென அழைக்கிற காய்கறிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் செலவிடுகிறேன். வாரா வாரம் வெண்டைக்காய் தின்கிற இந்த சமூகம் உங்கள் திறனுக்கு வைக்கிற போட்டி நாளெல்லாம் நடந்து கொண்டிருக்கும். நல்ல இந்தியராக நீங்களாக நல்ல சமயம் பார்த்து கூட்டத்தினுள் நுழைந்து கொண்டு சரசரவென வெண்டைக்காய்களின் நுனியை உடைக்கத் துவங்க வேண்டியது தான். விறுவிறுவென எல்லோரும் தங்களுக்கான காய்களை தேடித் தேடி உடைக்கும் பொழுது வார்த்தை பறிமாற்றங்களோ துளி வன்முறையோ இல்லாமல் survival of the fittestக்கு இணையானதொரு நுட்பமான போட்டி ஏற்படும். நீங்கள், உங்களுடைய வீடு, உங்களின் அடுப்பு, அதன் மேல் மணக்கப் போகிற வெண்டைக்காய் சாம்பார் ஆகியவற்றை மட்டும் நினைத்துக்கொண்டு இரக்கமின்றி காரியத்தில் இறங்க வேண்டும். பிள்ளைகளை பெற்றிருப்போர் அவர்களின் எதிர்காலத்தையும் அதற்கான சேமிப்பையும் கூடவே நல்லதொரு வங்கி விளம்பரத்தையும் நினைத்துக்கொள்வது களத்தினில் அவர்களது மூர்க்கத்தனத்தை அதிகரிக்கும். நல்ல வியூகம் அமைத்து எட்டு திசைகளிருந்தும் வெண்டைக்காய்களை பலப்பல கைகளுக்கிடையே பொறுக்கி சோதிக்க வேண்டும். உங்களுக்கான வெண்டைக்காயில் உங்களின் பெயரிருக்காது. ஆனால் நுனியை உடைக்கையில் அபத்தமாக வளைந்து கொடுக்கிற காய்களை நீங்கள் திரும்ப வீசி எரியும் பொழுது அதில் யாரோ ஒரு அவசரக்காரர் அல்லது அப்பாவியின் பெயரை எழுதி வீசுவதாக அலட்சியமும் பெருமிதமும் கொள்ளுதல் வேண்டும். அப்படி நிராகரிக்கப்பட்ட காய்களை யாரேனும் பொறுக்க நேரிட்டால் அத்தனை கைகளும் நிற்காமல் தங்களின் காரியத்தை தொடர்ந்தபடி அந்தக் கைகளிலிருந்து நீண்டு மேலே வளர்ந்திருக்கும் முகங்கள் மட்டும் திரும்பி தோற்றுப்போனவரை நன்கு அடையாளம் பார்த்துவிட்டு மீண்டும் பாலித்தீன் பைகளில் சமூகத்திடமிருந்து தட்டிப்பறிக்கிற வெற்றி வெண்டைக்காய்களை சேகரித்து எடை பார்த்து காசு கொடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து எண்ணையில் வதக்கித் தின்றால் இன்னொரு திங்கட்கிழமை எதிர்கொள்கிற வேகம் நிச்சயம் கிடைக்கும்.
[**]
அறையின் கதவுகளைத் திறந்தால் வரவேற்கும் பால்கனிக்கும் நல்ல மழையுடன் வந்திருக்கும் வசந்த காலத்திற்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.
உன் வாழ்வில் சில நொடிகள்
கொஞ்சம் ராஜா புராணம். ‘ராஜா’ என்று சொன்னதும் இசை நினைவுக்கு வராமல் ‘அகந்தை’, ’கண்டிப்பு’, ‘கசப்பு’, ‘விருது’, ‘ஈகோ’ போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருமானால், (இந்த blogகிற்கு எதிர் திசையை காட்டி பாடுகிறேன்) ‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக?’
———–
நவம்பரிலேயே ராஜா கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வருகிறார் என்ற தகவல் முதலில் வெளியிடப்பட்டது. கனடாவிற்கு போக விசா இல்லாத காரணத்தாலும், கலிஃபோர்னியாவிற்கான பயண சிரமங்கள் காரணமாகவும் இன்னொரு கான்ஸர்ட் வரும் என அத்தனை நினைப்பையும் கைவிட்டாயிற்று. ஜனவரி மாதக்கடைசியில் பெப்ரவரி 23ம் தேதி ராஜா நியுஜெர்ஸிக்கு வருகிறார் என்று சொன்னதும் திடீர் டிக்கெட் படபடப்பும் பயண பரபரப்பும். இது ஐந்து மணி நேர கான்சர்ட் கதை. (டிக்கெட் வாங்கித் தந்தும் நானூறு மைல்களையும் ஒரு மயிலாக தானே ஓட்டியும் சென்ற திரு மயில் செந்தில் (@mayilSK) அவர்களுக்கு நன்றிகள்).
அறுபது டாலர் டிக்கெட்டில் போயிருந்தோம். அந்த ஏரியாவும் இன்னும் மேலே ஐம்பது டாலர் டிக்கெட் ஏரியாவும் பிரமாதமாக விற்றுத் தீர்ந்திருந்தன. நிஜ கான்ஸர்ட் தரிசன டிக்கெட்களான நூற்றி இருபது டாலர் ஏரியாவும் கூட தீர்ந்திருந்தன. நடுவில் இந்த எண்பது டாலரில் தான் கொஞ்சம் காற்று வாங்கல். இரண்டு வாரங்களில் சேர்த்த கூட்டம் என்பதை வைத்து தாராளமாக மன்னித்து பாராட்டலாம். நியுஜெர்ஸி என்பதால் தமிழ்-தெலுங்கு என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அதனால் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு – தமிழ் மட்டும் எனில் என்னென்ன பாடல்கள் வரும் என்று பெரும்பாலும் யூகிக்க முடியும் என்பதால்.
ஒரு மணி நேரத் தாமதம். அது வரை random உள்ளூர் RJ VJ DJயினர் மேடையில் மைக் இரைச்சலோடு என்னமோ செய்துகொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டத்திலிருந்து சிலரை ஆங்காங்கே பிடித்து பாட வைத்தனர். பாடியவர்களில் பெரும்பாலோனோர் சங்கீதமே எங்கள் மூச்சென மூச்சை பிரதானமாக ஒலிக்கவிட்டார்கள். கூட்டத்தை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் விலக விலக பாடினாலும், எல்லாவற்றையும் மீறி ராஜாவின் மீதான பாசம் பளிச்சென தெரிந்தது. பொதுவாகவே, தெலுங்கு மக்கள் கொஞ்சம் கூடுதல் காரம் சாப்பிடுவதைப் போலவே கொஞ்சம் கூடுதல் பாசம் ராஜா மீது வைத்திருக்கின்றனர்.
மொத்தம் நாற்பது-ஐம்பது வாத்தியக்கலைஞர்கள். அதில் இருபது வயலின்கள் மட்டும். ஒரு சிதார் அம்மணி. நாலு தபலா. ஒரு டபுள் பாஸ். நாலைந்து ட்ரம் பேட்ஸ், கீபோர்ட்ஸ். நெப்போலியன் (பாடகர் அருண்மொழி) புல்லாங்குழல். பாலேஷ் ஷெனாய். எல்லோரையும் சேர்த்திசைக்க வைக்க பிரபாகர். (மனிதருக்கு ஒரே குறி இசை தான். வேறெதையும் கவனிப்பது போலத் தெரியவில்லை). நட்ட நடுவில் வெள்ளைத் துணி போர்த்தி மூடிய மேஜையொன்றின் மேல் அந்த அதிசய ஆர்மோனியப் பெட்டி. ராஜா வருகிறார் என்றதும் அரங்கத்தின் இரைச்சலெல்லாம் வாக்யூம் போட்டு இழுக்கிற வேகத்தில் போயே போச். அத்தனை விளக்குகளையும் அணைத்து விட்டு ஆர்மோனிய பெட்டிக்கு மட்டும் நல்ல ரம்மியமான நீல ஒளி. ஆள் வந்து நின்றால் போதும் புல்லரிக்கும் என்பதான அமைப்பு. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை டிக்காஷன் குறைவான காபி கலர் துண்டு என ஒரு ஓரத்தில் ராஜா உள்நுழையும் போதே அரங்கத்தின் அமைதி உடைந்து பொடியாகிறது. (மொத்த அரங்கத்திலேயே நான் தான் முதலில் அவரைப் பார்த்தேன். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்). வெள்ளை ஒளி எங்கோ மேலே மேலேயிருந்து ராஜாவை மட்டும் வட்டமெனத் தொடர்ந்து மேடையில் ஆர்மோனிய நீல ஒளிவட்டத்தில் கொண்டு வந்து சேர்த்ததும் அவர் தலைக்கு மேல் வணக்கம் வைக்கிறார். நானெல்லாம் எழுந்து நின்று ஆவெனக் கத்திக்கொண்டிருக்கிறேன். கை கால் வாயெல்லாம் தானே தன் பாட்டுக்கு முடிந்ததை செய்கிறது. (ரொம்ப அபாயகரமான இருக்கை வரிசை வடிவமைப்பு. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்றால் நடந்தால் இசை வெள்ளத்தில் தொபுக்கடீரில்லாமல் கீழே மக்கள் வெள்ளத்தில் நடுவே தொபுக்கடீராகி தினந்தந்தி பெட்டி செய்தியில் காலேஜில் எடுத்த பாஸ்போர்ட் புகைப்படம். ஆனால் பிற்பாடு சுடிதார் அம்மணிகளெல்லாம் சர்வசாதாரணமாக் சீட் மீதேறியே முன் வரிசைக்குத் தாவிச் சென்று கலவரமூட்டினார்கள்). ’ஹலோ’ ‘கிலோ’ அபத்தமாக ‘வாங்க’ என்றெல்லாம் சொல்லாமல் நேரடியாக ஷிவ சக்த்யாயுக்தோ யதி பவதி. சில கான்சர்ட்களில் தென்படுகிற துவக்கத் தயக்கங்களோ குரல் நடுக்கங்களோ இல்லாமல் ’வானம் இன்று மேகங்களின்றி பளிச்சென’ இருக்கிற குரல். இன்னும் அதே ஏதோ-ஒன்று அந்தக் குரலில். ‘பரி பூரணி’ என்பது அந்தக் குரலாகவும் இருக்கலாம். நிற்க, சில வருடங்களாகவே ஜனரஞ்சக மக்கள் கூட்டம் கூடும் மாபெரும் நிகழ்ச்சிகளில் எடுத்த எடுப்பில் ஒற்றை ஆர்மானியத்துடன் பக்திப் பாடல் பாடி கூட்டத்தை கட்டுக்குள் வைக்கிறார் ராஜா. இதை கொஞ்சம் ஆராய்ந்தால் பலப்பல வடிவங்களில் உலவிக்கொண்டிருக்கிற ராஜா ப்ராண்ட் ஃபிலாசபியில் ‘concert philosophy’ கிளை துவக்கலாம். ’ஜனனி ஜனனி’ முடிந்ததும் இரண்டே நொடிகளில் உடுக்கைகள் அடிக்கத்துவங்க கோட் சூட் டையுடன் கார்த்திக்கின் ‘ஓம் சிவோஹம்’. விஜய் பிரகாஷின் ஷூக்களில் கார்த்திக்கா (கார்த்திக்கா கார்த்திக்கா – கூட்டத்தின் சந்தேக echo) என்று குழம்பினால் கார்த்திக் பக்திப்பாடலாய் இருந்தாலும் ஷூக்களை மாட்டிக்கொண்டு கம்பீரமாக ரெண்டடி நடந்தே காட்டுகிறார். Surprise, surprise என்று விளம்பர மங்கை சிரிப்பது போல. பக்கபல குரல்கள் இன்னும் பிரமாதம். மந்திரங்கள் சொல்வதும் சொல்லி முடிந்ததும் மேளங்கள் உருள்வதுமென ஒரிஜினலைப் போல. பாடல் முடிந்ததும் அதே இரண்டு நொடி அவகாசத்தில் ‘ஜகதானந்த காரகா’ தெலுங்கில். (ஸ்ரீராமராஜ்யம்). எஸ்.பி.பியும் கீதா மாதுரி என்ற தெலுங்குப் பாடகியும். (பாடல் தேர்வுக்காக கேட்ட சந்தோஷக் கூச்சல் என்னுடையது). ஷ்ரேயா கோஷல் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். கான்ஸர்ட் முழுதுமே குரல்களின் ஒளியளவு கொஞ்சம் தூக்கல் என்றாலும், எஸ்.பி.பி எப்போது குரலை முழுக்க திறந்து உயரே ஏறினாலும் காவிரி நீர் திறந்து விட்டது போல அரங்கத்தை ஒரு மைக்ரோ நொடியில் நிறைக்கிறது அவரின் குரல். ஒவ்வொரு முறை அது நிகழ்கையிலும் நானும் செந்திலும் உச்சுக்கொட்டி உணர்ச்சிவசப்பட்டோம். மூன்று இறை வணக்கங்கள் முடிந்ததும் ராஜா முதல் முறையாக பேசி வரவேற்று நிறைய பாடல்கள் இருப்பதாகவும் நிறைய உழைத்திருப்பதாகவும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு தொடர்கிறார். (இந்த இடத்தில், அறிவித்தபடி சுஹாசினி மணிரத்னம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவில்லை என்பது அறிந்தும் புரிந்தும் மலர்ந்து சிரிக்கும் என் முகம் ஒரு க்ளோசப்).
அடுத்த பாடல் தேர்விலேயே என்னுடைய முதல் விக்கெட் காலி. ‘என்னைத் தாலாட்ட வருவாளோ’க்கு எல்லோரும் ஓட்டு போடும் பொழுதே நானும் ‘இது சங்கீதத் திருநாளோ’ பாடலும் மட்டும் தனியாகக் காற்று வாங்கிக்கொண்டிருப்போம். குறிப்பாக, பியானோவும் பவதாவின் குரலுமான (!) அதன் துவக்க இசை, Synthலே ஒரு குறையிருந்தாலும் சிலிரிப்பினில் குறைவதுண்டோ வகையறா. அதை எல்லோருமாகச் சேர்ந்து மேடையில் தொடங்குகிறார்கள். (அதற்கு முன் ராஜா ‘கடல் கடந்து வாழும் உங்களுக்கு இது ஒரு சங்கீதத் திருநாள்’ என்று சொல்கிறார். ‘என்ன ஒரு ஆணவம்’ என்று பொங்கும் மக்களே, இன்னும் இந்தப் பதிவில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்?) பியானோ (அதாவது கீபோர்டு) மற்றும் பவதா குரலுடன் கூடவே ஒரு வயலினும் (ஒரிஜினலில் இல்லையா கேட்கவில்லையா?). படிபடிப்படியாகத் தாண்டி ஏறிப்போகிற இசையிலே கூடவே விட்டு விட்டு படிப்படியாக ஸ்ருதியேறி வரும் வயலின் இழுப்புகள். (இந்த ‘என்னவென்று சொல்வதம்மா’ பாடலில் ’அந்தி மஞ்சள் நிறத்தவளை / என் நெஞ்சில் நிலைத்தவளை’ வரிகளுடன் வரும் வயலின் இழுப்புகள் போல – அந்தப் பாட்டில் வயலின் இழுப்பை ராட்டினமேற்றி விட்டாற் போலிருக்கும்). வயலின் மட்டும் ஒரு மைக்ரோ நொடி தப்பாகத் துவங்க, ராஜாவிற்கு ஏமாற்றம். ஒரு உக்கிரமான கையசைப்பில் அனைவரும் நிறுத்தி விடுகிறார்கள். (சிலர் வாத்தியத்தையே கீழே வைத்திருப்பார்கள் என்று என் dramatic யூகம்). என்னவோ பேசுகிறார் சொல்கிறார் விளக்குகிறார். அவர்களை பார்த்து திரும்பி நின்று ‘என்னைப் பார்’ என்பது போல கையசைத்து வழி நடத்த கச்சிதமாக வாசித்து எல்லோரும் கரையேறி வருகிறார்கள். வயலினோடு சேர்ந்து பவதாவும் பலப்பல ஸ்ருதிகளில் பாடத் துவங்கி விட, அவர் மட்டும் கரை வராமல் தத்தளிக்கிறார்.
அடுத்து மேடைக்கு மனோ வந்து காம்பியர் பண்ண எத்தனித்தபடி பேசி பாட்டுக்குத் தயாராகிறார். ஷெண்பகமே ஷெண்பகமே. ‘பட்டு பட்டுபூச்சி போல’ என தொகையறாவைப் பாடி முடிந்ததும், மக்களே, அருண்மொழியின் ஒரே ஒரு புல்லாங்குழல் மற்ற எல்லா கருவிகளையும் விஞ்சி நிறைகிறது. முதல் இடையிசையில் ஷெனாயும் அபாரமான துல்லியம். (இந்த இருவரும் கான்ஸர்ட் முழுக்க அமர்க்களம்). பொதுவாகவே மனோ பாடுவதில் அதிகம் ஈர்ப்பில்லையென்றாலும் ஜோராகவே பாடினார், கொஞ்சம் கலக்கமான முகமும் குரலும். எஸ்.பி.பியும் சித்ராவும் மேடையேறியதுமே எக்கசக்கமான எதிர்பார்ப்பு. ஆர்கெஸ்ட்ரா அங்கங்கே சிதறலாக வரப்போகிற இசையை வாசித்துப் பார்க்க நாங்கள் அந்தப் பாட்டா இந்தப் பாட்டா என குதித்துக்கொண்டே இருக்கிறோம். (கான்ஸர்ட் முழுக்க இதே விளையாட்டு தான்). வந்த பாடல், மௌனமேலநோயி. (தமிழில் சலங்கை ஒலி ‘மௌனமான நேரம்’). சமீபகாலமாக சித்ராவின் குரலில் வயது லேசாக அடி தங்கி குரல் தடித்தது போன்ற உணர்வும் எனக்கும் அதனால் கொஞ்சம் பயமும். அதையெல்லாம் அடித்து நொறுக்கி துவங்குகிற ஹம்மிங்குடன் எஸ்.பி.பியும் சித்ராவும் அன்றைய மாலைப் பொழுதின் முதல் சிக்ஸர். Studio level. ’தெலுங்கு பாட்டும் பாடுவாங்க’ என்பது ஊர்ஜிதமானதால் தெலுங்கு மக்கள் ஏகோபித்த கரகோஷத்தை பொழிந்தார்கள். (’அதெப்படி கரகோஷத்துல பிரிச்சு சொல்வீங்க’ என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது).
‘நின்னுக்கோரி வர்ணம்’ துவக்க இசை வந்ததே சர்ப்ரைஸ். இத்தனை சின்ன ஆர்கெஸ்ட்ராவில் இது முடியுமா என்ற சந்தேகம் போகப் போக நிஜமாகிறது. ட்ரம்ஸ் முதல் முறையா(கவும் அன்று முழுவதுமாக) இடிஇடியென இடிக்கிறது. ’அழகிய ரகுவரனே அனுதினமும்’ என்றெல்லாம் விரைகிற இடங்களில் தடுமாற இன்னும் சித்ராவிற்கு நிறையவே வயதிருக்கிறது – மகிழ்ச்சி. அங்கே திரையில் க்ளோசப்பில் தெரிகிற சித்ரா ஒரு கடினமான சங்கதியை கண்களைச் சுருக்கி குரலின் உள்ளேத் தேடித் தேடி பிடித்து அடைந்து நிம்மதியடைந்து அடுத்த வரியில் ஒரு நிம்மதி புன்னகை உதிர்க்க, ரசிகாஸ் அந்த புன்னகைக்கு ஒஹோவென ஆர்பரித்த பொழுது – பாரதிராஜா மொழியில் – ஐ லவ் திஸ் ஆடியன்ஸ். (நிற்க, இயக்குனர் பாலா தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக சித்ராவின் புன்னகையை சொன்னதற்குப் பிறகே நானும் கவனிக்கிறேன்) ராஜா இந்தப்பாடலுக்கு 1/4/87ல் எழுதிய ஸ்கோர்ஷீட்டை எடுத்து வந்திருந்தார். (’சுஜாதா ஃபிலிம்ஸ்’ ‘நின்னுக்கோரி வர்ணம்’,’சித்ரா’ என்று அதில் குறிப்புகள் இருந்ததைப் படித்தார். நின்னுக்கோரி வர்ணத்தை popஆக மாற்ற நினைத்து செய்த பாடல். வாலி ‘நின்னுக்கோரி வர்ணம் இசைத்திட (ராஜாவைத்) தேடி வரணும்’ என்று எழுதியதாகச் சொன்னார்)
பிரியதர்ஷிணி என்றொரு பாடகி. அடிக்கடி ராஜா நிகழ்ச்சிகளில் தென்படுகிறார். என்ன பாடல்கள் பாடியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘இதயம் ஒரு கோவில்’ பாடலில் ஜானகியின் ஹம்மிங் பாடுவது அவருக்கான பணி, சிறப்பாக செய்தார். ஏதோ தீவிர யோசனையிலேயே பாடினாலும் பிசகாமல் பாடிக் கடந்த ராஜா தானே எழுதிய அந்த என்-ரசிகனே-கேள் வகையறா வரிகளை பாடிய விதம் எல்லாம் சிக்ஸர். ‘எனது ஜீவன் நீ தான்’ ’நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது’ என்றெல்லாம் கை நீட்டி அடித்த பஞ்ச்சுக்கெல்லாம் என்ன பதிலுக்குச் சொல்வதென்று புரியாமல் ஓவெனக் கத்தித் தீர்த்தோம். ‘என்றும் வாழ்கவே’ வரிகளுக்கு வாழ்த்தினார். ‘லலித பிரிய கமலம்’ (தமிழில் ‘இதழில் கதை எழுதும் நேரம்’) பாடலில் எஸ்.பி.பி நிறைய சறுக்கினார். சித்ராவிற்கு அப்படியெல்லாம் தவற விடுவது என்னவென்றே தெரியாது என்பதால் பாடலை தனியாளாகக் கட்டி இழுத்தார். (தெலுங்கில் ஜேசுதாஸ் பாடிய பாடலென்பதால் வரிகள் பழக்கமில்லை என்று எஸ்.பி.பி மனு கொடுத்தார்). ஹிந்தியில் நௌஷாத் மிஸ்ரலலிதா ராகத்தில் போட்ட (கிட்டதட்ட) இதே மெட்டுடைய பாடலை எஸ்.பி.பி பாடிக்காட்டி கேள்விகள் கேட்டார். ராஜா அதிகம் ரசித்ததாக தெரியவில்லை. அது வேற ராகம், இது வேற என்றார். பாலசந்தர் என்ன ராகத்தில் பாட்டு அமைத்தாலும் நாயகிக்கு அந்தப் பேரை வைப்பதாகச் சொன்னதாகவும் ராஜா லலிதப்ரியா ராகத்தை தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்). எஸ்.பி.பி மேடையிலேயே தொடர்ந்து நின்று ‘தோகை இளமயில்’ பாடி முடித்தார்.
அடுத்து பேருந்து ஹார்ன் கேட்டதும் கூட்டம் கத்தித் தீர்க்க அதே கோட் டையுடன் கார்த்திக் ‘என்னோடு வா வா’. ஏகக் குஷியாகத் தென்பட்ட கார்த்திக்கின் உடல்மொழி முழுக்க மகிழ்ச்சி கொப்பளித்தாலும் குரலில் எப்போதும் ஏனோ ஒரு மென்சோகம். (இந்த போக்கிரி படத்தில் லிஃப்ட் சரிசெய்கிற பாண்டு போல). பாடலின் இரண்டாவது இடையிசையில் ராஜாவிடம் ஓடிச்சென்று என்னவோ கிசுகிசுத்துவிட்டு எங்களிடம் கை தட்டி சத்தமாக உடன் பாடும்படியும் ராஜாவின் அனுமதி உண்டு என்றும் சொன்னார். (ராஜாவுக்கு ஏகச் சிரிப்பு) இரண்டாவது சரணம் முழுக்க இது தொடர ’அதை கட்டி வெச்சு உதைக்கணுமே’ என்று பாடுகையில் ராஜா சிரித்தபடி கார்த்திக்கைப் பார்த்து அதைப் பாடினார். (சிரித்தபடி என்பதை அழுத்திப் படிக்கவும், நாளை பத்திரிக்கைகளில் வேறு போல கதை வரும். நாங்கள் உட்கார்ந்து டிவிட்டரில் மறுப்பு சொல்ல வேண்டியிருக்கும்) ராஜாவே கடைசி பல்லவியை மைக்கில் ரசிகர்களைப் பார்த்து ‘எங்கேயும் போக மாட்டேன்’ என்றார். (டிக்கெட் காசெல்லாம் ஏற்கனவே தீர்ந்தது). (கார்த்திக் ராஜா தன் தாயாரின் மரணத்திற்குப் பிறகு முதன் முதலில் ‘அரேஞ்’ செய்த பாடல் இதுவென்றும், இந்த முதல் வரியை கேட்டு அம்மாவை நினைந்து நெகிழ்ந்ததாகவும் சொன்னார்) ’பச்சரிசி மாவு இடிச்சு’ என்று கோரஸ் தொடங்கி (நிற்க – கோரஸ் நாள் முழுக்க அபாரம்) -. மறுபடி அருண்மொழியின் துல்லிய புல்லாங்குழல் என ‘மதுர மரிக்கொழுந்து’ பேரானந்தம். மனோ இரண்டு முறையும் சரணத்தை முடிக்கையில் கைத்தட்டல்கள்! தொடர்ந்து சிறிய medley. ’அழகு மலராட’ (சத்யன் – பிரியதர்ஷினி) இத்தாலி கான்ஸர்ட்டில் பாடிய வடிவில். முதல் வரியை தனியே பாஸ் மற்றும் வயலினில் வாசித்த பொழுது அதிர்ந்தது. அதற்கே இன்னொரு அறுபது டாலர் டிக்கெட் எடுக்கலாம் போல. (இந்த வீடியோவில் 37வது வினாடி – வீடியோ உபயம் @mayilSK). என்ன பாடல் என்று தெரியாததால் கூடுதல் திரில். (இரவு முழுக்க இப்படி என்ன பாடல் எனத் தெரியாமல் திடீரென இசை துவங்க என தாக்குதல்கள்). ’நானாக நானில்லை தாயே’ (எஸ்.பி.பி) முதல் இடையிசை மற்றும் சரணம் பல்லவி மட்டும். மலேசியா வாசுதேவன் நினைவாக ’ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே’ (செந்தில் தாஸ் – என்னா குரல்!).
இந்த MC, compere தொல்லையெல்லாம் இல்லையென்பதாலோ என்னவோ ராஜா விட்டால் போதும் என அடுத்தடுத்த பாடல்களுக்குத் தாவிக்கொண்டே இருந்தார். Medley முடிந்தது மறு கணமே திரும்புகிறார், என்னவோ சொல்கிறார், மைக்கிடம் செல்கிறார் ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது’ ஆலாப் ஆரம்பிக்கிறார். ஆலாப் முடிந்ததும் ஆர்கஸ்ட்ராவைப் பார்த்து வெட்டும் கை அசைவுகளில் அந்த prelude rushஐ கட்டி இழுக்கிறார். பார்க்க அப்படியொரு பரவசம். சித்ரா இன்னும் மேடையே ஏறவில்லை. மனிதர் பல்லவியைப் பிடித்து அடித்து நொறுக்க, அவசர அவசரமாக வந்து லிர்க் ஸ்டாண்ட் வைத்து மைக் எடுத்து சித்ரா சேரும் பொழுது ஏதோ அங்கேயே ஒரு மணி நேரம் ஆசுவாசமாக நின்று காத்திருந்து பாடுவது போலக் கச்சிதம்.
தெலுங்கு தேசத்தில் மிகப்பிரபலமான ‘பலப்பம் பட்டி’ (பொப்பிலி ராஜா) பாடல் வரும் என்ன பந்தயமே கட்டியிருந்ததால், மத்தளங்களும் ஷெனாயுமாய் தூள் பறந்த துவக்க இசை வந்ததும் அடியேன் ஏகோபித்த கரகோஷம். வேறெந்த பாடலுக்கு அரங்கம் இத்தனை அதிர்ந்ததாக நினைவிலில்லை. மனோ (எஸ்.பி.பி இடத்தில்) மற்றும் அசராமல் அடித்த சித்ரா. அடுத்த நாள் காலை வரை மண்டையில் அடித்துக்கொண்டிருந்தது ட்ரம்ஸ். இந்தப் பாடலை இதுவரை கேட்டதில்லையெனில் உடனே கேட்டுவிடவும். Gult pleasure மட்டுமல்ல guilty pleasure! (நிற்க, இப்படி எத்தனை மசாலா-படத்துல-ஒரு-ஹிட்-பாட்டு. அதற்கென ஒரு ஃபார்மட், ஒரு எனர்ஜி, ஒரு மெலடி). கமல் இடத்தில் யுவன் பாட முயல்வது பெரும்பாலும் ஜோக் போலத் தான் தெரிகிறது. இருந்தும் யுவன் முடிந்தவரை ‘நினைவோ ஒரு பறவை’ பாடலில் err முயன்றார். (கூட NSK ரம்யா). முதல் இடைஇசையில் சாரியட் வண்டி – மணியோசை இசையெல்லாம் பிரமாதமான depthஉடன் கேட்டது. கிட்டத்தட்ட unreal. சித்ராவும் ‘செங்க சூளக்காரா’ அனிதாவும் புதிய இண்டர்லூட்களுடன் ‘தம்தன தம்தன தாளம் வரும்’ பாடலைப் பாடினார்கள். இண்டர்லூடுகள் எனக்கு மிகப்பழக்கமானவையாகப் பட்டது. அதாவது – பொதுவான ‘சிம்பனி’ இசை மற்றும் Nothing but wind தாக்கம். ’ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் எனக்கு எத்தனை பிடிக்கும் என நேரில் அங்கே கச்சிதமான ஆர்கெஸ்ட்ரா மற்றும் கார்த்திக்குடன் கேட்கையில் தெரிந்தது. (முதலில் கார்த்திக் பாடியபின் இசை துவங்கி ஒளியென பெருகும் என்று @meenaks ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்து அந்த momentஐ எதிர்பார்த்தேன், சரியே நிகழவில்லை) பவதா அதிகம் சொதப்பாமல் பாடினார். எல்லோருக்கும் அவர் மேல் soft corner இருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக் அதிகம் துணை நின்று பாடியது போல இருந்தது. (கவனிக்க, அவர் இசையில் ஒரு பாடல் தந்திருக்கிறார்). ராஜா மாற்றியெழுதிய கடல்-கடந்து-வாழறீங்களே-பாவம் வரிகளுடன் ‘சொர்க்கமே என்றாலும்’ (உடன் சித்ரா). அங்கங்கே இசையை நிறுத்தி வரிகளை விளக்குதல். பின் தொடர்ந்து பாடுதல்.
கான்ஸர்ட்டின் ஆகச்சிறந்த தருணமென நான் நினைப்பது – கீதாஞ்சலி (தமிழ் இதயத்தை திருடாதே) படத்தின் ‘ஓ ப்ரியா ப்ரியா’. சமீபமாக என்னவோ ஒரு மயக்கம் இந்தப் பாடலின் மேல், இந்தப் பாடலினால், இந்தப் பாடலுக்காக. மரணத்தின் வலியும் அதை எதிர்க்கிற நம்பிக்கையும் விசித்திரமாக ஒன்றாகச் சிக்கிக்கொண்டிருக்கிறது அதில். தெலுங்குப் பாடல்கள் என்று விளம்பரப்படுத்தியதிலிருந்தே இந்தப் பாடலுக்காக மனசு டமடமவென அடித்துக்கொண்டது. எஸ்.பி.பியும் சித்ராவும் அன்று பாடியது இது வரை பார்த்த மேடைப் பாடல்களிலே சிறந்தது என்றே சொல்லலாம். அவர்களையும் ஒரு படி மிஞ்சி ஆர்கெஸ்ட்ரா சிறப்பாக ஒத்திசைத்தார்கள். எங்கிருந்து எந்த இசை துவங்கி எங்கே கலக்கிறது என்று புரியாமல் பிரமிப்பில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி மங்க மங்க நான் ஒப்புக்கொள்ள விரும்புவதை விட அதிகமாகவே கண்களில் நீர் கோர்த்துக்கொண்டிருக்கலாம்
தப்பித்தவறி யாரேனும் அழுதிருந்தால் அரங்கத்திற்கே கேட்டிருக்கக் கூடிய நிசப்தம் பாடல் முழுக்க.
’மாயாபஜா’ரிலிருந்து ‘நான் பொறந்து வந்தது’ (அபாரம்), பின்னர் தெலுங்கில் ‘பிரயதமா’ (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி’) இரண்டிலும் தனித்து தெரிந்தது ப்ரியா ஹிமேஷ். ஜானகியின் பாடலைப் பாடியும் எந்தக் குறையும் தெரியாமல் பாடினார். பிரயதமா பாடலின் துவக்க இசை மிகவும் பிடிக்குமெனில் வலது கையை தூக்கவும். (பாடலும் பிடிக்குமெனில் இரண்டு கைகளையும்). உங்கள் சார்பாக நான் அங்கே கை தூக்கி ஆர்பரித்தாயிற்ற்று. சரணங்களை எஸ்.பி.பியும் ப்ரியாவும் துல்லியமாக பாடினார்கள். ராஜா அந்த முதலிரண்டு சரண வரிகளை பாடிக்காட்டி (யாய்!) அதற்கு எந்த வார்த்தைகளை எழுதும் போது இனிமை கொஞ்சம் குறைந்து விடுவதாகச் சொன்னார். இருந்தும் தெலுங்கு பாடலாசிரியர் மிகவும் உழைத்து எழுதினார் என்று சொன்னார். (ஆத்ரேயா?) ‘சாய்ந்து சாய்ந்து’ யுவன் பிரமாதமாகப் பாடினார். (ரம்யா சொல்ல வேண்டியதில்லை). சமீபத்திய பாடல் மட்டுமில்லாமல் முழுக்க ஆர்கெஸ்ட்ராவுக்காக சமீபத்தில் தான் எழுதியது என்பதால் துல்லியமாக இருந்தது. (இதே காரணம் ஜகதானந்த காரகாவிற்கும்). மிகவும் எதிர்பார்த்த இரண்டாவது இடையிசையை யுவன் உடன் பாடாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
கான்ஸர்ட்டின் மற்றொமொரு monsterous performance – சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சித்ரா, எஸ்.பி.பி. வாத்தியக்கலைஞர்களுக்கும் அது முக்கியமான தருணமாக இருந்திருக்கும். ஓரிரு சிறிய தவறுகள் தவிர்த்து ஸ்டூடியோவில் என்ன நிகழ்ந்ததோ அதை இங்கே அரங்கேற்றினார்கள். பார்க்கிற எங்களின் கூர்ந்த கவனமும் வாசிக்கிறவர்களின் கூர்ந்த கவனமும் பிரமாதமான அமைதியில் கலக்கிற பொழுது, சத்தம் போடாமல் கேளுங்கள் என்று ராஜா சொல்வதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எஸ்.பி.பியின் குரல் ஏற்ற இறக்கங்களில் முன்பு எப்போதோ சறுக்கு மரம் விளையாடி பரவசமானது போல இப்பொழுதும் சாத்தியமாகிறது. மக்களே, எஸ்.பி.பியின் புகழ் இன்னும் இன்னும் பாடுக. ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ தெலுங்கில் எஸ்.பி.பியும் (மறுபடி அமர்க்களம்) அனிதாவும் கடைசி சரணம் தமிழில் ராஜாவும். (அவர் பாடியதாயிற்றே விடுவாரா?) கோரஸ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள், ரசித்து பாடுகிறார்கள். பெரும் நடுக்கத்துடன் பவதாரிணி ‘காற்றில் வரும் கீதமே’ துவங்க, ப்ரியா ஹிமேஷ் கொஞ்சம் சேர்ந்து சரி செய்ய, பின்னர் மனோ வந்து மீண்டும் குழப்ப, கடைசியில் ராஜாவே பாடி முடித்தார். ’ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ பாடல் அடைந்த பொழுது ஆர்கெஸ்ட்ரா அன்றைக்கு அட்டகாச ஃபார்மில் இருப்பது தெளிவாக புரிந்துவிட்டதால் கொஞ்சம் ஆசுவாசமாகிக் கேட்க முடிந்தது. பாடகி ப்ரியதர்ஷினி பவ்யமாகப் பாடுகிறார், நன்றாகவும் பாடுகிறார். ’மாசி மாசம் ஆளான பொண்ணு’ தெலுங்கில் எஸ்.பி.பியும்(மறுபடி மறுபடி அமர்க்களம்) ப்ரியா ஹிமேஷும். ஹிமேஷ் விரைவில் ஸ்டாராகி விடுவார். இது ஸ்வர்ணலதாவிற்கு அஞ்சலி என்று சொல்லியிருந்தால் என்னைப் போன்ற ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம். (தெலுங்கில் படத்தில் பாடியது சித்ரா) தெலுங்கில் தன் பாடல்களுக்கு எழுதப்பட்ட வரிகளில் இதன் பல்லவியை பெஸ்ட் என்றார் ராஜா. நல்ல thought, fits and sounds nice என்பது அவரின் அளவுகோல்.
அடுத்த பெரிய சர்ப்ரைஸ் – ‘கண்ணே தொட்டுக்கவா ஒட்டிக்கவா’ என்று சத்யன் கமல் குரலில் துவக்கியது. எஸ்.பி.பி (சொல்லி சொல்லி போரடிக்குது, அமர்க்களம்), பிரியதர்ஷினி (ஆர்கெஸ்ட்ரா மற்றும் எஸ்பிபி அதிரடியில் இவரின் குரலைல் காணவே காணோம்). ’வனிதாமணி யவன மோகினி’ என்று அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என எல்லா பக்கங்களிலும் அதிரடி. ராஜாவின் பாடல்களுக்கான திரைவடிவங்களில் எனக்குப் மிகப்பிடித்த தருணங்களின் ஒன்று இந்தப் பாடலில் இரண்டாவது இடையிசையின் முதல் பத்து நொடிகளில் வருகிறது. ஒளிந்திருக்கும் வில்லன்கள், திரையின் ஒரு புறத்தில் இன்னொரு புறத்திற்கும் விரையும் குதிரைகள், எதிர்ப்புறமாக ஓடி வருகிற கமல் – அம்பிகா என மொத்தமும் ஸ்லோமோவில் நிகழ (அந்த ஸ்லோமோ ஐடியாவை கொடுத்தவர் வாழ்க) அந்த இசையை திரையில் அழகாக உள்வாங்கியிருப்பார்கள். அந்த நொடியை ஒரு கான்சர்ட் ஹாலில் அமர்ந்து தரமான வாசிப்பிற்குக் கற்பனை செய்வேனென நினைத்ததேயில்லை. Majestic!
NSK ரம்யா துவக்கிய ‘உனக்கும் எனக்கும் ஆனந்தம்’ ஒரு சரணம் முடிந்ததும் அப்படியே அடங்கி பிண்ணனியில் Black Eyed Peas remix முழுதாக ஒலித்து முடித்தது. அர்த்தமேயில்லாத தேவையில்லாத plug. ராஜாவை யார் கன்வின்ஸ் செய்தார்கள் எனத் தெரியவில்லை. முழுநேரமும் ஆடியன்ஸை பார்க்காமல் அந்தப்பக்கம் திரும்பி நின்றுகொண்டிருந்தார். முகத்தில் கொஞ்சம் சங்கடம். அந்த adaptationஐ நாம் கேட்க வேண்டுமென ராஜா விரும்பியதாக எஸ்பிபி விளக்கினார். அடுத்த சிக்ஸர் ‘பூவரசம்பூ பூத்தாச்சு’. மிகவும் பிடித்த பாடல். பிரியதர்ஷினி பிரமாதமாகப் பாடினார். ரயில் ஒலிகள் கச்சிதமாக அமைந்த fun ride. ராதிகா வானம் பார்த்து சுற்றிச் சுற்றி தடுக்கி விழுந்து எழுந்து நின்று பார்க்கும் பொழுது வயலின்களுக்கு தலை சுற்றுமே – அது Perfect. தெலுங்கு ரசிகர்களை கொஞ்சம் சாந்தப்படுத்த மறுபடி ஜகதீக வீருடு அதிலோக சுந்தரியிலிருந்து abba nee பாடலை எஸ்.பிபியும் கீதா மாதுரியும் பாடினார்கள். அவர்களே மறுபடி மனோவுடன் botany பாட்டை பாடினார்கள்.
மறுபடி ஒரு pure moment. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ. சித்ராவும் ராஜாவும். ஆர்கெஸ்ட்ரா இன்னும் கொஞ்சம் உயிரூற்றி வாசித்திருக்கலாம் எனத் தோன்றியது. இருந்தாலும் பாடலின் உயரம் ஏகமென்பதால் கொஞ்சம் குறைந்தாலும் பொன். ஜானகி தந்திரமாக அந்தப் பாட்டின் நோட்ஸுகளுக்கிடையே தன் குரலையும் சேர்த்து எழுதிவிட்டார் என்பது சித்ரா பாடுகையில் கேட்டது. (சித்ரா அடிக்கடி கூட நின்று கொண்டிருந்த கோரஸ் பாடகர்களிடம் என்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்). அங்கங்கே மைக் கொஞ்சம் சொதப்பியது. சும்மா கேட்டுகொண்டிருந்தே நாங்களே சோர்ந்து போயிருக்க ராஜா ஐந்து மணி நேரமாக நின்றிருந்தாலும் ‘ஓரம் போ ஓரம் போ’ பாடலை உற்சாகச் சைக்கிளேற்றினார். கோரஸ் மக்களும் செந்தில் தாஸ் (பல குரல்களில்) ஜாலியாகப் பாடினார்கள். ’ருக்குமணிய பின்னால உக்கரவெச்சு’ என்று பாடும் போது ராஜாவின் பாவனையெல்லாம் அத்தனை அழகு. (அழகன்யா எங்காளு!). உடனே அன்னக்கிளியிலிருந்து ‘சுத்தச்சம்பா’ மிகத் திறமையாகப் பாடப்பட்டது – காரணம் பாடகி பிரயதர்ஷினி. டீம் லீட் போல அவர் ஒரு மினி கண்டக்டராக கோரஸ்களை ஒழுங்குபடுத்தி பாட வைத்தார். அதே ஜோஷுடன் ‘நிலா அது வானத்து மேல’ ஒரு பாதி பாடப்பட்டது. ராஜா ‘நிலா அது வானத்து மேல’ எப்படி முதலில் தாலாட்டாக இசையமைக்கப்பட்டது (தென்பாண்டிச்சீமையில இடத்தில்) என்று விளக்கி பாடி காண்பித்தார். (பின்னால் அமர்ந்திருந்த தெலுங்கு குடும்பத்தினருக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. எனக்குப் புரியாத தெலுங்கிலும் அவர்கள் கண்ட அதிசயத்தை புரிந்துகொள்ள முடிந்தது ஜீன்ஸ் படப்பாடலில் வராத அதிசயமாக மிஞ்சியிருந்தது. வெளியே கலைந்து போகும் பொழுது ஒரு தமிழ்நாட்டு வெள்ளைதாடி பெரியவர் தன் குடும்பத்தினரிடம் மிக மகிழ்ச்சியாக ‘என்ன அநியாயம் பாத்தீங்களா அந்த நிலா அது வானத்துலு பாட்டு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இத்தனை லேட்டாக இதெல்லாம் புரிந்து தெரிந்து என்னத்த..) அபிநந்தனாவிலிருந்து ‘ப்ரேமா எந்த்தா மதுரம்’ - எஸ்.பி.பி. தெலுங்கு ரசிகர்களின் தேசிய கீதம் போல. இது போன்ற மெட்டை தான் வேறெங்கும் பாடியதேயில்லை என்று எஸ்பிபி உணர்ச்சிவசப்பட்டார். நான் முதல் முறையாக கேட்கிறேன். (வெட்கம், வேதனை). பின்னர் ராஜா தென்பாண்டிச் சீமையிலே பாடி முடித்து வைத்தார்.
சப்பா, ஒரு சோடா.
சரி, பாட்டு லிஸ்ட்டெல்லாம் ஓகே, கருத்து சொல்ல வேண்டிய கட்டம். ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக.
இடம் – சரியாக இருந்தது. போனவுடன் ‘ஏன் ஸ்டேஜ் அங்க இருக்கு’ ‘இத்தன சின்னதா இருக்கு’ ‘நம்ம இடத்துல சவுண்ட் கேக்குமா’ போன்ற கலவர கேள்விகள் எழுந்தன. (முதல் கான்ஸர்ட் அல்லவா?). எல்லாம் சரியாக இருந்தது.
கூடிய மக்கள் – இசை ரசிக்கத் தெரிந்த மக்கள். தெலுங்கு – தமிழ் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சில் என்பதால் அதிகம் தமிழ் பாடல்கள் இருந்தன. அது சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. மனோ, எஸ்பிபி, ராஜா என எல்லோரும் ஓரிரு முறை தெலுங்கு பாடுகிறோம் என்று வாக்களிக்க வேண்டியிருந்தது. கடைசியில் சில தெலுங்கு பாடலை பாடி சரிகட்டினார்கள். இருந்தாலும், அவர்வர் சங்கங்களில் (தமிழ்ச் சங்கம், தெலுங்கு சங்கம்(லு?)) அடுத்த மீட்டிங்கில் சலசலப்பு இருக்குமென்றே நினைக்கிறேன். மக்கள் ராஜா கேட்டுக்கொண்டும் அவ்வப்போது கொஞ்சம் சத்தம் போடவே செய்தனர். பியர் நிறைய புழங்கியது. நிறைய குழந்தைகள் தென்படவில்லை, நன்றி.
ஆர்கெஸ்ட்ரா – (ஏனோ எஸ்பிபி ஆர்செஸ்ட்ரா என்கிறார்) – நினைவு சரியெனில் இரண்டு முறை தான் நிறுத்தப்பட்டார்கள். மற்றபடி நல்ல உழைப்பு.
பாடகர்கள் – எஸ்பிபி லலிதபிரியகமலம் தவிர மற்ற எல்லாப் பாடல்களையும் வெளுத்து வாங்கினார். சமீபகாலமாக ஏற்படிருக்கிற தொய்வு இங்கே அதிகம் தென்படவில்லை. சித்ராவும் அவரும் நிகழ்ச்சியின் delight. எஸ்பிபி மனோ கார்த்திக் யுவன் என எல்லோரும் அங்கங்கே ஏதேதோ பேச சித்ரா பாடுவது மட்டுமே. ‘ஏன் பேசவே மாட்டேங்கிற? ராஜாகிட்ட பாடின எக்பீரியன்ஸ் சொல்லு’ என எஸ்பிபி வம்பிழுக்க சித்ரா சம்பிரதாய வார்தைகள் சொல்ல ‘அது என்ன இது என்ன’ கிட்டதட்ட ராகிங் நடந்தது. (’என்னோட கேரியர்லயே..’ ‘கேரியரா அது என்ன டிஃபன் கேரியரா?). இருவரையும் அந்த நிகழ்ச்சியில் பார்த்தது உண்மையில் புல்லரிப்ஸ். மனோ எத்தனை MC செய்ய முயன்றாலும் ராஜா விடாது தடுத்தார். என்ன கேள்வி மனோ கேட்டாலும் ‘சரி சரி பாட்டு பாடலாம் வா’ என கலாய்த்தார். ‘இந்த மாதிரி பாட்டெல்லாம் நீங்க’ என மனோ நா தழதழுத்தாலும் ‘நிறுத்து நிறுத்து நீ ஊதவே வேணாம்’ தொனியில் தடா. மற்ற இளம் பாடகர்கள் அனைவரும் சுகமாகப் பாடினார்கள் – குறிப்பாக ப்ரியா ஹிமேஷ்.
பாடல்கள் தேர்வு – ராஜாவின் oeuvreஇல் இருந்து பாடல்கள் தேர்ந்தெடுப்பது ராஜாவாகவே இருந்தாலும் கடினம் தான். ஆக அதில் விமர்சனம் செய்து ஒன்றும் ஆவதில்லை. (மக்கள் ‘அந்தப் பாட்டு வேணும் இந்தப் பாட்டு வேணும்’ என குரல் கொடுக்க ராஜா இரண்டு முறை பொறுமையாக ‘சில பாடல்கள் எடுத்து prepare பண்ணியிருக்கோம். அதத் தான் பாடறோம்’ என்று விளக்கியும் ‘கண்ணே கலைமானே’ என்று ஒரு கூவல் எழுந்தால் அதற்கு ‘கத்தியவன் என கண்டேன் உனை நானே’ என பாடிக் கலாய்த்தார். பின் ஒரு முறை கொஞ்சம் கடுப்பாக ‘நான் கம்போஸ் பண்ணின பாட்டத்தானே உங்களாக கேக்கமுடியும். நான் கம்போஸ் பண்ணாத பாட்டு (மனசுக்குள்) ஆயிரம் இருக்கு, அதெல்லாம் என்ன பண்ண, கேக்க முடியுமா?’ என்ற கேட்டார். அவர் சொன்னதின் உண்மையை சுருக்கென உணர புரிந்தது. இசையைப் பற்றிய ராஜாவின் philosophy புரிய நமக்கு ரொம்ப நாளாகும் போல.
கடைசியாக ராஜா. ராஜா கான்ஸர்ட்களை எத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்கிறார் என்பது புரிந்தது. ‘நிறைய தப்பு பண்றோம் கான்ஸர்ட்ல. அது உங்களுக்குத் தெரியறது இல்ல. ஆனா என்னால தாங்க முடியறதில்ல. அதான் கான்ஸர்ட்ஸ் பண்ண இஷ்டமில்ல’ என்றார். தவறுகள் இருந்தால் உடனே மறுபடி வாசிக்கை வைக்கிறார். பாடும் போது அத்தனை சின்சியாரிட்டி. என்னவோ, சிறு குழந்தைகள் தங்கள் பணியில் கொள்கிற கவனம் போல தோன்றியது. (குறிப்பாக ஜனனி ஜனனியில்). அவ்வப்போது சுற்றி இருப்பவர்களை சதாய்ப்பதெல்லாம் சூப்பர். (கடைசியாக மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது ஒரு பாடகியை அறிமுகப்படுத்திவிட்டு ‘என்னம்மா உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்களா இல்லையா’?) எஸ்பிபியுடன் நல்ல நட்பு. ஸ்கூட்டரில் சுற்றிய கதைகள் சொன்னார். எஸ்பிபி ஏராளமான பாராட்டுகளை பொழிந்துகொண்டே இருந்தார். (’இன்னும் குறைந்தபட்சம் நூறு வருஷத்துக்காவது இந்த மாதிரி ஒரு கம்போஸர் எங்கயும் வர மாட்டார்”). ஒரு கட்டத்தில் எஸ்பிபியை முதல் முறையாக ‘அவன்’ என்று குறிப்பிடுவதாக ராஜா சொன்னார்.
Meta referenceகளை சரியாகக் கையாளுகிறார். ‘தாய் குழந்தைக்கு தருவது போல’ போன்ற பிரயோகங்கள் இருந்தன. ரசிகர்களுக்காக பாட்டெழுதி வருகிறார். இதெல்லாம் old style என்றாலும் நேர்மையாக இருக்கிறது. பாடுகிற பாடலில் சரியான வரிகளில் சரியான செய்திகளை சேர்ப்பிக்கிறார். மேடையேறியதும் அரங்கம் முழுக்க ஏற்கனவே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ‘என்ன இவங்க முகத்தையெல்லாம் பாக்கலனா எப்படி?’ என்று கேட்டுவிட்டு ஒவ்வொரு செக்ஷனாக விளக்கை ஒளிரச் செய்து நேராக மனசுக்குள் டார்ச் அடிக்கிறார். இசையை நடத்திச் செல்கையில் அவர் உடல்மொழி பிரமிப்பானது. ‘அதிக நேரம் கிடைக்கல ரிஹர்சலுக்கு. தப்பு இருந்தா பொறுத்துக்குங்க’ என்று சொல்கிறார். சத்தம் போடாம பாட்டக் கேளுங்க என்கிறார். வெறும் இசைவழி மட்டும் பேசுகிறார். நமக்கிருக்கும் சோகங்களை அங்கீகரிக்கிறார்.
ராஜாவிடம் மிகமிக பிடித்த விஷயம் – தன் ரசிகர்களிடன் தனிக்கிருக்கிற authorityயை முழுதாக புரிந்துகொண்டிருப்பது; அதை grantedஆக எடுத்துக்கொள்வது. அதையெல்லாம் நாம் அவருக்கு விளக்கிச் சொல்லி புரியவைக்கவேண்டுமானால் ஆகுமா என்ன? ‘என் இசை உனக்கு இன்றியமையாதது’ என்பதை அவர் அறிவது தான் எனது பணியை மிகச் சுலபமாக்குகிறது. அதை சொல்லிகொண்டிருக்கவோ கேட்டுக்கொண்டிருக்கவோ நேரமில்லை; துவங்கினாலும் முடிக்க நேரமில்லை. புதிதாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை ஆனால் உரையாடல் தொடர்ந்திருக்கிறது என்பதான புரிதல்.
கடைசி கட்டத்தில் ஏகக்களேபரம். மாபெரும் அபிமானத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாமல் திணற வேண்டியதாயிருக்கிறது. அன்பை சரியாகக் கொண்டு சேர்த்தாயிற்றா என்று கவலையெல்லாம் எழுகிறது. மெல்ல மெல்ல அது கூட்டம் முழுக்க பரவுகிறது. ராஜா அந்தக் கணத்தை சரியாகக் கணிக்கிறார். ‘எல்லாம் எனக்குத் தெரியும், பாட்டக் கேட்டுட்டே இரு எப்பவும் போல’ என்று சுலபமாகச் சொல்லி வைக்கிறார். மறுபடி இதெல்லாம் நிகழுமா என்று தெரியாத நிலையில் எதையும் யோசிக்காமல் இசையை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால் அதையும் சரியாகச் சொல்லிவிடுகிறார். தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு புது வரிகளாக ‘உன் வாழ்வில் சில நொடிகள் / என் வாழ்வில் சில நொடிகள் / என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடி தான்’ என்று பாடி வைக்கிறார். (அதைப் பாடுகையில் நம்மையும் அவரையும் காட்டிக்கொள்கிற விரலில் அத்தனை அழுத்தம்). மறுபடி தென்பாண்டிச் சீமையிலேயே அறுந்த குரலில் முழுதாகப் பாடுகிறார். இரண்டு நிமிடங்களில் பாடல் முடிந்தால் நிகழ்ச்சி முடிந்து விடும். ஆர்கெஸ்ட்ரா அமைதியாயிருக்க வெறும் கைதட்டல்கள் மட்டும் பாடலை பின்தொடருகிறது. பாடல் முடிந்ததும் விடை கொடுக்க சரியான வழி தெரியாமல் எல்லோரும் கத்தித் தீர்க்கிறார்கள். ராஜா நின்று அனைவருக்கும் தலைக்கு மேல் கை கூப்பி நன்றி சொல்லி கையசைத்து ஒரு சுற்று அப்படியாக முடிகிறது. அமைதி வந்ததும் துண்டை எடுத்து போட்டுக்கொள்கிறார். புத்தகத்தை மூடிவைக்கிறார். யாரும் நகர்வதாயில்லை. யாரோ திடீரென கூட்டத்திலிருந்து ராஜாவென அழைக்க பத்திக்கொண்டது போல மறுபது கூட்டம் மொத்தம் அலறுகிறது. துண்டை மறுபடி கீழே வைத்துவிட்டு மைக் ஸ்டாண்டை விட்டு விலகி பொறுமையாக நடந்து முன்னே வந்து குனிந்து தரையை தொட்டு வணக்கம் வைக்கிறார். அதிர்ச்சியா கோபமா வருத்தமா என்னவென்று புரியாமல் மறுபடி கூட்டம் அலற கத்தி போல கிழிக்கிறது சத்தம். இன்னுமொரு அலை கைதட்டல்களும் ராஜாவின் கையசைப்புகளும் வணக்கங்களும் மக்களின் கூக்குரல்களும் அடங்கித் தீர்ந்ததும் எல்லோருமாகக் கலைகிறோம்.
விமர்சனம் 2.0
Opening creditsக்காக ஒரு இயக்குனர் மெனக்கெடும் பொழுதே திரைப்படத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதிலும் கதையை துவக்காமல் மொத்த திரைப்படத்திற்கும் ஒரு முன்னுரை போன்ற montage-ஓடு துவங்கும் பொழுது, ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது. (இது ராஜாவினால் ஏற்பட்டிருக்கலாம் – ராஜாவை விட opening creditsக்காக அதிகம் மெனக்கெட்ட கலைஞரை எமக்குத் தெரியாது. சட்டென ஒரு உதாரணம் – அரங்கேற்ற வேளை). இயக்குனர் ரீமா தான் தேர்ந்தெடுந்திருக்கும் கதைக்கான சரியான atmosphereஐ பிரமாதமாக உருவாக்கித்தருகிறார். பூங்கொத்து அசைய அசைய ஸ்லோ-மோ-வில் விரையும் குதிரை வண்டியில் துவங்கி, மஃப்ளர்-கைத்தடியுடன் நடக்கும் மூதாட்டி, கிட்டாருடன் நடக்கும் யாரோ, சாலையில் வேகத்தடையை கொண்டுவரும் பாலியல் தொழிலாளிகள், புகைபடிந்த இடங்கள், மனிதர்கள், நிரந்தரமற்றவர்கள், பெயரற்றவர்கள், மலிவான விளக்குகள், ஆபரணங்கள், உடைகள், உணர்ச்சிகள் என ஒரு நொடியில் திரைப்படம் தொட முயற்சிக்கிற உலகை கண் முன் கொண்டு வருகிறார்கள். (நிற்க – இதே ரீமா-Zoya கூட்டணியில் வந்த Luck By Chance திரைப்படத்தின் openings creditsஉம் அசாத்தியமானது). (இந்த ஆண்டில் மிகப்பிடித்த இன்னொரு opening credits – Skyfall)
திரைக்கதையின் முப்பதாவது நிமிடத்தில் இயக்குனர் வைக்கிற check பிரமாதமானது. மீள முடியாத துயரம் ஒன்றும் (சின்னஞ்சிறு மகனை இழந்து தவிக்கிற தம்பதியினர்), தீர்க்க முடியாத விபத்து ஒன்றும் (தனியாகச் சென்ற காரில் நடிகர் மரணம்) ஏற்கனவே திரைக்கதையில் ஆழமாகவே விவரிக்கபட்ட பின்னர், இக்கதையின் ஒரே தீர்வான அமானுஷ்ய அம்சம் நம் முன் வைக்கப் படுகிறது. தம்பதியினரை ஆவிகளுடன் பேசும் ஒரு (கார்ட்டுன் போல இயங்கும்) பெண்மணி தொடர்பு கொள்ள, ரோஷ்ணி (ராணி முகர்ஜி) அதை உணர்வுப்பூர்வமாக அணுக முடிவு செய்கையில் உடன் பல பார்வையாளர்கள் அப்படி முடிவு செய்திருக்க மாட்டார்கள். (நான் அவர்களில் ஒருவனில்லை). ரோஷ்ணிக்கு திரைக்கதையில் மீதமிருப்பது சிறப்பான மூன்று காட்சிகள் – “பிரச்சினையில்லாமல் சுலபமாக அந்த உலகத்திற்கு சென்று விட்ட” தன் மகனை பற்றி அறிந்து ஆசுவாசம் அடைதல், துயரிலிருந்து மீண்டு வருதல் (திரையரங்கு காட்சி சிறப்பு), கணவனை துயரிலிருந்து வெளிக்கொண்டு வர முயலுதல். (இந்த திரைப்படம் முன்வைக்கிற) உண்மையை எத்தனை சீக்கிரம் ஒப்புக்கொள்ள முடிகிறதோ அத்தனை சுலபமாகிற ரோஷ்ணிக்கு. (ராணி மூன்று காட்சிகளையும் மிகச்சரியாக வெளிக்கொண்டு வருகிறார், ஒரு விருது ப்ளீஸ்?)
ஆவிகளுடன் பேசுவதை தர்க்க ரீதியாக சூரி(அமீர்) எதிர்க்கத் துவங்கிய பின்னரே திரைக்கதையில் ரோஸி (கரீனா – பார்க்கவும் பழகவும் கச்சிதமாக otherworldly!) வரத் துவங்குகிறார். (இதற்கு பின்னாலிருக்கும் சாத்தியங்களை பூடகமாக விட்டது கற்பனைக்கு நல்ல தீனி!). இரண்டு விபத்துகளை வைத்து திரைக்கதையில் விவரிக்கப்படும் இரண்டு தொடர்பில்லாத கதைகள் எங்கே இணைகின்றன என்பது புலப்படாமல் மிக எளிதாக இணைகின்றன. இரு கதைகளுக்கும் இருக்கும் தொடர்பெனத் தோன்றும் புலன் விசாரணையை ஆரம்பத்திலேயே தேவையற்றது என்றும் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் (“final” case). ஆவிகளை தர்க்க ரீதியாக நிராகரிக்கிற அமீர் மட்டும் இந்த கேஸை “final” என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்பது சுவாரசியம். ”இவ்வுலகில்” விபத்தை மறக்க முடியாமல் தவிக்கும் பெற்றோரையும், விபத்தை நினைவில் வைக்க மறுக்கும் மூன்று இளைஞர்களையும், “அவ்வுலகில்”, நினைவிலிருந்து அழியவும் அழிய மறுக்கும் இருவரையும் இணைக்கும் திரைக்கதைக்கு மட்டுமே ஒரு தனி ஸ்டார் கொடுக்கலாம். “மிகச்சுலபமாக அவ்வுலகிற்கு சென்று முடியாமல்” தவிக்கிற ரோஸிக்கு கடைசி மரியாதை கிடைக்கிற வரை பல விதங்களில் அர்த்தங்களில் கதை விரிந்து படர்கிறது.
கரீனா – அமீர் தொடர்பான காட்சிகள் பெரும் மயக்கத்தையும் கிறக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. (விடுதியில் இருவரும் உரையாடும் காட்சியில் ஏனோ “In The Mood For Love” திரைப்படத்தின் நினைவுகளை கிளரச் செய்தது). வண்ணங்கள், வசீகரம், வசனங்கள் என அனைத்திலும் நேர்த்தி. ஒவ்வொரு முறையும் விடையில்லாமல் அமீர் தவிக்கையில் அவரை உண்மையை நோக்கி இன்னொரு அடி எடுத்து வைக்க உதவிக்கொண்டே இருப்பதும், அந்த உண்மை என்னவென்று விளங்கும் நொடியில், மகனை காப்பாற்ற குதித்த நீருக்குள்ளேயே அமிழ்ந்துகொண்டிருக்கும் அமீரை மெல்ல மெல்ல மேலே ரோஸி கொண்டு வரும் பிரமாதமான காட்சியுடன் நிறைவடைகிறது கதை.
துவக்கம் முதல் இறுதி வரை ஒரு இடத்தில் நம் கவனத்தை கலைக்காமல் முன் சென்ற விதத்தில் பெரிதும் கவர்கிறார் ரீமா. மனதை சட்டென தொடுகிற பாடல்களை பொருத்திய விதம், காட்சிக்கு மிகச்சரியான பிண்ணனி இசை மற்றும் நியான் விளக்குகளிடையே அவ்வப்போது கலைகிற ஒளிப்பதிவும் இரண்டு மணி நேரங்கள் மயக்கி வைக்கிறார்கள். ராணி முகர்ஜியும், அமீர் கானும் சொற்ப நேரத்தில் தங்களின் அனுபவத்திலிருந்து எங்கிருந்தோ அத்தனை சோகத்தை கொண்டு வந்து முன் நிறுத்துகிறார்கள். (’நான் விளையாட போகவா’ என்று கேட்டுவிட்டு மரணத்தை நோக்கி ஓடுகிற மகனை நிறுத்த பல வழிகளை அமீர் யோசித்து யோசித்து உடையும் காட்சி – devastating!)
ரோஸி இறந்த போன ஒரு கதாபாத்திரம் என்பதறிந்து திரையரங்கிலும் வெளியும் ஏராளமான வாக்குவாதங்கள். (தங்களின் அறிவுக்கு விடபட்ட சவாலாகவே பலர் கருதி எதிர்கொள்கிறார்கள்). பூக்கள் நிரம்பிக்கிடக்கிற கடற்கரை வெளியில் இரவில் அமர்ந்து ரோஸி பேசுகிற காட்சி மிக மிக அழுத்தமானது. சமூகத்தின் கண்ணில் புலப்படுவதும் மறைவதுமான அரசியலை அலைகளின் ஓசையினூடே விளக்கிற விதமும் போலீஸ்காரன் ரோஸி புதைக்கப்பட்ட இடத்திற்கே தேடி வந்து அதை கேட்டுக்கொண்டிருப்பதும் சுவை. (நிற்க – அந்த காட்சி கொண்டு வரும் அர்த்தங்கள் யாவும் நான் பின் யோசித்து புலப்படுத்திக்கொண்டவை என்றாலும், அந்தக் காட்சியை திரையில் பார்க்கும் போது அலைகழிக்கும் திரைப்படத்தில் திடீரென ஏனோ பேரமைதி ஏற்பட்டது. இது முக்கியமான காட்சி என்பதை இத்தனை அழுத்தமாக அடிக்கோடிட முடிகிற இயக்குனர் நல்ல இயக்குனர் என்பதில் சந்தேகமிருக்க முடியாது). ’உங்களின் கண்கள் கொண்டு பார்க்க முடியாதவர்கள் எப்படி தொலைந்து போக முடியும்?’ என்று போலீஸ்காரரிடம் கேட்டுக்கொண்டிருக்கிற ரோஸி, opening creditsகளில் உலவித் திரிந்த அடையாளப்படுத்த முடியாத நபர்களில் ஒருவராக இருந்திருந்தால், (நிற்க, ரோஸியின் உண்மையான அடையாளம் சிம்ரன். இன்று சிம்ரன், நாளை சமேலி… என்று சொல்கிறத வசனமொன்று), பார்வையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்திருக்குமா? துவக்க காட்சியில் வந்த அந்த இரவு மனிதர்கள் தொலைந்திருந்தால் யாருக்கேனும் தெரிந்திருக்குமா? அவர்களுக்குப் பின்னாலிருக்கும் அமானுஷ்யம் என்ன? ரோஸிக்கும் அவர்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா, இறந்திருந்தாலும் இருந்திருந்தாலும்?

“என் பேர் வருண். என்னைப் பொறுத்தவரை காதல் ரொம்ப ப்ராக்டிக்கலான விஷயம். என்னால mad-cap ரொமாண்ட்டிக்கா இருக்க முடியாது.” “என் பேர் நித்யா. காதல்ன்னா காதல் தான். அதுல காம்ப்ரமைஸ்க்கெல்லாம் எடம் கிடையாது” என்றெல்லாம் தனித்தனி medium close-up ஷாட்களை வைத்து prologue கொடுத்து கதையை ஆரம்பிக்காமல், திரைப்படத்தோடு பயணிக்கையில் வருணையும் நித்யாவையும் வருணின் காதலையும் நித்யாவையும் காதலையும் மெல்ல மெல்ல வகைப்படுத்துவது நீ.தா.எ.பொவின் முதல் சிறப்பு. (எந்தப் படத்தின் நினைவு என்னை இப்படி படுத்துகிறது? பூவேலி?).
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வருணிற்கும் நினைத்ததெல்லாம் கிடைக்கிக்கிற நித்யாவிற்கும் இடையே நிகழ்கிற காதலின் பல எபிஸோடுகளாக நீண்டு பிரமிக்க வைக்கிறது படம். இருவரின் குடும்ப சூழ்நிலை, வாய்ப்புகள் இருவரையும் காதலை எப்படி ஒவ்வொரு நிலையும் அணுக வைக்கிறதென்பதை மிக அருகில் இருந்து படம் பிடித்திருக்கிறார் கௌதம். ’இருவரும் காதலிக்கிறார்கள்’ என்று ஒரு வரியில் ஸ்க்ரிப்ட்டில் காதலை கடந்து போகிற பெரும்பாலான இயக்குனர்களுக்கு மத்தியில், ‘இருவரும் காதலிக்கிறார்கள்’ என்று ஒரு வரிக்கு ஸ்க்ரிப்ட் எழுதுகிற கௌதமிற்கு நன்றிகள்.
பள்ளிப் பருவக் கதையை இன்னும் கொஞ்சம் lightஆகவே பாவித்திருக்கலாம் ராஜாவும் கௌதமும். (ஜீவாவும் சமந்தாவும் மிகச் சிறப்பாக பள்ளி மாணவர்களை கண் முன் கொண்டு வருகிறார்கள். பார்க்கிற பார்வையாளர்கள் தாம் பள்ளி மாணவர்களின் அளவிற்கு இறங்கி வராமால் கலாய்த்து தள்ளுகிறார்கள்). வேறு குடியிருப்பிற்கும் பள்ளிக்கும் நித்யா மாறுவதில் துவங்குகிற வேறுபாடுகள், சிறிய கோபத்தில் தொடர, coaching center, பதின்ம வயது, மீண்டும் பிரச்சினைகள் என்று மிகச்சாதாரணமாகவே நீள்கிறது. கல்லூரி காலங்களில் துவங்கி விடாமல் அசரடிக்கிறது நீ.தா.எ.பொ.வின் கதையும் திரைக்கதையும்.
கல்லூரி காலங்களில் நித்யா இந்த வேறுபாடுகளை சமன்படுத்த முயல்வது அழகு. கை கடிகாரங்கள், புது சட்டைகள், கார் ட்ரைவ்கள் என்பனவற்றை வருண் சகஜமாக எடுத்துக்கொள்வதும் சுவை. அந்த வேறுபாடுகளை மூழ்கடிக்கும் அளவிற்கு ஈர்ப்பில் மிதந்து கரையும் வருண் நித்யாவை பரிபூரணமாக வெளிபடுத்த சாய்ந்து சாய்ந்து பாடலும், அதன் மாண்டேஜும், ஏராளமான முத்தங்களும் போதுமானதாக இருக்கிறது. ‘You have become a woman now’ என்று வருண் சதா சொல்லிக்கொண்டே இருந்தாலும், கொஞ்சம் தாமதமாக நிகழ்கிற வருணின் ‘You have to become a man now’ தருணம். அதற்கான காரணக்காட்சி நீ.தா.எ.பொ.வின் மற்றொரு புருவத்தை-உயர்த்தும்-தருணம். அண்ணனிற்கு பெண் பார்க்க போன இடத்தில் என்ன நிகழ்ந்ததென்பதை விளக்காமல் வருணையுன் நம்மையும் வருணின் காதலை மட்டும் மனதில் வைத்து சூழ்நிலையை எடைபோட வைப்பது கச்சிதம். கொஞ்சம் விலகி இருக்க வருண் முயல்வதும் நித்யா நெருங்குவதும் என தொடர்ந்து தண்ணீர் டாங்க் மாடி காட்சியில் மீண்டும் ஒரு sudden break இடுகிறது படம். ‘நான் தான் எல்லாமேன்னு இருந்தா one day you will hate me’ என்று வருண் சொல்வதிலும், ‘எனக்கு தான் எல்லாமேன்னு இருந்தது. ஆனா நான் உன்ன choose பண்ணேன்’ என்று நித்யா சொல்வதிலும் இருக்கிற நியாயங்கள், காதல், நிதர்சனம் அனைத்தும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு வருண் நித்யாவைத் தேடிச் செல்வதும் காதலை விட்ட இடத்திலிருந்து துவங்க சங்கடமின்றி முயல்வதும் அடுத்த கட்டம். அது வருணுக்கு எத்தனையோ சரியோ, அத்தனை தவறு, நித்யாவிற்கு அவன் கோழிக்கோடு சென்றது. மீண்டும் வாக்குவாதங்கள் – நிற்க, படத்தின் மிகச்சிறந்த காட்சி இது. Checkbox வசனம், ‘வெட்டியாக’ இல்லாமல் உருப்படியான காரியங்கள் செய்ததிற்கு வருண் காரணமில்லை என்று நிராகரிக்கும் காட்சிகள் எல்லாம் பிரமிப்பு. மீண்டும் ஒரு கடைசி முயற்சியாக திருமணத்திற்கு சில மணி நேரங்கள் முன்னே – கமல் பாணியில் சொல்வதென்றால் – உரையாடல் and stuff. நித்யா அக்காவின் காரில் வந்திருப்பது, அதையறிந்த பின்னர் வருண் தன் காரை காண்பிப்பது, Adam Gilchrist, ’மாறாத மிடில் க்ளாஸ் அபார்ட்மெண்ட் மற்றும் ஊஞ்சல்’ ‘உனக்கும் அரேஞ்சுட் மேரேஜுக்கு சம்மந்தமேயில்ல’, ‘நீ தானே அடிக்கடி கல்யாணம் பண்ணனும் சொல்லிட்டிருப்பே? – அது உன்ன பத்தி, கல்யாணத்த பத்தி இல்ல?’. அதன் பின்னர் சுபம்.
படத்தின் மிகப்பெரிய சுவாரசியம், கௌதம் ட்ராமாவை நிறைய கை கழுவியிருப்பது. ஒவ்வொரு முறை முக்கியமான கட்டம் வருகையிலும், காட்சி எத்தனை ட்ராமாடிக்காக விரியும் என்று பதற்றமாக காத்திருக்கும் பொழுது, மிகச் சாதாரணமாகவும் மிக உண்மையாகவும் காட்சிகளையும் கணங்களையும் நகர்த்தியிருப்பது அமர்க்களம். மொத்த ட்ராமாவையும் ராஜாவின் கையில் விட்டுவிட, ‘முதல் முறை’ ‘சற்று முன்பு’ பாடல்களில் கதை எழுதுகிறார் ராஜா. ஒற்றை வயலினை எடுத்து ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ வாசித்தாலும், ‘நீ தானே என் பொன்வசந்தம்’ வாசித்தாலும், அதே பாரம். அதே போல, தேவையில்லாத கதைக்காட்சிகளை நீக்கியதற்கும் நன்றி. நித்யாவின் மணப்பாடு வாழ்க்கைக்கு ‘வாரணம் ஆயிரம்’ குழந்தை கிட்னாப் எபிஸோட் அளவில் விளக்கங்கள் இல்லாமல் போவது நல்லது. (நிற்க, ஒரு வகையில் இதுவும் வாரணம் ஆயிரம் திரைப்படம் தானே?)
அலைபாயுதே ‘எவனோ ஒருவன்’ பாடலை வைத்து இந்த படத்தை எடுத்திருப்பதாக சொல்லியிருக்கிற கௌதம், ஒரு வேளை கேரளாவிற்கு கார்த்திக் ஷக்திக்காக போகாமல் இருந்திருந்தால் என்ன என்றே துவங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
படம் நித்யா மற்றும் சமந்தாவிற்கு மட்டுமே சொந்தம். பித்து பிடித்து அலையும் காதலன், ப்ராக்டிக்கலான காதலி, காதலனுக்கு செல்ஃபோன் வாங்கி கொடுக்கும் காதலி என புழங்கும் காதல் கதையில் காதலன் – காதலி இடத்தை இடம் மாற்றியதிலேயே பெரிதும் ஈர்க்கிறது படம். (கதை – ரேஷ்மா). இருந்தும், நித்யாவை ‘லூஸாக்காமல்’ கண்ணியமாகவும் காதலுடனும் படம் பிடித்திருக்கிறார்கள். தண்ணீர் டாங்க் காட்சியில் வெளிப்படுகிற பதைபதைப்பும் கோபமும் (சமந்தாவின் கொஞ்சமே கொஞ்சம் அதிகமான body language), மணப்பாடு காட்சியில் தன்னுடைய மூன்று வருட உழைப்பை பாதுகாக்கிற கோபமும் (சமந்தாவின் குரலும் modulationம் கச்சிதம்) நித்யாவின் மீது அதிகம் பிரியப்பட வைக்கிறது. காதலை வாழ்க்கையில் மற்றுமொரு விஷயமாக அணுகுகிற வருணும் காதலை வாழ்க்கையாக அணுகுகிற நித்யாவும் இணைந்தாலும் எப்படி ஒன்றாக இருந்திருப்பார்கள் என்பது இன்னொரு திரைப்படமாகவும் இருக்கலாம். (And they fought happily ever after?). கடைசி காட்சிகளில் ஏன் நித்யா மன்னிப்பு கோர வேண்டுமென்பதிற்கு மட்டும் நியாயம் புரியவில்லை. ஒரு வேளை, mad crazy romanticகளுக்கு மட்டுமே அது சாத்தியமோ? ஆடியோவில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாலும், அதே பாடல் வரிகளை ராஜாவின் குரலில் நித்யாவிற்காக அமைதியாக அசத்தலாக பாட வைத்திருக்கிற கௌதம் இன்னும் கொஞ்சம் feministஆகவே இருந்திருக்கலாம். இல்லையா?

வார இறுதிகளைப் பற்றிய சில குறிப்புகள்
ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் தெளிவாகப் புலப்படுகிற பொதுவான இலக்கின்மை குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்கெட்களின் உள்ளே தேமேயென ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக்கொண்டு நடக்கும் பொழுது தன் கணக்கை வினோதமாக தீர்த்துகொள்கிறது. ‘நாந்தான் கார்ட் தள்ளுவேன்’ என்று அடம்பிடித்து பிடுங்கிக்கொள்வதின் பிண்ணனியில் பல சௌகர்யங்கள் உண்டு – கூட்டத்துடன் சென்றிருந்தாலும் ட்ரக் வண்டிகளுக்கு ரோட்டில் உபத்திரமின்றி வழிகிடைப்பது போல, நாம் முன்செல்லவோ பின்தங்கவோ இயல்கிறது; ஒரே பொருள் இரு விலையில் கிடைக்கும் அசந்தர்ப்பங்களில் ரூம்மேட் என்ற முறையில் கருத்து சொல்லத் தேவையில்லாமல் போகிறது; உலகைப் பற்றிய பெரும் சிந்தனை மற்றும் கவலையுடன் கார்ட் இல்லாமல் நடந்துவந்தால் லாங் ஷாட்டில் நம்மை பார்ப்பவர்களுக்கென இரு கைகளை எங்கே வைத்துக்கொள்வதென்பதில் உள்ள குழப்பம் இல்லாமல் போகிறது; எதிர் வரும் கார்ட் ஆசாமிகளுடன் (குறிப்பாக இந்தியர்கள், பருமனான மக்கள், வயசாளிகள், அடம்பிடிக்கும் குழந்தைகள்) சிலருடன் ஏற்படும் திடீர் கார்ட்-விபத்துத்-தருணங்களும் அதில் கிடைக்கிற அப்சர்வேஷன்களும். அப்படி ஒரு முறை சூப்பர் மார்கெட்டினுள் நுழையும் போதே ஷாப்பிங் கார்ட்டை முதலில் எடுத்துக்கொண்டு நடக்கையில் அப்போதே வந்து நின்ற கார் ஒன்றினுள் இளம் இந்திய ஜோடி. இருப்பது அமெரிக்காவில் என்பதாலும் பத்திரமாக மார்கெட் வந்து சேர்ந்ததை கொண்டாடும் விதத்திலும் மெல்ல முன் நெருங்கி ஒரு முத்தம் வைக்க முயல, எப்படியோ என்னிருப்பை அவர்களுக்கு நான் உணர்த்தி வைக்க, முத்தமும் கார்ட்டும் சட்டென நின்றது. சங்கடத்திலிருந்து அனைவரும் உடனே மீண்டாலும், அரை நொடியில் வெட்கப்பட்டு விடுகிறார்கள் அவர்கள் இருவரும். சொல்லாமல் எங்கிருந்தோ ஒரு புன்னகை மூவருக்கும் வர, நான் அதற்கு மேல் காட்சியை நீட்டிக்க விரும்பாமல் கடைக்கு உள்ளே வந்துவிட்டேன். பின்னாலேயே அவர்களும் இன்னொரு கார்ட்டுடன் வர, மொத்தம் நான்கே வரிசைகள் இருக்கிற கடையில் சுற்றிச் சுற்றி புன்னகையுடன் வலம் வரத் துவங்குகிறோம். அவ்வப்போது நேருக்கு நேர் சந்திக்கிற சமயங்களில் புன்னகை அடர்த்தியாகி கார்ட்டை அழுந்தப் பிடித்து பத்திரமாக குழந்தை நடக்க உதவும் கவனத்துடன் தலை குனிந்து சக்கரங்கள் வெட்டிக்கொண்டு நடக்கிறோம். அவர்களின் முதல் அமெரிக்க-வாழ் முத்தம் அதுவென இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே மார்கெட்டை விட்டு வெளியேறுகையில் என்னுடைய கவலையாக இருந்தது.
நியுயார்க்கில் மற்றுமொரு சனிக்கிழமையில் பகலை காலம் மிச்சமின்றி விழுங்கித் தீர்த்தபின் விளங்கத் துவங்கியிருந்த முன்னிரவில் நகரின் இந்தக் கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு அவசரமான ரயில் பயணம். சுமார் பத்தரை மணிக்கு The Seperation என்கிற இரானியத் திரைப்படம். ஊர் பேர் தெரியாத திரையரங்கம். படம் துவங்கி இரண்டு நிமிடங்களுக்கு பிறகு உள்ளே நுழைந்ததால், இருட்டில் துழாவித் துழாவி இருளைப் பிரித்தறிந்து கண்கள் கண்டு சொன்ன முதல் இருக்கையில் அமர்ந்தாயிற்று. உலகைப் பற்றிய அத்தனை சிந்தனைகளையும் துறந்து படத்தில் கவனத்தை செலுத்த துவங்குகையில் நிழலுருவங்கள் இரண்டு திரையின் ஓரமாக தோன்றி ஆழமாக முத்தமிடத் துவங்குகின்றன. இரானிய படங்களில் இது என்ன பூகம்பம் என உற்றுப் பார்க்கிறேன். மூன்று நான்கு வரிசைகள் முன்னே அமர்ந்திருக்கிற நிழல் ஆணும் நிழல் பெண்ணும் தரும் நிஜ முத்தம். முதல் ரீலிலேயே கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்ட திரைப்படம், கடைசி ரீல் வரை ஸ்ருதி பிசகாமல் அழுத்தமாகவும் ஆழமாகவும் நகர, நிழல் மாந்தர்களும் அவ்வண்ணமே நகர்ந்து கொண்டிருந்தனர். ஒரு சப்தம் ஏற்படுத்திவிட்டால் உயிரே போய்விடும் என்ற ரகத்தில் மக்கள் (எப்போதும் போல்) திரையரங்கில் அமைதி காக்க, திரைப்படம் முடிந்ததும் அரங்கம் அதிர அதிர கைதட்டல். அதுவரை விழுங்கியிருந்த வெளிச்சத்தை விளக்குகள் மேலிருந்து பொழிய, எல்லோருடன் எழுந்து நின்ற எனக்கு, முதல் அதிர்ச்சி – அந்த நிழல் ஜோடி, இதுவரை சந்தித்ததில்லை என்றாலும், இந்தியர்கள். இரண்டாம் அதிர்ச்சி – அரங்கில் எங்களைத் தவிர இந்தியர்கள் வேறு எவரும் இல்லை. அத்தனை கூட்டத்தில் தனித்து தெரியும் முத்தம் போல எங்களின் இந்திய அடையாளம் பளிச்செனத் தெரிகிறது. வரிசைகள் பக்கவாட்டாக ஒவ்வொரு இருக்கையை தாண்டித் தாண்டி அடுத்தடுத்த மலைபாம்புகள் போல ஒன்றாக நகர, அவர்களை கண்களால் சந்திப்பதில்லை என்றதொரு திடீர் முடிவு எனக்குத் தோன்றுகிறது. அதையறியாமல் அவர்கள் இருவரும் குதூகலகமாக எனக்கு சமமாக நடந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். மாகடலை நோக்கி இணையப் பாயும் குறுநதிகள் போல குறுகிய வாயிலை நோக்கி அனைவரும் திரும்பியதும் நான் எப்படி எப்படியோ முன்னேற முயன்றும் பின் தங்கியும் வழிவிட்டும் நகர்ந்தும் அவர்களுக்கு அபாயகரமான நெருக்கத்தில் நடை பயில, என் முடிவின் உறுதி அதிகரிக்கிறது. இன்னும் நான்கே அடி எடுத்து வைத்தால் நிரந்தரமாக அவர்களைப் பிரிந்துவிடலாம் என்கிற நிலையில், எப்படி என் விழிகள் திரும்பின என எனக்கே புரியாமல், மூன்று ஜோடி கண்களும் சந்திக்க, என்ன ஏதுவெனத் தெரியாத அதிர்ச்சியும் கூச்சமும். சரக்கென வெட்டிக்கொண்டு திரும்புகிற கார்டின் சக்கரங்கள் ஆகின எங்கள் மூவரின் கண்களும்.
[..]
SM-ம் நானுமாக இருபது மைல் தொலைவிலிருந்த mountain parkகிற்கு புறப்பட்டிருந்தோம். ஷிகாக்கோவிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னால் மாற்றலாகி இந்த ஊருக்கு வந்து புதிதாக மற்றுமொரு நண்பர் வட்டம் உருவாக்க SM துவங்கியிருந்ததால், பேருந்தில் ஒரு ஹலோவும் புன்னகையும் உடனடியாக பறிமாறப்பட்டு, எல்லாருக்கும் பகிரக்கூடிய சுருக்கமான வரலாறும் சொல்லி முடிந்தபின் திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் அவனுமாக சூர்ய அஸ்தமனத்தை பார்க்கவென காமிராக்களுடன் புறப்பட்டு விட்டோம். SMஇன் தாய்மொழியில் ராஜா இசையமைத்திருந்த பாடல்களைப் பற்றி பேசி நான் அவனை ஆழம் பார்த்தபடி பார்க்கை அடைந்ததும், முதலில் எங்களை வரவேற்றது “Beware Of Bears” என்ற வாசகம். திருதிருவென இருவரும் விழித்தோம். சுற்றி ஆள் அரவமில்லை. கரடிகளும் பார்க்ககூடிய சூர்ய அஸ்தமனம் யாருக்கும் தேவைபட்டிருக்கவில்லை. சுருக்கமாக சொல்லிய, கேட்ட வரலாற்றில் சாகசங்கள், பயங்கள் பற்றிய அத்தியாயங்கள் இல்லையென்பதாலும், இதுவரை எப்படியோ, இப்போது புத்தம் புதிதாக தைரியத்தைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுத வாய்ப்பிருந்தமையாலும், இருவருமாக காட்டுப் பாதையில் நடக்கத் துவங்கினோம். நான் என் வழக்கப்படி bear jokes சொல்ல ஆரம்பிக்கிறேன். லேசான கலவரத்துடனே சிரிக்கிறோம். ஒவ்வொரு சலசலப்பும் இருவரையும் நிறுத்துகிறது. காமிராக்களின் லென்ஸ் கேப் திறக்கப்படவேயில்லை. பெரு அடர்த்தியான வனமென மனம் அனாவசியமாகக் கற்பனை செய்துகொள்கிறது. நிற்பது, ஆராய்வது, நிமிர்ந்து பார்ப்பது என நேரே நடப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம். SM ஒரு நரியைப் பார்த்ததாகச் சொல்லி கூர்ந்து கவனிக்கிறான். நான் பாம்புகளைத் தேடுகிறேன். கரடிகள் நிச்சயம் வெளியே வரும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு அமெரிக்க ஆண்களும் ஒரு அமெரிக்க பெண்ணும் உற்சாகமாக எங்களுக்குப் பின்னால் வருகிறார்கள். துணை கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைந்து நாங்கள் அவர்கள் எங்களை நெருக்கமாக பின் தொடர ஏதுவாக நடக்கிறோம். சூரிய அஸ்தமனத்தை பார்க்க அமைக்கப்பட்டிருக்கும் டவர் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. பின்னால் வருபவர்கள் உரக்கப் பேசியும் சிரித்தும் கரடிகளை அழைப்பவர்களாக இருந்தார்கள். அதனால் நிச்சயம் அதனுடன் சண்டை போட தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பது எங்கள் யூகம். ஒரு கட்டத்தில் நிச்சயம் கரடி என்று எண்ணுகிற அளவிற்கு ஒரு சலசலப்பு புதரில் ஏற்பட, நானும் SMம் நிற்க, எங்களின் பின்னால் வந்தவர்கள் பெரும் ஆரவாரத்துடன் அந்த புதரை நோக்கி ஓடிச் செல்ல, கரடியோடு சேர்த்து இவர்களையும் சமாளிக்க முடியாதென நானும் SM வந்த வழியே அவசரமாகத் திரும்புகிறோம்.
நினைத்ததை விட அதிக நேரம் மிச்சமிருந்ததால், SM என்னை அவனுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அன்று இரவு நாங்கள் இருவர் மட்டுமே அங்கிருந்ததால், எளிமையாக ஒரு சமையல் தயாராகிறது. நான் விருந்தினன் என்பதால் எனக்கு வேலையில்லை. எப்போதும் விருந்தினர் கதாபாத்திரத்தில் நடிக்கையில் எனக்கு தேவைப்படும் சில சில செட் ப்ராபர்ட்டிகளில் ஒன்றான பழச்சாறு கோப்பை ஒன்றை எடுத்து வைத்துக்கொள்கிறேன். SM சமைத்தபடி பேசத் துவங்குகிறான், சுமார் ஏழு மணிக்கு. எங்கிருந்து அத்தனை கதைகள், சம்பவங்கள் நினைவிற்கு வந்ததெனவும் தெரியவில்லை, எந்த விதமான தொடர்ச்சங்கிலியால் அவை பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் தெரியவில்லை. அன்று என் பணி வெறும் கவனிப்பது என்று எனக்குத் தெளிவாக புரிகிறது. (எனக்கு மிகவும் பிடித்த பணி). மகிழ்ச்சிகரமான சம்பவங்கள், துயரமான ரகசியங்கள், அரசியல், சினிமா, காதல் கதைகள், நண்பர்கள் என பேச்சு நீண்டுகொண்டிருக்கிறது. அவன் நினைவிற்கும் என் புரிதலுக்கும் உதவும் வகையில் அவ்வப்போது சில புகைப்படங்கள் – லேப்டாப்பிலிருந்தோ ஐஃபோனிலிருந்தோ. சில சம்பவங்களை விவரிக்க தொடங்குகையிலே அதில் சொல்லாமல் விடுகிற ஏதோ ஒரு விஷயம் இருக்கிறதென புலப்படும். ஒரு புதரின் சலசலப்பு போல. அதை மேலும் விசாரிக்காமல் சுற்றி வந்து நான் பேச்சை வளர்க்கிற சமயங்களில் தானாகவே சலசலப்பிலிருந்து மேலும் விஷயங்கள் வெளியே வரும். எதை எதை சொல்லலாம் எதை எதை கேட்கலாம் என்பதற்கான வரைகோடு தெளிவின்றி நெளிகிறது. என்னவெல்லாம் பேசினான் என்று அவனாலோ என்னவெல்லாம் கேட்டேன் என்று என்னாலோ அளக்க முடியாத அளவிற்கு பேச்சு நீண்டு இரவு ஒன்றரை மணிக்கு முடிகிறது. நேற்று வரை அறிந்த SMஇற்கும் இன்று அறியும் SMஇற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதை உணர்கிறேன். இந்த வார இறுதிக்கு முன்னால் அறிந்த SMஇற்கும் இனி திங்கட்கிழமையிலிருந்து பழகப் போகிற SMஇற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை அசை போட்டப்படி வீடு நோக்கி நடக்கத் துவங்குகிறேன். எப்போதும் அப்படிபட்ட வித்தியாசங்களை ஏற்படுத்துகிற வார இறுதிகளுக்கென இந்த குறிப்பு.
[..]

காலை முதல் இடைவெளியில்லாமல் ரோலர் கோஸ்டர்கள், திகிலும் திரில்லூட்டும் ரைடுகள் என கழிந்த நாளின் இறுதியில் சட்டென மனம் ஈர்த்த விஷயம் – the blue light carousel. தலைக்கு மேல் விர்ரென சுற்றி நீல நிறத் தேற்றல் என கலையும் பிரகாசமான நீல விளக்குகளும் குளிரூட்டும் காற்றும் சேர்ந்து பிரமாதப்படுத்தும் ரைட். ஒவ்வொரு வார இறுதியையும் இதில் சுற்றி முடிக்க முடிந்தால் நலம். யாரால் ஸ்பான்ஸர் செய்ய முடியும்? (புகைபடத்தில் நான் இருப்பதால் இதை என்னால் எடுக்க முடியவில்லை).
[..]
MRஇன் ரூமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிச்சயம் சிக்கன் தான். MRஇன் கார் பழுதாகி ஒரு வாரமானததால், நான் தான் MRஇன் இடைக்கால ட்ரைவர். இருவரும் broad streetல் இருக்கிற பங்களாதோஷி கசாப்புக்கடைக்காரனைத் தேடியலைந்து கிடைக்காமல் சூப்பர் மார்கெட்டில் வாங்கிக் கொண்டு MRஐ வீட்டில் இறக்கி விட்டு நான் கிளம்புகையில் தொலைகீழ்வானில் வண்ணப் பட்டாசு ஓசையின்றி வெடித்துச் சிதறுகிறது. டப்பென ஒரு ப்ளாஸ்டிக் சத்தம் இரண்டு நொடிகளுக்குப் பிறகு கேட்கிறது. சுதந்திர தினம் இருந்த வாரத்தின் இறுதி என்பதால் ப்ரத்யேகமான வானவேடிக்கை. நினைவிலிருந்து எப்படியோ தப்பிவிட்டது. துவங்கி இருபது இருபத்தி ஐந்து நிமிடங்கள் வர நீடிக்கும். இங்கிருந்து வீட்டிற்கு செல்ல பத்து நிமிடங்கள் ஆகும். அங்கிருந்து அம்மாவை அழைத்துக்கொண்டு வானவேடிக்கை மைதானத்திற்குச் செல்ல பத்து நிமிடங்கள் பிடிக்கும். இன்னொரு வானவேடிக்கை நிகழ இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஒரு அவசரம் மனதையும் காலையும் பிடிக்க, காரை விரட்டுகிறேன். வழிகளில் திரும்பித் திரும்பி விரைய விரைய, பட்டாசுகள் பக்கவாட்டு கண்ணாடிகளில், ரியர் வ்யு கண்ணாடிகளில், கண்ணுக்கெதிரேவென ஓசையின்றி வெடித்துக்கொண்டேயிருக்கின்றன. வீட்டை அடைந்ததும் அம்மாவை துரிதமாக இழுத்துக்கொண்டு கீழிறங்கி கிளம்ப எத்தனிக்கையில் மைதானம் அபார்ட்மெண்ட்டுக்கு அருகே இருப்பதால், நிச்சயம் இங்கேயே எங்கேனும் வானவேடிக்கையை பார்க்க இயலும் எனத் தோன்றுகிறது. காரை திறக்காமல் டப் டப் என ஒலிக்கும் சத்தத்தை அசிரீரி போலக் கேட்டபடி வானவேடிக்கையை தேடியபடி விரைவாக நடக்கிறேன். அம்மா குத்துமதிப்பாக என் உருவத்தை வைத்து இருட்டில் பின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறாள். கடைசியாக நான் இப்படி நிலா தேடித் திரிந்தது. இன்று இது வேடிக்கையாக இருக்கிறது. திசையையும் ஒலியையும் வைத்து மதிப்பிட்டு ஒரு கட்டடத்தின் கொல்லைத் தோட்டத்தை அடைந்தபின் அடிவானம் பலவண்ணங்களில் ஜொலிக்கிறது. ஆயினும் மரங்கள் காட்சியை மறைக்கின்றன. கைக்கெட்டியதை பிடிக்க, இன்னும் அவசரமாக நடக்கிறேன். ஒரு பெரிய கும்பல் – முற்றிலும் ஆண்கள் மட்டும் – அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டு சாப்பிட்டப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரவு பத்து மணிக்கு எதையோ தேடி ஓடும் மகனையும் தாயையும் லேசான அலட்சியத்துடன் பார்த்துவிட்டு கடந்து அதற்கு அடுத்த மர பெஞ்ச்சை அடைந்து கீழ்வானத்தைப் பார்க்க, மரங்களும் புதர்களும் மறைக்காமல் வானவேடிக்கை பளிச்சென தெரிந்தது. அம்மாவை குரலால் துரிதபடுத்தி அழைத்து வந்த பின், இருவருமாக பெஞ்ச்சில் அமர்ந்து வானவேடிக்கையை அமைதியாக பார்க்கத் துவங்குகிறோம். அந்த வார இறுதியில் சுற்றி வந்து இடங்கள், செய்த கேளிக்கைகளுடன் துக்கடாவாக இதையும் சேர்த்துக்கொண்டதில் எனக்கு பெரும் திருப்தி.
அம்மா அமெரிக்காவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. மிகச்சரியான நேரத்தில் வந்திருப்பதாக தோன்றுகிறது. வானவேடிக்கையை பார்த்தபடி அமர்ந்திருந்த எங்கள் இருவரின் வயதுகளின் எண்களை இடம் மாற்றினால் மற்றொருவரின் வயது கிடைக்கும் காலம். அதைப் போலவே – புதிதான ஊர், நாடு, சமையலறை, லேப்டாப், ஃபோன் என ஒவ்வொன்றாகச் சொல்லித் தருவது, அருவிகளைத் தொட்டு நிற்கும் பாறைகள், மலை மீது ஏறும் படிகள், எஸ்கலேட்டர்களை சந்திக்கிற பொழுதுகளில் தானாக அவளின் கைகளை பற்றிக்கொள்கிற கைகள் என வியப்பான பாத்திர மாற்றம். அவளிடம் இத்தனை வருடங்களில் நிறையப் பேசியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பேச இதுவே சரியான சந்தர்ப்பம் என்றும் தோன்றுகிறது. இருந்தும், எப்போதும் போல அமைதி காக்கிறேன். கீழ்வானில் ஒளிகள் தெறித்து சிதறும் போதே ஒலிகளும் வெடித்துச் சிதற முயன்று முயன்று தோற்பதை இருவரும் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.
whyRaajaIsGod
I know, scandalous title – for the non-believers that is
NOM, please. Part of the reason for my existence on Twitter is this hashtag – there is no better thing to do other than discussing his music. A collection of tweets I did last year for his birthday collected and elaborated as a mandatory fanboy-scream post, so seat beats please. Sorry about the YouTube links for those behind Websense, but why not try to guess the pieces?
Up next, 10 #WhyRaajaIsGod pieces one by one for #HappyBirthday of #Ilaiyaraja. All from Mani Ratnam films, as a nod to his #HappyBirthday too.
Joie Di Vivre (And All That Begins Well)
Whatay stunner. To imagine this being delivered on such a low key film (Maniratnam and Balu Mahendra were just new kids on the block and Raja had almost reached the peak) speaks volumes not just about his genius & generosity but also knowing the best talents he works with. You also have a version of Susheela singing for Silk and Yuvan doing spruced up BGM versions in a totally intolerable film but this one wins totally – just for that voice.
Bass guitars are kick-ass, as always, but that bloody trick on the drums that stylishly skips the gaps between the lines ‘love love enbadhaa, sol sol manmadhaa, sonnaal podhumaa, dhaagam theerumaa’ gets my EVERY single time I listen to this song. And how Janaki, in her late 40s may be, perfectly modulates for the super gorgeous 20-something Amala! (Amala – *drool*)
Bumping into your Long Lost Love could be the most painful thing ever and this BGM always pushes that exact pain down through your throat. As you watch this scene, Surya appears, walks in, Subbulakshmi turns at him, she walks down and he climbs up the stairs – and all this while Raja should have been counting the bars, 1,2,3,4.. and picks up naan unai neenga maattEn neenginaal thoonga maattEn sErndhadhE nam jeevanE puts it on a violin and that fits like a glove. Every musician should be a mathematician, I guess. And Raja is a great one at that. (Side note – Subbulakshmi casually and unknowingly underscores the blood relationship between Surya and Collector when she says, ‘eppadinnu therila, aana guNaththula niRaiya ungaLa mAdhiriyE irukkar’. And from there to, ‘Paththu thala raavaNan’. Sigh).
Came across this piece casually, without any expectations, and was completely blown away. I am not much of a fan of this song but it sounds irresistibly sweet – jolly good! The nonchalance with which he offers such stuff in a totally appealing accessible manner is one quality I really admire him. The other motif in this film, based on the beautiful PoovilE mEdai naan pOdava is lovely too. (And yes, Vaidhegi Raman Kai Serum Kalam is a total #win too! All of them sadly sidelined by the monster hit Poomaalaye thOL seravA’). And who ever dislikes Revathi’s voice modulation, pliss to raise your hands.
A short piece from Geetanjali / Idhayaththai Thirudathe. This film is a treasure of scintillating background scores and choosing one among them is tough. My all time favorite title score is in this film, but I chose this one just for the sake of it. Simple, sweet yet serene.
Brothel is the most unceremonious place to meet the Herione. He has just walked in after paying and hasn’t even bothered to take a look of her. She has been waiting for the customer and has an exam tomorrow. He walks closer discovering suddenly her trembling voice and innocence in her eyes – A broken conversation happens the ensuing silences are oh-so-beautifully underscored by this piece. P C Sreeram is in spectacular form too.
Bunch Of Kids. Usha Uthup. And A Magic Journey. Should have been a rage when this one got released. Raja’s compositions were always ahead of time, so no surprise that this song/album being so ahead of time. One more reason to had Mani Ratnam kids in addition to being brats, plain nuisance and nonsense – they get to sing and dance Raja’s tunes.
Having all those stunningly beautiful ideas in your head and being presented with the most mundane situations on screen should be so frustrating that he leashes out such great violins, almost with vengeance, on Mount Road. I especially like the way it starts on a single string with a tinge of sadness.
The One And Only Paattu Thalaivar
Insanely addictive song this one. Those hiccups in the beginning and the rhythm mimicking them are freaking genius. SPB-Janaki is possibly the best combo on any counts in TFM, They tread the charaNams’ highs and lows with the grace of seasoned skiers. And, ah, Radha looks stunning in this song!
And Finally, Crowned With The Title Score
So do you compose tiny pieces for various scenes in the film and weave a perfect harmony into them and make one whole lovely title score? Or is it actually one singular conceit being broken down onto different scenes as pieces of music? Beats me. Totally!
Happy Birthday Sir!
[சிறுகதை] பதினேழு மைல்கள்
ஜூடி தன் கையில் வைத்திருந்த வைன் நிரப்பப்பட்ட கண்ணாடிக் கோப்பையில் மற்றொரு சிறிய ஐஸ்கட்டியை சத்தம் வராமல் இட்டு ரகசியமான குரலில் ‘கெவினுக்கு இரண்டரை வயதிருக்கையில் தான் அவனுக்கு வாய் பேசவும் காது கேட்கவும் இயலாது என்று எனக்குத் தெரிந்தது’ என்றார். ’ஷான் அப்போது இல்லை. இறந்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். ஷானை நான் பத்து வருடஙகளாக காதலித்தேன். திருமணமாகி ஒரு வருடத்தில் அவன் இறந்து போனான். எனக்கு அவனை காதலனாகவே அதிகம் நினைவிருக்கிறது, கணவன் என்பதை விட’ அறையின் பொன்னிற வெளிச்சத்தில் மினுங்கிக்கொண்டிருந்த வைனை ஒவ்வொரு மிடறாக அருந்த அருந்த ஜூடியின் கண்கள் பளிச்சிட்டுக்கொண்டே இருந்தன. அந்த நீண்ட நாளின் அலுப்பை அதில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிற சுகம் புன்னகையில் தெரிந்தது. எலும்புகள் எடுப்பாக வரைந்த முகம். அதிக சதைபிடிப்பில்லாத உடல் ஏராளமான மன உறுதி சேர்த்து செய்யப்பட்டது போலிருந்தது. ‘இப்போது கெவினுக்கு வயது பனிரெண்டு. சைன் லாங்குவேஜ் மூலம் நன்றாக கம்யுனிகேட் செய்ய முடியும். உனக்கு சைன் லாங்குவேஜ் தெரியும் என்று முரளி சொன்னதும்’ – பேச்சு இரண்டு நொடிகள் நிற்க ஜூடியும் அவரை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த விஜியும் ஒரே சமயத்தில் முரளியை திரும்பிப் பார்த்தனர். கையில் வைன் கோப்பையுடன் சாய்ந்தமர்ந்திருந்த முரளி விஜியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். ‘..நான் வேண்டாமென்று தான் சொன்னேன். ஆனால் முரளி தான் மிகவும் உறுதியாக இருந்தான்’. விஜிக்கு இதயம் மெல்ல படபடக்க துவங்கியது. முரளி தனித்திருக்கும் அந்த சோஃபாவில் அமர்ந்த நொடி முதல் அவனின் விழிகள் அவளையும் அவளின் விழிகள் விரல்கள் அவள் தொட்டு எடுத்து வைக்கும் பொருட்கள் அவள் அவள் அவள் என தூரிகைத் தொடுதலென தொடர்ந்து கொண்டே இருந்ததை அவள் முழுமையாக உணர்ந்தாள். ‘உனக்கு இந்த மூன்று வாரங்கள் கெவினின் கேர்டேக்கர் திரும்பி வரும் வரை கெவினுடன் இருப்பது மிகப்பிடிக்கும் என்று சொன்னான். ..ம்.. எத்தனை நாட்களாகி இருக்கிறது உங்கள் இருவருக்கும் திருமணமாகி?’. கேள்வி முடியும் முன்னரே விஜி ‘நான்கு மாதங்கள்’ என்றாள். ‘அதற்கு முன்னர் நீங்கள் இருவரும் பார்த்துக்கொண்டது கூட இல்லை தானே?’ முரளி அகலமாக புன்னகைத்தான். விஜி ஆமென தலையசைத்தாள். ‘திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னர் தான் இருவரும் சந்தித்தோம்’. ‘வாவ்… ஹ்ம்ம்ம்.. ஷானும் நானும் அப்படியே தலைகீழ் என்று உனக்குத் தோன்றுகிறதா? அவனை எனக்கு எப்போதிலிருந்தோ.. இல்லை எப்போதுமே தெரிந்திருந்தது. திடீரென்று ஒரு நாள் இருவரும் பிரிந்து விட்டோம்’. விஜிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமெரிக்கா வந்து இந்த நான்கு மாதங்களில் பல சமயங்களில் இப்படி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிக்கையிலெல்லாம் முரளி அழைப்பில்லாமல் வந்து காப்பாற்றுவது வழக்கமாகியிருந்தது. இப்போதும் அவன் ‘ஜூடி, கெவினிடம் விஜி பற்றி கேட்டீர்களா?’ என்று கேட்கிறான். ஜூடியிடம் கேட்கையில் கூட அவனுடைய பார்வை விஜியை விட்டு அதிகம் விலகவில்லை.
‘அவனிடம் சொல்லி வைத்திருக்கிறேன். விஜி, தப்பாக நினைக்கக் கூடாது. அவன் விருப்பப்பட்டால் மட்டுமே இது நிகழ வாய்ப்பிருக்கிறது. அவன் வேண்டாம் என்று சொன்னால் நானும் மறுக்க வேண்டியிருக்கும்’ ‘கண்டிப்பாக, பிரச்சினையில்லை.’ ‘நீ நான்கு வருடங்களாக சைன் லாங்குவேஜ் பழகியிருப்பதாக முரளி சொன்னான்’ ‘ஆம். பள்ளிக்கூடத்தில் என்னுடைய குழந்தைகளுக்காக. இருபது பேருக்கு பாடம் எடுத்திருக்கிறேன்.’ விஜி உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தபடி சொன்னாள். அவள் இன்னமும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது உறுத்திக்கொண்டே இருந்தது. கிடைத்த மௌனத்தை விடாமல், ‘உங்களுக்கு சைன் லாங்குவேஜ் தெரியுமா?’ என்று கேட்டாள். ஜூடி சிரித்தார். ‘தெரியும். உண்மையை சொல்லவா? நானும் கெவினும் எதில் பேசிக்கொள்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. முதல் ஒன்றரை வருடங்களுக்கு அவனுக்கு இந்த பிரச்சினை இருப்பது தெரியாமல் நானும் அவனும் ஒரு மாதிரி சைகைகளால் அரைகுறை சத்தங்களால் பேசத் துவங்கிவிட்டோம். அதன் பிறகு மற்றவர்களுக்காக அவனும் நானும் சைன் லாங்குவேஜ் பழகினோம். நாங்கள் இப்போதும் பேசிக்கொள்கையில் இரண்டுமாக மாற்றி மாற்றி பேசுகிறோம்’. ‘இன்னொரு விஷயம் – கெவினுக்கு ஆஸ்த்மா இருக்கிறது. சராசரியாக குழந்தைகளுக்கு இருப்பதை விட கொஞ்சம் தீவரமாகவே. அதனால் தான் அவன் பள்ளிக்கூடத்திற்கு செல்வதில்லை. நீ அதைப் பற்றி பயப்படத்தேவையில்லை. சில அடிப்படை அவசர உதவி முறைகளை உனக்கு சொல்கிறேன். அமெரிக்க சைன் லாங்குவாஜ் புத்தகமும் தருகிறேன். இது உன்னுடைய திருப்திக்காக மட்டுமே. கெவினுக்கு அவனை பார்த்துக்கொள்ளத் தெரியும்.’ ஜூடி அழகான பெருமையுடன் சொன்னார். ‘இருந்தும், இது எல்லாம் கெவின் ஓகே சொன்ன பிறகு தான். அவனிடம் போய் பேசு. சகஜமாகப் பேசு. போ’ என்றார். காலையிலிருந்து விஜி நடுக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த கணம். அவள் முரளியை திரும்பிப் பார்க்க, அவளில் ஆழ்ந்திருந்த அவன் விழிகள் ‘போ’ என்று தைரியம் தந்தன.
விஜி தன் கையில் இருந்த பெப்ஸியை கீழே வைத்து விட்டு எழுந்து உள் அறை நோக்கி நடந்து சென்று கதவைத் தட்டினாள். உள்ளேயிருந்து அதே போன்றதொரு ஒலி மேஜையிலிருந்து பதலளித்தது. விஜிக்கு வார்த்தைகள் விரல்களின் நுனியில் திணறத் துவங்கின. கதவிற்கு நேரே அறையின் அந்தப்பக்கம் மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய மேஜை நாற்காலியில் கெவின் அமர்ந்திருந்தான். கையில் புத்தகம். ஒல்லியான உருவம். பொன்னிறத்தில் தலைமுடி. முழு உருவம் பெற்று விரிந்திருந்த காதுகள். பிரதானமான தொண்டை முடிச்சு. இதழில் புன்னகை போல ஏதோ ஒன்று.
கெவின் தன் வலது உள்ளங்கையை வானம் பார்த்து விரித்து நெஞ்சோடு சேர்த்து மெல்ல கையை வெளியே அரைவட்டம் போல நகர்த்தி மீண்டும் நெஞ்சோடு கொண்டு வந்தான். (Welcome).
விஜி புன்னகைத்தாள். அறையை சுற்றி முற்றி பார்த்துவிட்டு, இடது உள்ளங்கையை விரித்து வலது கையால் அதன் மேல் தொடாமல் உராய்வது போல அசைத்து இரண்டு கைகளால் சிறிய பெட்டியை செய்து காட்டினாள். (Nice Room)
கெவின் நெஞ்சைத் தொட்டு தலையை லேசாக சாய்த்தான். இருவரும் புன்னகைத்துக்கொண்டார்கள். விஜி பேசுவதற்கு எதையாவது யோசித்தாள். அறையை மீண்டும் பார்த்தாள். தன் பள்ளிக்கூட குழந்தைகளை நினைத்துகொண்டாள். பாடங்கள், பாடல்கள், விளையாட்டு என சடசடவென யோசித்தும் ஏதும் சிக்கவில்லை. கெவினும் ஏதோ யோசித்துக்கொண்டே இருப்பது போலிருந்தது. இருவரும் அவ்வப்போது பார்வைகளை சந்திக்க அனுமதித்து அமைதியாக இருந்தனர். ஐந்தாறு நிமிடங்களுக்குப் பிறகு கெவின் அவளின் பார்வை அவனிடம் வரக் காத்திருந்து வலது ஆள்காட்டி விரலை உயர்த்தில் லேசாக இடம் வலமாக அசைத்து, விஜியை அதே விரலால் காட்டி, வலது பெருவிரலை நெற்றியில் தொட்டு மற்ற விரல்கள் அனைத்தையும் விரித்தான். (Where is your dad?)
விஜி அதிர்ந்தாள். தன் மோதிரத்தை உறுத்தாமல் விரலால் திருப்பிக்கொண்டே இருந்தாள். பின்னர் வலது கையை கீழ் நோக்கி பார்த்தபடி விரித்தும் இடது கையை மேல் நோக்கி பார்த்தபடி விரித்தும் வைத்து இரண்டு கைகளையும் மேலும் கீழுமாக திருப்பினாள். (Dead).
When?
Two months back.
விஜியும் கெவினும் தங்களது பார்வைகளை விலக அனுமதிக்காமல் அமைதியாக இருந்தனர்.
*****
ஃப்ராங்க்பர்ட்டில் நான்கு மணி நேரம் அடுத்த விமானத்திற்காக காத்திருக்கையில் தான் விஜிக்கு அழுகை வரத் துவங்கியது. முன்தினம் மதிய வாக்கில் தொலைபேசியில் அவளுடைய அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாக சுபி சித்தி சொன்னாள். படபடப்பாக பேசிய சுபி சித்தி ‘உடனே கிளம்பி வா’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள். (அதன் பிறகு அவள் அழுதிருக்க கூடும்). விஜிக்கு எதுவும் புரியவில்லை. அபத்தமாக சென்னை வீட்டிற்கு தொலைபேச முயன்றாள். அவளுடைய அப்பா அதை எடுத்து பேசப்போவதில்லை என்று தெரிந்தும். விஜி அமெரிக்கா வந்ததிலிருந்து தொலைபேசி அழைப்பிற்கு பதில் சொல்லித்தான் அவருடைய இருப்பை அவர் உறுதி செய்து வந்தார். மூன்று முறை அழைத்து யாரும் எடுக்காமல் போனதும் முரளியை அழைத்தாள். அரை மணியில் வீடு வந்த முரளி தொலைபேசியில் யாரிடமோ விமான டிக்கெட்டுக்களுக்காக பேசிக்கொண்டிருந்தபடி ஆறுதல் சொல்ல முற்படுமாறு அவளின் கரத்தை பற்றிக்கொண்டான். பின்னர் பாஸ்போர்ட், பணம், பெட்டி என நேரம் கடந்து மூன்று மணி நேரத்தில் விமானம் ஏறினார்கள். நியுயார்க்கிலிருந்து விமானம் ஃப்ராங்க்பர்ட் அடையும் தருணம் விஜிக்கு நிகழ்பவை தெள்ளத் தெளிவாக புரியத்துவங்கியது. முரளி பெட்டிகளை தள்ளிக்கொண்டு முன்னே நடந்து சென்றிருக்கையில் எங்கோ நின்றுவிட்ட விஜி காலியான நாற்காலி ஒன்றில் அமர்ந்து தேம்பி தேம்பி அழத்துவங்கினாள். பத்து நிமிடங்களில் அவளைத் தேடி வந்த முரளி சொல்வதறியாமல் அவளருகே அமர்ந்துகொண்டான். அவளருகே சாய்ந்துகொண்டு அவன் தோளைத் தொட்டதும் விஜிக்கு அவனால் அவளுடைய சோகத்தை புரிந்துகொள்ள இயலவில்லை என்பதும், இயலவும் இயலாது என்பதும் புரிந்ததும். அந்த தொடுகையை அவளால் துளியும் உணர முடியவில்லை.
ஒரு ஷாப்பிங் மாலின் இரைச்சலில் தான் முதன் முதலில் முரளி விஜிக்கு ஹலோ சொன்னான். அரை மணி நேர சந்திப்பில் திருமணத்திற்கு சம்மதமோ மறுப்போ சொல்லவேண்டிய கட்டாயம் இருவருக்கும். விஜி அங்கு வருவதற்கு முன்னரே சம்மதம் சொல்வதென முடிவு செய்திருந்தாள். முரளி எதிர்பார்த்ததை விட நேரில் அழகாக இருந்தான். சாதாரணமாக வந்திருந்தான் – ஒரு காபி குடிக்கவோ திரைப்படம் பார்க்கவோ வந்தவன் போல. முரளியின் இரண்டாவது பார்வையில் அவனுடைய விருப்பம் தெளிவாக புரிந்தது. அவள் அந்த சந்திப்பில் பேச விரும்பியது அவளுடைய அப்பாவைப் பற்றி. முரளி அமெரிக்கா திரும்பி செல்கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டே பேசலாம் என்று சொன்னதற்கு மறுப்பு சொல்ல விஜிக்கு தோன்றவில்லை. முதலில் ஒரு ஜெர்கினை எடுத்துப் பார்க்கையிலேயே, ‘உனக்கும் ஒண்ணு பாக்கலாமா? அங்க ரொம்ப குளிரும்’ என்றான். விஜி யோசித்து சரி என்று சொன்னதே திருமணத்திற்கான சம்மதம். ‘அப்பாவுக்கு இந்த சம்மந்தத்தில ரொம்ப விருப்பம். ஆனா அவர இங்க தனியா எப்படி விடறதுன்னு தெரியல. போன மாசம் தான் அவருக்கு அட்டாக் வந்தது. அதான் கல்யாணத்துக்கு அவசரப்படறார்’. ‘அப்பாவுக்கும்னு தான சொன்னே? இந்த சம்மந்தத்தில இஷ்டம்னு?’ விஜிக்கு புன்னகைக்க தோன்றவில்லை. அமைதியாக தலையசைத்தாள். ‘கவலப்படாத. தினம் பேசலாம். வீடியோ சாட் பண்ணலாம். இங்க பக்கத்துல ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க. பாத்துக்கலாம்’ என்றான். அடுத்த வாரத்தில் திருமணம் நடந்தேறியது.
முதல் முழுமையான முத்தம் அமெரிக்கா வந்த பிறகு தரவும் பெறவும் முடிந்தது. ஆனால் அது அலுவலகம் கிளம்பும்பொழுதோ பேச்சுவாக்கிலோ சமையல் பாராட்டிலோ அல்ல. முதல் வாரம் முழுக்க இரவுகளில் ஏதேதோ பேசுவதும் பேசும் போதே உறங்கிப் போவதும் சில கலைந்த முத்தங்களும் ஸ்பரிசங்களுமாக கழிந்தது. முதல் முறையாக இருவரும் கலந்த பொழுது அவர்கள் இன்னமும் காதலிக்கத் துவங்கியிருக்கவில்லை. நள்ளிரவிற்குப் பின் முரளி அயர்ந்து தூங்குகையில் விஜி இன்னமும் இந்திய நேரப்படி விழித்துக் கிடப்பதும் அப்பாவைப் பற்றி நினைப்பது வழக்கமானது. சில வார இறுதிகளில் வெளியே செல்வது, நண்பர்கள் வீட்டில் உணவருந்ததுல், பெரும்பாலும் அவனுடைய அலுவலகப் பணி என மிக வேகமாக இரண்டு மாதங்கள் கழிந்து முடிந்து பின்னும் ஏதும் சுவாரசியமான முன்னேறறமில்லை. மூன்றாவது மாதத்தின் துவக்கத்தில் அப்பாவின் மரணச் செய்தி வந்த பொழுது அதை எப்படிச் சொல்லப் போகிறோமெனத் தெரியாமலே அவனை அலைபேசியில் அழைத்தாள். அவனிடம் சொல்கையில் அவளுக்கு அழுகை வருமா இல்லை நான் வீட்டுக்கு போகணும்னு சொன்னேன் அப்பவே என்று கோபம் வருமா இல்லை அவனின் அரவணைப்பு வேண்டுமெனத் தோன்றுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் அழைப்பை எடுக்க இயலாமல் போனதால் ஒரு வாய்ஸ் மெசேஜில் சுருக்கமாக அப்பா இறந்துவிட்டதாகவும் உடனே புறப்பட வேண்டுமென்றும் தன் செய்தியை பதிவு செய்தாள். அதன் பிறகு இந்த இரண்டு மாதங்களில் இருவரும் அலைபேசியை எடுக்கத் தவறி குரலை பதிவு செய்து கேட்டுக்கொள்ளத் துவங்கியிருந்தனர்.
****
கெவின் அத்தனை காலையிலும் பளிச்சென இருந்தான். ஜூடி விஜிக்கு ஃபிரிட்ஜின் மேல் ஒரு செய்தியை எழுதி ஒட்டியிருந்தார். (மதிய உணவு ஃப்ரிட்ஜில் இருக்கிறது. நான் வர ஆறு மணியாகும்). கெவின் அவளுக்கு ஹலோ சொல்லிவிட்டு படிப்பை தொடர்ந்தான். விஜி தன்னுடைய புத்தகத்தை படிப்பதும் லாப்டாப்பில் மேய்வதுமாக இருந்தாள். கெவின் மிகவும் சகஜமாக உலவியது அவளது படபடப்பை குறைத்தது. சில சமயங்களில் ஏதேனும் கேள்விகள் கேட்பான். (இந்தியாவில் நேரம் என்ன? ரோமில் ஏதேனும் மியுசியம் பெயர் தெரியுமா? மாட்டுக் கறி எப்படி தின்கிறார்கள்?) விஜி தனக்குத் தெரிந்ததை சொல்லுவாள். கெவின் உன்னிப்பாக கவனித்தான். விஜியின் சைகை மொழி கச்சிதமும் நிதானமும் கொண்டது. அளவெடுத்தது போல அசையும் கைகளும் விரல்களும் இல்லாத ஒரு நூல் கொண்டு அவன் நீல விழிமணிகளை உடன் இழுத்தன. ஒவ்வொரு முறை பேசி முடித்ததும் புரிந்ததென்று சொல்ல ஒரு பார்வை சந்திப்பு. கெவினின் சைகை மொழி இன்னமும் செழுமையடையவில்லை என்றாலும் புரிதலில் பாதகமில்லை.
சரியாக இரண்டு மணிக்கு கெவின் புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான். ’ப்ரேக்’ என்றான். விஜி லேப்டாப்பை மூடிவைத்து விட்டு என்ன என்பதுவாக பார்த்தாள். கெவின் விழிகள் நிரம்பிய யோசனையுடன் பேசத் துவங்கினான்.
’நீ ரொம்ப சோகமா இருக்கே’
’எப்படி சொல்றே?’
’முதல் தடவ பாக்கும் போதே தோணிச்சு’
’ஒண்ணுமில்ல’
’அப்பா?’
விஜி அமைதியானாள்.
’சந்தோஷமா இருந்தாரா?’
’அப்படித்தான் நினைக்கிறேன்’
‘எனக்கு தெரிஞ்ச நிறைய பேர் இறந்து போயிருக்காங்க’
‘ம்’
‘ஒவ்வொருத்தரும் எப்படி இறந்தாங்கனு எனக்கு நல்லா தெரியும்’
‘ம்’
’இப்போ அவர் எங்க இருக்கார்னு நினைக்கிறே?’
விஜிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
‘இங்க கூட இருக்கலாம்ல?’
விஜி பதிலேதும் சொல்லவில்லை.
’ஆமா தானே?’
’தெரில’
’யோசிச்சு பாரு. இருக்கலாம்’
****
ஜூடி அலுவலகத்திலிருந்து சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தார். ‘இந்த பதினேழு மைலும் எனக்கு அத்துப்படி. பதிமூன்று வருடங்களாக காலையும் மாலையும் வாரத்தில் ஐந்து நாட்களும் போய் வருகிறேன் இல்லையா? ஒவ்வொரு முறை கெவினை யார் பொறுப்பிலாவது விட்டுச் செல்கையிலும் இந்த பதினேழு மைல்களை அடிஅடியாக உணர்கிறேன். கெவினுக்கும் எனக்குமான தூரம். அவனை பார்க்க விழையும் ஆர்வத்தில் மகிழ்ச்சியாக கடப்பதும், அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்தால் அவசரமாக கடப்பதும், அவன் துவண்டிருந்தால் அந்த சோகத்தை வந்தடையவும் இதே தூரம் தான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் அருகே இருக்கும் இன்னொரு அலுவலகத்திற்கு மாற வாய்ப்பிருந்தது. ஆனால் நான் செல்லவில்லை. எனக்கு இந்த பதினேழு மைல் தொலைவு இல்லையென்றால் என்னவோ போலிருக்கும் என்று நினைக்கிறேன். சில்லி.’ விஜி புன்னகைத்தாள். ‘உன் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் கால் மைல் கூட இல்லை. ஆனால் உனக்கு இப்போது முரளி வீட்டிற்கு வந்திருப்பான் என்று தெரிந்ததும் அந்த கால் மைல் தூரம் பெரிதாக தெரிகிறது தானே?’ ஜூடி அழகாக கண்ணடித்தாள். விஜிக்கு ஒரு வெற்று புன்னகையை உதிர்த்தாள். ‘சீக்கிரம் போ’ என்று ஜூடி அவளை துரிதப்படுத்தினார்.
முரளி காபி போட்டுக்கொண்டிருந்தபடி ‘ஹாய்’ என்றான். கெவின் எப்படி என்று விசாரித்தான். விஜிக்கு அவனை பிடித்திருப்பதாகச் சொன்னாள். அதிகம் தொட்டுப் பேசாதே, இங்கே பிள்ளைகளுக்கும் அது பிடிக்காது, பெற்றவர்களுக்கும் பிடிக்காது என்று யோசனை சொன்னான். பின்னர் அறைக்கு சென்று தொலைபேசியில் அலுவலக மொழி பேசத் துவங்கினான். ஃப்ரிட்ஜின் மேல் ஒரு கவர் இருந்தது. அதனுள்ளே இரண்டு சிடி இருந்தது. என்னவென்று கேட்கலாமா என்று நினைத்து வேண்டாமென முடிவு செய்தாள். லேப்டாப்பில் அதை போட்டு உயிர்பித்ததும், அவர்களின் ரிஷப்ஷன் வீடியோ ஓட ஆரம்பித்தது.
அவளின் அப்பா திருமணம் முழுக்க படபடப்பாக இருந்திருக்கார். அப்போதும் நெஞ்சு வலி லேசாக இருந்திருக்குமோ என்று விஜிக்கு தோன்றியது. விருந்தினர்களை அவர் அடையாளம் கண்டுகொண்டது போலவே தெரியவில்லை. எல்லோருக்கும் பொதுவான அவசரமான வரவேற்பு, விடைகொடுத்தல். சில உறவினர்களை விஜிக்கு அடையாளம் தெரியாமல் விழிக்கையிலெல்லாம் முரளி அமைதியாக அவர்களிடம் விவரம் கேட்பதும் கை குலுக்குவதுமாக இருந்தான். ரிஷப்ஷன் முழுக்க முரளியும் விஜியும் எதுவும் பேசிக்கொண்டது போலத் தெரியவில்லை. எல்லோரும் வாழ்த்துச் சொல்லி சென்றதும் கடைசியாக விஜியின் அப்பா மேடையேறுகிறார். முரளி அவரிடம் ஏதோ சொல்கிறான். மூவரும் சிரிக்கிறார்கள். முரளி அவனுடைய கர்ச்சீஃப்பை எடுத்து அவரிடம் நீட்டுகிறான். அப்பா மறுத்துவிட்டு கைகளால் நெற்றியை துடைக்கிறார். ஃபோட்டோகிராபர் அவர்களின் கவனத்தை கலைக்கிறார். ஃபோட்டோ எடுக்கிறார். மீண்டும் விஜியின் அப்பா மேடையேறுகிறார். முரளி அவரிடம் ஏதோ சொல்கிறான். மூவரும் சிரிக்கிறார்கள். வீடியோ மீண்டும் மீண்டும் ஓடுகிறது.
முரளி உணவு உண்ண வரும்பொழுது லேசாக ஏதோ பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தான். விஜி ஒரு தமிழ் படத்தை ஓட விட இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். படம் முடியாமல் நீண்டுக்கொண்டே இருந்தது. விஜி பாத்திரம் தேய்க்க முரளி அவ்வப்போது சில உதவிகள் செய்வதும் படத்தை கேலி செய்வதுமாக இருந்தான். படம் முடிந்ததும் முரளி உள்ளே சென்றுவிட்டான். விஜி அர்த்தமில்லாமல் அடுப்பை துடைப்பது பாத்திரங்களைஅடுக்குவது என்று நேரம் கடத்திவிட்டு உள்ளே செல்கையில் விளக்குகள் அணைந்து முரளி படுத்திருந்தான். நாளை கெவினுக்கு ரிஷப்ஷன் வீடியோவை காட்டலாம் என்று நினைத்தபடி விஜி கண்களை மூட, கடைசி முத்தமும் உணவு வேலை வானிலை உடை சமையல் என்ற சம்பிரதாயங்களைத் தாண்டிய கடைசி வார்த்தையும் எப்போது நிகழ்ந்ததென நினைவிலில்லை என்று ஒரு எண்ணம் தொடர்பின்றி தோன்றி மறைந்தது.
***
’ஹார்ட் அட்டாக்’
’எப்படி?’
’முன்னயே வந்தது. நான் அமெரிக்கா வரதுக்கு முன்ன’
’டாக்டர் என்ன சொன்னார்?’
’ஜாக்ரதையா இருக்க சொன்னார். நான் எதிர்பார்த்தேன்’
’புரில’
’கனவு வந்துட்டே இருக்கும் எதாச்சும்’
‘ம்’
’ஏதோ கண்ணாடிக் கதவுக்கு பின்னால இருந்து அவர் பேசறார் என்கிட்ட. நாங்க எப்பவோ போன ஒரு எடம் தான் அது. ஆனா எதும் நினவுமில்லை. இதே கனவு’
’நீ திரும்ப போகனும்னு நினச்சியா?’
விஜி அமைதியாக தலையசைத்தாள்.
’ஏன் போகல?’
’தெரில’
சிறு அமைதிக்கு பின்னர் விஜி தொடர்ந்தாள். ‘முரளியும் நானும் பேசினோம். ஆனா போகல..’ விஜி சொல்ல சொல்ல அவளுடைய விரல்கள் நடுங்கத் துவங்கி கைகள் அசைவதை நிறுத்தின. விஜி அழுகையை கட்டுபடுத்த முயன்று மூச்சு பலமானது. கெவின் எழுந்து வந்து அவளருகே நின்றான். விஜி அவனைப் பார்க்காமல் ஜன்னல் பக்கமாக திரும்பிக்கொண்டாள். கெவின் அந்த ஒரு வாரத்தில் முதல் முறையாக விஜியின் விரல்களை பெரும் யோசனையுடன் பற்றினான். மெல்ல அவளின் விரல்களின் சைகைகள் செய்யத் துவங்கினான். ‘நீ என்னனு நினச்சு அங்க போயிருப்பே? அவருக்கு எதாச்சும் ஆகும்னா?’ விஜி அவனுடைய கைகளை பற்றி இல்லையென அவசரமாக மறுத்தாள். ‘அப்புறம்? உன்னால அப்படி போக முடிஞ்சிருக்காது. நீ போனாலும் ஒண்ணும் ஆகியிருக்காது’ கெவின் அழுத்தந்திருந்தமாக சொன்னான்.
***
ஜூடி முதல் முறையாக விஜியிடம் அவளுடைய அப்பாவைப் பற்றி கேட்டார். தொடர்ந்து பல மரணக் கதைகளை சொன்னார். ஷான் அம்யூஸ்மெண்ட் பார்க்கில் உயரத்திலிருந்து கயிறு அறுந்து விழுந்ததைச் சொன்னார். ஒரு நொடியில் எதிர்பாராமல் மரணமடைந்தவர்கள். வெகு நாட்களாக உடல் நலம் குன்றி இறந்தவர்கள். ஆர்வமாக பல கதைகள் சொல்லிக்கொண்டேயிருந்தார். ‘நீ டாம் வெயிட்ஸ் பாடல்களை கேட்பதுண்டா? அவர் ஒரு இடத்தில் ‘Rain makes such a lovely sound to those who are six feet underground’ என்று பாடுவார். அந்த சிடி தருகிறேன். இறந்தவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நாம் தான் வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்’ என்று முடித்தவர், விஜிக்கு அருகே வந்து ரகசியமாக ‘ஷானை வீட்டிற்கு பின்னே தான் புதைத்திருக்கிறோம். மழை வருகையிலெல்லாம் எனக்கு ஷான் கேட்டுக்கொண்டேயிருக்கிற சத்தங்கள் கேட்கும்’ என்றார். விஜிக்கு அவர் பேசுகிற தொனியும் விஷயங்களும் லேசாக கலக்கமாக இருந்தது.
தாமதமாக வீட்டிற்கு வந்ததும் கிச்சனில் சமையல் முடிந்து அனைத்தும் தயாராக இருந்தது. உள்ளே முரளி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆர்வமாக ஃபிரிட்ஜின் மேல் பார்த்தாள். இன்றும் ஒரு பெரிய பெட்டி இருந்தது. அவசரமாக அதை திறந்தாள். அதில் அப்பா வீட்டிலிருந்த சில பொருட்கள் – சிறிய கடவுள் விக்ரகம். கீசெயின்கள். பேனாக்கள். சுவரில் மாட்ட ஏதுவாக அப்பாவின் புகைப்படம் ஒன்று. முரளி தான் அந்த புகைப்படத்தை ஏராளமான ஆல்பங்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து சுபி சித்தியிடம் பிரிண்ட் போட கொடுத்திருந்தான். சென்னைக்கு விஜியும் முரளியும் சென்று சேர்ந்த பொழுது சுபி சித்தி எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தாள். முரளி அனைத்து காரியங்களையும் முன்னெடுத்துச் செய்தான். உறவினர்களுக்கு ஆறுதல் சொன்னான். சிதைக்கு அவனே தீ மூட்டினான். ‘அவ இங்க வரணும்னு சொல்லிட்டிருந்தா. நான் தான் ஒரு மாசம் தானே ஆச்சு. பாக்கலாம்னு சொல்லி தட்டிக்கழிச்சிட்டேன்’ என்று ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்பது போலக் கேட்டான். சோகத்தை மீறி செய்ய வேண்டிய அனைத்தையும் பொறுப்பாக செய்து முடித்தான். விஜிக்கு அவன் தன்னுடைய சோகத்தினுள்ளே வர இயலாமல் தவிப்பது பெரும் வலியாக இருந்தது. ஒரு கணம் அவள் யாரையோ திருமணம் செய்திருப்பதாக நினைத்தாள். சில இரவுகளில் அமெரிக்காவில் இருட்டில் சிற்சில நொடிகளில் தன்னை முத்தமிடுவது யாரென புரியாதது போலிருக்கும் அதே உணர்வு.
முரளி சட்டென அறைக்குள் வந்து ‘க்ராசரீஸ் போலாமா? நாளைக்கு சமைக்க ஒண்ணுமே இல்லை’ என்றான். ஐந்து நிமிடங்களில் இருவரும் காரில் புறப்பட்டார்கள். மூன்று பாடல்களை கார் பாடி முடித்ததும் கடை வந்தது. விஜிக்கு ஒவ்வொரு பாடலும் பிடித்திருந்தது. முரளிக்கு கடையில் சிலர் ஹாய் சொன்னார்கள். முரளி ‘இது வாங்கலாமா?’ என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு காய்கறியாக பார்த்துச்சென்றான். காப்ஸிகம்களை எடுத்து வைக்கையில் ‘அன்னைக்கு அந்த கறி நல்லா பண்ணே. இந்த வாரமும் பண்ணு’ என்று பொதுவாக யாரையும் பார்க்காமல் சொன்னான். விஜி விழிகளில் வியப்பை லேசாக காட்ட முயன்றாள். வீட்டிற்கு புறப்பட்ட கார் வழியில் எங்கோ நின்றது. ‘கோயில்?’ என்று முரளி கேட்டான். விஜி தயங்கி, ‘நான் இன்னைக்கும் நாளைக்கும் போகக் கூடாது’ என்றாள். ‘ஓ’. கோயிலிருந்து இறங்கி வருபவர்கள் காரையும் இருவரையும் பார்த்தபடி நகர்ந்தார்கள். ‘சரி, நான் போய் பிரசாதம் வாங்கிட்டு வரேன். பாட்டு கேட்டுட்டு இரு’ என்று சொல்லிவிட்டு முரளி இறங்கிச் சென்றான். ‘சாமி நம்பிக்கை இல்லைனு சொன்னதா ஞாபகம்’ என்று சொல்ல முற்பட்டு அமைதியானாள். பாடல்கள் துவங்கி பெருகி நிறைவடைந்தன. கோயில் மணி சன்னமாக கேட்டது. சாம்பல் நிற டிஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் கையில் பிரசாதமுமாக முரளி சாலையின் மறுபக்கம் வந்து நின்றான். சரசரவென விரையும் வாகனங்களுக்காக காத்திருந்தான். ஒவ்வொரு முறையும் விஜியை பார்க்கையிலும் புன்னகைத்துக்கொண்டே இருந்தான். ஒட்டமும் நடையுமாக சாலையை கடந்து காரில் ஏறி அவளிடம் பிரசாதத்தை நீட்டி ‘வெச்சுக்கோ’ என்றதும் அவள் வீட்டுக்கு போயி வெச்சுக்குறேன் என்றாள். ‘இரு’ என்று சொல்லிவிட்டு அவள் சீட்டின் முன்னே தலைக்கு மேல் இருந்த வைசரை கீழிறக்கி அதிலிருந்து ஒரு சிறு கண்ணாடியை திறந்தான். ‘பாத்து வெச்சுக்கோ’ என்று புன்னகைத்தான். விஜி அதில் தன் விழிகளைப் பார்த்ததும் முரளி ஒவ்வொரு நொடியும் அவளின் விழிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் வெறுமை பளிச்சென தெரிந்து அதிர்ந்தாள்.
****
கெவினிடம் குட் மார்னிங் சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்து கொஞ்சம் நேரம் தனியாக இருக்கலாம் என்று தோன்றியது விஜிக்கு. ஃப்ரிட்ஜின் மேலே ஜூடி ஏதாவது எழுதி வைத்திருக்கிறாரா என்று பார்த்த பொழுது பெரிய ஸ்மைலி போட்டு ஜூடி என்று கையெழுத்திட்டிருந்தது. விஜிக்கு சிரிப்பு வந்தது. அதை கையிலெடுத்துக்கொண்டு கெவின் அறைக்கதவை தட்டித் திறந்தாள். கெவின் குட் மார்னிங் சொல்லி நிறுத்தாமல் கொஞ்சம் நேரம் ஹாலில் வேண்டுமானாலும் இரு என்று சொல்லி கண்சிமிட்டினான். விஜி சரியென தலையசத்துவிட்டு வந்த புத்தகத்துடன் அமர்ந்துகொண்டாள். அவளின் கவனம் புத்தகத்தை மீறி முரளியைச் சுற்றிக்கொண்டிருந்தது. திருத்தமான மீசை. அப்பாவின் உடலை கொண்டு செல்கையில் முதல் ஆளாக நின்றது. நல்ல உயரம். உதட்டிற்கு கீழே முழுதாக மழிக்காமல் பொடிப்பொடியான சிற்சில முடிகள். கணீரென்ற குரல். ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் அவளைத் தேடிக்கொண்டு வருகையில் அவளை நாற்காலியில் அழுத வண்ணம் பார்த்தபொழுது கண்கள் கொண்ட லேசான கலக்கம். சன்னமான கட்டங்கள் நிரம்பிய சட்டைகள். முத்தமிடும் பொழுது உதடுகளில் லேசான உச்சுக்கொட்டுதல்.
சுமார் பதினோரு மணியளவில் கெவின் அறையிலிருந்து மேஜையை தட்டும் ஒலி கேட்டது. அவள் எழுந்து உள்ளே செல்வதற்குள் மேஜை மீண்டும் பலமாக தட்டப்பட்டது. உள்ளே கெவின் கண்கள் இரண்டும் ஆழச் சொருக சொருக அமர்திருந்தப்பதைப் பார்த்து விஜி பயந்தாள். அவனின் மூச்சு சீராக இருந்தாலும் பெரும் பலம் கொண்டிருந்தது. ‘கெவின்’ முதல் முறையாக அவள் வாய்விட்டு அவன் பெயரை அழைத்தாள்.‘என்னாச்சு?’ஆங்கிலத்தில் பேசியபடி அருகே சென்று கன்னம் தொட்டாள். கெவின் மூச்சுடன் போட்டி போடாமல் அது அவனை அனுமதித்த பொழுதில் நிதானமாக சைகை காட்டினான். ‘ஹாஸ்பிட்டலுக்கு ஃபோன்’. விஜி அவசரமாக ஃப்ரிட்ஜுக்கு சென்று அதிலே ஒட்டப்பட்டிருந்த எமர்ஜென்ஸி நம்பர்களை எடுத்துக் கொண்டு ஃபோனை எடுத்துக்கொண்டு கெவினிடம் சென்றாள். கெவினுக்கு மூச்சு பெரும் போராட்டமாகியிருந்தது. ஆனால் துளியும் பதறாமல் அவன் ‘பயப்படாத. ஒண்ணுமில்ல’ என்றான். ‘பை எடுத்து தயார் பண்ணனும்’ என்றான். வரிசையாக பொருட்களைச் சொல்லச் சொல்ல அவள் எடுத்து பையில் வைத்தாள். மாத்திரைகள் நிரம்பிய பை. தண்ணிர் பாட்டிகள். புத்தகம். அலமாரியிலிருந்து தயாராக இருந்த இரண்டு உடைகள். ‘அம்மாவுக்கு ஃபோன்?’ என்று விஜி கேட்டதை கெவின் கண்டுகொள்ளவில்லை. ‘அப்புறம்’ என்று சொல்லிவிட்டு கெவின் செய்த சைகை விஜிக்கு சுத்தமாக புரியவில்லை. ஆம்புலன்ஸ் ஒன்று சத்தத்துடன் வீட்டு வாசலில் வந்து நின்றது
‘என்ன சொல்ற கெவின்?’
கெவினின் கைகள் அவனை கைவிடத் துவங்கியிருந்தன. உதட்டிலிருந்து லேசாக எச்சில் வழியத் துவங்கியிருந்தது. கண்கள் அரை மயக்கத்திலிருந்தன. ஆறேழு மூச்சிரைப்பிற்கு பின் கெவின் மீண்டும் சைகை செய்ய, விஜி விழித்தாள். ஏனோ கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.’சாரி, புரியல. நான் வேணும்னா..’என்று நகர முற்பட்டவளை கெவின் நாற்காலியிலிருந்து முன்னகர்ந்து வந்து இருகைகளையும் வேகமாகவும் ஆவேசமாகவும் அசைத்து STOP என்று அவளை நிறுத்தினான். மெல்ல மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ‘தயவு செய்து பயப்படாதே. தயவு செய்து’ என்றான்.’சாரி, மாட்டேன். உனக்கு என்ன எடுத்து வெக்கணும்?’ கெவின் சன்னமாக கற்பனை பொருளை இரு விரல்களால் பிடித்து மேஜையின் மேல் மேலும் கீழுமாக வேகமாக அதை இழுத்தான். விஜி ‘க்ரெடிட் கார்டா?’என்றாள். அவளின் உதட்டசைவை கவனித்து மகிழ்ச்சியில் கெவின் மூச்சோடு மூச்சாக ‘ஹா’ என்று ஒரு முறை கைதட்டினான்.
ஆம்புலன்ஸில் ஏறி புறப்பட்டதும் விஜி மொபைலை மறந்தது நினைவுக்கு வந்தது. அருகே படுத்திருந்த கெவினிடம் ‘ஃபோன் மறந்துட்டேன். உனக்கு அம்மாவுக்கு ஃபோன் பண்ணனுமா?’ என்று கேட்டாள். அவன் ஆஸ்பத்திரிக்கு போன பிறகு செய்யலாம் என்றான். பக்கத்திலிருந்த டாக்டரிடம் சைகையில் அவன் ஃபோனை கேட்க அவர் ஃபோனை எடுத்து விஜியிடம் தந்தார். ‘யாருக்கும் பண்ணட்டும்?’ கெவின் யோசித்துவிட்டு ஒவ்வொரு ஆங்கில எழுத்தாக சைகையில் சொல்ல, விஜி முரளி என்று படித்தாள்.
ஆஸ்பத்திரியில் நர்ஸுகள் தயாராக இருந்தனர். ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததும் அனைவரும் வேகமாக இயங்கினர். கெவின் அங்கு மிகவும் பரிச்சயமானவன் என்று விஜிக்கு புரிந்தது. உள்ளே நுழைந்ததும் கெவின் அதுவரை கட்டுப்படுத்தி வைத்தவன் போல துடிக்கத் துவங்கினான். நர்ஸுகள் பயப்படவேண்டாம் என்று சொல்லியபடி அவனை உள்ளே எடுத்துச் சென்றார்கள். விஜி விரல் நகங்களை கடிப்பதும் கண்ணாடி வழியே அவ்வப்போது எட்டிப்பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
சரியாக நாற்பது நிமிடங்களில் முரளி அங்கு வந்தான். விஜி தூரத்திலிருந்து அவன் தானா அவன் தானா என்று மீண்டும் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டே இருந்தாள். அவன் அருகே வந்ததும் ‘உள்ள இருக்கான்’ என்று கைகாட்டினாள். சிறிய வட்டமான கண்ணாடி வழியே விஜியும் முரளியும் எட்டிப் பார்த்தனர். ‘இது நார்மல் தான். பயப்படாத. நான் ரெண்டு மூணு தடவ பாத்திருக்கேன்’ என்றான். விஜி வேகமாக ஆமோதித்தாள். ‘உன் விரல்லாம் ஏன் நடுங்குது?’ என்று கேட்டான். ‘ரொம்ப பயந்துட்டியா? பயப்படாத’. விஜி சரியென்றாள். முரளி அவளையே கலக்கமாக பார்த்துக்கொண்டிருந்தான். ‘ஒண்ணுமில்லடா, ஒரு ரெண்டு மணி நேரத்துல நார்மல் ஆயிடுவான்’. விஜிக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழியத்துவங்கியது.
’ஹாய், சாரி’ ஜூடியின் குரல் கேட்டது. ‘டாக்டர் அழைத்தார். ஒண்ணுமில்லை. யுஷுவல் தான். பயப்படாதீர்கள். நான் அவனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்கிறேன். சாரி’ ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்றான் முரளி. ஜூடி மிகவும் துவண்டிருந்தார்.‘கொஞ்சம் தாமதாகி விட்டது. நிறைய ட்ராஃபிக் வழியெங்கும். என்றுமில்லாதது போல இன்றும் கொஞ்சம் பயந்துவிட்டேன்’விஜியின் கன்னங்களை மெல்லத் தொட்டு,’ரொம்ப பயந்து போனாயா? ரிலாக்ஸ்’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
முரளி தன் ஆள்காட்டிவிரலால் விஜியின் கைகளை பார்க்கச்சொல்லி சொன்னான். விஜி மெல்ல தன் கைகளை மேலெடுத்து பார்த்தாள். விரல்கள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தன. அவற்றை பார்த்தபடி லேசாக கைகளை முரளியின் பக்கம் நீட்டினாள். முரளி விஜியின் கண்களில் ஊடுருவிப் பார்த்து அவள் கைகளை பற்றிக்கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். ’அங்க போய் உட்காரலாம்’ என்பது போல அங்கிருந்த நாற்காலிகளை காட்டினான். அவனுடைய கைகளை இறுகப்பற்றிக்கொண்ட விஜி மெல்ல நெருங்கி அவனை இறுக்க அணைத்துக்கொண்டு நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.‘என்னடா ஆச்சு’ முரளியின் குரல் இடறியது. ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.‘இங்க பாரேன்’. மேல் நோக்கிப் பார்த்தவளின் நெற்றியில் யோசித்து யோசித்து சிறிய முத்தமொன்றை வைத்தான்.’ஏன் இப்படி வேர்த்திருக்கு?’என்று கேட்டுவிட்டு பாக்கெட்டிலிருந்து கர்ச்சீஃபை எடுத்து அவளின் முகத்தை அழுத்தமின்றி துடைத்தான். அவளின் தலைமுடியை லேசாக கைகளால் சரிசெய்தான். விரல்களை எடுத்து ஒவ்வொன்றையும் இதமாக மடித்து வலி தீர்த்தான். விஜி மீண்டும் சட்டென அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள். பின்னர் மீண்டும் தலை நிமிர்த்தி அவனை பார்க்க, முரளி புருவங்களால் என்ன என்று கேட்டான். விஜி உதடுகளை பிதுக்கினாள். முரளி மெல்ல புன்னகைத்து மீண்டும் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டான்.
P.S – அலுவலக வலைதளத்தில் நடக்கும் ‘Death Short Story Contest’க்காக எழுதியது.
