சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

நண்பனின் திருமணம்

with 3 comments

கார் வந்துவிட்டது. ஐந்து மணி நேரத்திற்கு வாடகை பேசப்பட்டிருக்கிறது. முன் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டு ஜானுவை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன். பின் ஸீட்டில் அம்மா, பெரியக்கா, சின்னக்கா மடியில் குழந்தையுடன் அமர்ந்துகொண்டனர். மழை தூறிக்கொண்டிருந்தது. ‘கிஃப்ட் எடுத்துக்கிட்டாச்சா?’ மீண்டும் ஒரு முறை கேட்டுத் தெரிந்துகொண்டேன். மணி ஏழாகியிருந்தது. எப்படியும் திரும்பி வர பத்து மணியாகிவிடும். சொந்த ஊரிலிருந்து நிறைய பேர் வந்திருப்பார்கள். அத்தனை பேரிடமும் பேசிவிட்டுக் கிளம்ப நேரமாகி விடும்.

இன்று ராமுக்கு திருமணம்.

வண்டி புறப்பட்டு விட்டது. மடியில் ஜானு அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் திடீரென பெரியக்காவின் குரல் கேட்டது போல இருக்கவே, திரும்பனேன். ‘கூப்பிட்டியா?’

‘எவ்வளவு நேரமா கூப்பிடறது!’

‘ஓ. கேக்கல. என்ன?’

‘என்ன எதாச்சும் ஸ்டோரி கான்டஸ்ட்டா?’

‘ஹி ஹி. ஆமாம். எப்படி கண்டுபிடிச்சே?’

‘மூஞ்சியிலயே தெரியுது’

‘ஐ சீ’. அசடு வழிந்தேன்.

‘அந்த மிஸ்டரி கதை நல்லாருந்தது. ப்ரைஸ் கடச்சிதா?’

‘ம்’

‘இந்த முறை என்ன?’

‘ஃப்ரெண்ட்ஷிப் ஸ்டோரி’

‘கதை யோசிச்சிட்டியா?’

‘இன்னுமில்ல’

‘ம்’

‘ஏதாச்சும் கதை சொல்லேன். எழுதறதுக்கு’

‘ம்’

‘நான் ஒரு கத யோசிச்சேன். கேளேன்.’

‘சொல்லித் தொல’

‘ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். சின்ன வயசுலேர்ந்து திக் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டும் பொண்ணுங்க. ஒரு பொண்ணு தைரியசாலி. ஒரு பொண்ணு ரொம்ப கோழை. கோழைய வந்து சித்தி ரொம்ப கொடும பண்றா’

‘எஹ்?’

‘கேளு. சித்தி ரொம்ப கொடும செய்யுறா. அவளால தாங்க முடியாம ஃப்ரெண்டுகிட்ட அழறா. இருபது வருஷமா இதே கத. ஒரு நாள் கொடும தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறா. அந்த அதிர்ச்சியுல ஃப்ரெண்டுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் வந்துடுது. அவளோட ஸ்பிளிட் செத்து போன ஃப்ரெண்டு மாதிரி பிஹேவ் பண்ணுது. சித்திய பழிவாங்குது. சித்திய கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடறா’

பின் ஸீட்டில் பயங்கிர அமைதி.

‘ரெண்டு பேருக்கும் காம்மனா இன்னொரு ஃப்ரெண்டு இருக்கா. அவ ஒரு டாக்டர். அவ வந்து கோர்டுல வாதாடி ஜெயிக்கிறா. ஆனா அவளுக்கு மட்டுமே உண்மை தெரியும், இந்த பொண்ணுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி இல்லேனு. அவ நட்புக்காக செய்யுறா. எப்படி’

சின்னக்காவின் குழந்தை அழ ஆரம்பித்தது.

‘சரி விடு’ என்றேன்.

‘நம்ம ஜானுவயும் ஸ்ரீயயும் வெச்சு எழுதேன்?’

ஜானுவுக்கு வயது ஆறு மாதம். ஸ்ரீக்கு வயது நான்கு மாதம். முறையே பெரியக்கா சின்னக்காவின் மகள்கள். இருவரும் எதிரேதிரே தத்தம் மகள்களை தூக்கிக்க்கொண்டு நின்றால், இரு குழந்தைகளும் ‘ஆ ஊ’ என்று பேசிக்கொள்கின்றன.

‘ரெண்டு பேரும் சிஸ்டர்ஸ்! ஃப்ரெண்ட்ஸ் இல்ல’

அக்கா சிரித்தாள். ‘இல்லனா இவளோட ஃப்ரெண்ட் ஒருத்தி இருந்தாளே’ (சின்னக்காவைப் பார்த்து கை காட்டியிருப்பாள்) ‘அந்த மார்வாடிப் பொண்ணு.. ரெண்டு பேரையும் வெச்சு எழுது’

‘ம் ம் எழுதலாம்’

கொஞ்ச நேர அமைதிக்குப் பின் அம்மா சன்னமான குரலில் கேட்டாள். ‘ராம் பத்தியே எழுதேன். அவன் தான் உன்னோட ஃப்ர்ஸ்ட் ஃப்ரெண்ட்..’

‘ஆமால்ல..’ என்று மனசு சொன்னது.

ராமின் குடும்பமும் நாங்களும் ஒரே வீட்டில், முறையே கீழ் போர்ஷனிலும் மேல் போர்ஷனிலும் குடியிருந்தோம். 1980களின் முதல் பாதியில் சந்தித்துக்கொண்டோம். வீட்டு உரிமையாளரிடம் ஏற்பட்ட சச்சரவுகளில் ஒன்றாக கை கோர்த்தோம். ராமின் அப்பா டாக்டர். என்னுடைய அம்மா டீச்சர். இன்று வரையும் ராமின் வீட்டில் எல்லாரும் அம்மாவை ‘டீச்சர்’ என்றே அழைக்கிறார்கள். எங்கள் வீட்டில் எல்லோரும் ராமின் அப்பாவை ‘டாக்டர்’ என்றே அழைத்தோம்.

‘ஃபேமிலி ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையை நான் முதன் முதலில் படித்து அம்மாவிடம் அது என்னவென்று அர்த்தம் கேட்டபொழுது, ராமின் குடும்பத்தினரையே அம்மா அடையாளம் காட்டியிருக்க வேண்டும். அப்பா அப்போது (கட்சியில்) இருந்தார். கட்சி அலுவலகத்தில் பெரும் பகுதி கழிந்தது. ராஜா வீட்டு கன்னுக்குட்டி. நிறைய பணம். நிறைய நண்பர்கள். நிறைய எதிரிகள். அம்மா எல்லாவற்றிலிருந்தும் விலகியே இருந்தார். அப்போது அம்மாவுக்கு இருந்த ஒரே துணை ராமின் குடும்பத்தினர். அப்பா மறைந்த பின், அவர்கள் துணை இன்னும் முக்கியமானதானது. (நேற்று அப்பாவின் 13ஆவது நினைவு நாள் என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது. zoozooக்களை படம் பிடித்து அதன் மீது ஏதேதோ கிறுக்கத்தனமாக எழுதியபடி நாள் கழிந்தது.)

ராம் எனக்கு நண்பனா என்பதில் எனக்கு சந்தேகங்கள் உண்டு. என்னை விட இரண்டு வயது மூத்தவன். நாங்கள் பள்ளிக்கு செல்லும் போதோ, ட்யூஷன் செல்லும் போதோ, விளையாடப் போகும் போதோ, நான் ராமின் முழுப்பொறுப்பில் விடப்பட்டேன். எங்கள் குடும்பங்களுக்கு நெருக்கமாக இல்லாதவர்கள், எங்களை அண்ணன், தம்பி என்றே நினைத்தார்கள். நானும் பல நாட்கள் அவனை அண்ணா என்றே அழைத்திருக்கேன். பின்னர் ‘ராம்’ என்றழைக்கத் தொடங்கிய நாளில் அவன் எனக்கு முழு நண்பனாகியிருக்கலாம்.

இருவரின் அம்மாக்களின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, மாடியில் கிரிக்கெட் விளையாடும் உத்தியை கண்டுபிடித்தோம். ப்ளாஸ்ட்டிக் பந்து, இல்லை துக்கு பந்து. (எங்கள் ஊரின் தொழில் நெசவு. அதில் கழிவாக எறியப்படும் துணிகளை வைத்து செய்யும் பந்து).பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பந்து பறந்து, பக்கத்தில் புதரென மண்டிக்கிடக்கும் கார்பரேஷன் இடத்தில் விழும். பாம்புகள் அதிகமென்பதால் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். அந்த இடத்தை ஒரு நாள் சுத்தம் செய்த போது, அள்ளி அள்ளி பந்துகளை எங்கள் காம்பவுண்டுக்குள் கொட்டினார்கள். நாங்கள் இருவரும் ஓடி ஓடி அவற்றை பொறுக்கியது இன்னும் நினைவிருக்கிறது.

இன்று அவனுக்குத் திருமணம்.

நடுவில் எதுவோ சரியாக இல்லாமல் போய்விட்டது. அவன் பனிரெண்டாவது வகுப்பு செல்கையில் அவன் மட்டும் நண்பர்களுடன் பள்ளிக்கு அருகில் வீடு பார்த்துச் சென்றான். அப்போது ஏற்பட்ட தொடர்பின்மை வளர்ந்து வளர்ந்து ஒரு நாள் முற்றிலுமாக தொடர்பு அறுந்தது. கிட்டதட்ட எட்டு வருடங்கள் கழித்துப் பார்க்கப் போகிறேன்.

நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.

எதைப் பற்றி எழுதுவது? சைக்கிள் பூட்டு எதற்கென்று தெரியாமல் பல காலம் முழித்து, என்னைப் பின்னால் வைத்து அவன் ஓட்டி சென்று பொழுது, பூட்டைப் போட்டு சைக்கிளை நிறுத்திய கதை உண்டு. இல்லை பெரியக்காவுடன் ரசம் வைத்த கதை. இல்லை அந்த ட்யூஷனில் இருந்த அந்தப் பெண் அவனை காதலித்தது (?!) பற்றியும், இவன் மறுத்ததும், அப்போது பிரபலமாக இருந்த ‘ரோஜாப்பூ கீழ விழ்ந்தா, செடியோட ஒட்டி வைக்க முடியாது’ என்ற ‘பூவே உனக்காக’ வசனத்தை சொல்ல சொல்லி அடம் பிடித்த கதை உண்டு. (அவள் என்னை ‘மச்சினராக’ பாவித்தது கிளைக்கதை).

பெரியக்காவும் சின்னக்காவும் ராமின் அண்ணாவுடனான நினைவுகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கலாம்.

போய் இறங்கியதுமே ஒரு விதமான அதிர்வு தொடங்கிவிட்டது. ஏழெட்டு வருடங்கள் கழித்து நிறைய பேரை பார்க்கப் போகிறேன். ராமின் அண்ணனும் அண்ணியும் வரவேற்றார்கள். சம்பிரதாய கேள்விகள், நலம் விசாரிப்புகள், ‘ஃபோனே பண்றதில்ல’  கோபங்கள். மண்டபமெங்கும் புன்சிரிப்புகள். ‘இது அபி தானே?’ என்ற சந்தேகப் பார்வைகள். சின்னக் குழந்தையாக பார்த்தவர்கள் வளர்ந்து நம் முன் நிற்கும் போது அதிர்ச்சியாகவே இருக்கிறது. (நான் பள்ளிக்கூட பேருந்துக்கு காத்திருக்கையில் ஒரு குட்டிப்பையனுடன் விளையாடுவான். அந்தப் பையனின் அம்மா நான் நிச்சயம் இன்று வருவேன் என்பதற்காகவே அவனை அழைத்து வந்திருந்தார்!) எத்தனை மக்கள்! எத்தனை நினைவுகள்.

மேடையில் ராம் பிரகாசமாகத் தெரிந்தான். ஷெர்வானி மிகப் பொருத்தமாக இருந்தது. நிறைய எடை கூடிவிட்டான். அவனுக்கும் என்னைப் பார்த்ததும் இப்படி நிறைய தோன்றும். தூரத்திலேயே என்னைப் பார்த்து விட்டு கையசைத்தான். மணப்பெண்ணிடம் ஏதோ சொல்கிறான். மேடையேறியவுடன் கட்டியணைத்துக்கொண்டான். இத்தனை வருட தொடர்பின்மையும் ஒரு நொடியில் உடைந்துவிட்டது என்றே தோன்றியது. ‘ச்சே! பாக்கலனா என்ன! பேசலானா என்ன!’ மனசு சொன்னது. அவன் குரல் பத்து வருடங்களுக்கு முந்தைய ஒலியைக் கொண்டிருந்தது.

பூரிப்பாக இருந்தது. நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.

மேடையை விட்டு இறங்கியதும் குமாரண்ணனைப் பார்த்தேன். ‘அபி! ஆளே மாறிட்டே’ என் கையைப் பிடித்து வேகமாக இழுத்துச் சென்றார். ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை பெரியவர் அமர்ந்திருந்தார். மிகவும் தளர்ந்து போயிருந்தார். அவரிடம் என்னை நிறுத்தினார். ‘இவன் தான்’ என்றார்.

பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். அவரால் எழுந்துகொள்ள முடியவில்லை. முயற்சி செய்து தோற்றுப்போனார். நான் அவரிடம் குனிந்து கொண்டேன். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கு. அவருக்குப் பின்னால் அவரின் தம்பி போன்ற ஒருவர், மகன்கள், மனைவி எனப் பலர் என்னை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். என் கன்னங்களை தயங்கி தொட்டுப் பார்த்தவர், ‘நான் உங்கப்பாவோட ஃப்ரெண்டு’ என்றார்.

உடலில் மெல்லிய மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. கண்கள் ஏனோ கலங்கின. அதில் பல சிறுகதைகள் ஒரு தொடர்கதையும் அடங்கியிருந்தன.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன் ;) )

Written by aravind

ஜூலை 7, 2009 இல் 5:06 பிற்பகல்

எண்ணங்கள், கதை இல் பதிவிடப்பட்டது

Tagged with

இறகுகளும் கொஞ்சம் காதலும்

with 2 comments

featherநதியினில்
தன்னுருவத்தை
கண்டபடி
அமர்ந்திருக்கும்
மரத்தின் பறவை

தன் பிம்பத்தை
கலைக்கிறது
இறகொன்றை
உதிர்த்து

——-

இறகுகளை
புத்தகத்தினுள்
மிகப்பத்திரமாக
பாதுகாப்பவர்கள்
அறிந்தேயிருக்கிறார்கள்
பறவையின்
ஏதோவொரு
ரகசியத்தை

—————

வீட்டுக்குள்ளே
அடைந்து கிடப்பவர்களின்
ஜன்னலில்
நனைந்த பறவை
உதிர்த்துவிட்டுச் செல்கிறது
மழையிறகை

——-

பறந்து பறந்து
தீருவதில்லை
பறவைகளுக்கு

வானில்
அலையும்
சிறகுகள்

பூமியில்
அலையும்
இறகுகள்

—————-

தலை நிமிர்ந்து
பார்க்கையில்
உதிர்த்துவிட்டாய்
ஒரு புன்னகையை

அசைந்தசைந்து
இதமாய் விழுந்தது
மனதின் ரகசியப் படியில்

பின் காற்றடிக்கும்
போதெல்லாம்
படபடக்கிறது
மனது

——————————————————————————————————-

புகைப்படம்: http://www.jeffschneiderman.com

Written by aravind

ஜூன் 24, 2009 இல் 4:18 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

இசையலைகள் #2

with 2 comments

2005050415040401எனக்கு பத்து வயதிருக்கையில் பெரிய அக்காவை கடுப்பேற்ற ஒரு எளிய வழி இருந்தது. எஸ்.ஜானகியைப் பற்றி எதாவது குறை சொல்வது! அக்கா உடனடியாக சரணடைந்து விடுவாள். ஒரு நாள் தொடர்ந்து கடுப்பேற்றி, கிட்டதட்ட அழவைத்திருக்கிறேன். அவளை வென்றுவிட்டாலும், ‘இப்படி அபரிதமான ஒரு ரசிப்பாஎன்று ஆச்சரியமாக இருக்கும். அதன் பின்னர் கல்லூரியில் ஒரு நாள் தோழியொருத்தி, ‘உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத பாடகி ஒருவர் உண்டென்றால், அது எஸ்.ஜானகி தான்!’ என்று சொல்ல, ‘என்னது?’ என்று வியப்பிலும் அதிர்ச்சியிலும் எழுந்து நின்றுவிட்டேன். பழைய நிலையிலிருந்து இந்தப் புதிய நிலையை நான் வந்தடைந்த  வழியில் பல நூறு எஸ்.ஜானகியின் பாடல்கள்!

ஜும்பா லாஹிரியின் புத்தகம் ஒன்றின் பின் அட்டையில் இந்தப் புத்தகத்தை படிக்கையில், பக்கத்திலிருப்பவரை பிடித்து இழுத்துஇதைக் கொஞ்சம் படியேன்என்று சொல்லத் தோன்றும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். முதல் மரியாதை திரைப்படத்தில் வருகிற ராசாவே உன்ன நம்பி பாடலை கேட்கையிலெல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றும்! ஜானகி ஒரு குயிலின் கச்சிதத்துடன் அந்தப் பாடலின் ஹம்மிங்கை துவங்குவார். உச்சரிப்பில் மணமணக்கும் கிராமியம், பாட்டை சிதைக்காத பாவங்கள் என பிரமாதப்படுத்துகிறவர், ஏற்கனவே அழகான பாடலை ஒரு சுகமான சோகத்தில் முற்றிலுமாக தோய்த்தெடுப்பார். தமிழ் திரையுலகின் பாடகிகளை, இந்த ஒரு பாடலிலேயே மற்றவர்களை அபாரமாக வென்று முன்னேறுவதாக எனக்குத் தோன்றும்.

தாயழுதாளே நீ வர, நீ அழுதாயே தாய் வர என்று பாடுகிற போது அதில் உள்ள சோகமோ, ஆடை கூட பாரமாகும், பாரிஜாதம் ஈரமாகும் என்பதில் உள்ள மெல்லிய மோகமோ, பறவை போல பறந்து பறந்து, படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து என்பதில் தெறிக்கும் பரவசமோ (அந்த வரியை முடிக்கையில் ஒரு சிரிப்பு), சிரிக்கிறான், , ஓஹோ, ரசிக்கிறான் ராஜா என்பதில் உள்ள வெட்கமோ - பாவங்களை மிக எளிதாக பாட்டில் நுழைத்தவர் (வெட்கபடத் தெரியாமல் பாரதிராஜாவிடம் அறை வாங்கிய நாயகிகள், ஜானகி குரலில் செய்ததை பாதி செய்தால் போதுமாயிருந்திருக்கும்).

9124சில பாடல்கள் ஜானகிக்கு என்றே விதிக்கப்பட்டவை. நாதம் என் ஜீவனே, காற்றில் எந்தன் கீதம், பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆயிரம் தாமரை மொட்டுக்களே, பாடவா என் பாடலை, ஒரு பூங்காவனம் புதுமணம் எத்தனை பாடல்கள்! ஏற்கனவே மிகச்சிறப்பான பாடலை ஒரு பாடகர் அப்படியே வழிநடத்தி செல்ல முடியும் என்று தேவதை படத்தில் வருகிற ஒரு நாள், அந்த ஒரு நாள் பாடலைக் கேட்கையில் தோன்றும். எண்பதுகளின் நாயகிகளை இவரின் குரல் இன்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.

வரிகள் இல்லாமலே உங்களை கட்டிப்போடும் வித்தையும் அவருக்குத் தெரியும். ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி பாடலின் துவக்க ஹம்மிங் நினைவில்லாமல் இருக்குமா? மெட்டி  ஒலி காற்றோடு  என் நெஞ்சை தாலாட்ட  பாடலில் ஜானகி துவக்கத்தில், பல்லவிக்குப் பிறகு, சரணத்திற்குப் பிறகு என வெறும் ஹம்மிங்காகவே ஒலிப்பார். வெள்ளைப் புறா ஒன்று பாடலை அவர் துவக்கும் விதத்திற்காகவே பல முறை கேட்பேன். இதயக்கோயில் படத்தில் பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான் என்று ஒரு பாடல் உண்டு (இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்று என்று இதை சொல்வேன் ). அதில் பாதி ஜாமம்ம்ம்ம்ம்ம், காயும் போதும்ம்ம்ம்ம் என்று இழுப்பதெல்லாம் தேன்.

ஜானகியின் குரலில் எளிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரின் குரலில் உயர்ந்த தரமில்லை என்று நினைத்ததுண்டு. தென்றல் வந்து என்னைத் தொடும் பாடலைக் கேட்கையிலோ, எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா பாடலைக் கேட்கையிலோ, ஜேசுதாஸின் குரல் க்ளாஸ் என்றும் ஜானகியின் குரல் இதற்கு ஈடாகவே முடியாது என்றும் நினைத்த காலமுண்டு. இப்போது கேட்கையில், நிலைமை தலைகீழ்!

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கிடையில், குரல் மாறும் பச்சோந்தி ஜானகி. (அவரைத் தாழ்த்தி பேசவில்லை! ) சில்க் ஸ்மிதாவுக்குப் பாடும்போது, பேபி ஷாலினிக்கு பாடும் போது அவர் எத்தனை எளிதாக பாடுகிறார் என்பது வியப்பானது. மகளிர் மட்டும் படத்தில் வரும் காள மாடு ஒண்ணு பாடலில் மூன்று விதமான பாத்திரங்களுக்கு அவர் பாடியிருப்பார்.  ஆண் குரலில் பாடியிருப்பதாகக் கூட படித்ததுண்டு! இத்தனை பாவங்களுடன் ஒரு பாடகி இனி வரவியலாது.

இளையராஜாவிடம் ஜானகிக்கு அடுத்தபடியாக அதிகமாக பாடிய சித்ராவும், சில பாடல்களே பாடினாலும் ஜென்ஸி, உமா ரமணன், ஷைலஜா எனப் பலர் மனதில் நின்றாலும், எண்ணற்ற பாடல்களில் ராஜா இசைத்த வயலினைப் போல கச்சிதமாக கலந்து போனவர் எஸ்.ஜானகி. (எஸ்.பி.பியைப் போல!) அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

Written by aravind

ஜூன் 24, 2009 இல் 4:14 பிற்பகல்

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with

பிம்பங்கள் #2

leave a comment »

toshiro_mifune_in_rashomon_2அகிரா குரோசாவாவைப் பற்றி என்னிடம் பேசாத உலக சினிமா ஆர்வலர் இல்லை. ‘, நீங்க உலக சினிமா பாப்பீங்களா?’ என்ற கேள்வி வந்த பின் மூன்றாவது கேள்வி இவரைப் பற்றியே இருக்கும். போர் வீரர்கள் பெரிய கொண்டை இட்டுக்கொண்டு அதில் ஒரு பெரிய ஊசி போன்ற ஒன்றை சொருகி வைத்து, ஆக்ரோஷமாக முகம் காட்டும் ஸ்டில்களோ, ‘யோஜிம்போபோன்ற படத்தின் பெயர்களோஎதுவோ ஒன்று அவர் படங்களைப் பார்க்கும் ஆவலைத் தூண்டாமல் இருந்தது. பின் மனதை திடப்படுத்திக்கொண்டு போன வெள்ளிக்கிழமை இரவைரஷோமானுக்கு தாரை வார்த்தேன். ;)

அகிராவின் மிகப்பெரிய பெருமை, காலம் கடந்து திரைப்படங்களில் தொடர்ந்து வரும் க்ளீஷேக்களை உருவாக்கியது. உதாரணமாக, நாயகன் காட்டில் செல்லும் காட்சியை கற்பனை செய்யலாம். இரவில் காட்சி நடக்கிறது. இதை சினிமாவில் காண்பிக்கும் போது, காமிரா வானம் பார்த்தபடி நகர, மரங்களின் இலைகளினூடே நிலா நகர்வது போன்ற ஒரு காட்சி மனதுக்கு வருகிறதா? இது போன்ற சின்னச்சின்ன விஷயங்களை முதன் முதலில் செய்தவர் அகிரா! சண்டைக்காட்சிகளில் ஒரு கத்தி தரையில் விழுவதும் அதை நாயகன் எடுக்க முயல்வதும், வில்லன் நாயகனின் காலைப் பிடித்து இழுப்பதும் – எத்தனை முறை பார்த்திருப்போம்? திரைப்படங்களுக்கு அந்தக் காட்சியை உபயம் செய்தது இவரே! (முன்பெல்லாம் காமிரா வழியே அண்ணாந்து சூரியனை பார்க்க மாட்டார்களாம்! லென்ஸ் வெந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ! அதை முதலில் செய்தவர் அகிரா என்று சொல்லுகிறார்கள்!)

ரஷோமான்மிகவும் எளிமையான ஒரு படம். மழைக்கு ஒருவன் ஒரு மண்டபத்தில் ஒதுங்குகிறான். அங்கே இருவர் பேயறைந்தது போல அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் துறவி. மழைக்கு ஒதுங்கியவன் பேச்சு கொடுக்கிறான். இருவரும்இது போன்ற ஒரு விசித்திர கதையை கேட்டதேயில்லைஎன்பதை பயங்கர முஸ்தீபுடன் சொல்கிறார்கள். மழை நிற்கிற பாடு இல்லை. மழைக்கு ஒதுங்கியவனுக்கு பொழுது போக வேண்டும். ‘சரி, என்ன சொல்லு கேட்போம்!’

நாயகன் -நாயகி. காட்டு வழியில் ஒற்றைக் குதிரையில் போகிறார்கள். machiko_kyo_in_rashomon(பெண் அமர்ந்து வர, ஆண் நடத்தி வருகிறான்). வழியில் ஒரு திருடனை சந்திக்கிறார்கள். திருடன் அந்தப் பகுதியில் மிகப்பிரபலம். லேசுபட்டவன் அல்ல. நாயகியின் பேரழகு திருடனை என்னவோ செய்கிறது. (’She was like a goddess’) நாயகனை தந்திரமாக ஏமாற்றி கட்டிப் போட்டு விட்டு, நாயகியை கற்பழித்து விடுகிறான். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நாயகன் செத்துக் கிடக்கிறான். நாயகி ஒரு கோயிலில் ஒளிந்துகொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்படுகிறாள். திருடன் விஷச்செடி வளர்ந்த மலையின் அருவி நீரை குடித்து மயக்கமாகி காவல்துறையிடம் சிக்குகிறான். இந்த மண்டபத்தில் துறவியோடு இருந்தவன் தான் முதலில் நாயகனின் பிணத்தை பார்க்கிறான். அவனே காவல்துறைக்கு தகவலும் தந்தது.

விதமான வாக்குமூலங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று திருடனுடையது. மற்றொன்று நாயகியினுடையது. மூன்றாவது? சஸ்பென்ஸ் ;) காவல்துறை படத்தில் காட்டப்படவேயில்லை. மக்கள் தான் காவல்துறை என்பது போல, சாட்சி சொல்பவர்கள் காமிராவைப் பார்த்தே வாக்கு தருகிறார்கள்.

கேட்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கிற கதை, அகிராவின் இயக்கத்தில் எடுக்கிற ஒளி வடிவம் அபாரமானது. எழுத்திலும் சரி, காமிராவிலும் சரிபடத்தின் தரம் பரவசப்படுத்துகிற ஒன்று. மேக இடைவெளியில் மின்னலென சூரியன் உடைந்து கொண்டிருக்க, திருடன் குதிரையில் விரைகிற 2 நொடிக் காட்சியோ; மூன்று கதாபாத்திரங்களின் இடையே ஏற்படுகிற tension- அதை சடசடவென வெட்டுகிற கோணங்களில் காட்டுகிற விதமோஎல்லாமே பரவசம்! படத்தின் மிகச்சிறப்பான அம்சங்கள்காட்சியமைப்புகளும், படம் தட்டி எழுப்புகிற உணர்வுகளும்.

தமிழில் இதே போன்ற வந்த படங்களை நீங்கள் ஊகிக்க முடியும் – அந்த நாள், விருமாண்டி.

எது உண்மை? எது பொய்? என்ற சுவாரசியமான கேள்வியையும் மீறி மூன்று கதாபாத்திரங்கள் எடுக்கக் கூடிய வெவ்வேறு நிலையை ஒரே படத்தில் ரசிக்கும் வாய்ப்பு கிட்டும்!

(Rashomon / Japan / 1950 )

******

poster-pursuithappynessகனவுகளை துரத்துவது மிகவும் கடினம். ஒரு குதிரையேறி துரத்தலாம். உங்கள் ஆர்வத்தை குதிரையின் கடிவாளமாக மாற்றி குதிரையை இலக்கு நோக்கி செலுத்தலாம். ஆனால், நிதர்சனத்தின் கடிவாளம் உங்களையே கட்டுப்படுத்தினால்?

க்ரிஸ் ஒரு சேல்ஸ்மேன். உப்புப் பட்டாணிக்கு உதவாத ஒரு மருத்துவ சாதனம் ஒன்றை வீதியாக வீதியாக ஆஸ்பத்தரி ஆஸ்பத்திரியாக சென்று விற்க வேண்டும். மருத்தவர்களிடம் பல்லிளிக்க வேண்டும். ஒரு சாதனம் விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். வீடு நிறைய விற்கப்பட வேண்டிய சாதனங்கள் . வருமானம் போதவில்லை. மனைவிக்கு வேலையும் செய்து வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். மகனுக்கு ஆறு வயது. அவனது எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டும்.

இதையெல்லாம் மீறி க்ரிஸ்ஸுக்கு ஒரு கனவு உண்டு. பங்குச்சந்தைக் கனவு. கண்களில் எண்கள் மிதக்க, நாளெல்லாம் ஒரு பரவசமான வணிக விளையாட்டு. எப்படியாவது பங்குச்சந்தையில் தரகராக சேரவேண்டும். அதற்கும் ட்ரெயினிங் உண்டு! தற்போதைய நிர்பந்தங்களையும் மீறி அதை சாத்தியப்படுத்த அபாரமான முயற்சிகள் தேவை! முடியுமா?

முடியும் என்பதே படம் தருகிற உற்சாகமான பதில்!

வீட்டுக்கு வெள்ளை அடித்த கையோடு ஓடுவது, கிடைத்த ஐந்து நிமிடங்களில் மேலாளரை இம்ப்ரெஸ் செய்ய படபடப்பாக Rubik’s Cubeஐ பொருத்துவது, வீடிழந்த இரவில் தவிப்பது என பல அற்புதமான கணங்கள் படமெங்கும்.

படத்தின் அப்பா-மகன் உறவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! படத்தில் வில் ஸ்மித்தும் அவரது மகனுமே நடித்திருக்கிறார்கள்.  இருவருமே உண்மையாக அந்த பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியே இன்னொரு தகவல் – இது ஒரு உண்மைக் கதை!

தடைகளைத் தாண்டி வெற்றி பெறுதல் வழமையான திரைப்படக்கதை என்றாலும்,  பிரகாசமான சூரியப் பேரொளியை கண்டது போன்ற உற்சாகத்தை படம் தரும்!

(Pursuit of Happyness / Hollywood / 2006)

Written by aravind

ஜூன் 24, 2009 இல் 4:08 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

Tagged with ,

நாய்கள், பூனைகள், மீன்கள் – சில குறிப்புகள்

with 2 comments

dog

தெருவையே ஆண்டுக்கொண்டிருக்கின்றன
அந்த நான்கு நாய்களும்.
ஒன்று சாம்பல், ஒன்று கருப்பு,
மற்றயிரண்டும் பழுப்பு.
பத்து மணிக்கு மேல்
தெருவில் செல்ல பயந்தார்கள்
பெண்கள், குழந்தைகள்.
வந்த புதிதில்
அம்மாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.
பேய்களுக்குப் பிரசவ வலி போன்ற
சப்தங்கள் இரவெல்லாம்.
ஒரு நள்ளிரவில்
போக்குவரத்துக் காவலர்
இரு சக்கர வாகனத்தில் துணைக்கு வந்தார்
வீடு வரை
‘எங்களதுலயே ரெண்டு பேர கடிச்சுடுச்சுப்பா’
என்று புலம்பியபடி.
‘கார்பரேஷன்ல பிடிச்சுக் குடுக்கணும்’
நள்ளிரவு உறுதிமொழிக்கு பின்னே
பல நாட்கள்
தூங்கப் போகிறோம்.

80களுக்குப் பின்
மாற்றங்கள் கண்டிராத
பக்கத்து வீட்டில் வசிக்கும்
யாரிடமும் பேசாத
அதிகம் வெளியில் தென்படாத
அவரின்
கால்களை நக்கியபடி
கொஞ்சல் ஒலிகளோடு
அத்தனை நாய்களும்
உணவைத் தின்றுகொண்டிருக்கும் காட்சியை
குழுப்பத்துடன் கண்டபடி நடக்கிறேன்
எல்லா இரவுகளுக்குப் பின்னான
காலைகளிலும்.

******************

Fish

மிகப் பத்திரமாக
கையில் ஏந்தி
உதடுகள் குவித்துக்
காத்திருக்கிறாள்
ஒரு முத்தமிட்டுவிட வேண்டி

கண்ணாடிக் குடுவையின்
இரு புறமும்
முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு
தொட்டி மீன்
அளந்துக் கொண்டிருக்கிறது
சமுத்திரத்தை

******************

முன்பொரு முறை
பூனைகள் வளர்க்கலாமா என்று கேட்டதற்கு
உடனே எதுவும் சொல்லாமல்
பிறகு அம்மா கேட்டாள்
‘அதோட முடியெல்லாம்
சாப்பாட்டுல விழுந்ததுன்னா
எப்படி இருக்கும் யோசிச்சு பாரு’

நேற்றிரவும்
அம்மா பார்க்காத சமயத்தில் தான்
அவசரமாகக் களைந்தேன்
உணவிலிருந்து எடுத்த
நீண்ட தலைமுடியை

******************

எல்லா நாய்களையும் போலவே
அவ்விரண்டும்
பிறந்தன
திரிந்தன

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கும்
அந்த மூன்றாம் வீட்டில்
எடுத்து வளர்க்கத் துவங்கியதும்
ஒன்று ‘விக்டர்’ ஆனது.

நாங்கள் எடுத்துக்கொண்டது
‘மணி’ ஆனது.

(கவிதைகளில் லாஜிக் எதிர்பார்க்கும் சங்கத்தினருக்கு ஒரு ஜாமீன் மனுபூனைகளின் ரோமம் உடல் நலத்திற்கு கேடு என்பது முற்றிலும் உண்மையல்ல! ;)   )

(புகைப்படங்கள் – www.greatlakesdigitalsalon.org)

Written by aravind

ஜூன் 20, 2009 இல் 7:21 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது