வெளிச்சதை குடித்த நினைவுகள்
மனித உணர்வுகளின் மண்டலத்திற்கு மேலுள்ள அடுக்கில் நிகழ்கிறது குழந்தைக்கும் அதன் பொம்மைக்குமான ஈர்ப்பு. சாவி கொடுத்தால் கை தட்டியபடி விரைவன, ஏதும் செய்யாமல் உறைந்த புன்னகையுடன் இருப்பன, உள்ளுக்குள் எங்கேயோ ஏராளமான ஒளியை தேக்கி வைத்துக்கொண்டு இருளில் சிரிப்பன என வகை வகையான பொம்மைகளை காண்பித்து குழந்தைகள் கையில் வாங்கிக்கொண்டு, நாமும் அந்த அடுக்குக்கு செல்ல முயற்சிக்கிறோம். பத்தே நிமடங்களில் குழந்தைகள் மிகச்சாதூர்யமாக நம்மை துறந்துவிட்டு பொம்மையுடன் தனியே சென்று விடுகின்றன. குறைந்த பட்சம் குழந்தைகளின் நினைவுகளில் நம்மை பதித்துக்கொள்ளலாமல் என்ற பேராசை வேறு ஒரு பக்கம். அக்காவின் குழந்தைகள் தங்களின் முதல் ஏழு மாதங்களை இங்கு கழித்த போது, அம்மாவும் நானும் ஏதேதோ செய்து எங்களின் அடையாளங்களை அவர்களிடம் கொடுத்தனுப்ப முயன்றோம். அம்மாவுக்கு இரு பெண்களை கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், எனக்கு எட்டு மணிக்கு மேல் வீட்டுக்கு செல்ல முடியாத கட்டாயம். கிடைத்த நேரம் எல்லாமல் தொடர்ந்து முயன்று, நாங்கள் பார்க்கும் போதெல்லாம் குழந்தைகள் புன்னகைக்கும் வரத்தை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தோம். கடல் கடந்து சென்ற இருவரும், எங்களை முழுக்க இப்போது மறந்துவிட்டார்கள். ஒரு ஆறு மாதங்கள் வேறு உலகத்தில் இருந்து விட்டு பெரிய அக்காவின் குழந்தை மீண்டு இங்கு வந்திருக்க, மீண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. வார்த்தைகள் மூலம் எங்களின் அடையாளங்கள் சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். (குழந்தை அகராதியின் வார்தைகள், எங்களுடையவை அல்ல). இன்னும் சரியாக ஒரு மாதம் எங்களுக்கான காலம். அவளின் அடுத்த பெரும்பயணத்திற்கு தேவையான நினைவுகளை தினம் தினம் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம். அவள் இங்கு இல்லாத ஒரு மின்சாரமில்லாத இரவில் அவளின் பொம்மை தனியாக இருக்கும் போது எடுத்த இந்த புகைப்படம் இது, எங்களுக்குப் மிகப்பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
*****
நானாக விரும்பி கடைசியாக சென்ற கோயில், கல்லூரி விடுதியில் இருந்த சிறிய கோயில். ஒரே ஒரு கடவுள், ஒரே ஒரு விக்ரகம், ஒரே ஒரு மணி; சுற்றி வர ஒரே ஒருவழிப்பாதை. சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த கடலின் காற்று. கொஞ்சம் மேடான இடத்தில் அந்த கோயில், கீழ் நோக்கி தரைக்கு புல்வெளியாக சரிந்திருக்கும். கல்லூரிக்குள் முதன் முறை நுழையும் போது அம்மாவும் நானும் அங்கே தான் முதலில் சென்றோம். அவசர அவசரமாக, என் மொத்த நான்காண்டு படிப்புக்கும் வேண்டிக்கொண்டேன். பின்னர், அடிக்கடி மாலைப்பொழுதுகளில் மிகப் பெரும் பிரார்த்தனைச் சுமைகளுடன் அதை சுற்றி வர ஆரம்பித்தேன். ஒவ்வொரு சுற்றுக்கும் உதிர்ந்த பிரார்த்தனைகள், ஒரு கட்டத்தில் முற்றிலுமாக உதிர்ந்து ஒழிந்தது. அந்த நாளில் என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே சுற்றி வந்து விட்டேன். அலுவலக நண்பரை அலுவலில்லாத இடங்களில் தற்செயலாக பார்த்தால் என்ன பேசுவென்று தெரியாமல் விழிப்பது போல, அங்கு சென்றால் என்ன செய்வது என்று தெரியாமல், முதுகுக்குப் பின்னால் கடவுள் அமர்ந்திருக்க, கடல் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உப்பளங்களைப் பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, எழுந்து வந்து விடுவேன். அந்த வருடத்தில் மற்ற எல்லோரையும் விட அதிகம் நானே அந்த கோயிலுக்குச் சென்றிருப்பேன். கடைசி நாள் அங்கே போய் வந்த பின், மூன்று வருடங்களாக எந்தக் கோயிலுக்கும் செல்லவில்லை. இடையில் இரண்டு முறை பிரசித்தி பெற்ற கடவுளை வரிசையில் நின்று பார்க்க டிக்கெட்டுகள் வாங்கி வந்த போது, கடவுளை தரிசித்தேனா என்று அம்மாவின் கேள்விகளுக்கு ஒற்றை எழுத்துகளில் பதில் சொல்லி குழப்பியிருந்தேன். அம்மா, அக்காவுடன் ஒரு நாள் முழுக்க பல கோயில்களுக்குச் சென்ற போது, காமிராவோடு நான் தனியே சுற்றிக்கொண்டிருந்ததை பார்க்காதது போல பார்த்துக்கொண்டிருந்த இருவரையும் நிற்க வைத்து புகைப்படம் எடுத்த போது கொஞ்சம் முறைத்தார்கள்.

(படங்கள் – தஞ்சாவூர் பெரிய கோயிலில் எடுத்தவை)
*****
நண்பர்கள் மெதுவாக உதிர்கிற காலம் புலர்ந்துவிட்டது. பணி காரணமாக, படிப்பு காரணமாக எல்லோரும் வெவ்வேறு திசையில் சென்றுகொண்டிருக்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் தனிமையை விரும்புகிறேன். இதை யாரிடம் சொன்னாலும், நிறைய திட்டு விழுகிறது. தனிமையை விரும்புவது ஏதோ குற்றம் போல. அதனால்,
பூட்டிய அறையில்
தனித்து நிற்கும்
மெழுகுவர்த்தியின் தீர்க்கத்துடன்
நிறுத்தியிருக்கிறேன்
என்னுள்
என் அகத்தை
யாரும்
வராதீர்கள்
காற்றென
என்று எழுதியதை அன்று பதிக்காமல் அழித்துவிட்டேன்.
பயாஸ்கோப் #2
தமிழ் சினிமாவின் காதல் உணர்வுகளோடு, காட்சிகளோடு பெரும்பாலான சமயங்கள் ஒத்துப்போக முடிவதில்லை. அபத்தக் களஞ்சியங்களாக விரியும் எண்ணற்ற படங்களுக்கு மத்தியில், மனதை மெல்லத் தொட்டுச் சென்றவையும் சில உண்டு. காட்சிகளை பட்டியலிட்டு பட்டியலிட்டு ரொம்ப அலுத்துவிட்டது. அதான் இந்த முறை கொஞ்சம் வேறு விதமாக, இருபது ‘கணங்களை’ தேர்தெடுத்திருக்கின்றேன். ஹாஸ்யம், வருத்தம், திரில், குழப்பம் என பல்வேறு உணர்வுகளுடன் காதல் கலக்கையில் ஏற்படும் கணங்கள். சிலது முழுமையான காட்சியாக வசீகரித்த கணங்களாகவும் இருக்கலாம். ஹைக்கூவோ நெடுங்கவிதையோ, கவிச்சுவை ஒன்று தான் என்பது போல, இந்த கணங்கள் குறிலோ நெடிலோ, காதல் சுவை ஒன்று தான்.
சரி, மொத்த தமிழ் சினிமாவையும் அலசுவதா என்றால், இல்லை. இந்த காதலர் தினம் இந்த பத்தாண்டின் (தசாப்தம்?) முதல் காதலர் தினம் என்பதால், கடந்த பத்தாண்டுகளில்(2000-09) தமிழ் சினிமாவில் வந்த காதல் கணங்களில் எனக்குப் பிடித்தவை. சுமார் ஐம்பது குறிப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட இருபது இங்கே. திரைப்படங்களில் நான் காதலை கவனிக்கத் தொடங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டது என்பதும் எக்ஸ்ட்ரா காரணம்
இவை தரத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படவில்லை.
#1 – தன்னுடைய சிறிய வயதுக் கனவுகளின் இளவரசி, இன்று அடித்தட்டு மக்களுடன் புழங்கி, மழைக்கு எங்கோ ஒடுங்கிக் கிடக்க, சாப்பிட்டு முடித்ததும் பித்தளை பாத்திரத்தில் மழை நீரை வாங்கி அருந்த, சட்டென அவனும் அருந்தி ஒரு நொடி அத்தனை பேதங்களையும் மறத்தல். (அழகி – உன் குத்தமா என் குத்தமா?)
#2 – ஆசை ஆசையாக செய்த வாழ்த்து அட்டையை, நண்பர்கள் படை சூழ காதலியின் வீட்டுக்கு கொண்டுப் போக, முன்னெப்போதோ தொலைந்து போன நண்பனின் மனைவி தான் இந்தக் காதலி என்றறியும் கணத்தில் வாழ்த்து அட்டை வெளியே வந்து “ஈஸ்வரி, உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசப்படறேன்” என்று படபடக்கும் மனதைப் போல கீழே விழும். (5 ஸ்டார்)
#3 – கடைசி வரை கல்பனா, தான் உண்மையாகவே சஞ்சய் ராமசாமியின் காதலி என்பதை அறியாமல் இறந்தது, ரொம்ப வருத்தம், இல்லையா? (கஜினி)
#4 – இன்னும் காதலை இருவரும் சொல்லிக்கொள்ளவும் இல்லை, என்ன செய்வதென்றும் புரியவில்லை. வீட்டில் இன்று மாலை பார்ப்பதற்கு அழைத்திருந்த வரன் அவனுடன் / அவளுடன் என்றறியாமல் வீட்டிற்கு போகாமல் காதலர்கள் இருவரும் தனித்தனியே மாலை முழுக்க மாநகரத்தை சுற்றித் திரிவது (பார்த்தேன் ரசித்தேன்)
#5 – “போன தடவ கேட்டப்போ பேரு ஸ்டெல்லானு சொன்னீங்க?” “அது சும்மா பேருக்கு”. (ரன்)
#6 – தன் வாழ்க்கையின் தேவதை கிடைத்து விட்டாள், அத்தனை அத்தனை தடைகளையும் தாண்டி என்று தலை தெறிக்கும் உற்சாகத்தில் கொட்டும் மழையில் “திவ்யா திவ்யா” என்று நடனமாடுவது! (காதல் கொண்டேன்)
#7 – ரத்தக் கறை படிந்த சாக்கு மூட்டையில் கிடப்பது அவனா என்ற பயத்தில் திரும்பிக்கொண்டு கை விரல்கள் நடுங்க நடுங்க கடவுளை வேண்டுவது (பிதாமகன்)
#8 – காத்திருந்தவனுக்காகவா, காத்திருப்பவனுக்காகவா என்று குழப்பம் அலையடித்து ஓய்ந்ததும், புன்னகை முகமூடிகள் அணிந்து காத்திருந்தவனுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருக்க, முகமூடியை விலக்கி அது காத்திருந்தவனல்ல, மற்றொருவன் என்று கண்டு அதிர்ச்சியடையும் ஒரு தலைகீழ் நொடி (இயற்கை)
#9 – உறக்கம் இல்லா முன்னிரவில் யாரோ ஒருவன் இசைத்த பாடல் முடிவடைந்ததும் விடியும் காதல் காலை (அலைபாயுதே)
#10 – சரியான வழிசல் பார்ட்டி என்று நினைத்தவன் குழந்தைகள் காப்பகத்தின் கதையை விளக்கையில் கண்ணில் நீர் துளிர்க்க, “மை கலைஞ்சிடுச்சு” என்று சொன்னதும் சட்டென வெட்கப்படுவது (ரிதம்)
#11 – “ஆக்ச்சுவலி சொல்லப் போனா எனக்கு வெக்கம்லாம் ஒண்ணும் இல்ல.” (காக்க காக்க)
#12 – வாழ்க்கையின் மற்றொரு திருப்பத்தில் சந்தித்த அவனை, அவன் பார்க்காத போது இவள் திரும்பி திரும்பிப் பார்த்தபடி நடக்க, இவளை அவள் பார்க்காத போது இவன் திரும்பி திரும்பிப் பார்த்தபடி நிற்க, ஒரு நொடியில் விழிகள் சந்தித்து ஓடி வரும் போது, திடீர் விபத்து. (12B)
#13 – அவளுக்கே தெரியாமல் அவள் விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப கறுப்பு வெள்ளையில் புது வீட்டை அலங்கரித்து காத்திருத்தல் (பார்த்திபன் கனவு)
#14 – “கை நடுக்கம் நிக்கறதுக்கு மேஜை மேலெ உங்க எல்போவ வெச்சு, இன்னொரு கையால காஃபி கப்ப….” (சத்தம் போடாதே)
#15 – பூம்! (அழகிய தீயே)
#16 – மண்ணின் மீதான காதலும் பெண்ணின் மீதான காதலும் சேர்ந்த அந்த உறவில், மழையும் மண்ணும் சேர்ந்த சேற்றை எடுத்து மாற்றி மாற்றி கன்னத்தில் பூசிக்கொள்ளுதல் (கன்னத்தில் முத்தமிட்டால்)
#17 – அப்பாவின் அடியாட்கள் அவனை அடித்து துரத்திக்கொண்டிருக்க, இவன் யாரென்றே தெரியாதே என்று வியந்தபடி நடக்க, தன் மேல் போர்த்தியிருந்த அவன் சட்டையின் வாசம் பார்த்து, மறந்து போன நினைவுகளின் வாசம் ஒரு நொடி கிளர்ந்தெழுவது. (தீபாவளி – போகாதே போகாதே)
#18 – போன திருவிழாவுக்கு வந்தவன், இறந்து போனது தெரியாமல், இந்த திருவிழாவில் அவனைத் தேடிச் சலித்து வருந்துவது (வெண்ணிலா கபடிக் குழு)
#19 – பாந்தமான நெற்றிக்குங்குமத்துடன் அழகான குழந்தையுடன் கணவன் பின்னால் அமர்ந்திருக்க, பழைய காதலன், முற்றிலும் பழையவன் போல, மனநிலை பிறழ்ந்து சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஏற்படும் வெயில் மயக்கம் (காதல்)
#20 – நட்சத்திரப் பட்டாளுங்களைக் கூட்டிக்கொண்டு நட நட என நடந்து, அவளை கப்பலேற்றி விட்டு திரும்ப தனியே நடக்கையில், அவள் முகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, இரண்டாம் அத்தியாயத்தை துவக்க வேண்டி வருமோ என்ற சிறிய ஆனந்தச் சலிப்பு. (வேட்டையாடு விளையாடு – மஞ்சள் வெயில் மாலையிதே).
கமெண்ட் செக்ஷன் உங்களுக்கே!
(அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் Valentine’s Day Carnivalகாக எழுதியது)
நியுட்டனின் மூன்றாம் விதி
“வியாக்கிழம அதுவுமா என்ன எழவு இது” என்று கடுப்படைந்த அண்ணாச்சி, வியாக்கிழமைக்கும் இழவுக்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்ந்தவராக, இன்னும் கடுப்படைந்தார். காலில் மாட்டியிருந்த பழைய தோல் செருப்பை வீசி எறிந்த வேகத்தில் அது தூரப்போய் விழுந்தது. நேற்று மாலை இன்னுமொரு மேல்தையல் போட வேண்டியிருந்து மறந்தது, இன்னும் காரம் ஏற்றியது. காற்றில் படபடத்துக்கொண்டிருந்த ஆஃபீஸ் வாசல் திரையை விலக்கி உள்ளே போய் கைப்பையை மேஜை மேலே வீசி எறிந்தார். வேலு “என்னங்க அண்ணாச்சி” என்பது போல பார்த்துவிட்டு, மீண்டும் தினகரனில் மூழ்கினான். நாற்காலியில் அமர்ந்து உச்சிமண்டையை ரெண்டு தடவு தடவி, செல்ஃபோனை எடுத்து வேலுவிடம் நீட்டினார். “டேய், காம்ப்ளெக்ஸ் முதலாளிக்கு ஃபோன போடு”. “ஒரு ஃபோனலைன் போடத்தெரில” என்றவாறு நக்கலாக வேலு சிரித்தபடி கை நீட்ட, “சிரிக்காம போடுலே, அடிச்சு மொவத்த திருப்பிருவேன்” என்று அண்ணாச்சி கர்ஜிக்க, வேலு மூஞ்சில் காற்று புஸ்ஸென போனது. அந்தப்பக்கம் காம்ப்ளெக்ஸ் முதலாளி “அல்லோ” என்று இழுத்ததும், அண்ணாச்சி வெடிக்க ஆரம்பித்தார். சுமார் பதினைந்து நிமிடங்கள் பேசியதும் சுருதி இருங்க, “அதில்லங்க” என்று அமைதியாகி, “சரி” என்று லைனை கட் செய்தார். வேலு எதாவது கேட்டால் கத்துவாரோ என்று நோட்டம் விட்டு, மீண்டும் தினகரனில் மூழ்கினான். அண்ணாச்சி பெருமூச்சு சிறுமூச்சு எல்லாம் விட்டுவிட்டு, எழுந்து திரையை விலக்கி, “சுபயோகம் திருமண வைபோகம்” என்ற தன் ஆஃபீஸ் போர்டு பக்கத்தில் புதிதாக மினுமினுத்த “மிஸ்டர் ரகுபதி, லாயர், விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்” என்ற போர்டை வெறுப்புடன் பார்த்தார்.”அத்து விடறதுல என்னலே பெரிய ஸ்பெஷலிஸ்ட்டு வேண்டி கிடக்கு. வக்கீலு வறார் வக்கீல் வறார்னு நம்மள ஏமாத்திட்டாய்ங்கவே. அத்து விடறவன்னு சொல்லவே இல்லியே”.
வியாக்கிழமை முழுக்க சிறு அரவம் கேட்டாலும் வேலுவை வெளியே அனுப்பி வெளியே பார்க்கச் சொன்னவர், நாள் முழுக்க தன் புதிய எதிரியின் முகத்தை பார்க்காமல் உச்ச கட்ட வெறுப்பில் வீட்டுக்குப் போக, மனைவி ஏகம்மை அஃது இஃது என்றில்லாமல் எல்லாவற்றையும் பற்றி புலம்பிக்கொண்டிருக்க, அடக்கிக்கொண்டிருந்த அண்ணாச்சி குபீரென வெடித்து விஷயத்தை உடைத்தார். அடுத்த நாள் காலை ஷேர் ஆட்டோவில் கடை இருக்கும் ரோட்டில் இறங்கிய ஏகம்மை, ஆஃபீஸ் போர்டுகளை பதைதைக்க நிமிர்ந்து பார்த்துவிட்டு, வெள்ளிக்கிழமை அதுவுமாக வையக்கூடாதென “கட்டையில போறவன்” என்று பல்லைக்கடித்து விட்டு, ரெட்டை ஜடை போட்ட தன் மகளை இடித்துக்கொண்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். மேலிருந்து இக்காட்சியை கண்டு மேலும் வருந்திக்கொண்டிருந்த அண்ணாச்சியின் கண்ணில் வலது தோளில் பையை மாட்டிக்கொண்டு குனிந்து குனிந்து ஒரு கூலிங் க்ளாஸ் ஆசாமி காமிரா வழியாக அண்ணாச்சியின் முதல் மாடி கடையை படம் பிடித்துக்கொண்டிருப்பது பட, கிட்டதட்ட ஓடியே கீழிறங்கினார். கூலிங்கிளாஸை தோளை தட்டி விரட்டியடித்ததில் காம்பளெக்ஸ் முழுக்க விஷயம் அரங்கேற, திருமணத்தின் போது அருந்ததி பார்த்த கதையாக மொத்த காம்ப்ளெக்ஸ் ஆட்களும் மாறி மாறி வந்து போர்டை பார்க்கத்துவங்கினர்.
உம்மென்று மூஞ்சை வைத்துக்கொண்ட அண்ணாச்சி ஊதுவத்தி ஏற்றி சாமி கும்பிட்டு, ஊதுவத்தியோடு நல்லதை வேண்டிக்கொண்டு வெளியே வர, குள்ளமாக குண்டாக அழுமூஞ்சியாக ஒரு பெண் வாசலில் நின்றுக்கொண்டிருந்தது. “என்ன” என்று கேட்காமல் அவளையே அண்ணாச்சி முறைத்துப் பார்க்க, “என் பேரு அலமேலு” என்று சொல்லிவிட்டு சேனல் மாற்றமுடியாத சீரியல் போல குலுங்கி குலுங்கி அழத்தொடங்கியது. ஒரு வழியாக மூக்கை உறிஞ்சி “இங்க வக்கீலு..” என்று கேட்க, அண்ணாச்சி சடக்கென ஆஃபீஸ் உள்ளே வந்து அமர்ந்துகொண்டார். சரியாக பத்தரை மணிக்கு, பின்னே ஒரு சிறிய கூட்டத்தோடு படியேறி வந்து “நான் தான் வக்கீல் ரகுபதி” என்று வில்லன் சிரிப்போடு வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்து கும்பிடு போட, ஹீரோ இண்ட்ரோ கணக்காக வேலு உணர்ச்சி வசப்பட்டு திரையை விலக்கி அண்ணாச்சியைப் பார்த்து, “வக்கீலு வந்தாச்சு” என்று கூவினான். அண்ணாச்சி வானம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பவர் போல அடிக்கடி வெளியே சென்று திரிவதும் உள்ளே வருவதுமாக பொழுதை கழித்தார்.
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வக்கீலு லீவு என்று ஒழிந்து போக, அண்ணாச்சி பெருமூச்சு விட்டார். கடையை இன்னும் பிரபலப்படுத்துவது, வேலுவுக்கு புதுசட்டை வாங்கித் தருவது, போர்டை பெயிண்ட் அடித்து மாட்டுவது என்று சம்மந்தம் சம்மந்தமில்லாத முடிவுகளை எடுத்தார். கீழே இருந்து மேலேறி வரும் படிகள் அண்ணாச்சியின் ஆஃபீஸையும் வக்கீலின் ஆஃபீஸையும் ஒரு பாதியிலும் செல்வத்தின் முடிதிருத்தத்தின் கடையை ஒரு பாதியிலும் பிரித்திருந்தது. செல்வத்திடம் கடையை இடம் மாற்றிக் கொள்ள கேட்க முடியாது – ஆறு மாதங்களுக்கு முன்னர் செல்வத்தின் கடைக்கு செல்லும் கேபிள் வயர் அண்ணாச்சியின் கடைக்கு வருபவரை ஒரு நாள் ஹை ஜம்ப் செய்ய வைக்க, அண்ணாச்சி புதுத்துணிக்கடையை திறந்த வைக்கும் அமைச்சர் போல அதை கத்தரித்து விட்டிருந்தார். பேச்சு வழக்கு அன்றோடு அறுந்தது.
அண்ணாச்சி முன்றெப்போதுமில்லாத கதையாக, தன்னைக் காண வரும் மஞ்சப்பை பெரியவர்களையும் பெரிய குங்குமப்பொட்டு அம்மணிகளையும் விழுந்து விழுந்து கவனிக்கத் தொடங்கினார். பக்கத்து ஆஃபீஸிலிருந்து அவ்வப்போது அழுகை சத்தம், ஆவேசமான விவாக ரத்து வசனங்கள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள்(!) எல்லாம் மெகா சீரியல் பிண்ணனி இசை போல இரைச்சலாக கேட்டது. அண்ணாச்சி இரண்டு ஜாதகங்களை கையில் பிடித்துக்கொண்டு “ஆயிரம் காலத்து பயிரு இந்த சம்மந்தம்” என்று சொல்ல நினைக்கும் போது, பக்கத்தில் “எனக்கு விடுதலை வாங்கித்தாங்கய்யா” என்ற அலறல்கள் கேட்கத்துவங்கின. இரும்புச்சட்டியால் நெற்றில் அடி வாங்கிய கணவன்மார்கள், தாடை சிவந்த மனைவிமார்கள், வெறி வெறி என வெறித்துப் பார்க்கும் இளம்பெண்கள், கண்கள் சிவந்த ஆண்கள் எல்லாம் வரிசை கட்டி வந்தார்கள். வக்கீலை சந்திக்க காத்திருக்கும் க்யூ வளைந்து கலைந்து அண்ணாச்சி கடை வாசலில் செருப்பை விட்டு, சில பல சத்தமான வார்த்தைகளையும் விட, அண்ணாச்சிக்கு அபசகுணம் அன்றாடம் இலவசமாக கிடைத்தது. வக்கீலு எல்லாம் செய்துவிட்டு நடிக்கும் வில்லன் போல, நன்றாகத்தான் பேசினார்.
பின்னொரு நன்னாளில் சிகப்பு சேலையும் நீல ஜாக்கெட்டும் தலையில் கனகாம்பரம் பூவுமாக பெண்ணொன்று வக்கீல் ஆஃபீஸ் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும், உலாத்திக்கொண்டும் இருந்தது. “ஏம்மா ராதா” என்று வக்கீலின் கர்ண் கொடூரமான குரல் கூப்பிட இரண்டு முறை உள்ளே ஓடியது. வெளியே அமர்ந்திருந்த வேலுவும் அவ்வப்போது வெளிய வந்த அண்ணாச்சியும் அப்பெண்ணை நோட்டம் விட்டு, தத்தம் மூஞ்சைப் பார்த்துக்கொண்டு குழம்ப, அண்ணாச்சி அறிவாளித்தனமாக “ஜூனியரா இருக்கும்” என்றார். ஒரு நாள் காலை அந்தப் பெண் “பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, பூங்காத்தே பிடிச்சிருக்கா” என்றெல்லாம் சன்னமாக பாடிக்கொண்டிருக்க, அண்ணாச்சி வேலுவைப் பார்த்து ‘இம்’ என்று தலையசைத்தார். வேலு “ஏய் பொண்ணே” என்றழைக்க அந்தப்பெண் செருப்பு சரக் சரக் என வந்து நின்றது. அண்ணாச்சி காதை வாசல் நோக்கி பாய்ச்சிவிட்டு தலையை குனிந்து ஜாதகத்தை நோண்டிக்கொண்டிருந்தார். “நீயாரு வக்கீலுக்கு ஜூனியரா?” என்று வேலு கேட்க, அந்தப்பெண் வேலுவையும் அண்ணாச்சியையும் ஸ்லோ மோஷனில் பார்த்துவிட்டு “அப்படின்னா?” என்று கேட்டு சிக்ஸர் அடித்தது. “அதாவது..” என்று வேலு நீட்ட, “லேய், இதுக்கு மேல வேற கேக்கணுமா” என்று அண்ணாச்சி அதட்டினார். அந்தப்பெண் மீண்டும் இருவரையும் பார்த்துவிட்டு, “நான் அவருக்கு ஒத்தாசயா அஸிஸ்டெண்ட்டு வேல செய்யறேன்” என்று சொன்னது. வேலு “ஐ ஆம் ஆல்ஸோ அஸிஸ்டெண்ட். க்ளாட் டூ மீட் யு” என்று சொல்ல, அந்தப்பெண் கையின் நடு மூன்று விரல்களை ஒருமாதிரி வளைத்து வாயின் மேல் லேசாக வைத்து “ம்ஹூக்கும்” என்று மிக லேசாக குலுங்கியது. அண்ணாச்சி நிமிர்ந்து பார்த்து “என்னடே” என்று கேட்க, வேலு முகம் பிரகாசமாக “பொண்ணு சிரிச்சுச்சுண்ணே” என்றான்.
ராதாப்பொண்ணு பின்னர் காலையிலும் மாலையிலும் அங்கே சுற்றத்தொடங்கியது. அவ்வப்போது சிரித்தது. பாடியது. ஊதுவத்தி கடன் கேட்டது. ஒரு நாள் அண்ணாச்சி முன்னிலையிலேயே வேலு ஒரு முழுப்பாக்கெட்டை “வச்சுக்கோ” என்று திணிக்க, அண்ணாச்சி அவள் போனதும் “என்னடே வாரி வழங்குறே?” என்றார். வேலு ஒரு நொடி விழித்து விட்டு கண்டபடி நெளிய, அண்ணாச்சி அடிவயிற்றில் புரட்டியது.
“அறுபதே நாள்ல எங்கேனு தேட ஆரம்பிச்சிடுவீங்க” விளம்பரங்கள் போல, (அப்படி எந்த விளம்பரமும் இல்லை, சும்மா சொல்கிறேன்), அண்ணாச்சி ஒரு நாள் காலை ஆஃபீஸ் வந்து, பூட்டிக்கிடக்கும் கதவை இன்னொரு சாவி போட்டுத் திறந்து வைத்து விட்டு வேலுவை தேட ஆரம்பித்தார். மொபைலில் அவன் நம்பரை தேடிப் பிடித்து அழைக்க முயன்று, அது மூஞ்சை சுருக்கி கொண்டு அணைந்து போனது. கொஞ்ச நேரம் ஈ ஓட்டிவிட்டு அண்ணாச்சி வெளியே வர, வக்கீலுடன் வற்றிப்போன ஒரு முதிய தம்பதி நின்றுகொண்டிருந்தார்கள். அண்ணாச்சியைப் பார்த்து வக்கீலு அதிர அதிர சிரித்துவிட்டு, “என்ன அண்ணாச்சி, ராதாவும் வேலுவும் ஓடிப்போய்ட்டாங்களாமே” என்றாரே பார்க்கலாம். அண்ணாச்சிக்கு குப்பென வேர்த்துவிட்டது. வக்கீலு அத்தம்பதியிடம் ஏதோ கிசுகிசுக்க, அந்தம்மா ரொம்பப் பிரயத்தனப்பட்டு அழுகையும் கோவத்தையும் ஒன்றாக கொண்டு வர முற்பட்டு, சரியாக நடிக்கத் தெரியாத சைட் ஆர்டிஸ்ட்டு போல சொதப்பியது. (“இப்படி பண்ணிட்டீங்களே?”). அந்த ஆசாமியோ தூக்கம் இன்னும் சரியாக கலையாதவன் போல விழித்து விட்டு, திடீரென கைப்பிடி சுவர் தாண்டிப் பார்த்து காறு காறு என காறித்துப்பி தொண்டையை சரிசெய்து விட்டுக்கொண்டு, மறுபடி அதே இடத்தில் வந்து நின்றுகொண்டார். வக்கீலு மீண்டும் ஒரு முறை அதிர அதிர சிரித்துவிட்டு நகர்ந்தார்.
ஆஃபீஸை பூட்டிக்கொண்டு கிளம்பிய அண்ணாச்சி, மொபைலை எடுத்து ஏகம்மையின் நம்பரை கீழே கடை வைத்திருந்த சங்கரிடம் அழைக்கச் சொல்லி ஐந்தாயிரம் ரூபாய் எடுத்து வைக்க சொன்னார், காரணம் கேட்டதற்கு, தான் வேலுவுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக அறிவித்தார்.
வீட்டுக்குப் போய் காசை எடுத்துக்கொண்டு மீண்டும் இன்னொருத்தரின் உதவியுடன் வேலுவை அழைத்தார். (ஏகம்மை ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்). நான்கு முறை எடுக்காத வேலு, ஐந்தாம் முறை எடுத்து “அண்ணாச்சி” என்று பதறினான். “எங்கடே இருக்கே?” என்று கேட்டதும் தேம்பி தேம்பி அழத் தொடங்கினான். “என்ன பண்றதுன்னே புரில அண்ணாச்சி, பஸ் பஸ்ஸா ஏறி இறங்கி சுத்திட்டிருக்கம்” என்றழுதான். “அடேய், உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். சொல்ற கோயிலுக்கு சொல்ற நேரத்துக்கு வா” என்று உத்தரவிட்டு, பெருமிதமாக மீண்டும் கடைக்கு சென்றார். ஆள் அனுப்பி வேலுவின் அம்மாவை அழைத்து வரச் சொல்லி, “உங்கப்பையன் ராவுக்கு வீட்டுக்கு வர்லியா” என்று ஆரம்பித்து விஷயம் எல்லாம் சொன்னார். அவனுடைய திருமணத்தை தானே முடித்து வைக்கிறேன் என்று சொல்லி முடித்த வரை அந்தக்கிழவி “அப்படியா?” என்பது போல வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்தில் சுபயோகம் திருமணம் மையத்தின் தலைவர் ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் செய்துவிட்டு, “முருகா” என்று வேண்டிக்கொண்டார்.
வக்கீலு ஒன்றும் அசந்தது போல தெரியவில்லை. விஷயம் கேள்விப்பட்டதும் ஆஃபீஸ் வாசலில் வந்து “ராதாப்பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டீங்க போல” என்று அதிர அதிர சிரித்தார். ஸ்வீட் வேறு வாங்கித் தந்தார். “இந்தாளு வில்லனா இருக்க லாயக்கே இல்ல” என்று நினைத்துகொண்டார். ராதாப்பொண்ணும் ராதாப்பொண்ணின் அம்மாவும் கட்டிக்கொண்டு ரொம்ப நேரம் அழுதார்கள்.
வேலுவுக்கு மதிய நேரத்தில் நான்கு மணி நேரம் வேறெங்காவது வேலை செய்ய அனுமதி கொடுத்து, சம்பளத்தில் நூறு ரூபாய் கூட்டிக் கொடுத்தார். (ஏகம்மை முணுமுணுத்துக்கொண்டிருந்தார்). கல்யாணம் செஞ்சு வெச்சு, குடும்பம் செழிக்க வழியும் செஞ்சு, அந்த வக்கீலு மூஞ்சில கரியப் பூசி…
இரண்டாவது மாதம் வேலு ஆஃபீஸைத் திறக்காமல் வக்கீலு ஆஃபீஸின் வாசலில் அமர்ந்துகொண்டிருந்தான். அண்ணாச்சி மேலேறி வந்து “என்னடா, நேரமாதுவுல, ஆபீஸ தெறடா” என்று தோளைத் தொட்டதும் “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று பாம்பாக நெளிந்தான். கழுத்து, பின் முதுகெல்லாம் சிகப்புத் தடயங்கள். “புதுக்குக்கர எடுத்து அடிச்சிருச்சு அண்ணாச்சி” என்று குலுங்கினான். ராதாப்பொண்ணு கொஞ்ச நேரத்தில் வர, வக்கீலு ஆஃபீஸில் ஒரே பஞ்சாயத்து. ராதாப்பொண்ணின் குரல் இவ்வளவு அதிகமா என்று அதிர்ந்த அண்ணாச்சி ஆஃபீஸுக்குள்ளேயே அமர்ந்து சுவற்றை வெறித்துகொண்டிருந்தார்.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு எல்லோருமாக வெளியே வந்து அண்ணாச்சிக்கு குரல் கொடுக்க, அவர் தயங்கித் தயங்கி போய் நின்றார். வக்கீலு தன் இரண்டு கைகளால் இரண்டு பேரையும் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு நின்று, “எல்லாஞ் சமாதானம் ஆச்சு. இனிமே அடிச்சிக்கிட்டாலும் இங்க வரமாட்டாங்க” என்றவர், “என்ன விரோதியா பாக்காதீங்க. என் ராதாப்பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதுக்கு ஒரு பரிசு நாளைக்கு காலைல அனுப்புறேன்” என்று அதிர அதிரச் சிரித்தார். இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்த அண்ணாச்சி, காலையில் ஆஃபீஸைத் திறந்து காத்திருந்தார். பொறுத்து பொறுத்து வெறுத்த அண்ணாச்சி, வெளியே எழுந்த வர, அங்கே அதே கறுப்பான குண்டான அழுமூஞ்சிப் பெண் சிரித்துக்கொண்டு நின்றது. “என் பேரு அலமேலு” என்று நாணிக் கோணியப் பின், “எனக்கு ஒரு மாப்பிள பாக்கணும்” என்றது.
ஒரு வாரத்தில் அட்டகாசமான அலங்காரங்களுடன் அண்ணாச்சியின் ஆபீஸ் ஜொலி ஜொலிக்க, ஏகம்மை கடவுளை விழுந்து விழுந்து தொழ, ஆஃபீஸின் போர்டில் இருந்த “கிரக நிலை” என்று துவங்கிய ஒரு வரியின் மேல் அடர்ந்த நீல நிற பெயிண்ட் அடித்து, கொட்டை கொட்டையாக “மறுமணங்கள் செய்து வைக்கப்படும்” என்று எழுதி வைத்திருந்தது. வக்கீலு வந்ததும் அண்ணாச்சியும் ஏகம்மையும் சினேகத்துடன் சிரிக்க, ஏகம்மை வக்கீலுக்கு இன்றொரு நாள் விருந்து சாப்பாடு அனுப்புவதாகச் சொல்ல, வக்கீலு அதிர அதிரச் சிரிக்க, ஒரே குதூகலம் பீறிட்டது! அந்த வார மாம்பலம் டைம்ஸில் அந்த கூலிங் க்ளாஸ் பார்ட்டி இரண்டு போர்ட்டுகளையும் சேர்த்து எடுத்த புகைப்படம் “two sides of a coin” என்ற தலைப்பில் வெளியாகி நூறு ரூபாய் சன்மானமும் பெற்றிருந்தது!
தரிசனம்

சின்னஞ்சிறு கடவுளிடம்
கருணையை வேண்டி முடித்து
வெளியே வருகையில்
நானும் ஆவதுண்டு
சின்னஞ்சிறு கடவுளென
புதுப்பிக்க வேண்டி
கோயில் சுற்றுச்சுவர்
தரைமட்டமாக்கப்பட்ட நாளில்
என்னிடம் யாசகம் வேண்டும் அவனும்
பிரகாரக் கடவுளும்
நேருக்கு நேராக அமர்ந்து
முகம் பார்த்தபடி
கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்
என்னைப் பற்றிய ரகசியம் ஒன்றை
————————————————–
புகைப்படம் : http://lifeskillsacademics.com/AboutUs.html
(உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது)
இசையலைகள்
மெல்ல தத்தி தத்தி தாவும் இசையுடன் தொடங்கும் ‘ஒமணப் பெண்ணே’, உடனே தாவி மனதில் அமர்ந்துகொள்கிறது. பென்னி தயாள் மிகச் சரியான தேர்வு. கயிறு மேல் ஏறி நடப்பது போல வித்தைகள் எல்லாம் காட்டுகிறார். குழந்தையை தொட்டிலில் இடும் வைபவத்தின் (?) மலையாளப் பாடலை பட்டு சேலையில் ஜரிகை நெய்வது போல சேர்த்திருக்கிறார் ரஹ்மான். (கல்யாணி மேனன் கரெக்டாக ஆஜர்). “காற்றில் அசைகிறது உன் சேலை / விடிகிறது என் காலை” என்பதில் மட்டும் ஈர்க்கிறார் தாமரை.
வலி மிகுந்த நினைவு ஒன்றை மெல்ல மெல்ல மீட்டுவது போல, கிட்டாரை மீட்டியபடி துவங்குகிறது, “விண்ணைத் தாண்டி வருவாயா” பாடல். கார்த்திக் உருக உருக, பல்லவி-சரணம் என்று வடிவம் இல்லாமல் மயக்குகிறது பாடல். ஒவ்வொரு முறையும் பாட்டின் உள்ளே சென்றால் வெளியே வரும் போதே கவனம் கலைகிறது. இத்தனை நாளும் “விண்ணைத் தாண்டி வருவாயா”, “விண்ணைத் தாண்டி வருவாயா” என்று சொல்லிக்கொண்டிருந்த போதெல்லாம், அத்தனை சுவாரசியமாக இல்லையென்றாலும், “விண்மீனே, விண்ணைத் தாண்டி வருவாயா” என்று கேட்கும் போது சுவையாக இருக்கிறது. நீயும் நானும் பிரிந்தது / புவி ஈர்ப்பு மையத்தில் தானே? / இரு துருவம் சேரும் / அந்த ஓரிடம் / அங்கே தான் நாம் சேர்ந்தோம். / இனிமேல் நீயும் நானும் / பிரிவதில்லை.. என்று தாமரை ஒரு மாதிரி தான் சொல்ல வந்ததை எப்படியோ சொல்லிவிடுகிறார்!
“அன்பில் அவன்” பாட்டில் இது ஒரு கிறிஸ்ட்டியன்-ஹிந்து கலப்புத் திருமணம் என்பதை கலக்கல் கலர்ஃபுல் இசை போஸ்ட்டராக அடிக்கிறார் ரஹ்மான். மேளச் சத்தத்தையும் சர்ச் இசையையும் பாடல் நெடுக வித விதமாக இணைக்கிற பிரமாதமான இசைக்கோர்ப்பு. “காயத்ரி மந்திரமும் gospel இசையும்” என்று கட்டுரையே எழுதலாம்
ஆனால் பாட்டின் மெட்டு ரொம்ப ரொம்ப சாதா. சர்ச் பாதிரியார் “அன்பில் அவன் சேர்த்த இதை மனிதர்களே வெறுக்காதீர்கள்” என்று சொல்வது ஓகே, அதற்காக அதை பாட்டின் முதல் வரியாக யாராவது வைப்பார்களா?! பாடகர் தேவனும் பல வருஷமாக படுகிறார், இன்னும் தெளிவாக பாட கற்றுகொண்ட பாடில்லை!
பொதுவாக நம் நாயகர்கள் தாம் நாயகியை பார்த்து, ஏமாற்றி விட்டதாக, கொல்லாமல் கொன்றதாக பாடுவார்கள். கொஞ்சம் புதிதாக பெண் குரல் மன்னிப்பு கேட்டு (அழகாக) பாடுகிறது. (மன்னிப்பாயா – ஷ்ரேயா கோஷல்). நடுவில் ரஹ்மான் பாடுவது ஏனோ பொருந்தவில்லை. திருக்குறளை நடுவில் சேர்த்ததிற்கு பலே. (ரஹ்மானின் திருக்குறள் ப்ராஜக்ட் என்னாச்சு?) இந்த பாட்டிலும் சரி அடுத்து நரேஷ் ஐயர் குரலில் மிக வேகமாக கடந்து செல்லும் “கண்ணுக்குள்ளே” பாட்டிலும் சரி, ரஹ்மானும் தாமரையும் சேர்ந்து நம்மிடம் மன்னிப்பாயா? என்கிறார்கள்.
கட்டக்கடைசியாக முழுக்க முழுக்க மலையாளத்தில் வருகிற “ஆரோமலே”. “விண்மீண்களை தாண்டி” என்று “உயிரே” படத்தில் பின் பாதியில் அடிக்கடி பிண்ணியில் ஒலித்து மனதை பிசையுமே, அப்படி உபயோகிக்கலாம். இந்த ஃபீலிங்ஸ்களுக்கு எல்லாம் திரையில் சிம்புவும் திரிஷாவும் என்று எண்ணும் போது தான் அடி வயிற்றில் இருந்து பகீரென்று ஏதோ கிளம்புகிறது!
ஹோ! ஹோசான்னா பற்றி எதுவுமே சொல்லவில்லையே? அது தான் ஏற்கனவே கேட்டு பழசாகிவிட்டதே
மொத்தம் ஏழு பாட்டில் – மூன்றா, நான்கா? விண்ணை தாண்டுகிறதோ இல்லையோ, ஹைப் கிணறையும் எக்பெக்டேஷன் கிணறையும் பாதி தான் தாண்டுகிறது!
—————————
லேசாக தொண்டையை சரி செய்துகொண்டு விட்டு, கொஞ்சம் ஸ்ருதி பார்த்து, லைட்டாக இருமி, ஸ்வீட்டாக ஹம்மி, “இது வரை இல்லாத உணர்விது” என்று அமர்க்களமாக ஆரம்பிக்கிறார் ஆண்ட்ரியா. செம ஸ்டைலாக “மூஊஊஊடாமல் மூடி மறைத்தது” என்று அவர் பாடும் போது ட்ரம்ஸும் ஜில்லென சேர்ந்துகொள்கிறது. பாட்டு அப்படியே தொடர்ந்து பறக்கிறது. காற்றில் கைகளை வீசி சில்லறை வரவழைக்கிற வித்தை பொல, சட்டென “நில்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல” என்ற வரியில் ஒரு மெலடியை உருவி எடுக்கிறார் யுவன். இது நீண்ட தூர பயணம், கூடவே வா என்று ஆண்ட்ரியா கட்டளையிட்டால் போகலாம் போலத் தான் இருக்கிறது. பின்னர் நமது சூப்பர் சிங்கர் அஜீஷ் வந்து “என் நெஞ்சமோ உன் போல அல்ல” “நிலை புரியாத தோற்றம்” என்றெல்லாம் விசனப்பட, “இது நிரந்தரமல்ல, மாறி விடும் மனநிலை தானே” என்று ஊதித் தள்ளுமிடத்தில் ஆண்ட்ரியா. ஆனால், அதோடு அவர் அப்ஸ்காண்ட் ஆவது தான் சோகம். அப்புறம் அஜீஷ் விடாமல் கொஞ்ச நேரம் விடாமல் பாடி முடிக்க….. லேசாக தொண்டையை சரி செய்துகொண்டு விட்டு.. மறுபடி ஆண்ட்ரியா.. ரிப்பீட்டேய்! (இதுவரை – கோவா – யுவன்)
—————————
புதுப்பாடல்களை கேட்கும் போது இருக்கும் சுவாரசியங்களில் மிக முக்கியமானது, பாடலின் காட்சிகளை கற்பனை செய்து பார்த்தல். இந்த வரியை எப்படி எடுப்பார்கள் என்றளவுக்கு யோசிப்பதில்லை – பெரும்பாலும் வரிகள் சுமாராக இருக்கும் , ப்ளஸ் இப்போது எல்லாம் பெரும்பாலும் மாண்டேஜ் பாடல்களாகி விட்டதால், நாயகனும் நாயகியும் அசிங்கமாக பாட்டுக்கு வாயசைத்துக்கொண்டு ஆடுவதில்லை. (“மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு” என்பதற்கு விஜயகாந்த் “காது கேளாதோருக்கான நடனம்” போல ஆடுவாரே
) அதையும் மீறி “வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடச்சோம்” என்று கேட்கும் போது கற்பனை சரியாக சிக்காமல், அதை திரையில் அழகான ஹைக்கூவாக பார்க்கும் போது குஷி தானே? (வெயில் – வெயிலோடு விளையாடி). அதே போல “கண்கள் இரண்டால்” பாட்டின் இரண்டாவது இடை இசைக்கு ஜெய்யும் ஸ்வாதியும் பேசுவது – அண்ணன் பார்ப்பது – நடப்பது – சட்டென சுவாமி ஊர்வலம் வருவது என இசைக்கு பொருத்தமாக பரவசப்படுத்தி இருப்பார்கள்.
இயக்கம், வசனம் போலவே பாடல் காட்சியமைப்பிலும் (சில சமயங்களில் ஒரே படத்தில் கூட) கௌதம் மேனனின் inconsistency பளிச்சிடும். ஆகையால் “உனக்குள் நானே” “வசீகரா” போன்றவை எல்லாம் விட்டுவிட்டு அவரின் பாடல்களில் பிடித்த மிகச்சில மட்டும் மட்டும்.
“இரவும் பகலும் உன் முகம் இரையைப் போலே துரத்துவும் ஏனோ?” என்ற வரிக்கு குதிரை ராட்டினத்தில் சூர்யாவையும் சமீராவையும் ஏற்றி சமீராவின் முகத்தை நிஜமாகவே துரத்த விட்டிருப்பார். மறுமணத்திற்கு தயங்கும் இருவரின் தவிப்பை “அருகினில் உள்ள தூரமே / அலைகடல் தீண்டும் வானமே” என்றெழுத, கமலையும் ஜோவும் தூரதூரமாக ஒரே கோட்டில் ஒருவர் பின் ஒருவர் நடக்கவிட்டு, முதல் வரிக்கு க்ளோஸப்பில் இருவரும் அருகே நடப்பது போலே காட்டி, அடுத்த வரிக்கு சடாரென்று மேலேயிருந்து காட்டி அவர்களுக்கிடையில் இருக்கும் தூரத்தை காட்டுவது அழகு. அதே படத்தில் “நெஞ்சோரம் பனித்துளி”க்கு ஜோவை கமலையும் அடுத்தடுத்து திரையோரமாக காட்டுவதும், வாரணம் ஆயிரம் பாடலில் “வெளிச்சம் தந்தவ ஒருத்தி, அவள இருட்டுல நிறுத்தி” இடத்தில் சூர்யாவின் மீது வெளிச்சத்தை பாய்ச்சி அவரை தடுமாற வைப்பதும் அழகு. ஏன் படத்திற்கு “பச்சைக்கிள் முத்துச்சரம்” என்ற கேள்விக்கு “கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல், என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே / எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும் என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று முட்டித்தள்ளுமே” என்ற வரியின் காட்சிகளில் (கொஞ்சம் அமெச்சூராக) காட்டியிருப்பார். (காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்). காதலை சொல்ல துடிக்கும் பெண்ணும் காதலை கட்டுபடுத்தும் ஆணும் பாடும் பாட்டில், பெண் மாத்திரம் வாயசைத்துப் பாட, ஆண் அமைதியான சிரிப்புடன் தன் வரிகளை ரகசியமாக மனசுக்குள் பாடுவது அழகு. (என்னைக் கொஞ்சம் மாற்றி – காக்க காக்க). அதிலும் ஜோ சில குறிப்பிட்ட வரிகளை பாடாமல் ஒரு வெட்கப் புன்னகை தருவார். அசத்தலான எடிட்டிங்கோடு சேர்ந்து, பாட்டு எக்காலத்திலும் இனிக்கும் ம்யூஸிக் வீடியோ!